சங்கீதங்கள்
ஆசிரியர்
சங்கீதங்கள் உணர்ச்சிபாடலுக்குரிய மொழிநடையில் அமைந்திருக்கிற ஒரு கூட்டு பாடல்கள் ஆகும். இதை அனேக ஆசிரியர்கள் எழுதியுள்ளார்கள். தாவீது 73 சங்கீதங்களையும் ஆசாப் 12, சங்கீதங்களையும் கோராவின் புத்திரர்கள் 9 சங்கீதங்களையும் ஏதான் 1, சங்கீதமும், மோசே 1, 90 சங்கீதமும் எழுதியுள்ளார்கள் சில சங்கீதங்களின் ஆசிரியர்களின் பெயர்கள் அறியப்படவில்லை. சாலொமோனும் மோசேயும் தவிர மற்ற சங்கீதங்கள் தாவீதின் ஆட்சிக் காலத்தில் பரிசுத்த ஸ்தலத்தில் ஏற்படுத்தப்பட்ட ஆசாரியர்களும் லேவியர்களும் எழுதியவைகள்.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிமு 1440 க்கும் 430 க்கும். இடையில் எழுதப்பட்டது.
தனி நபர்களின் சங்கீதங்கள் மோசேயில் தொடங்கி பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து திரும்பி எருசலேமுக்கு வந்த காலங்கள் வரை எழுதப்பட்டு இருக்கிறது. இவைகள் மோசேயினாலும் தாவீதினாலும் சாலோமோனினாலும் எஸ்றாவினாலும் எழுதப்பட்டிருப்பதால் சங்கீதங்களை மாத்திரம் எழுதி முடிக்க ஆயிர வருடங்கள் ஆகியிருக்கிறது.
யாருக்காக எழுதப்பட்டது
தேவன் இஸ்ரவேல் தேசத்திற்கு செய்த அற்புதமான காரியங்களை இஸ்ரவேலர்களர்கள் ஞாபகத்தில் வைக்கவும் கர்த்தரை விசுவாசிக்கிற எல்லாருக்காகவும் எழுதப்பட்டது.
எழுதப்பட்ட நோக்கம்
சங்கீதங்கள், தேவனையும் அவருடைய சிருஷ்டிப்பையும், யுத்தங்களையும், ஞானத்தையும் பாவத்தையும் தீமையையும் நீதியையும், நியாத்தீர்ப்புகளையும் மேசியாவின் வருகையைக் குறித்தும் பறைசாற்றுகின்றன. சங்கீதங்கள், தேவன் யார் என்றும் அவர் நமக்கு செய்த காரியங்களுக்கும் நன்மைகளுக்கா தேவனை ஸ்தோத்திரிக்க நம்மை உற்சாகப்படுத்துகின்றன. சங்கீதங்கள் தேவனுடைய மகத்துவங்களை வெளிப்படுத்துகின்றன, ஆபத்துக் காலங்களில் நமக்கு அவர் உண்மையுள்ளவர் என்று உறுதிப்படுத்துகின்றன, அவருடைய வசனங்களின் ஆளுகையின் அடிப்படையையும் வல்லமைகளையும் ஆணித்தரமக்குகின்றன.
மையக் கருத்து
ஸ்தோத்திரம்.
பொருளடக்கம் 1 மேசியாவின் புத்தகம் — 1:1-41:13 2 விருப்பத்தின் புத்தகம். அதிகாரங்கள் — 42:1-72:20 3 இஸ்ரவேலின் புத்தகம். அதிகாரங்கள் — 73:1-89:52 4 தேவனுடைய ஆளுகையின் புத்தகம். அதிகாரங்கள் — 90:1-106:48 5 ஸ்தோத்திரத்தின் புத்தகம். அதிகாரங்கள் — 107:1-150:6Chapter 1
சங்கீதம் 1
1 துன்மார்க்கர்களுடைய ஆலோசனையின்படி நடக்காமலும்,
பாவிகளுடைய வழியில் நிற்காமலும்,
பரியாசக்காரர்கள் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,
2 யெகோவாவுடைய வேதத்தில் பிரியமாக இருந்து,
இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாக இருக்கிற மனிதன் பாக்கியவான்.
3 அவன் நீரோடை ஓரமாக நடப்பட்டு,
தன்னுடைய காலத்தில் தன்னுடைய கனியைத் தந்து,
இலை உதிராமல் இருக்கிற மரத்தைப்போல இருப்பான்.
அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.
4 துன்மார்க்கர்களோ அப்படியில்லாமல்,
காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள்.
5 ஆகையால் துன்மார்க்கர்கள் நியாயத்தீர்ப்பிலும்,
பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை.
6 யெகோவா நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்;
துன்மார்க்கர்களின் வழியோ அழியும்.
Chapter 2
சங்கீதம் 2
1 தேசங்கள் ஏன் கொந்தளிக்க வேண்டும்?
மக்கள் வீணான காரியத்தை ஏன் சிந்திக்கவேண்டும்?
2 யெகோவாவுக்கு விரோதமாகவும்,
அவர் அபிஷேகம்செய்தவருக்கு விரோதமாகவும்,
பூமியின் இராஜாக்கள் எழும்பி நின்று,
அதிகாரிகள் ஒன்றாக ஆலோசனைசெய்து:
3 அவர்களுடைய கட்டுகளை அறுத்து,
அவர்களுடைய கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம்; என்கிறார்கள்.
4 பரலோகத்தில் அமர்ந்திருக்கிறவர் சிரிப்பார்;
ஆண்டவர் அவர்களை இகழுவார்.
5 அப்பொழுது அவர் தமது கோபத்திலே அவர்களுடன் பேசுவார்.
தமது கடுங்கோபத்திலே அவர்களைக் கலங்கச்செய்வார்.
6 நான் என்னுடைய பரிசுத்தமலையாகிய சீயோனில் என்னுடைய இராஜாவை அபிஷேகம்செய்து வைத்தேன் என்றார்.
7 தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்;
யெகோவா என்னை நோக்கி, நீர் என்னுடைய மகன்,
இன்று நான் உம்மை பிறக்கச்செய்தேன்;
8 என்னைக் கேளும், அப்பொழுது தேசங்களை உமக்குச் சொத்தாகவும்,
பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்;
9 இரும்புக் கோலால் அவர்களை நொறுக்கி,
குயவனின் மண்பாண்டத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர் என்று சொன்னார்.
10 இப்போதும் இராஜாக்களே, உணர்வடையுங்கள்,
பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாக இருங்கள்.
11 பயத்துடனே யெகோவாவுக்கு ஆராதனை செய்யுங்கள்,
நடுக்கத்துடனே மகிழ்ந்திருங்கள்.
12 தேவமகன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருப்பதற்கு,
தேவனை முத்தம்செய்யுங்கள்;
கொஞ்சக்காலத்திலே தேவனுடைய கோபம் பற்றியெரியும்;
அவரிடம் அடைக்கலமாக இருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்.
Chapter 3
சங்கீதம் 3
தன் மகனாகிய அப்சலோமிடமிருந்து தப்பிச் சென்றபோது தாவீது பாடிய பாடல்.1 யெகோவாவே, என்னுடைய எதிரிகள் எவ்வளவாகப் பெருகியிருக்கிறார்கள்!
எனக்கு விரோதமாக எழும்புகிறவர்கள் அநேகர்.
2 தேவனிடத்தில் அவனுக்கு சகாயம் இல்லை என்று,
என்னுடைய ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராக இருக்கிறார்கள். (சேலா) [1]
3 ஆனாலும் யெகோவாவே, நீர் என்னைச் சூழ்ந்துள்ள கேடகமும்,
என்னுடைய மகிமையும், என்னுடைய தலையை உயர்த்துகிறவருமாக இருக்கிறீர்.
4 நான் யெகோவா வை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்;
அவர் தமது பரிசுத்த மலையிலிருந்து எனக்கு பதில் கொடுத்தார். (சேலா)
5 நான் படுத்து தூங்கினேன்; விழித்துக்கொண்டேன்;
யெகோவா என்னைத் தாங்குகிறார்.
6 எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்துவருகிற பத்தாயிரம்பேருக்கும்
நான் பயப்படமாட்டேன்.
7 யெகோவாவே, எழுந்தருளும்;
என் தேவனே, என்னை காப்பாற்றும்.
நீர் என்னுடைய பகைவர்கள் எல்லோரையும் தாடையிலே அடித்து,
துன்மார்க்கர்களுடைய பற்களைத் தகர்த்துப்போட்டீர்.
8 ஜெயம் யெகோவாவுடையது;
தேவனே உம்முடைய ஆசீர்வாதம்
உம்முடைய மக்களின்மேல் இருப்பதாக (சேலா).
Chapter 4
சங்கீதம் 4
தாவீதின் சங்கீதம். இசைக்குழுவின் தலைவனுக்கு நரம்புக் கருவிகளால் இசைக்கப்பட்டது.1 என் நீதியின் தேவனே, நான் கூப்பிடும்போது எனக்கு பதில்தாரும்;
நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர்;
எனக்கு இரங்கி, என்னுடைய விண்ணப்பதைக் கேட்டருளும்.
2 மனுமக்களே, எதுவரைக்கும் என்னுடைய மகிமையை அவமானப்படுத்தி,
வீணானதை விரும்பி, பொய்யை நாடுவீர்கள். (சேலா)
3 பக்தியுள்ளவனைக் யெகோவா தமக்காகத் தெரிந்துகொண்டார் என்று அறியுங்கள்;
நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிடும்போது அவர் கேட்பார்.
4 நீங்கள் கோபங்கொண்டாலும், பாவம் செய்யாமலிருங்கள்;
உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள். (சேலா)
5 நீதியின் பலிகளைச் செலுத்தி, யெகோவாமேல் நம்பிக்கையாக இருங்கள்.
6 எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார் என்று சொல்லுகிறவர்கள் அநேகர்;
யெகோவாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கச்செய்யும்.
7 அவர்களுக்குத் தானியமும் திராட்சைரசமும் பெருகியிருக்கிற காலத்தின் சந்தோஷத்தைவிட,
அதிக சந்தோஷத்தை என்னுடைய இருதயத்தில் கொடுத்தீர்.
8 சமாதானத்தோடு படுத்துக்கொண்டு தூங்குவேன்;
யெகோவாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாகத் தங்கச்செய்கிறீர்.
Chapter 5
சங்கீதம் 5
புல்லாங்குழலில் வாசிக்க இசைக்குழுவின் தலைவனிடம் அளிக்கப்பட்ட தாவீதின் பாடல்.1 யெகோவாவே, என்னுடைய வார்த்தைகளுக்குச் செவிகொடும்,
என்னுடைய தியானத்தைக் கவனியும்.
2 நான் உம்மையே நோக்கி விண்ணப்பம் செய்கிறேன்;
என் இராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும்.
3 யெகோவாவே, காலையிலே என்னுடைய சத்தத்தைக் கேட்டருளுவீர்;
காலையிலே உமக்கு நேராக வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன்.
4 நீர் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல;
தீமை உம்மிடத்தில் சேர்வதில்லை.
5 வீம்புக்காரர்கள் உம்முடைய கண்களுக்கு முன்பாக நிலைநிற்கமாட்டார்கள்;
அக்கிரமக்காரர்கள் யாவரையும் வெறுக்கிறீர்.
6 பொய் பேசுகிறவர்களை அழிப்பீர்;
கொலை வெறியர்களையும்
வஞ்சகமான மனிதனையும் யெகோவா அருவருக்கிறார்.
7 நானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்திற்குள் நுழைந்து,
உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே பயபக்தியுடன் பணிந்துகொள்ளுவேன்.
8 யெகோவாவே, என்னுடைய எதிரிகளுக்காக என்னை உம்முடைய நீதியிலே நடத்தி,
எனக்கு முன்பாக உம்முடைய வழியைச் செவ்வைப்படுத்தும்.
9 அவர்கள் வாயில் உண்மை இல்லை,
அவர்கள் உள்ளம் கேடுபாடுள்ளது;
அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட கல்லறையாகும்;
தங்களுடைய நாவினால் வஞ்சகம் பேசுகிறார்கள்.
10 தேவனே, அவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்த்திடும்;
அவர்கள் தங்களுடைய ஆலோசனைகளாலேயே விழும்படி செய்திடும்;
அவர்கள் துரோகங்களினுடைய தீவினைக்காக அவர்களைத் தள்ளிவிடும்;
உமக்கு விரோதமாகக் கலகம்செய்தார்களே.
11 உம்மில் அடைக்கலம் நாடிவருவோர்கள் அனைவரும் மகிழ்ந்து,
எந்நாளும் கெம்பீரிப்பார்களாக;
நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்;
உம்முடைய பெயரை நேசிக்கிறவர்கள் உம்மில் சந்தோஷப்படுவார்களாக.
12 யெகோவாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து,
கருணை என்னும் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்து கொள்ளுவீர்.
Chapter 6
சங்கீதம் 6
செமினீத்தால் நரம்புக் கருவிகளை இசைப்பவர்களின் இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.1 யெகோவாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாமல் இரும்,
உம்முடைய கடுங்கோபத்திலே என்னைத் தண்டியாமல் இரும்.
2 என்மேல் இரக்கமாக இரும் யெகோவாவே,
நான் பெலனில்லாமல் போனேன்;
என்னைக் குணமாக்கும் யெகோவாவே,
என்னுடைய எலும்புகள் நடுங்குகின்றன.
3 என்னுடைய ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; யெகோவாவே,
எதுவரைக்கும் இரங்காமலிருப்பீர்.
4 திரும்பும் யெகோவாவே, என்னுடைய ஆத்துமாவை விடுவியும்;
உம்முடைய கிருபையினால் என்னை இரட்சியும்.
5 மரணத்தில் உம்மை யாரும் நினைவுகூர்வதில்லை,
பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்?
6 என்னுடைய பெருமூச்சினால் இளைத்துப்போனேன்;
இரவுமுழுவதும் என்னுடைய கண்ணீரால் என்னுடைய படுக்கையை மிகவும் ஈரமாக்கி,
என்னுடைய கட்டிலை நனைக்கிறேன்.
7 துயரத்தினால் என்னுடைய கண் குழி விழுந்துபோனது,
என்னுடைய எதிரிகள் அனைவர் நிமித்தமும் மங்கிப்போனது.
8 அக்கிரமக்காரர்களே, நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்;
யெகோவா என்னுடைய அழுகையின் சத்தத்தைக் கேட்டார்.
9 யெகோவா என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டார்;
யெகோவா என்னுடைய ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார்.
10 என்னுடைய எதிரிகள் எல்லோரும் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள்;
அவர்கள் பின்னாகத் திரும்பி உடனே வெட்கப்படுவார்கள்.
Chapter 7
சங்கீதம் 7
பென்யமீனியனாகிய கூஷ் என்பவனுடைய வார்த்தையினிமித்தம் யெகோவாவை நோக்கி தாவீது பாடிய பாடல்.1 என் தேவனாகிய யெகோவாவே, உம்மிடம் அடைக்கலம் தேடுகிறேன்;
என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் எல்லோருக்கும் என்னை விலக்கி காப்பாற்றும்.
2 எதிரி சிங்கம்போல் என்னுடைய ஆத்துமாவைப் பிடித்துக்கொண்டுபோய்,
விடுவிக்கிறவன் இல்லாததால்,
அதைப் பீறாதபடிக்கு என்னைத் தப்புவியும்.
3 என் தேவனாகிய யெகோவாவே, நான் இதைச் செய்ததும்,
என்னுடைய கைகளில் நியாயக்கேடு இருக்கிறதும்,
4 என்னோடு சமாதானமாக இருந்தவனுக்கு நான் தீமைசெய்ததும்,
காரணமில்லாமல் எனக்கு எதிரியானவனை நான் கொள்ளையிட்டதும் உண்டானால்,
5 எதிரி என்னுடைய ஆத்துமாவைத் தொடர்ந்துபிடித்து,
என்னுடைய உயிரைத் தரையிலே தள்ளி மிதித்து,
என்னுடைய மகிமையைப் புழுதியிலே தாழ்த்தட்டும். (சேலா)
6 யெகோவாவே, நீர் உம்முடைய கோபத்தில் எழுந்திருந்து,
என்னுடைய எதிரிகளுடைய கடுங்கோபங்களுக்காக உம்மை உயர்த்தி,
எனக்காக விழித்துக்கொள்ளும்; நியாயத்தீர்ப்பை நியமித்திருக்கிறீரே.
7 மக்கள்கூட்டம் உம்மைச் சூழ்ந்துகொள்ளட்டும்;
அவர்களுக்காகத் திரும்பவும் உன்னதத்திற்கு எழுந்தருளும்.
8 யெகோவா மக்களுக்கு நியாயம் செய்வார்;
யெகோவாவே, என்னுடைய நீதியினாலும் என்னிலுள்ள உண்மையினாலும்
எனக்கு நியாயம்செய்யும்.
9 துன்மார்க்கனுடைய தீய செயல்கள் ஒழிவதாக;
நீதிமானை நிலைநிறுத்தும்;
நீதியுள்ளவராக இருக்கிற தேவனே நீர் இருதயங்களையும்,
சிந்தைகளையும் சோதித்தறிகிறவர்.
10 செம்மையான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கிற தேவனிடத்தில் என்னுடைய கேடகம் இருக்கிறது.
11 தேவன் நீதியுள்ள நியாயாதிபதி;
அவர் நாள்தோறும் பாவியின்மேல் கோபம்கொள்ளுகிற தேவன்.
12 அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கூர்மையாக்குவார்;
அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்.
13 அவனுக்கு மரண ஆயுதங்களை ஆயத்தம் செய்தார்;
தம்முடைய அம்புகளை நெருப்பு அம்புகளாக்கினார்.
14 இதோ, அவனுடைய அக்கிரமத்தைப் பெறக் கர்ப்பவேதனைப்படுகிறான்;
தீவினையைக் கர்ப்பந்தரித்து, பொய்யைப் பெறுகிறான்.
15 குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்;
தான் வெட்டின குழியில் தானே விழுந்தான்.
16 அவனுடைய தீவினை அவனுடைய தலையின்மேல் திரும்பும்,
அவனுடைய கொடுமை அவனுடைய உச்சந்தலையின்மேல் இறங்கும்.
17 நான் யெகோவாவை அவருடைய நீதியின்படி துதிப்பேன்.
நான் உன்னதமான உன்னதமான தேவனாகிய யெகோவாடைய பெயரைப் புகழ்ந்து பாடுவேன்.
Chapter 8
சங்கீதம் 8
கித்தீத் என்ற இசைக் கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்குத் தந்த தாவீதின் பாடல்.1 எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே,
உம்முடைய பெயர் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாக இருக்கிறது!
உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர்.
2 விரோதியையும், பழிகாரனையும் அடக்கிப்போட,
தேவனே நீர் உம்முடைய எதிரிகளுக்காக குழந்தைகள் பாலகர்கள் வாயினால் பெலன் உண்டாக்கினீர்.
3 உமது விரல்களின் செயல்களாகிய உம்முடைய வானங்களையும்,
நீர் அமைத்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது,
4 மனிதனை நீர் நினைக்கிறதற்கும்,
மனுக்குலத்தை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்.
5 நீர் அவனைத் தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்;
மகிமையினாலும், மரியாதையினாலும் அவனை முடிசூட்டினீர்.
6 உம்முடைய கைகளின் செயல்களின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து.
7 ஆடுமாடுகள் எல்லாவற்றையும், காட்டுமிருகங்களையும்,
8 ஆகாயத்துப் பறவைகளையும்,
கடலின் மீன்களையும், கடல்களில் வாழ்கிறவைகளையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்.
9 எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே,
உம்முடைய பெயர் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாக இருக்கிறது!
Chapter 9
சங்கீதம் 9
முத்லபேன் என்ற இசைக்கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.1 யெகோவாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்;
உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பேன்.
2 உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவேன்;
உன்னதமான தேவனே, உமது பெயரைப் புகழ்ந்து பாடுவேன்.
3 என்னுடைய எதிரிகள் பின்னாகத் திரும்பும்போது,
உமது சமுகத்தில் அவர்கள் இடறி அழிந்துபோவார்கள்.
4 நீர் என்னுடைய நியாயத்தையும் என்னுடைய வழக்கையும் தீர்த்து,
நீதியுள்ள நியாயாதிபதியாக சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறீர்.
5 தேசங்களைக் கடிந்துகொண்டு,
துன்மார்க்கர்களை அழித்து,
அவர்கள் பெயரை என்றென்றைக்கும் இல்லாமல் குலைத்துப்போட்டீர்.
6 எதிரிகள் என்றென்றைக்கும் பாழாக்கப்பட்டார்கள்;
அவர்கள் பட்டணங்களைத் தரைமட்டமாக்கினீர்;
அவர்களைப் பற்றிய நினைவும் அழிந்துபோனது.
7 யெகோவாவோ என்றென்றைக்கும் அமர்ந்திருப்பார்;
தம்முடைய சிங்காசனத்தை நியாயத்தீர்ப்புக்கென்று ஏற்படுத்தியிருக்கிறார்.
8 அவர் உலகில் உள்ளவர்களை நீதியாக நியாயந்தீர்த்து,
எல்லா மக்களுக்கும் செம்மையாக நீதிசெய்வார்.
9 சிறுமைப்பட்டவனுக்குக் யெகோவா அடைக்கலமானவர்;
நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்.
10 யெகோவாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை;
ஆதலால், உமது பெயரை அறிந்தவர்கள் உம்மை நம்பி இருப்பார்கள்.
11 சீயோனில் அரசாளுகிற யெகோவாவைப் புகழ்ந்து பாடி,
அவர் செய்கைகளை மக்களுக்குள்ளே அறிவியுங்கள்.
12 ஏனெனில் இரத்தப்பழிகளைக்குறித்து அவர் விசாரணை செய்யும்போது,
அவர்களை நினைக்கிறார்;
எளியவர்களுடைய கூக்குரலை மறக்கமாட்டார்.
13 மரணவாசல்களிலிருந்து என்னைத் தூக்கிவிடுகிற யெகோவாவே,
நான் உம்முடைய துதிகளையெல்லாம் மகளாகிய சீயோன் வாசல்களில் விவரித்து,
உம்முடைய இரட்சிப்பினால் மகிழ்வதற்கு,
14 தேவனே நீர் எனக்கு இரங்கி,
என்னைப் பகைக்கிறவர்களால் எனக்கு வரும் துன்பத்தை நோக்கிப்பாரும்.
15 தேசங்கள் தாங்கள் வெட்டின குழியில் தாங்களே விழுந்தார்கள்:
அவர்கள் மறைவாக வைத்த வலையில் அவர்களுடைய கால்களே அகப்பட்டுக்கொண்டன.
16 யெகோவா தாம் செய்த நியாயத்தினால் அறியப்படுகிறார்;
துன்மார்க்கன் தன்னுடைய கைகளின் செயல்களினால் சிக்கிக்கொண்டான். (இகாயோன், சேலா.)
17 துன்மார்க்கர்களும், தேவனை மறக்கிற எல்லா இனத்தார்களும்,
நரகத்திலே தள்ளப்படுவார்கள்.
18 எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை;
ஏழைகளுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை.
19 எழுந்தருளும் யெகோவாவே, மனிதன் பெலன்கொள்ளாதபடி செய்யும்;
தேசத்தார்கள் உம்முடைய சமுகத்தில் நியாயந்தீர்க்கப்பட வேண்டும்
20 தேசங்கள் தாங்கள் மனிதர்கள்தான் என்று அறிவதற்கு,
அவர்களுக்குப் பயமுண்டாக்கும், யெகோவாவே (சேலா).
Chapter 10
சங்கீதம் 10
1 யெகோவாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்?
துன்பம் நேரிடுகிற நேரங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்?
2 துன்மார்க்கன் தன்னுடைய பெருமையினால்
ஏழ்மையானவனை கொடூரமாகத் துன்பப்படுத்துகிறான்;
அவர்கள் நினைத்த சதிமோசங்களில் அவர்களே அகப்படுவார்கள்.
3 துன்மார்க்கன் தன்னுடைய உள்ளத்தின் ஆசையில் பெருமை பாராட்டுகிறான்,
பொருளை அபகரிக்கிறவன் யெகோவாவைச் சபித்து அசட்டைசெய்கிறான்.
4 துன்மார்க்கன் தன்னுடைய கர்வத்தினால் தேவனைத் தேடமாட்டான்;
அவனுடைய நினைவுகளெல்லாம் தேவன் இல்லை என்பதே.
5 அவன் வழிகள் எப்போதும் கேடுள்ளவைகள்;
உம்முடைய நியாயத்தீர்ப்புகள் அவன் பார்வைக்கு எட்டாமல் மிகவும் உயரமாக இருக்கின்றன;
தன்னுடைய எதிராளிகள் எல்லோர்மேலும் சீறுகிறான்.
6 நான் அசைக்கப்படுவதில்லை, தலைமுறை தலைமுறைதோறும் தீங்கு என்னை அணுகுவதில்லை
என்று தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்.
7 அவன் வாய் சபிப்பினாலும், கபடத்தினாலும்,
கொடுமையினாலும், நிறைந்திருக்கிறது;
அவன் நாவின்கீழ் தீவினையும் அக்கிரமமும் உண்டு.
8 கிராமங்களின் மறைவான இடங்களிலே மறைந்திருந்து,
மறைவான இடங்களிலே குற்றமற்றவனைக் கொல்லுகிறான்;
திக்கற்றவர்களைப் பிடிக்க அவனுடைய கண்கள் நோக்கிக்கொண்டிருக்கின்றன.
9 தன்னுடைய கெபியிலிருக்கிற சிங்கத்தைப்போல மறைவில் மறைந்திருக்கிறான்;
ஏழையைப் பிடிக்கப் மறைந்திருந்து, அவனைத் தன்னுடைய வலைக்குள் இழுத்துப் பிடித்துக்கொள்ளுகிறான்.
10 திக்கற்றவர்கள் தன்னுடைய பலவான்கள் கையில் விழும்படி அவன் பதுங்கிக் கிடக்கிறான்.
11 தேவன் அதை மறந்தார் என்று அவர் தம்முடைய முகத்தை மறைத்து,
எப்போதும் அதைக் காணமாட்டார் என்றும்;
தன்னுடைய இருதயத்திலே சொல்லிகொள்ளுகிறான்.
12 யெகோவாவே, எழுந்தருளும்;
தேவனே, உம்முடைய கையை உயர்த்தும்;
ஏழைகளை மறக்காமலிரும்.
13 துன்மார்க்கன் தேவனை அசட்டைசெய்து,
நீர் கேட்டு விசாரிப்பதில்லை;
என்று தன்னுடைய இருதயத்தில் ஏன் சொல்லிக்கொள்ளவேண்டும்?
14 அதைப் பார்த்திருக்கிறீரே! உபத்திரவத்தையும்,
துக்கத்தையும் கவனித்திருக்கிறீரே;
நீர் பதிலளிப்பீர்;
ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான்;
திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே.
15 துன்மார்க்கனும் பொல்லாதவனுமாக இருக்கிறவனுடைய கையை முறித்துவிடும்;
அவனுடைய துன்மார்க்கம் காணாமற்போகும்வரை அதைத் தேடி விசாரியும்.
16 யெகோவா எல்லாக் காலங்களுக்கும் இராஜாவாக இருக்கிறார்;
அந்நியமக்கள் அவருடைய தேசத்திலிருந்து அழிந்து போவார்கள்.
17 யெகோவாவே, ஏழைகளுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறீர்;
அவர்கள் இருதயத்தை உறுதிப்படுத்துவீர்.
18 மண்ணான மனிதன் இனிப் பலவந்தம்செய்யத் தொடராமல்,
தேவனே நீர் திக்கற்ற பிள்ளைகளுக்கும்
ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நீதிசெய்ய
உம்முடைய செவியைச் சாய்த்துக் கேட்டருளுவீர்.
Chapter 11
சங்கீதம் 11
இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.1 நான் யெகோவாவிடம் அடைக்கலமாக வந்திருக்கிறேன்;
பின்னை ஏன் நீங்கள் என்னுடைய ஆத்துமாவை நோக்கி,
பறவையைப்போல உன்னுடைய மலைக்குப் பறந்துபோ என்று சொல்லுகிறீர்கள்.
2 இதோ, துன்மார்க்கர்கள் வில்லை வளைத்து,
செம்மையான இருதயத்தார்கள்மேல் இருளில் எய்யும்படி தங்களுடைய அம்புகளை நாணிலே தொடுக்கிறார்கள்.
3 அஸ்திபாரங்களும் அழிந்துபோகின்றதே,
நீதிமான் என்ன செய்வான்?
4 யெகோவா தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்;
யெகோவாவுடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது;
அவருடைய கண்கள் தேவப்பிள்ளைகளைப் பார்க்கின்றன அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகின்றன.
5 யெகோவா நீதிமானைச் சோதித்தறிகிறார்;
துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது.
6 துன்மார்க்கர்கள்மேல் கண்ணிகளை பொழியச்செய்வார்;
நெருப்பும், கந்தகமும்,
அனல் காற்றும் அவர்கள் குடிக்கும் பாத்திரத்தின் பங்கு.
7 யெகோவா நீதியுள்ளவர், நீதியின்மேல் பிரியப்படுவார்;
அவருடைய முகம் செம்மையானவனை நோக்கியிருக்கிறது.
Chapter 12
சங்கீதம் 12
செமினீத் என்னும் இசைக் கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.1 காப்பாற்றும் யெகோவாவே, பக்தியுள்ளவன் அழிந்துபோகிறான்;
உண்மையுள்ளவர்கள் மனிதர்களில் இல்லை.
2 அவரவர் தங்களுடைய நண்பர்களோடு பொய் பேசுகிறார்கள்;
கவர்ச்சியான உதடுகளால் இருமனதாகப் பேசுகிறார்கள்.
3 வஞ்சகம் பேசுகிற எல்லா உதடுகளையும்,
பெருமைகளைப் பேசுகிற நாவையும் யெகோவா அறுத்துப்போடுவாராக.
4 அவர்கள், எங்களுடைய நாவுகளால் மேற்கொள்ளுவோம், எங்கள் உதடுகள் எங்களுடையவை;
யார் எங்களுக்கு ஆண்டவன் என்று சொல்லுகிறார்கள்.
5 ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து,
அவன் ஏங்குகிற பாதுகாப்பிலே அவனை வைப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
6 யெகோவாவுடைய சொற்கள் மண் உலையிலே ஏழுதரம் உருக்கி,
புடமிடப்பட்ட வெள்ளிக்கு இணையான
சுத்தசொற்களாக இருக்கின்றன.
7 யெகோவாவே, நீர் எங்களைக் காப்பாற்றி,
எங்களை [1] என்றைக்கும் இந்த தலைமுறையாரிடமிருந்து விலக்கிக் காத்துக்கொள்ளுவீர்.
8 மனிதர்களில் தீயவர்கள் உயர்ந்திருக்கும்போது,
துன்மார்க்கர்கள் எங்கும் சுற்றித்திரிவார்கள்.
Chapter 13
சங்கீதம் 13
சங்கீத தலைவரிடம் கொடுக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.1 யெகோவாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர்,
எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?
2 என்னுடைய இருதயத்திலே சஞ்சலத்தை எல்லா நாளும் வைத்து,
எதுவரைக்கும் என்னுடைய ஆத்துமாவிலே ஆலோசனை செய்துகொண்டிருப்பேன்?
எதுவரைக்கும் என்னுடைய எதிரி என்மேல் தன்னை உயர்த்துவான்?
3 என் தேவனாகிய யெகோவாவே, நீர் நோக்கிப்பார்த்து,
எனக்குப் பதில் தாரும்; நான் மரணமாகிய தூக்கம்
அடையாதபடி என்னுடைய கண்களைத் தெளிவாக்கும்.
4 அவனை மேற்கொண்டேன் என்று என்னுடைய எதிரி சொல்லாதபடி,
நான் தள்ளாடுகிறதினால் என்னுடைய எதிரி சந்தோஷப்படாதபடி இப்படிச் செய்தருளும்.
5 நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாக இருக்கிறேன்;
உம்முடைய இரட்சிப்பினால் என்னுடைய இருதயம் சந்தோஷப்படும்.
6 யெகோவா எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன்.
Chapter 14
சங்கீதம் 14
இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.1 தேவன் இல்லை என்று மதிகேடன் தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்.
அவர்கள் தங்களைக்கெடுத்து, அருவருப்பான செயல்களைச் செய்துவருகிறார்கள்;
நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.
2 தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க,
யெகோவா பரலோகத்திலிருந்து மனிதர்களை கண்ணோக்கினார்.
3 எல்லோரும் வழிவிலகி, ஒன்றாகக் கெட்டுப்போனார்கள்;
நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவன்கூட இல்லை.
4 அக்கிரமக்காரர்களில் ஒருவனுக்கும் அறிவு இல்லையோ?
அப்பத்தை விழுங்குகிறதுபோல, என்னுடைய மக்களை விழுங்குகிறார்களே;
அவர்கள் யெகோவாவை தொழுதுகொள்ளுகிறதில்லை.
5 அங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள்;
தேவன் நீதிமானுடைய சந்ததியோடு இருக்கிறாரே.
6 ஏழ்மையானவனுக்குக் யெகோவா அடைக்கலமாக இருக்கிறார் என்பதால்,
நீங்கள் அவனுடைய ஆலோசனையை அலட்சியம்செய்தீர்கள்.
7 சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக;
யெகோவா தம்முடைய மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது,
யாக்கோபுக்குச் சந்தோஷமும்,
இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.
Chapter 15
சங்கீதம் 15
தாவீதின் பாடல்.1 யெகோவாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்?
யார் உம்முடைய பரிசுத்த மலையில் குடியிருப்பான்?
2 உத்தமனாக நடந்து, நீதியை நடத்தி,
மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே.
3 அவன் தன்னுடைய நாவினால் புறங்கூறாமலும்,
தன்னுடைய நண்பனுக்குத் தீங்குசெய்யாமலும்,
தன்னுடைய அயலான்மேல் சொல்லப்படும் அவமானமான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான்.
4 ஆகாதவன் அவன் பார்வைக்கு அற்பமானவன்; யெகோவாவுக்குப் பயந்தவர்களையோ மதிக்கிறான்; ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாமலிருக்கிறான். 5 தன்னுடைய பணத்தை வட்டிக்குக் கொடுக்காமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாக லஞ்சம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.
Chapter 16
சங்கீதம் 16
தாவீதின் மிக்தாம் என்னும் பாடல்.1 தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன்.
2 என் நெஞ்சமே, நீ யெகோவாவை நோக்கி:
தேவனே நீர், என் ஆண்டவராக இருக்கிறீர்,
என்னுடைய செல்வம் உமக்கு வேண்டியதாக இல்லாமல்;
3 பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும்,
நான் என்னுடைய முழுப் பிரியத்தையும் வைத்திருக்கிற மகாத்துமாக்களுக்கும்,
அது வேண்டியதாக இருக்கிறது என்று சொன்னாய்.
4 அந்நியதேவனை நாடிப் பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும்;
அவர்கள் செலுத்துகிற இரத்த பானபலிகளை நான் செலுத்தமாட்டேன்,
அவர்களுடைய பெயர்களை என் உதடுகளினால் உச்சரிக்கவுமாட்டேன்.
5 யெகோவா என்னுடைய சுதந்தரமும் என்னுடைய பாத்திரத்தின் பங்குமானவர்;
என்னுடைய சுதந்தரத்தை தேவனே நீர் காப்பாற்றுகிறீர்.
6 நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது;
ஆம், சிறப்பான பங்கு எனக்கு உண்டு.
7 எனக்கு ஆலோசனை தந்த யெகோவாவை துதிப்பேன்;
இரவுநேரங்களிலும் என்னுடைய உள்மனம் என்னை உணர்த்தும்.
8 யெகோவாவை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்;
அவர் என்னுடைய வலதுபக்கத்தில் இருக்கிறபடியால்
நான் அசைக்கப்படுவதில்லை.
9 ஆகையால் என்னுடைய இருதயம் பூரித்தது, என்னுடைய மகிமை சந்தோஷித்து;
என்னுடைய உடலும் நம்பிக்கையோடு தங்கியிருக்கும்.
10 என்னுடைய ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர்;
உம்முடைய பரிசுத்தவான் அழிவைக் காண்பதில்லை.
11 வாழ்வின்வழியை எனக்குத் தெரியப்படுத்துவீர்;
உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும்,
உம்முடைய வலதுபக்கத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.
Chapter 17
சங்கீதம் 17
தாவீதின் ஜெபம்.1 யெகோவாவே, நியாயத்தைக் கேட்டருளும்,
என்னுடைய கூப்பிடுதலைக் கவனியும்;
பொய்களில்லாத உதடுகளிலிருந்து பிறக்கும்
என்னுடைய விண்ணப்பத்திற்குச் செவிகொடும்.
2 உம்முடைய சந்நிதியிலிருந்து என்னுடைய நியாயம் வெளிப்படுவதாக;
உம்முடைய கண்கள் நியாயமானவைகளைப் பார்ப்பதாக.
3 நீர் என்னுடைய இருதயத்தைப் பரிசோதித்து,
இரவுநேரத்தில் அதை விசாரித்து, என்னைப் புடமிட்டுப்பார்த்தும்
ஒன்றும் காணாமலிருக்கிறீர்; [1] என்னுடைய வாய் மீறாதபடி தீர்மானம் செய்திருக்கிறேன்.
4 மனிதரின் செய்கைகளைக்குறித்து, நான் உம்முடைய உதடுகளின் வாக்கினாலே
தீயவர்களுடைய பாதைகளுக்கு விலக்கி என்னைக் காத்துக்கொள்ளுகிறேன்.
5 என்னுடைய நடைகள் உமது வழிகளில் உறுதிப்பட்டன.
என்னுடைய காலடிகள் வழுகிப்போகவில்லை.
6 தேவனே, நான் உம்மை நோக்கிக் கெஞ்சுகிறேன்,
ஏனெனில் நீர் எனக்குப் பதில்கொடுப்பீர். என்னிடத்தில் உம்முடைய செவியைச் சாய்த்து,
என்னுடைய வார்த்தையைக் கேட்டருளும்.
7 உம்மிடம் அடைக்கலமாக வருபவர்களை அவர்களுக்கு விரோதமாக எழும்புகிறவர்களிடத்திலிருந்து
உமது வலதுகையினால் தப்புவித்து காப்பாற்றுகிறவரே!
உம்முடைய அதிசயமான கிருபையை விளங்கச்செய்யும்.
8 கண்மணியைப்போல் என்னைக் காத்து.
9 என்னை ஒடுக்குகிற துன்மார்க்கர்களுக்கும்,
என்னைச் சூழ்ந்துகொள்ளுகிற என்னை தாக்கும் எதிரிகளுக்கு மறைவாக,
உம்முடைய இறக்கைகளின் நிழலிலே என்னைக் காப்பாற்றும்.
10 அவர்கள் கொழுத்துப்போய்,
தங்களுடைய வாயினால் கர்வமாக பேசுகிறார்கள்.
11 நாங்கள் செல்லும் பாதைகளில் இப்பொழுது எங்களை வளைந்துகொண்டார்கள்;
எங்களைத் தரையிலே தள்ளும்படி அவர்கள் கண்கள் எங்களை பார்த்துக்கொண்டிருக்கின்றன.
12 பீறுகிறதற்கு ஆவலுள்ள சிங்கத்திற்கும்,
மறைவிடங்களில் ஒளிந்திருக்கிற பாலசிங்கத்திற்கும் ஒப்பாக இருக்கிறார்கள்.
13 யெகோவாவே, உம்முடைய பட்டயத்தினால்
என்னுடைய ஆத்துமாவைத் துன்மார்க்கனுடைய கைக்கு தப்புவியும்.
14 யெகோவாவே, மனிதருடைய கைக்கும்,
இம்மையில் தங்களுடைய பங்கைப் பெற்றிருக்கிற இவ்வுலக மக்களின் கைக்கும்
உம்முடைய கையினால் என்னைத் தப்புவியும்;
அவர்கள் வயிற்றை உமது செழிப்பினால் நிரப்புகிறீர்;
அவர்கள் குழந்தைச்செல்வத்தினால் திருப்தியடைந்து,
தங்களுக்கு மீதியான பொருளைத் தங்களுடைய பிள்ளைகளுக்கு விட்டுச்செல்கிறார்கள்.
15 நானோ நீதியில் உம்முடைய முகத்தைத் பார்ப்பேன்;
நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்.
Chapter 18
சங்கீதம் 18
இசைத் தலைவனுக்கு யெகோவாவுடைய ஊழியனாகிய தாவீது எழுதிய பாடல். சவுலிடமிருந்தும் பிற பகைவர்களிடமிருந்தும் யெகோவா அவனைத் தப்புவித்தபோது எழுதப்பட்ட பாடல்.1 என் பெலனாகிய யெகோவாவே, உம்மில் அன்புகூருவேன்.
2 யெகோவா என் கன்மலையும், என் கோட்டையும்,
என் இரட்சகரும், என் தேவனும், நான் அடைக்கலம் புகும் என் கோபுரமும்,
என் கேடகமும், என் இரட்சிப்பின் கொம்பும்,
என் உயர்ந்த அடைக்கலமுமாக இருக்கிறார்.
3 துதிக்குப் பாத்திரராகிய யெகோவாவை நோக்கிக் கூப்பிடுவேன்;
அதனால் என்னுடைய எதிரிகளுக்கு நீங்கலாகிப் பாதுகாக்கப்படுவேன்.
4 மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டன; மாபெரும் அலைகள் என்னைப் பயப்படுத்தினது.
5 பாதாளக்கட்டுகள் [1] என்னைச் சூழ்ந்துகொண்டன;
மரணக் கண்ணிகள் என்மேல் விழுந்தன.
6 எனக்கு உண்டான நெருக்கத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்,
என் தேவனை நோக்கி சத்தமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என்னுடைய சத்தத்தைக் கேட்டார்,
என்னுடைய கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய்,
அவர் காதுகளில் விழுந்தது.
7 அவர் கோபங்கொண்டபடியால் பூமி அசைந்து அதிர்ந்தது,
மலைகளின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தன.
8 அவர் மூக்கிலிருந்து புகை எழும்பிற்று,
அவர் வாயிலிருந்து எரியும் நெருப்பு புறப்பட்டது;
அதனால் தழல் மூண்டது.
9 வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்;
அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது.
10 கேருபீன்மேல் [2] ஏறி வேகமாகச் சென்றார்;
காற்றின் இறக்கைகளைக் கொண்டு பறந்தார்.
11 இருளைத் தமக்கு மறைவிடமாக்கினார்;
தண்ணீர் நிறைந்த கறுத்த மழைமேகங்களையும் தம்மை சூழ்ந்திருக்கும் கூடாரமாக்கினார்.
12 அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் அவருடைய மேகங்கள்,
கல்மழையும் நெருப்புத்தழலையும் பொழிந்தன.
13 யெகோவா வானங்களிலே குமுறினார்,
உன்னதமான தேவனானவர் தமது சத்தத்தைத் தொனிக்கச்செய்தார்;
[3] கல்மழையும் நெருப்புத்தழலும் பொழிந்தன.
14 தம்முடைய அம்புகளை எய்து,
அவர்களைச் சிதறடித்தார்;
மின்னல்களைப் பயன்படுத்தி, அவர்களைக் கலங்கச்செய்தார்.
15 அப்பொழுது யெகோவாவே,
உம்முடைய கண்டிப்பினாலும்
உம்முடைய மூக்கின் சுவாசக்காற்றினாலும் தண்ணீர்களின் ஆழங்கள் தென்பட்டன,
உலகின் அஸ்திபாரங்கள் வெளிப்பட்டன.
16 உயரத்திலிருந்து அவர் கைநீட்டி, என்னைப் பிடித்து,
பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரிலிருந்து என்னைத் தூக்கிவிட்டார்.
17 என்னிலும் பலவான்களாக இருந்த என்னுடைய பலத்த எதிரிகளுக்கும்
என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார்.
18 என்னுடைய ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்;
யெகோவாவோ எனக்கு ஆதரவாக இருந்தார்.
19 என்மேல் அவர் பிரியமாக இருந்தபடியால்,
விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து,
என்னைத் தப்புவித்தார்.
20 யெகோவா என்னுடைய நீதிக்குத்தகுந்தபடி எனக்குப் பதிலளித்தார்;
என்னுடைய கைகளின் சுத்தத்திற்குத்தகுந்தபடி எனக்குச் சரிக்கட்டினார்.
21 ஏனெனில் யெகோவாவுடைய வழிகளைக் கைக்கொண்டுவந்தேன்;
நான் என் தேவனைவிட்டுத் துன்மார்க்கமாக விலகினதில்லை.
22 அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக இருக்கின்றன;
அவருடைய பிரமாணங்களை நான் தள்ளிப்போடவில்லை.
23 உன்னத தேவனுக்கு முன்பாக நான் உத்தமனாக இருந்து,
என்னுடைய பாவத்திற்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்.
24 ஆகையால் யெகோவா என்னுடைய நீதிக்குத் தகுந்ததாகவும்,
தம்முடைய கண்களுக்கு முன்னிருக்கிற
என்னுடைய கைகளின் சுத்தத்திற்கும் தக்கதாகவும் எனக்குப் பலனளித்தார்.
25 தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும்,
உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்;
26 புனிதனுக்கு நீர் புனிதராகவும்,
மாறுபாடுள்ளவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்.
27 தேவனே நீர் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவீர்;
மேட்டிமையான கண்களைத் தாழ்த்துவீர்.
28 தேவனே நீர் என்னுடைய விளக்கை ஏற்றுவீர்;
என் தேவனாகிய யெகோவா என்னுடைய இருளை வெளிச்சமாக்குவார்.
29 உம்மாலே ஒரு சேனையை என் கால்களால் மிதிப்பேன்;
என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்.
30 தேவனுடைய வழி உத்தமமானது;
யெகோவாவுடைய வசனம் புடமிடப்பட்டது;
தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாக இருக்கிறார்.
31 யெகோவாவை தவிர தேவன் யார்?
நம்முடைய தேவன் இல்லாமல் கன்மலையும் யார்?
32 என்னைப் பலத்தால் இடைகட்டி,
என்னுடைய வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே.
33 அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி,
உயர்வான இடங்களில் என்னை நிறுத்துகிறார்.
34 வெண்கல வில்லும் என்னுடைய கைகளால் வளையும்படி,
என்னுடைய கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.
35 உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்;
உம்முடைய வலதுகை என்னைத் தாங்குகிறது;
உம்முடைய கருணை என்னைப் பெரியவனாக்கும்.
36 என்னுடைய கால்கள் வழுக்காதபடி, நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர்.
37 என்னுடைய எதிரிகளைப் பின்தொடர்ந்து,
அவர்களைப் பிடித்தேன்;
அவர்களை அழிக்கும் வரைக்கும் நான் திரும்பவில்லை.
38 அவர்கள் எழுந்திருக்க முடியாதபடி அவர்களை வெட்டினேன்.
39 போருக்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி,
என்மேல் எழும்பினவர்களை என் கீழ் மடங்கச்செய்தீர்.
40 நான் என்னுடைய எதிரியை அழிக்கும்படி,
என்னுடைய எதிரிகளின் கழுத்தை எனக்கு ஒப்புக்கொடுத்தீர்.
41 அவர்கள் கூப்பிடுகிறார்கள்,
அவர்களைக் காப்பாற்றுகிறவர்கள் ஒருவருமில்லை;
யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்,
அவர்களுக்கு அவர் பதிலளிக்கிறதில்லை.
42 நான் அவர்களைக் காற்றின்திசையிலே பறக்கிற தூசியாக இடித்து,
தெருக்களிலுள்ள சேற்றைப்போல் அவர்களை எறிந்துபோடுகிறேன்.
43 மக்களின் கலகங்களுக்கு நீர் என்னைத் தப்புவித்தீர்,
தேசங்களுக்கு என்னைத் தலைவனாக்குகிறீர்;
நான் அறியாத மக்கள் எனக்கு சேவைசெய்கிறார்கள்.
44 அவர்கள் என்னுடைய சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்;
அந்நியரும் என்னிடம் கூனிக்குறுகுகிறார்கள்.
45 அந்நியர் மனமடிந்து, தங்களுடைய அரண்களிலிருந்து தத்தளிப்பாகப் புறப்படுகிறார்கள்.
46 யெகோவா உயிருள்ளவர்;
என்னுடைய கன்மலையானவர் துதிக்கப்படுவாராக;
என்னுடைய இரட்சிப்பின் தேவன் உயர்ந்திருப்பாராக.
47 அவர் எனக்காகப் பழிக்குப் பழிவாங்குகிற தேவன்.
அவர் மக்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவர்.
48 அவரே என்னுடைய எதிரிகளுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்;
எனக்கு விரோதமாக எழும்புகிறவர்களைவிட என்னை நீர் உயர்த்தி,
கொடுமையான மனிதனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர்.
49 இதற்காக யெகோவாவே, தேசங்களுக்குள்ளே உம்மைத் துதித்து,
உம்முடைய பெயருக்கு பாட்டு பாடுவேன்.
50 தாம் ஏற்படுத்தின இராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து,
தாம் அபிஷேகம்செய்த தாவீதிற்கும்
அவனுடைய சந்ததிக்கும் என்றென்றும் கிருபை செய்கிறார்.
Chapter 19
சங்கீதம் 19
இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.1 வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகின்றன,
ஆகாய விரிவு அவருடைய கைகளின் செயல்களை அறிவிக்கிறது.
2 பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது,
இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது.
3 அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை,
அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை.
4 ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும்,
அவைகளின் வசனங்கள் உலகின் கடைசிவரைக்கும் செல்லுகின்றன;
அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை உண்டாக்கினார்.
5 அது தன்னுடைய மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப்போல் இருக்கிறது,
பெலசாலியைப்போல் தன்னுடைய பாதையில் ஓட மகிழ்ச்சியாக இருக்கிறது.
6 அது வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு,
அவைகளின் மறுமுனைவரைக்கும் சுற்றியோடுகிறது;
அதின் வெப்பத்திற்கு மறைவானது ஒன்றுமில்லை.
7 யெகோவாவுடைய வேதம் குறைவற்றதும்,
ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாக இருக்கிறது;
யெகோவாவுடைய சாட்சி முழுமையானதும்,
பேதையை ஞானியாக்குகிறதுமாக இருக்கிறது.
8 யெகோவாவுடைய நியாயங்கள் செம்மையும்,
இருதயத்தைச் சந்தோஷப்படுத்துகிறவைகளுமாக இருக்கிறது;
யெகோவாவுடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாக இருக்கிறது.
9 யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும்,
என்றைக்கும் நிலைக்கிறதுமாக இருக்கிறது;
யெகோவாவுடைய நியாயங்கள் உண்மையும்,
அவைகள் அனைத்தும் நீதியுமாக இருக்கின்றன.
10 அவை பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கவையும்,
தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தூய்மையான தேனிலும் மதுரமுள்ளவையுமாக இருக்கின்றன.
11 அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்;
அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு.
12 தன்னுடைய பிழைகளை உணருகிறவன் யார்?
மறைந்து கிடக்கும் பிழைகளிலிருந்து என்னைச் சுத்திகரியும்.
13 துணிகரமான பாவங்களுக்கும் உமது அடியேனை விலக்கிக் காத்துகொள்ளும்;
அவைகள் என்னை ஆண்டுகொள்ள விடாமலிரும்;
அப்பொழுது நான் உத்தமனாகி,
பெரும்பாவத்திற்கு நீங்கலாக இருப்பேன்.
14 என் கன்மலையும் என் மீட்பருமாகிய யெகோவாவே,
என் வாயின் வார்த்தைகளும்,
என் இருதயத்தின் தியானமும்,
உமது சமுகத்திற்குப் பிரியமாக இருப்பதாக.
Chapter 20
சங்கீதம் 20
இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.1 ஆபத்துநாளிலே யெகோவா உமது விண்ணப்பத்திற்குப் பதில்கொடுப்பாராக;
யாக்கோபின் தேவனுடைய பெயர் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.
2 அவர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து உமக்கு ஒத்தாசையனுப்பி,
சீயோனிலிருந்து உம்மை ஆதரிப்பாராக.
3 நீர் செலுத்தும் காணிக்கைகளையெல்லாம் அவர் நினைத்து,
உமது சர்வாங்க தகனபலியைப் பிரியமாக ஏற்றுக்கொள்வாராக. (சேலா)
4 அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி,
உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.
5 நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய பெயரிலே கொடியேற்றுவோம்;
உமது வேண்டுதல்களையெல்லாம் யெகோவா நிறைவேற்றுவாராக.
6 யெகோவா தாம் அபிஷேகம்செய்தவரைக் காப்பாற்றுகிறார்
என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்;
தமது வலதுகை செய்யும் இரட்சிப்பின் வல்லமைகளைக் காண்பித்து,
தமது பரிசுத்த வானத்திலிருந்து
அவருடைய விண்ணப்பத்திற்கு பதில்கொடுப்பார்.
7 சிலர் இரதங்களைக்குறித்தும்,
சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள்;
நாங்களோ எங்கள் தேவனாகிய யெகோவாவுடைய பெயரைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்.
8 அவர்கள் முறிந்து விழுந்தார்கள்;
நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம்.
9 யெகோவாவே, இரட்சியும்;
நாங்கள் கூப்பிடுகிற நாளிலே ராஜா எங்களுக்குச் செவிகொடுப்பாராக.
Chapter 21
சங்கீதம் 21
இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.1 யெகோவாவே, உம்முடைய வல்லமையிலே இராஜா மகிழ்ச்சியாக இருக்கிறார்;
உம்முடைய இரட்சிப்பிலே எவ்வளவாகச் சந்தோஷப்படுகிறார்!
2 அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி,
அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாமலிருக்கிறீர். (சேலா)
3 உத்தம ஆசீர்வாதங்களோடு நீர் அவருக்கு எதிர்கொண்டுவந்து,
அவர் தலையில் பொற்கிரீடம் அணிவிக்கிறீர்.
4 அவர் உம்மிடத்தில் ஆயுளைக்கேட்டார்;
நீர் அவருக்கு என்றென்றைக்குமுள்ள நீடித்த ஆயுளை அளித்தீர்.
5 உமது இரட்சிப்பினால் அவர் மகிமை பெரிதாக இருக்கிறது;
மேன்மையையும் மகத்துவத்தையும் அவருக்கு கொடுத்தீர்.
6 அவர் நீடித்த ஆசீர்வாதங்களை அவர்களுக்கு கொடுக்கிறார்;
அவரை உம்முடைய சமுகத்தின் மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறீர்.
7 ஏனெனில் இராஜா யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறார்;
உன்னதமான தேவனுடைய தயவினால் அசைக்கப்படாமல் இருப்பார்.
8 உமது கை உமது எதிரிகள் எல்லோரையும் எட்டிப்பிடிக்கும்;
உமது வலதுகரம் உம்மைப் பகைக்கிறவர்களைக் கண்டுபிடிக்கும்.
9 உமது கோபத்தின் காலத்திலே
அவர்களை நெருப்புச் சூளையாக்கிப்போடுவீர்;
யெகோவா தமது கோபத்திலே அவர்களை அழிப்பார்;
நெருப்பு அவர்களை அழிக்கும்.
10 அவர்கள் பிள்ளைகளை பூமியிலிருந்தும்
அவர்கள் சந்ததியை மனுமக்களிலிருந்தும் அழிப்பீர்.
11 அவர்கள் உமக்கு விரோதமாக தீங்கு நினைத்தார்கள்;
தீவினை செய்ய முயன்றார்கள்;
ஒன்றும் வாய்க்காமல்போனது.
12 உம்முடைய அம்புகளை நாணேற்றி அவர்கள் முகத்திற்கு நேரே எய்து அவர்களைத் திரும்பி ஓடச்செய்கிறீர்.
13 யெகோவாவே, உம்முடைய பலத்திலே நீர் எழுந்தருளும்;
அப்பொழுது உம்முடைய வல்லமையைப் பாடித் துதிப்போம்.
Chapter 22
சங்கீதம் 22
(இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.)1 என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?
எனக்கு உதவி செய்யாமலும்,
நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேட்காமலும் ஏன் தூரமாக இருக்கிறீர்?
2 என் தேவனே, நான் பகலிலே கூப்பிடுகிறேன்,
பதில் கொடுக்கவில்லை;
இரவிலே கூப்பிடுகிறேன், எனக்கு அமைதி இல்லை.
3 இஸ்ரவேலின் துதிகளுக்குள் தங்கியிருக்கிற தேவனே நீரே பரிசுத்தர்.
4 எங்களுடைய முன்னோர்கள் உம்மிடத்தில் நம்பிக்கை வைத்தார்கள்;
நம்பின அவர்களை நீர் விடுவித்தீர்.
5 உம்மை நோக்கிக் கூப்பிட்டுத் தப்பினார்கள்;
உம்மை நம்பி வெட்கப்பட்டுப்போகாமல் இருந்தார்கள்.
6 நானோ ஒரு புழு, மனிதன் அல்ல;
மனிதர்களால் நிந்திக்கப்பட்டும்,
மக்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன்.
7 என்னைப் பார்க்கிறவர்களெல்லோரும் என்னைப் பரியாசம்செய்து,
உதட்டைப் பிதுக்கி, தலையை அசைத்து:
8 யெகோவாமேல் நம்பிக்கையாக இருந்தானே,
அவர் இவனை விடுவிக்கட்டும்;
இவன்மேல் பிரியமாக இருக்கிறாரே,
இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்கிறார்கள்.
9 நீரே என்னைக் கர்ப்பத்திலிருந்து எடுத்தவர்;
என்னுடைய தாயின் மார்பில் இருக்கும் போதே என்னை உம்மேல் நம்பிக்கையாக இருக்கச்செய்தீர்.
10 கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டபோதே உமது சார்பில் விழுந்தேன்;
நான் என்னுடைய தாயின் வயிற்றில் இருந்தது முதல் நீர் என் தேவனாக இருக்கிறீர்.
11 என்னைவிட்டுத் தூரமாக இருக்கவேண்டாம்;
ஆபத்து நெருங்கியிருக்கிறது,
உதவி செய்ய யாரும் இல்லை.
12 அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கின்றன;
பாசான் தேசத்தின் பலத்த எருதுகள் என்னை வளைந்து கொண்டன.
13 பீறி கெர்ச்சிக்கிற சிங்கத்தைப்போல்,
என்மேல் தங்களுடைய வாயைத் திறக்கிறார்கள்.
14 தண்ணீரைப்போல ஊற்றப்பட்டேன்;
என்னுடைய எலும்புகளெல்லாம் விலகிவிட்டன,
என்னுடைய இருதயம் மெழுகுபோலாகி,
என்னுடைய குடல்களின் நடுவே உருகினது.
15 என் பெலன் [1] ஓட்டைப்போல் காய்ந்தது;
என் நாவு மேல்வாயோடு ஒட்டிக்கொண்டது;
என்னை மரணத்தூசியிலே போடுகிறீர்.
16 நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கின்றன;
பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது;
என்னுடைய கைகளையும் கால்களையும் உருவக் குத்தினார்கள்.
17 என்னுடைய எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்;
அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
18 என் ஆடைகளைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு,
என்னுடைய உடையின்மேல் சீட்டுப்போடுகிறார்கள்.
19 ஆனாலும் யெகோவாவே, நீர் எனக்குத் தூரமாக இருக்கவேண்டாம்;
என்னுடைய பெலனே, எனக்கு உதவிசெய்ய சீக்கிரமாக வாரும்.
20 என்னுடைய ஆத்துமாவை வாளிற்கும்,
எனக்கு அருமையானதை நாய்களின் கொடூரத்திற்கும் தப்புவியும்.
21 என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து காப்பாற்றும்;
நான் காண்டாமிருகத்தின் கொம்புகளில் இருக்கும்போது என்னைக் காப்பாற்றும் [2] .
22 உம்முடைய பெயரை என் சகோதரர்களுக்கு அறிவித்து,
சபைநடுவில் உம்மைத் துதிப்பேன்.
23 யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்களே,
அவரைத் துதியுங்கள்;
யாக்கோபின் சந்ததியாரே, நீங்கள் எல்லோரும் அவருக்கு மரியாதைசெய்யுங்கள்;
இஸ்ரவேலின் வம்சத்தாரே, நீங்கள் எல்லோரும் அவர்மேல் பயபக்தியாக இருங்கள்.
24 உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாக நினைக்காமலும்,
அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து,
தம்மை நோக்கி அவன் கூப்பிடும்போது அவனைக் கேட்டருளினார்.
25 மகா சபையிலே நான் செலுத்தும் துதி உம்மாலே உண்டாகும்;
அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு முன்பாக என்னுடைய பொருத்தனைகளைச் செலுத்துவேன்.
26 ஒடுக்கப்பட்டவர்கள் சாப்பிட்டு திருப்தியடைவார்கள்;
யெகோவாவை தேடுகிறவர்கள் அவரைத் துதிப்பார்கள்;
உங்களுடைய இருதயம் என்றென்றைக்கும் வாழும்.
27 பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து யெகோவாவிடத்தில் திரும்பும்;
தேசங்களுடைய வம்சங்களெல்லாம் அவர் [3] சமுகத்தில் தொழுதுகொள்ளும்.
28 ராஜ்ஜியம் யெகோவாவுடையது; அவர் தேசங்களை ஆளுகிறவர்.
29 பூமியின் செல்வந்தர் அனைவரும் [4] பணிந்துகொள்வார்கள்;
புழுதியில் இறங்குகிறவர்கள் அனைவரும் அவருக்கு முன்பாக வணங்குவார்கள்.
ஒருவனும் தன்னுடைய ஆத்துமா அழியாதபடி அதைக் காக்க முடியாதே.
30 ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்;
தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும்.
31 அவர்கள் வந்து: அவரே இவைகளைச் செய்தார் என்று
பிறக்கப்போகிற மக்களுக்கு அவருடைய நீதியை அறிவிப்பார்கள்.
Chapter 23
சங்கீதம் 23
தாவீதின் பாடல்.1 யெகோவா என் மேய்ப்பராக இருக்கிறார்;
நான் தாழ்ச்சி அடையமாட்டேன்.
2 அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து,
அமர்ந்த தண்ணீர்கள் அருகில் என்னைக் கொண்டுபோய்விடுகிறார்.
3 அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய பெயரினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.
4 நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும்
பொல்லாப்புக்குப் பயப்படமாட்டேன்;
ஏனெனில் தேவனே நீர் என்னோடு இருக்கிறீர்;
உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.
5 என்னுடைய எதிரிகளுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி,
என்னுடைய தலையை எண்ணெயால் அபிஷேகம்செய்கிறீர்;
என்னுடைய பாத்திரம் நிரம்பி வழிகிறது [1] .
6 என் உயிருள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்;
நான் யெகோவாவுடைய வீட்டிலே நீடித்த நாட்களாக நிலைத்திருப்பேன்.
Chapter 24
சங்கீதம் 24
தாவீதின் பாடல்.1 பூமியும் அதின் நிறைவும்,
உலகமும் அதிலுள்ள குடிமக்கள் யாவும் யெகோவாவுடையவை.
2 ஏனெனில் அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி,
அதை நதிகளுக்கு மேலாக நிறுவினார். 3 யார் யெகோவாவுடைய மலையில் [1] ஏறுவான்?
யார் அவருடைய பரிசுத்த இடத்தில் பிரவேசிப்பான்? [2]
4 கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் தூய்மை உள்ளவனுமாக இருந்து,
தன்னுடைய ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடுக்காமலும்,
பொய்யாக ஆணையிடாமலும் இருக்கிறவனே.
5 அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும்,
தன்னுடைய இரட்சிப்பின் தேவனால் நீதியையும் பெறுவான்.
6 இதுவே அவரைத் தேடி விசாரித்து,
அவருடைய சமுகத்தை நாடுகிற யாக்கோபு என்னும் சந்ததி. (சேலா)
7 வாசல்களே, உங்களுடைய தலைகளை உயர்த்துங்கள்;
நித்திய கதவுகளே, உயருங்கள்; மகிமையின் இராஜா உள்ளே நுழைவார்.
8 யார் இந்த மகிமையின் இராஜா?
அவர் வல்லமையும் பராக்கிரமமும் உள்ள யெகோவா;
அவர் யுத்தத்தில் பராக்கிரமமும் உள்ள கர்த்தராமே.
9 வாசல்களே, உங்களுடைய தலைகளை உயர்த்துங்கள்;
நித்திய கதவுகளே, உயருங்கள், மகிமையின் இராஜா உள்ளே நுழைவார்.
10 யார் இந்த மகிமையின் இராஜா?
அவர் சேனைகளின் யெகோவா;
அவரே மகிமையின் இராஜா (சேலா).
Chapter 25
சங்கீதம் 25
தாவீதின் பாடல்.1 யெகோவாவே, உம்மிடத்தில் என்னுடைய ஆத்துமாவை உயர்த்துகிறேன்.
2 என் தேவனே, உம்மை நம்பி இருக்கிறேன்,
நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்;
என்னுடைய எதிரிகள் என்னை மேற்கொண்டு மகிழவிடாமலிரும்.
3 உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்;
காரணமில்லாமல் துரோகம்செய்கிறவர்களே வெட்கப்பட்டுப் போவார்களாக.
4 யெகோவாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்;
உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும்.
5 உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்;
நீரே என்னுடைய இரட்சிப்பின் தேவன்,
உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன்.
6 யெகோவாவே, உம்முடைய இரக்கங்களையும் உம்முடைய கருணையையும் நினைத்தருளும்,
அவை தொடக்கமில்லா காலம் முதல் இருக்கின்றது.
7 என்னுடைய இளவயதின் பாவங்களையும் என்னுடைய மீறுதல்களையும் நினைக்காமலிரும்;
யெகோவாவே, உம்முடைய தயவிற்காக என்னை உமது கிருபையின்படியே நினைத்தருளும்.
8 யெகோவா நல்லவரும் உத்தமருமாக இருக்கிறார்;
ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார்.
9 சாந்த குணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி,
சாந்த குணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்.
10 யெகோவாவுடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு,
அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவை.
11 யெகோவாவே, என்னுடைய அக்கிரமம் பெரிது;
உம்முடைய பெயரினால் அதை மன்னித்தருளும்.
12 யெகோவாவுக்குப் பயப்படுகிற மனிதன் எவனோ
அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்.
13 அவனுடைய ஆத்துமா நன்மையில் தங்கும்;
அவன் சந்ததி பூமியைச் சொந்தமாக்கிக்கொள்ளும்.
14 யெகோவாவுடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது;
அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார்.
15 என்னுடைய கண்கள் எப்போதும் யெகோவாவை நோக்கிக்கொண்டிருக்கின்றன;
அவரே என்னுடைய கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுவார்.
16 என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்;
நான் தனித்தவனும், பாதிக்கப்பட்டவனுமாக இருக்கிறேன்.
17 என்னுடைய இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கின்றன;
என்னுடைய பிரச்சனைகளிலிருந்து என்னை நீங்கலாக்கிவிடும்.
18 என்னுடைய பாதிப்பையையும் என்னுடைய துன்பத்தையும் பார்த்து,
என்னுடைய பாவங்களையெல்லாம் மன்னித்தருளும்.
19 என்னுடைய எதிரிகளைப் பாரும்;
அவர்கள் பெருகியிருந்து, கொடூர வெறுப்பாய் என்னை வெறுக்கிறார்கள்.
20 என் ஆத்துமாவைக் காப்பாற்றி என்னை விடுவியும்;
நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; உம்மிடம் அடைக்கலம் வந்துள்ளேன்.
21 உத்தமமும், நேர்மையும் என்னைக் காக்கட்டும்;
நான் உமக்குக் காத்திருக்கிறேன்.
22 தேவனே, இஸ்ரவேலை அவனுடைய எல்லாப் பிரச்சனைகளுக்கும் விடுவித்து மீட்டுவிடும்.
Chapter 26
சங்கீதம் 26
தாவீதின் பாடல்.1 யெகோவாவே, என்னை நியாயம் விசாரியும், நான் என் உத்தமத்திலே நடக்கிறேன்; நான் யெகோவாவை நம்பியிருக்கிறேன், ஆகையால் நான் தள்ளாடுவதில்லை. 2 யெகோவாவே, என்னைப் பரீட்சித்து, என்னைச் சோதித்துப்பாரும்;
என்னுடைய சிந்தைகளையும் என்னுடைய இருதயத்தையும் புடமிட்டுப்பாரும்.
3 உம்முடைய கிருபை என்னுடைய கண்களுக்கு முன்பாக இருக்கிறது;
உம்முடைய சத்தியத்திலே நடக்கிறேன்.
4 ஏமாற்றுக்காரர்களோடு நான் உட்காரவில்லை,
வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை.
5 பொல்லாதவர்களின் கூட்டத்தைப் பகைக்கிறேன்;
துன்மார்க்கர்களோடு உட்காரமாட்டேன்.
6 யெகோவாவே, நான் துதியின் சத்தத்தைக் கேட்கும்படிச் செய்து, உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பதற்காக,
7 எனது குற்றமில்லாமை தெரியும்படி என் கைகளைக் கழுவி, உம்முடைய பீடத்தைச் சுற்றிவருகிறேன்.
8 யெகோவாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும்,
உமது மகிமை தங்கியிருக்கும் இடத்தையும் நேசிக்கிறேன்.
9 என் ஆத்துமாவைப் பாவிகளோடும்,
என் உயிரை இரத்தப்பிரியர்களோடும் வாரிக்கொள்ளாமலிரும்.
10 அவர்கள் கைகளிலே தீவினை இருக்கிறது;
அவர்கள் வலதுகை லஞ்சத்தினால் நிறைந்திருக்கிறது.
11 நானோ என்னுடைய உத்தமத்திலே நடப்பேன்;
என்னை மீட்டுக்கொண்டு என்மேல் இரக்கமாக இரும்.
12 என்னுடைய கால் செம்மையான இடத்திலே நிற்கிறது;
சபைகளிலே நான் யெகோவாவை துதிப்பேன்.
Chapter 27
சங்கீதம் 27
தாவீதின் பாடல்.1 யெகோவா என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர்,
யாருக்குப் பயப்படுவேன்?
யெகோவா என் வாழ்வின் அடைக்கலமானவர்,
யாருக்கு பயப்படுவேன்?
2 என்னுடைய எதிரிகளும் என்னுடைய பகைவர்களுமாகிய பொல்லாதவர்கள் என் சரீரத்தை விழுங்க,
என்னை நெருங்கும்போது அவர்களே இடறிவிழுந்தார்கள்.
3 எனக்கு விரோதமாக ஒரு இராணுவம் முகாமிட்டாலும், என் இருதயம் பயப்படாது;
என்மேல் போர் எழும்பினாலும், இதிலே நான் நம்பிக்கையாக இருப்பேன்.
4 கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்;
நான் யெகோவாவுடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும்,
அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும்,
நான் என்னுடைய உயிருள்ள நாட்களெல்லாம் யெகோவாவுடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.
5 தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து,
என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்.
6 இப்பொழுது என் தலை என்னைச் சுற்றிலும் இருக்கிற என் எதிரிகளுக்கு மேலாக உயர்த்தப்படும்;
அதற்காக அவருடைய கூடாரத்திலே நான் ஆனந்தபலிகளையிட்டு,
யெகோவாவைப் பாடுவேன், அவரைப் புகழ்ந்துபாடுவேன்.
7 யெகோவாவே, நான் கூப்பிடுகிற சத்தத்தை நீர் கேட்டு,
எனக்கு இரங்கி, எனக்கு பதில் தாரும். 8 என்னுடைய முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே,
உம்முடைய முகத்தையே தேடுவேன் யெகோவாவே என்று என்னுடைய இருதயம் உம்மிடத்தில் சொன்னது.
9 உமது முகத்தை எனக்கு மறைக்கவேண்டாம்;
நீர் கோபத்துடன் உமது அடியேனை விலக்கிப்போடவேண்டாம்;
நீரே எனக்கு உதவி செய்பவர்;
என்னுடைய இரட்சிப்பின் தேவனே,
என்னைத் தள்ளிவிடாமலிரும் என்னைக் கைவிடாமலிரும்.
10 என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும்,
யெகோவா என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.
11 யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும்,
என்னுடைய எதிராளிகளினிமித்தம் சரியான பாதையில் என்னை நடத்தும்.
12 என் எதிரிகளின் விருப்பத்திற்கு என்னை ஒப்புக் கொடுக்கவேண்டாம்;
பொய்ச்சாட்சிகளும் ஆக்கிரமித்துச் சீறுகிறவர்களும்
எனக்கு விரோதமாக எழும்பியிருக்கிறார்கள்.
13 நானோ, உயிருள்ளவர்களின் தேசத்திலே
யெகோவாவுடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசித்தேன் [1] .
14 யெகோவாவுக்குக் காத்திரு, தைரியமாக இரு,
அவர் உன்னுடைய இருதயத்தை நிலையாக நிறுத்துவார்,
கர்த்தருக்கே காத்திரு.
Chapter 28
சங்கீதம் 28
தாவீதின் பாடல்.1 என் கன்மலையாகிய யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்;
நீர் கேட்காதவர்போல மவுனமாக இருக்கவேண்டாம்;
நீர் மவுனமாக இருந்தால் நான் கல்லறையில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன்.
2 நான் உம்மை நோக்கிச் சத்தமிட்டு, உம்முடைய மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு நேராகக் கையெடுக்கும்போது,
என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டருளும்.
3 அருகில் உள்ளவனுக்குச் சமாதான வாழ்த்துதலைச் சொல்லியும்,
தங்களுடைய இருதயங்களில் தீமைகளை வைத்திருக்கிற துன்மார்க்கர்களோடும் அக்கிரமக்காரர்களோடும் என்னை வாரிக்கொள்ளாமலிரும்.
4 அவர்களுடைய செயல்களுக்கும் அவர்களுடைய நடத்தைகளின் தீங்கிற்கும் சரியானதாக அவர்களுக்குச் செய்யும்;
அவர்கள் கைகளின் செய்கைக்கு சரியானதாக அவர்களுக்குக் கொடும்,
அவர்களுக்குச் சரிக்குச் சரிக்கட்டும்.
5 அவர்கள் யெகோவாவுடைய செய்கைகளையும் அவர் கைகளின் செயல்களையும் உணராதபடியால்,
அவர்களை இடித்துப்போடுவார், அவர்களைக் கட்டமாட்டார்.
6 யெகோவாவுக்கு வாழ்த்துதல் உண்டாகட்டும்;
அவர் என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டார்.
7 யெகோவா என் பெலனும் என் கேடகமுமாக இருக்கிறார்;
என் இருதயம் அவரை நம்பி இருந்தது; நான் உதவி பெற்றேன்;
ஆகையால் என்னுடைய இருதயம் சந்தோஷப்படுகிறது;
என் பாடலினால் அவரைத் துதிப்பேன்.
8 யெகோவா அவர்களுடைய பெலன்;
அவரே தாம் அபிஷேகம் செய்தவனுக்கு பாதுகாப்பான அடைக்கலமானவர்.
9 தேவனே நீர் உமது மக்களைப் பாதுகாத்து, உமது உரிமை சொத்தை ஆசீர்வதியும்;
அவர்களுக்கு உணவளித்து, அவர்களை என்றென்றைக்கும் உயர்த்தியருளும்.
Chapter 29
சங்கீதம் 29
தாவீதின் பாடல்.1 தேவ பிள்ளைகளே, யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்;
கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.
2 யெகோவாவுடைய பெயருக்கேற்ற மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்;
பரிசுத்த அலங்காரத்துடனே யெகோவாவை தொழுதுகொள்ளுங்கள்.
3 யெகோவாவுடைய சத்தம் சமுத்திரங்கள் மேல் தொனிக்கிறது;
மகிமையுள்ள தேவன் முழங்குகிறார்;
யெகோவா திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார்.
4 யெகோவாவுடைய சத்தம் வல்லமையுள்ளது;
யெகோவாவுடைய சத்தம் மகத்துவமுள்ளது.
5 யெகோவாவுடைய சத்தம் கேதுருமரங்களை முறிக்கிறது;
யெகோவா லீபனோனின் கேதுருமரங்களை முறிக்கிறார்.
6 அவைகளைக் கன்றுக்குட்டிகளைப்போலவும், லீபனோனையும்,
சீரியோனையும் காண்டாமிருகக் குட்டிகளைப்போலவும் துள்ளச்செய்கிறார்.
7 யெகோவாவுடைய சத்தம் தீப்பிழம்புகளைப் பிளக்கும்.
8 யெகோவாவுடைய சத்தம் வனாந்தரத்தை அதிரச்செய்யும்;
யெகோவா காதேஸ் வனாந்தரத்தை அதிரச்செய்கிறார்.
9 யெகோவாவுடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து,
காடுகளை வெளியாக்கும்;
அவருடைய ஆலயத்திலுள்ள அனைவரும்
யெகோவாவுக்கு மகிமை என்று ஆர்ப்பரிக்கிறார்கள்.
10 யெகோவா பெருவெள்ளத்தின்மேல் அமர்ந்திருந்தார்;
யெகோவா என்றென்றைக்கும் ராஜாவாக அமர்ந்திருக்கிறார்.
11 யெகோவா தமது மக்களுக்குப் பெலன் கொடுப்பார்;
யெகோவா தமது மக்களுக்குச் சமாதானம் அருளி,
அவர்களை ஆசீர்வதிப்பார்.
Chapter 30
சங்கீதம் 30
ஆலயத்தின் அர்ப்பணிப்பின் பாடல். தாவீதின் பாடல்.1 யெகோவாவே,
என்னுடைய எதிரிகள்
என்னை மேற்கொண்டு அவர்களை மகிழவிடாமல்,
நீர் என்னைக் கைதூக்கி எடுத்தபடியினால்,
நான் உம்மைப் போற்றுவேன்.
2 என் தேவனாகிய யெகோவாவே,
உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்,
என்னை நீர் குணமாக்கினீர்.
3 யெகோவாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறச்செய்து,
நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடு காத்தீர்.
4 யெகோவாவுடைய பரிசுத்தவான்களே,
அவரைப் புகழ்ந்துபாடி,
அவருடைய பரிசுத்தத்தின் நினைவு கூருதலைக் கொண்டாடுங்கள்.
5 ஏனெனில் அவருடைய கோபம் ஒர் இமைப்பொழுதே,
அவருடைய தயவோ வாழ்நாள் முழுவதும்;
மாலையில் அழுகை வரும்,
அதிகாலையிலே மகிழ்ச்சி உண்டாகும்.
6 நான் எப்போதும் அசைக்கப்படுவதில்லையென்று,
நான் வளமுடன் இருக்கும்போது சொன்னேன்.
7 யெகோவாவே, உம்முடைய தயவினால்
நீர் என்னுடைய மலையை வலிமையாக நிற்கச்செய்திருந்தீர்;
உமது முகத்தை நீர் மறைத்துக்கொண்டபோதோ நான் கலங்கினவனானேன்;
8 நான் கல்லறையில் இறங்கும்போது என்னுடைய இரத்தத்தால் என்ன லாபமுண்டு?
புழுதி உம்மைத் துதிக்குமோ?
அது உமது சத்தியத்தை அறிவிக்குமோ?
9 யெகோவாவே, நீர் எனக்குச் செவிகொடுத்து
என்மேல் இரக்கமாக இரும்;
யெகோவாவே, நீர் எனக்குச் சகாயராக இரும் என்று சொல்லி;
10 யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்;
யெகோவாவை நோக்கிக் கெஞ்சினேன்.
11 என்னுடைய புலம்பலை ஆனந்த சந்தோஷமாக மாறச்செய்தீர்;
என்னுடைய மகிமை அமைதியாக இல்லாமல்
உம்மைப் புகழ்ந்து பாடும்படியாக
நீர் என்னுடைய சணலாடையை களைந்துபோட்டு,
மகிழ்ச்சியினால் என்னை உடுத்தினீர்.
12 என் தேவனாகிய யெகோவாவே,
உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்.
Chapter 31
சங்கீதம் 31
இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.1 யெகோவாவே, உம்மை நம்பியிருக்கிறேன்;
நான் ஒருபோதும் வெட்கமடையாதபடி செய்யும்;
உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும்.
2 உமது செவியை எனக்குச் சாய்த்து,
சீக்கிரமாக என்னைத் தப்புவியும்;
நீர் எனக்குப் பலத்த கோபுரமும்,
எனக்கு அடைக்கலமான கன்மலையுமாக இரும்.
3 என் கன்மலையும் என் கோட்டையும் நீரே;
உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி,
என்னை நடத்தியருளும்.
4 அவர்கள் எனக்கு மறைவாய் வைத்த வலைக்கு என்னை நீங்கலாக்கிவிடும்;
தேவனே நீரே எனக்கு அடைக்கலம்.
5 உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்;
சத்தியபரனாகிய யெகோவாவே,
நீர் என்னை மீட்டுக்கொண்டீர்.
6 பொய் தெய்வங்ககளைப் பற்றிக்கொள்ளுகிறவர்களை நான் வெறுத்து,
யெகோவாவையே நம்பியிருக்கிறேன்.
7 உமது, கிருபையிலே களிகூர்ந்து மகிழுவேன்;
நீர் என் உபத்திரவத்தைப் பார்த்து,
என் ஆத்தும துயரங்களை அறிந்திருக்கிறீர்.
8 எதிரியின் கையில் என்னை ஒப்புக்கொடுக்காமல்,
என்னுடைய பாதங்களை விசாலத்திலே நிறுத்தினீர்.
9 எனக்கு இரங்கும் யெகோவாவே, நான் நெருக்கப்படுகிறேன்;
துக்கத்தினால் என் கண்ணும்
என் ஆத்துமாவும் என்னுடைய வயிறுங்கூடக் கருகிப்போனது.
10 என்னுடைய வாழ்க்கை துக்கத்தினாலும்,
என்னுடைய வருடங்கள் தவிப்பினாலும் கழிந்துபோனது;
என்னுடைய பாடுகளினாலே என்னுடைய பெலன் குறைந்து,
என்னுடைய எலும்புகள் உலர்ந்துபோனது.
11 என்னுடைய எதிரிகளாகிய அனைவர் நிமித்தமும்,
நான் என் அயலாருக்கு நிந்தையும்,
எனக்கு அறிமுகமானவர்களுக்கு அலட்சியமுமானேன்;
வீதியிலே என்னைக் கண்டவர்கள்
எனக்கு விலகி ஓடிப்போனார்கள்.
12 செத்தவனைப்போல எல்லோராலும் முழுவதும் மறக்கப்பட்டேன்;
உடைந்த பாத்திரத்தைப்போல ஆனேன்.
13 அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன்;
எனக்கு விரோதமாக அவர்கள் ஒன்றாக ஆலோசனை செய்கிறதினால்
திகில் என்னைச் சூழ்ந்துகொண்டது;
என்னுடைய உயிரை வாங்கத்தேடுகிறார்கள்.
14 நானோ, யெகோவாவே,
உம்மை நம்பியிருக்கிறேன்;
நீரே என் தேவன் என்று சொன்னேன்.
15 என்னுடைய காலங்கள் உமது கரத்திலிருக்கிறது;
என் எதிரிகளின் கைக்கும் என்னைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும்
என்னைத் தப்புவியும்.
16 நீர் உமது முகத்தை உமது ஊழியக்காரன்மேல் பிரகாசிக்கச்செய்து,
உமது கிருபையினாலே என்னை இரட்சியும்.
17 யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்;
நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்;
துன்மார்க்கர்கள் வெட்கப்பட்டுப் பாதாளத்தில் மவுனமாக இருக்கட்டும்.
18 நீதிமானுக்கு விரோதமாகப்
பெருமையோடும் இகழ்ச்சியோடும் கடினமாகப் பேசுகிற பொய் உதடுகள் கட்டப்பட்டுப்போவதாக.
19 உமக்குப் பயந்தவர்களுக்கும்,
மனிதர்களுக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும்,
நீர் உண்டாக்கி வைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாக இருக்கிறது!
20 மனிதர்களுடைய அகங்காரத்திற்கு அவர்களை உமது சமுகத்தின் மறைவிலே மறைத்து,
நாவுகளின் சண்டைக்கு அவர்களை விலக்கி,
உமது கூடாரத்திலே ஒளித்துவைத்துக் காப்பாற்றுகிறீர்.
21 யெகோவா பாதுகாப்பான நகரத்தில் எனக்குத் தமது கிருபையை அதிசயமாக தெரியப்படுத்தினபடியால்,
அவருக்கு ஸ்தோத்திரம்.
22 உம்முடைய கண்களுக்கு முன்பாக இல்லாதபடிக்கு வெட்டுண்டேன் என்று
நான் என்னுடைய மனக்கலக்கத்திலே சொன்னேன்;
ஆனாலும் நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டபோது,
என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டீர்.
23 யெகோவாவுடைய பரிசுத்தவான்களே,
நீங்களெல்லாரும் அவரில் அன்பு கூருங்கள்;
உண்மையானவனைக் யெகோவா தற்காத்து,
வீம்பு செய்கிறவனுக்குப் பூரணமாகப் பதிலளிப்பார்.
24 யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களே,
நீங்களெல்லாரும் திடமனதாக இருங்கள்,
அவர் உங்களுடைய இருதயத்தை உறுதிப்படுத்துவார்.
Chapter 32
சங்கீதம் 32
மஸ்கீல் என்னும் தாவீதின் பாடல்.1 எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ,
எவனுடைய பாவம் மூடப்பட்டதோ,
அவன் பாக்கியவான்.
2 எவனுடைய அக்கிரமத்தைக் யெகோவா எண்ணாமலிருக்கிறாரோ,
எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான்.
3 நான் அடக்கிவைத்தவரையில்,
எப்பொழுதும் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று.
4 இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாக இருந்ததினால்,
என் பெலன் கோடைக்கால வறட்சிபோல வறண்டுபோயிற்று. (சேலா)
5 நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்;
என் மீறுதல்களைக் யெகோவாவுக்கு அறிக்கையிடுவேன் என்றேன்;
தேவனே நீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர். (சேலா)
6 இதற்காக [1] உம்மைக் காணும் காலத்தில் பக்தியுள்ளவனெவனும் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்வான்;
அப்பொழுது மிகுந்த வெள்ளம் வந்தாலும் அது அவனை அணுகாது.
7 நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்;
என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து,
இரட்சிப்பின் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர். (சேலா)
8 நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்;
உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.
9 வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய் கட்டப்பட்டாலொழிய,
உன் அருகில் சேராத புத்தியில்லாத குதிரையைப்போலவும்
கோவேறு கழுதையைப்போலவும் இருக்கவேண்டாம்.
10 துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு;
யெகோவாவை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்து கொள்ளும்.
11 நீதிமான்களே, யெகோவாவுக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்;
செம்மையான இருதயமுள்ளவர்களே,
நீங்கள் எல்லாரும் ஆனந்தமுழக்கமிடுங்கள்.
Chapter 33
சங்கீதம் 33
1 நீதிமான்களே, யெகோவாவுக்குள் சந்தோஷமாக இருங்கள்;
துதிசெய்வது நேர்மையானவர்களுக்குத் தகும்.
2 சுரமண்டலத்தினால் யெகோவாவை துதித்து,
பத்து நரம்பு வீணையினாலும் அவரை புகழ்ந்து பாடுங்கள்.
3 அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்;
ஆனந்த சத்தத்தோடு வாத்தியங்களை நேர்த்தியாக வாசியுங்கள்.
4 யெகோவாவுடைய வார்த்தை உத்தமமும்,
அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது.
5 அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்;
பூமி யெகோவாவுடைய கருணையினால் நிறைந்திருக்கிறது.
6 யெகோவாவுடைய வார்த்தையினால் வானங்களும்,
அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் அனைத்தும் உண்டாக்கப்பட்டது.
7 அவர் கடலின் தண்ணீர்களைக் குவியலாகச் சேர்த்து,
ஆழமான தண்ணீர்களைப் பொக்கிஷவைப்பாக வைக்கிறார்.
8 பூமியெல்லாம் யெகோவாவுக்குப் பயப்படுவதாக;
உலகத்திலுள்ள குடிமக்களெல்லாம் அவருக்கு பயந்திருப்பதாக.
9 அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்.
10 யெகோவா தேசங்களின் ஆலோசனையை வீணடித்து,
மக்களுடைய நினைவுகளை பயனற்றதாக ஆக்குகிறார்.
11 யெகோவாவுடைய ஆலோசனை நிரந்தரகாலமாகவும்,
அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும்.
12 யெகோவாவை தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட தேசமும்,
அவர் தமக்குச் சொந்தமாகத் தெரிந்துகொண்ட மக்களும் பாக்கியமுள்ளது.
13 யெகோவா வானத்திலிருந்து நோக்கிப்பார்த்து, எல்லா மனிதர்களையும் காண்கிறார்.
14 தாம் தங்கியிருக்கிற இடத்திலிருந்து பூமியின் குடிமக்கள் எல்லோர்மேலும் கண்ணோக்கமாக இருக்கிறார்.
15 அவர்களுடைய இருதயங்களையெல்லாம் அவர் உருவாக்கி, அவர்கள் செய்கைகளையெல்லாம் கவனித்திருக்கிறார்.
16 எந்த ராஜாவும் தன்னுடைய ராணுவத்தின் மிகுதியால் காப்பாற்றப்படமாட்டான்;
போர்வீரனும் தன்னுடைய பலத்தின் மிகுதியால் தப்பமாட்டான்.
17 காப்பாற்றுவதற்கு குதிரை வீண்;
அது தன்னுடைய மிகுந்த பலத்தால் காப்பாற்றாது.
18 தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்;
19 பஞ்சத்தில் அவர்களை உயிரோடு காக்கவும்,
யெகோவாவுடைய கண் அவர்கள்மேல் நோக்கமாக இருக்கிறது.
20 நம்முடைய ஆத்துமா யெகோவாவுக்குக் காத்திருக்கிறது;
அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர்.
21 அவருடைய பரிசுத்த பெயரை நாம் நம்பியிருக்கிறபடியால்,
நம்முடைய இருதயம் அவருக்குள் சந்தோசமாக இருக்கும்.
22 யெகோவாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே உமது கிருபை எங்கள்மேல் இருப்பதாக.
Chapter 34
சங்கீதம் 34
தாவீதின் வேஷத்தைக் கண்டு அபிமெலேக்கு அவனைத் துரத்தியபோது தாவீது பாடிய பாடல்.1 யெகோவாவுக்கு நான் எப்போதும் நன்றி செலுத்துவேன்;
அவர் துதி எப்போதும் என்னுடைய வாயில் இருக்கும்.
2 யெகோவாவுக்குள் என்னுடைய ஆத்துமா மேன்மைபாராட்டும்;
ஒடுக்கப்பட்டவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள்.
3 என்னோடே கூடக் யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்;
நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக.
4 நான் யெகோவாவை தேடினேன்,
அவர் எனக்குச் செவிகொடுத்து,
என்னுடைய எல்லாப் பயத்திற்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.
5 அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்;
அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை.
6 இந்த ஏழை கூப்பிட்டான், யெகோவா கேட்டு,
அவனை அவன் பிரச்சனைகளுக்கெல்லாம் நீங்கலாக்கி காப்பாற்றினார்.
7 யெகோவாவுடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சுற்றி
முகாமிட்டு அவர்களை விடுவிக்கிறார்.
8 யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்;
அவர்மேல் நம்பிக்கையாக இருக்கிற மனிதன் பாக்கியவான்.
9 யெகோவாவுடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்;
அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை.
10 சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாக இருக்கும்;
யெகோவாவை தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறையாது.
11 பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்;
யெகோவாவுக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன்.
12 நன்மையைக் காணும்படி, வாழ்க்கையை விரும்பி,
நீடித்த நாட்களை நேசிக்கிற மனிதன் யார்?
13 உன் நாவை தீங்கிற்கும்,
உன்னுடைய உதடுகளை பொய் வார்த்தைகளுக்கும் விலக்கிக் காத்துக்கொள்.
14 தீமையை விட்டு விலகி, நன்மை செய்;
சமாதானத்தைத் தேடி, அதைத் பின்தொடர்ந்துகொள்.
15 யெகோவாவுடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாக இருக்கிறது;
அவருடைய காதுகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது.
16 தீமைசெய்கிறவர்களுடைய பெயரைப் பூமியில் இல்லாமல் போகச்செய்ய,
யெகோவாவுடைய முகம் அவர்களுக்கு விரோதமாக இருக்கிறது.
17 நீதிமான்கள் கூப்பிடும்போது யெகோவா கேட்டு,
அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார்.
18 உடைந்த இருதயமுள்ளவர்களுக்குக் யெகோவா அருகில் இருந்து,
நொறுக்கப்பட்ட ஆவியுள்ளவர்களை காப்பாற்றுகிறார்.
19 நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாக இருக்கும்,
யெகோவா அவைகள் எல்லாவற்றிலும் இருந்து அவனை விடுவிப்பார்.
20 அவனுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார்;
அவைகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை.
21 தீமை துன்மார்க்கனைக் கொல்லும்;
நீதிமானைப் பகைக்கிறவர்கள் குற்றவாளிகளாவார்கள்.
22 யெகோவா தம்முடைய ஊழியக்காரர்களின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்;
அவரை நம்புகிற ஒருவன்மேலும் குற்றஞ்சுமராது.
Chapter 35
சங்கீதம் 35
தாவீதின் பாடல்.1 யெகோவாவே, நீர் என்னுடைய எதிராளிகளோடு வழக்காடி,
என்னோடு சண்டையிடுகிறவர்களோடு போரிடும்.
2 நீர் கேடகத்தையும் பெரிய கேடகத்தையும் பிடித்து,
எனக்கு ஒத்தாசையாக எழுந்து நில்லும்.
3 என்னைத் துன்பப்படுத்துகிறவர்களோடு எதிர்த்து நின்று, ஈட்டியை ஓங்கி அவர்களை வழிமறித்து:
நான் உன்னுடைய இரட்சிப்பு என்று என்னுடைய ஆத்துமாவுக்குச் சொல்லும்.
4 என்னுடைய உயிரை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கப்பட்டுக் கலங்குவார்களாக;
எனக்குத் தீங்குசெய்ய நினைக்கிறவர்கள் அவமானமடைவார்களாக.
5 அவர்கள் காற்றடிக்கும் திசையில் பறக்கும் பதரைப்போல ஆவார்களாக;
யெகோவாவுடைய தூதன் அவர்களைத் துரத்துவானாக.
6 அவர்களுடைய வழி இருளும் சறுக்கலுமாக இருப்பதாக;
யெகோவாவுடைய தூதன் அவர்களைப் பின்தொடருவானாக.
7 காரணமில்லாமல் எனக்காகத் தங்களுடைய வலையைக் குழியில் ஒளித்துவைத்தார்கள்;
காரணமில்லாமல் என்னுடைய ஆத்துமாவுக்குப் படுகுழி வெட்டினார்கள்.
8 அவன் நினைக்காத அழிவு அவனுக்கு வந்து, அவன் மறைவாக வைத்த வலை அவனையே பிடிக்கட்டும்;
அவனே அந்தக் குழியில் விழுந்து அழிவானாக.
9 என்னுடைய ஆத்துமா யெகோவாவில் சந்தோஷித்து,
அவருடைய இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கும்.
10 ஒடுக்கப்பட்டவனை, அவனிலும் பலவானுடைய கைக்கும்,
ஏழையும் எளிமையுமானவனைக் கொள்ளையிடுகிறவனுடைய கைக்கும் தப்புவிக்கிற உமக்கு ஒப்பானவர் யார் யெகோவாவே,
என்று என்னுடைய எலும்புகளெல்லாம் சொல்லும்.
11 கொடுமையான சாட்சிகள் எழும்பி, நான் அறியாததை என்னிடத்தில் கேட்கிறார்கள்.
12 நான் செய்த நன்மைக்குப் பதிலாகத் தீமைசெய்கிறார்கள்;
என்னுடைய ஆத்துமா சோர்ந்து போகச்செய்யப்பார்க்கிறார்கள்.
13 அவர்கள் வியாதியாக இருந்தபோது சணல் என்னுடைய உடையாக இருந்தது;
நான் உபவாசத்தால் என்னுடைய ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினேன்;
என்னுடைய ஜெபமும் கேட்கப்படவில்லை.
14 நான் அவனை என்னுடைய நண்பனாகவும்
சகோதரனாகவும் நினைத்து நடந்துகொண்டேன்;
தாய்க்காகத் துக்கப்படுகிறவனைப்போல்
துக்கஉடை அணிந்து தலைகவிழ்த்து நடந்தேன்.
15 ஆனாலும் எனக்கு ஆபத்து உண்டானபோது
அவர்கள் சந்தோஷப்பட்டுக் கூட்டங்கூடினார்கள்;
அற்பமானவர்களும் நான் அறியாதவர்களும் எனக்கு விரோதமாகக் கூட்டம் கூடி,
ஓயாமல் என்னை இகழ்ந்தார்கள்.
16 அப்பத்திற்காக வஞ்சகம் பேசுகிற பரியாசக்காரர்களோடு
சேர்ந்துகொண்டு என்மேல் பற்கடிக்கிறார்கள்.
17 ஆண்டவரே, எதுவரைக்கும் இதைப் பார்த்துக்கொண்டிருப்பீர்?
என்னுடைய ஆத்துமாவை அழிவுக்கும், எனக்கு அருமையானதைச் சிங்கக்குட்டிகளுக்கும் தப்புவியும்.
18 மகா சபையிலே உம்மைத் துதிப்பேன்,
திரளான மக்களுக்குள்ளே உம்மைப் புகழுவேன்.
19 வீணாக எனக்கு எதிரிகளானவர்கள் என்னால் சந்தோஷப்படாமலும்,
காரணமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள்
கண் சிமிட்டாமலும் இருப்பார்களாக.
20 அவர்கள் சமாதானமாகப் பேசாமல்,
தேசத்திலே அமைதலாக இருக்கிறவர்களுக்கு விரோதமாக வஞ்சகமான காரியங்களைக் கருதுகிறார்கள்.
21 எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாகத் திறந்து,
ஆ ஆ, ஆ ஆ, எங்கள் கண் கண்டது என்கிறார்கள்.
22 யெகோவாவே, நீர் இதைக் கண்டீர், மவுனமாக இருக்கவேண்டாம்;
ஆண்டவரே, எனக்குத் தூரமாகாமலிரும்.
23 என் தேவனே, என் ஆண்டவரே,
எனக்கு நியாயஞ்செய்யவும் என்னுடைய வழக்கைத் தீர்க்கவும் விழித்துக்கொண்டு எழுந்தருளும்.
24 என் தேவனாகிய யெகோவாவே, உம்முடைய நீதியின்படி என்னை நியாயம் விசாரியும்,
என்னைக்குறித்து அவர்களை மகிழவிடாமலிரும்.
25 அவர்கள் தங்களுடைய இருதயத்திலே:
ஆ ஆ, இதுவே நாங்கள் விரும்பினது என்று சொல்லாதபடிக்கும்,
அவனை [1] என்று பேசாதபடிக்கும் செய்யும்.
26 எனக்கு நேரிட்ட ஆபத்துக்காகச் சந்தோஷப்படுகிறவர்கள் ஒன்றாக வெட்கி அவமானப்பட்டு,
எனக்கு விரோதமாகப் பெருமைபாராட்டுகிறவர்கள் வெட்கத்தாலும்
அவமானத்தாலும் மூடப்படவேண்டும்.
27 என்னுடைய நீதி தெரியவேண்டுமென்று விரும்புகிறவர்கள்
கெம்பீரித்து மகிழ்ந்து,
தமது ஊழியக்காரனுடைய சுகத்தை விரும்புகிற யெகோவாவுக்கு மகிமை
உண்டாவதாக என்று எப்போதும் சொல்லட்டும்.
28 என் நாவு உமது நீதியையும்,
நாள்முழுவதும் உமது துதியையும் சொல்லிக்கொண்டிருக்கும்.
Chapter 36
சங்கீதம் 36
இராகத் தலைவனுக்கு, யெகோவாவுடைய ஊழியனாகிய தாவீது கொடுத்த பாடல்.1 துன்மார்க்கனுடைய துரோகப்பேச்சு என் உள்ளத்திற்குத் தெரியும்;
அவன் கண்களுக்குமுன்பு தெய்வபயம் இல்லை.
2 அவன், தன்னுடைய அக்கிரமம் அருவருப்பானதென்று காணப்படும்வரை,
தன் பார்வைக்கேற்றபடி தனக்குத்தானே வஞ்சகம் பேசுகிறான்.
3 அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது;
புத்தியாக நடந்துகொள்வதையும் நன்மை செய்வதையும் விட்டுவிட்டான்.
4 அவன் தன்னுடைய படுக்கையின்மேல் அக்கிரமத்தை யோசித்து,
நல்லது இல்லாத வழியிலே நிலைத்து,
பொல்லாப்பை வெறுக்காமலிருக்கிறான்.
5 யெகோவாவே, உமது கிருபை வானங்களில் தெரிகிறது;
உமது சத்தியம் மேகமண்டலங்கள்வரை எட்டுகிறது.
6 உமது நீதி மகத்தான மலைகள் போலவும்,
உமது நியாயங்கள் மகா ஆழமாகவும் இருக்கிறது;
யெகோவாவே, மனிதர்களையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர்.
7 தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது!
அதினால் மனிதர்கள் உமது இறக்கைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்.
8 உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்;
உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர்.
9 வாழ்வின் ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது;
உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம்.
10 உம்மை அறிந்தவர்கள்மேல் உமது கிருபையையும்,
செம்மையான இருதயமுள்ளவர்கள்மேல்
உமது நீதியையும் பாராட்டியருளும்.
11 பெருமைக்காரர்களின் கால் என்மேல் வராமலும்,
துன்மார்க்கர்களுடைய கை என்னைப் பறக்கடிக்காமலும் இருப்பதாக.
12 அதோ அக்கிரமக்காரர்கள் விழுந்தார்கள்;
எழுந்திருக்கமுடியாமல் தள்ளப்பட்டுபோனார்கள்.
Chapter 37
சங்கீதம் 37
தாவீதின் பாடல்.1 பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலடையாதே;
நியாயக்கேடு செய்கிறவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே.
2 அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுக்கப்பட்டு,
பச்சைத்தாவரத்தைப்போல் வாடிப்போவார்கள்.
3 யெகோவாவை நம்பி நன்மைசெய்;
தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள்.
4 யெகோவாவிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு;
அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.
5 உன் வழியைக் யெகோவாவுக்கு ஒப்புவித்து,
அவர்மேல் நம்பிக்கையாயிரு;
அவரே காரியத்தை வாய்க்கச்செய்வார்.
6 உன் நீதியை வெளிச்சத்தைப் போலவும்,
உன் நியாயத்தைப் பட்டப்பகலைப்போலவும் விளங்கச்செய்வார்.
7 யெகோவாவை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு;
காரியசித்தியுள்ளவன் மேலும்
தீவினைகளைச் செய்கிற மனிதன் மேலும் எரிச்சலாகாதே.
8 கோபத்தை தள்ளி, கடுங்கோபத்தை விட்டுவிடு;
பொல்லாப்புச் செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம்.
9 பொல்லாதவர்கள் அறுக்கப்பட்டுபோவார்கள்;
யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களோ
பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.
10 இன்னும் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இருக்கமாட்டான்;
அவன் நிலையை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை.
11 சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து,
மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.
12 துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாகத் தீங்கு நினைத்து,
அவன்மேல் பல்லைக் கடிக்கிறான்.
13 ஆண்டவர் அவனைப் பார்த்து நகைக்கிறார்;
அவனுடைய நாள் வருகிறதென்று காண்கிறார்.
14 சிறுமையும் எளிமையுமானவனை வீழ்த்தவும்,
செம்மை மார்க்கத்தாரை விழசெய்யவும்,
துன்மார்க்கர்கள் வாளை உருவி, தங்கள் வில்லை நாணேற்றுகிறார்கள்.
15 ஆனாலும் அவர்கள் வாள் அவர்களுடைய இருதயத்திற்குள் உருவிப்போகும்;
அவர்கள் வில்லுகள் முறியும்.
16 அநேக துன்மார்க்கர்களுக்கு இருக்கிற திரளான செல்வத்தைவிட,
நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது.
17 துன்மார்க்கருடைய கரங்கள் முறியும்;
நீதிமான்களையோ யெகோவா தாங்குகிறார்.
18 உத்தமர்களின் நாட்களைக் யெகோவா அறிந்திருக்கிறார்;
அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும்.
19 அவர்கள் ஆபத்துக்காலத்திலே வெட்கப்பட்டுப்போகாதிருந்து,
பஞ்சகாலத்திலே திருப்தியடைவார்கள்.
20 துன்மார்க்கர்களோ அழிந்துபோவார்கள்,
யெகோவாவுடைய எதிரிகள் ஆட்டுக்குட்டிகளின் கொழுப்பைப்போல
புகைந்து போவார்கள், அவர்கள் புகையாய்ப் புகைந்து போவார்கள்.
21 துன்மார்க்கன் கடன் வாங்கிச் செலுத்தாமற் போகிறான்;
நீதிமானோ இரங்கிக்கொடுக்கிறான்.
22 அவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்;
அவரால் சபிக்கப்பட்டவர்களோ அறுக்கப்பட்டுபோவார்கள்.
23 நல்ல மனிதனுடைய நடைகள் யெகோவாவால் உறுதிப்படும்,
அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார்.
24 அவன் விழுந்தாலும் தள்ளப்பட்டு போவதில்லை;
யெகோவா தமது கையினால் அவனைத் தாங்குகிறார்.
25 நான் இளைஞனாயிருந்தேன்,
முதிர்வயதுள்ளவனுமானேன்;
ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும்,
அவன் சந்ததி அப்பத்திற்கு பிச்சை எடுக்கிறதையும் நான் காணவில்லை.
26 அவன் எப்பொழுதும் இரங்கிக் கடன் கொடுக்கிறான்,
அவன் சந்ததி ஆசீர்வதிக்கப்படும்.
27 தீமையை விட்டு விலகி, நன்மை செய்;
என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய்.
28 யெகோவா நியாயத்தை விரும்புகிறவர்;
அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை;
அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்;
துன்மார்க்கர்களுடைய சந்ததியோ அறுக்கப்பட்டுபோகும்.
29 நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு,
என்றைக்கும் அதிலே குடியிருப்பார்கள்.
30 நீதிமானுடைய வாய் ஞானத்தை சொல்லி,
அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும்.
31 அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது;
அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை.
32 துன்மார்க்கன் நீதிமான்மேல் கண்வைத்து,
அவனைக் கொல்ல வகைதேடுகிறான்.
33 யெகோவாவோ அவனை இவன் கையில் விடுவதில்லை;
அவன் நியாயம் விசாரிக்கப்படும்போது, அவனை தண்டனைக்குள்ளாகத் தீர்ப்பதுமில்லை.
34 நீ யெகோவாவுக்குக் காத்திருந்து,
அவருடைய வழியைக் கைக்கொள்;
அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்;
துன்மார்க்கர்கள் அறுக்கப்பட்டுபோவதை நீ காண்பாய்.
35 கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன்
அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தைப்போல் தழைத்தவனாயிருந்தான்.
36 ஆனாலும் அவன் ஒழிந்துபோனான்; பாருங்கள்,
அவன் இல்லை; நான் மறுபடியும் போனேன்,
அவன் காணப்படவில்லை.
37 நீ உத்தமனை நோக்கி,
செம்மையானவனைப் பார்த்திரு;
அந்த மனிதனுடைய முடிவு சமாதானம்.
38 அக்கிரமக்காரர் ஒன்றாக அழிக்கப்படுவார்கள்;
அறுக்கப்பட்டுபோவதே துன்மார்க்கர்களின் முடிவு.
39 நீதிமான்களுடைய இரட்சிப்பு யெகோவாவால் வரும்;
இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம்.
40 யெகோவா அவர்களுக்கு உதவிசெய்து,
அவர்களை விடுவிப்பார்;
அவர்கள் அவரை நம்பியிருக்கிறபடியால்,
அவர்களைத் துன்மார்க்கர்களுடைய கைக்குத் தப்புவித்து காப்பாற்றுவார்.
Chapter 38
சங்கீதம் 38
நினைவுகூருதலுக்கான தாவீதின் பாடல்.1 யெகோவாவே, உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்துகொள்ள வேண்டாம்;
உம்முடைய கடுங்கோபத்தில் என்னைத் தண்டிக்க வேண்டாம்.
2 உம்முடைய அம்புகள் எனக்குள்ளே துளைத்திருக்கிறது;
உமது கை என்னைத் தாங்குகிறது.
3 உமது கோபத்தினால் என் உடலில் ஆரோக்கியமில்லை;
என் பாவத்தினால் என் எலும்புகளில் சுகமில்லை.
4 என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகினது,
அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கமுடியாத பாரமானது.
5 என் மதியீனத்தினால் என் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது.
6 நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள் முழுவதும் துக்கப்பட்டுத் திரிகிறேன்.
7 என் குடல்கள் எரிபந்தமாக எரிகிறது;
என் உடலில் ஆரோக்கியம் இல்லை.
8 நான் பெலன் இழந்து, மிகவும் நொறுக்கப்பட்டேன்;
என் இருதயத்தின் கொந்தளிப்பினால் கதறுகிறேன்.
9 ஆண்டவரே, என் ஏக்கமெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது;
என் தவிப்பு உமக்கு மறைவாக இருக்கவில்லை.
10 என் உள்ளம் குழம்பி அலைகிறது;
என் பெலன் என்னைவிட்டு விலகி, என் கண்களின் ஒளி கூட இல்லாமல்போனது.
11 என் நண்பர்களும் என் தோழர்களும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள்;
என் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள்.
12 என் உயிரை வாங்கத்தேடுகிறவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்;
எனக்குத் தீங்கை தேடுகிறவர்கள் கேடானவைகளைப் பேசி,
நாள்முழுவதும் வஞ்சனைகளை யோசிக்கிறார்கள்.
13 நானோ செவிடனைப்போலக் கேட்காதவனாகவும்,
ஊமையனைப்போல வாய் திறக்காதவனாகவும் இருக்கிறேன்.
14 காதுகேட்காதவனும், தன்னுடைய வாயில் பதில் இல்லாதவனுமாக இருக்கிற மனிதனைப் போலானேன்.
15 யெகோவாவே, உமக்குக் காத்திருக்கிறேன்;
என் தேவனாகிய ஆண்டவரே, நீர் பதில் கொடுப்பீர்.
16 அவர்கள் எனக்காக சந்தோஷப்படாதபடிக்கு இப்படிச் சொன்னேன்;
என்னுடைய கால் தவறும்போது என்மேல் பெருமை பாராட்டுவார்களே.
17 நான் தடுமாறி விழ ஏதுவாக இருக்கிறேன்;
என்னுடைய துக்கம் எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறது.
18 என் அக்கிரமத்தை நான் அறிக்கையிட்டு,
என் பாவத்திற்காக கவலைப்படுகிறேன்.
19 என் எதிரிகள் வாழ்ந்து பலத்திருக்கிறார்கள்;
காரணமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் பெருகியிருக்கிறார்கள்.
20 நான் நன்மையைப் பின்பற்றுகிறபடியால்,
நன்மைக்குத் தீமை செய்கிறவர்கள் என்னை விரோதிக்கிறார்கள்.
21 யெகோவாவே, என்னைக் கைவிடாமலிரும்;
என் தேவனே, எனக்குத் தூரமாக இருக்கவேண்டாம்.
22 என்னுடைய இரட்சிப்பாகிய ஆண்டவரே,
எனக்குச் உதவிசெய்ய விரைவாகவாரும்.
Chapter 39
சங்கீதம் 39
எதுதூன் என்னும் தலைவனுக்கு தாவீதின் பாடல்.1 என்னுடைய நாவினால் பாவம்செய்யாதபடிக்கு நான் என்னுடைய
வழிகளைக் காத்து, துன்மார்க்கன் எனக்கு முன்பாக இருக்கும்வரை என்னுடைய வாயைக் கடிவாளத்தால் அடக்கிவைப்பேன் என்றேன்.
2 நான் மவுனமாகி, ஊமையனாக இருந்தேன்,
நலமானதையும் பேசாமல் அமர்ந்திருந்தேன்;
ஆனாலும் என்னுடைய துக்கம் அதிகரித்தது;
3 என்னுடைய இருதயம் எனக்குள்ளே அனல்கொண்டது;
நான் தியானிக்கும்போது நெருப்பு எரிந்தது;
அப்பொழுது என்னுடைய நாவினால் விண்ணப்பம் செய்தேன்.
4 யெகோவாவே, நான் எவ்வளவாக நிலையற்றவன் என்று உணரும்படி என்னுடைய முடிவையும்,
என்னுடைய நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும்.
5 இதோ, என்னுடைய நாட்களை நான்கு விரல் அளவாக்கினீர்;
என்னுடைய ஆயுள் உமது பார்வைக்கு ஒன்றும் இல்லாதது போலிருக்கிறது;
எந்த மனிதனும் மாயையே என்பது நிச்சயம். (சேலா)
6 நிழலைப்போலவே மனிதன் நடந்து திரிகிறான்;
வீணாகவே சஞ்சலப்படுகிறான்; சொத்தைச் சேர்க்கிறான்.
யார் அதை எடுத்துக்கொள்ளுவான் என்று அறியான்.
7 இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்? நீரே என்னுடைய நம்பிக்கை.
8 என்னுடைய மீறுதல்கள் எல்லாவற்றிலுமிருந்து என்னை விடுதலையாக்கும்,
மூடனின் அவமானப்படுத்துதலுக்கு என்னை ஒப்புக்கொடுக்க வேண்டாம்.
9 நீரே இதைச் செய்தீர் என்று நான்
என்னுடைய வாயைத் திறக்காமல் மவுனமாக இருந்தேன்.
10 என்னிலிருந்து உம்முடைய வாதையை எடுத்துப்போடும்;
உமது கையின் அடிகளால் நான் சோர்ந்து போனேன்.
11 அக்கிரமத்திற்காக நீர் மனிதனைக் கடிந்துகொண்டு தண்டிக்கிறபோது,
அவன் வடிவத்தைப் பூச்சி அரிப்பதுபோல அழியச்செய்கிறீர்;
நிச்சயமாக எந்த மனிதனும் மாயையே. (சேலா)
12 யெகோவாவே, என்னுடைய ஜெபத்தைக் கேட்டு,
என்னுடைய கூப்பிடுதலை காதுகொடுத்து கேளும்;
என்னுடைய கண்ணீருக்கு மவுனமாக இருக்கவேண்டாம்;
என்னுடைய முன்னோர்கள் எல்லோரையும்போல
நானும் உமக்குமுன்பாக அந்நியனும் நிலையற்றவனுமாக இருக்கிறேன்.
13 நான் இனி இல்லாமல்போவதற்குமுன்னே,
தேறுதலடையும்படி என்னிடத்தில் பொறுமையாக இரும்.
Chapter 40
சங்கீதம் 40
இராகத் தலைவனுக்கு தாவீதின் பாடல்.1 யெகோவாவுக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்;
அவர் என்னிடமாகச் சாய்ந்து,
என்னுடைய கூப்பிடுதலைக் கேட்டார்.
2 பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து,
என்னுடைய கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி,
என்னுடைய கால் அடிகளை உறுதிப்படுத்தி,
3 நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்;
அநேகர் அதைக் கண்டு, பயந்து, யெகோவாவை நம்புவார்கள்.
4 பெருமைக்காரர்களையும் பொய்யைச் [1] சார்ந்திருக்கிறவர்களையும் பார்க்காமல்,
யெகோவாவையே தன்னுடைய நம்பிக்கையாக வைக்கிற மனிதன் பாக்கியவான்.
5 என் தேவனாகிய யெகோவாவே,
நீர் எங்களுக்காக செய்த உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாக இருக்கிறது;
ஒருவரும் அவைகளை உமக்கு விவரித்துச் சொல்லி முடியாது.
நான் அவைகளைச் சொல்லி அறிவிக்கவேண்டுமானால் அவைகள் எண்ணிக்கைக்கு மேலானவைகள்.
6 பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பாமல்,
என் காதுகளைத் திறந்தீர்;
சர்வாங்க தகனபலியையும் பாவநிவாரணபலியையும் நீர் கேட்கவில்லை.
7 அப்பொழுது நான்: இதோ, வருகிறேன், புத்தகச்சுருளில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது;
8 என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்;
உமது நியாயப்பிரமாணம் என்னுடைய உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னேன்.
9 மகா சபையிலே நீதியைப் பிரசங்கித்தேன்;
என்னுடைய உதடுகளை மூடமாட்டேன்,
யெகோவாவே, நீர் அதை அறிவீர்.
10 உம்முடைய நீதியை நான் என்னுடைய இருதயத்திற்குள் மறைத்து வைக்கவில்லை;
உமது சத்தியத்தையும் உமது இரட்சிப்பையும் சொல்லியிருக்கிறேன்;
உமது கிருபையையும் உமது உண்மையையும் மகா சபைக்கு அறிவிக்காதபடிக்கு நான் ஒளித்துவைக்கவில்லை.
11 யெகோவாவே நீர் உம்முடைய இரக்கங்களை எனக்குக் கிடைக்காமல் போகச்செய்யவேண்டாம்;
உமது கிருபையும் உமது உண்மையும் எப்பொழுதும் என்னைக் காக்கட்டும்.
12 எண்ணிக்கைக்கு அடங்காத தீமைகள் என்னைச் சூழ்ந்துகொண்டது,
என்னுடைய அக்கிரமங்கள் என்னைத் தொடர்ந்து பிடித்தது, நான் நிமிர்ந்து பார்க்கமுடியாமல் இருக்கிறது,
அவைகள் என்னுடைய தலைமுடியிலும் அதிகமாக இருக்கிறது,
என்னுடைய இருதயம் சோர்ந்துபோகிறது.
13 யெகோவாவே, என்னை விடுவித்தருளும்;
யெகோவாவே, எனக்கு உதவிசெய்ய விரைந்துவாரும்.
14 என்னுடைய உயிரை அழிக்கத் தேடுகிறவர்கள் ஒன்றாக வெட்கி நாணி,
எனக்குத் தீங்குசெய்ய விரும்புகிறவர்கள் பின்னிட்டு அவமானமடைவார்களாக.
15 என்னுடைய பெயரில் ஆ ஆ! ஆ ஆ! என்று சொல்லுகிறவர்கள்,
தங்களுடைய வெட்கத்தின் பலனையடைந்து கைவிடப்படுவார்களாக.
16 உம்மைத் தேடுகிற அனைவரும் உமக்குள் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக;
உம்முடைய இரட்சிப்பை விரும்புகிறவர்கள் யெகோவாவுக்கு மகிமை உண்டாவதாக என்று
எப்பொழுதும் சொல்வார்களாக.
17 நான் ஏழ்மையும் தேவையுமுள்ளவன்,
யெகோவாவோ என்மேல் நினைவாக இருக்கிறார்;
தேவனே நீர் என்னுடைய துணையும் என்னை விடுவிக்கிறவருமாக இருக்கிறீர்;
என் தேவனே, தாமதிக்க வேண்டாம்.
Chapter 41
சங்கீதம் 41
இராகத்தலைவனுக்கு தாவீதின் பாடல்.1 பெலவீனமானவன்மேல் கவலையுள்ளவன் பாக்கியவான்;
தீங்குநாளில் யெகோவா அவனை விடுவிப்பார்.
2 யெகோவா அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடு வைப்பார்;
பூமியில் அவன் பாக்கியவானாக இருப்பான்;
அவனுடைய எதிரிகளின் விருப்பத்திற்கு நீர் அவனை ஒப்புக்கொடுப்பதில்லை.
3 படுக்கையின்மேல் வியாதியாகக் கிடக்கிற அவனைக் யெகோவா தாங்குவார்;
அவனுடைய வியாதியிலே அவனுடைய படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவார்.
4 யெகோவாவே, என்மேல் இரக்கமாயிரும்;
உமக்கு விரோதமாகப் பாவம்செய்தேன்,
என்னுடைய ஆத்துமாவைக் குணமாக்கும் என்று நான் சொன்னேன்.
5 அவன் எப்பொழுது சாவான்,
அவனுடைய பெயர் எப்பொழுது அழியும் என்று என்னுடைய எதிரிகள் எனக்கு விரோதமாகச் சொல்லுகிறார்கள்.
6 ஒருவன் என்னைப் பார்க்கவந்தால் வஞ்சனையாகப் பேசுகிறான்;
அவன் தன்னுடைய இருதயத்தில் அக்கிரமத்தைச் சேகரித்துக்கொண்டு,
தெருவிலே போய், அதைத் தூற்றுகிறான்.
7 என்னுடைய எதிரிகள் எல்லோரும் என்மேல் ஒன்றாக முணுமுணுத்து,
எனக்கு விரோதமாக இருந்து, எனக்குத் தீங்கு நினைத்து,
8 தீராத வியாதி அவனைப் பிடித்துக் கொண்டது;
படுக்கையில் கிடக்கிற அவன் இனி எழுந்திருப்பதில்லை என்கிறார்கள்.
9 என்னுடைய உயிர்நண்பனும், நான் நம்பினவனும்,
என்னுடைய அப்பம் சாப்பிட்டவனுமாகிய மனிதனும், என்மேல் தன்னுடைய குதிகாலைத் தூக்கினான்.
10 யெகோவாவே, நீர் எனக்கு இரங்கி,
நான் அவர்களுக்குச் சரிக்கட்ட என்னை எழுந்திருக்கச்செய்யும்.
11 என்னுடைய எதிரி என்மேல் வெற்றி பெறாததினால்,
நீர் என்மேல் பிரியமாக இருக்கிறீரென்று அறிவேன்.
12 நீர் என்னுடைய உத்தமத்திலே என்னைத் தாங்கி,
என்றென்றைக்கும் உம்முடைய சமுகத்தில் என்னை நிலைநிறுத்துவீர்.
13 இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா எப்பொழுதும் என்றென்றைக்குமுள்ள
எல்லாக் காலங்களிலும் நன்றிசெலுத்தப்படக்கூடியவர்.
ஆமென், ஆமென்.
Chapter 42
சங்கீதம் 42
கோராகின் குடும்பத்தின் மஸ்கீல் என்னும் இராகத் தலைவனிடம் கொடுக்கப்பட்ட தாவீதின் பாடல்.1 மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என்னுடைய ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.
2 என்னுடைய ஆத்துமா தேவன்மேல், உயிருள்ள தேவன்மேலேயே தாகமாக இருக்கிறது;
நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்?
3 உன்னுடைய தேவன் எங்கே என்று அவர்கள் நாள்தோறும் என்னிடத்தில் சொல்லுகிறபடியால்,
இரவும் பகலும் என்னுடைய கண்ணீரே எனக்கு உணவானது.
4 முன்னே நான் பண்டிகையை அனுசரிக்கிற மக்களோடு கூட நடந்து,
கூட்டத்தின் சந்தோஷமும் துதியுமான சத்தத்தோடு தேவாலயத்திற்குப் போய்வருவேனே;
இவைகளை நான் நினைக்கும்போது என்னுடைய உள்ளம் எனக்குள்ளே உருகுகிறது.
5 என்னுடைய ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்?
ஏன் எனக்குள் கவலைப்படுகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு;
அவர் சமுகத்து இரட்சிப்பிற்காக நான் இன்னும் அவரைத் துதிப்பேன்.
6 என் தேவனே, என்னுடைய ஆத்துமா எனக்குள் கலங்குகிறது;
ஆகையால் யோர்தான் தேசத்திலும் எர்மோன் மலைகளிலும் சிறுமலையிலுமிருந்து உம்மை நினைக்கிறேன்.
7 உமது மதகுகளின் இரைச்சலால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது;
உமது அலைகளும் பேரலைகளும் எல்லாம் என்மேல் புரண்டுபோகிறது.
8 ஆகிலும் யெகோவா பகற்காலத்திலே தமது கிருபையைக் கட்டளையிடுகிறார்;
இரவுநேரத்திலே அவரைப் பாடும் பாட்டு என்னுடைய வாயிலிருக்கிறது;
என் உயிருள்ள தேவனை நோக்கி விண்ணப்பம்செய்கிறேன்.
9 நான் என்னுடைய கன்மலையாகிய தேவனை நோக்கி:
ஏன் என்னை மறந்தீர்?
எதிரியால் ஒடுக்கப்பட்டு,
நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும் என்று சொல்லுகிறேன்.
10 உன் தேவன் எங்கே என்று
என் எதிரிகள் நாள்தோறும் என்னோடு சொல்லி,
என்னை நிந்திப்பது
என்னுடைய எலும்புகளை உருவக்குத்துகிறதுபோல் இருக்கிறது.
11 என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்?
ஏன் எனக்குள் கவலைப்படுகிறாய்?
தேவனை நோக்கிக் காத்திரு;
என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாக இருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.
Chapter 43
சங்கீதம் 43
1 தேவனே, நீர் என்னுடைய நியாயத்தை விசாரித்து,
பக்தியில்லாத தேசத்தாரோடு எனக்காக வழக்காடி, தீயவனும்,
அநியாயமுமான மனிதனுக்கு என்னைத் தப்புவியும்.
2 என் பெலனாகிய தேவன் நீர்;
ஏன் என்னைத் தள்ளிவிடுகிறீர்? எதிரியால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும்?
3 உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்;
அவைகள் என்னை நடத்தி,
உமது பரிசுத்த மலைக்கும் உம்முடைய தங்கும் இடங்களுக்கும் என்னைக் கொண்டுபோகட்டும்.
4 அப்பொழுது நான் தேவனுடைய பீடத்தின் அருகிலும்,
எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாக இருக்கிற தேவனிடத்திற்கும் நுழைவேன். தேவனே,
என் தேவனே, உம்மைச் சுரமண்டலத்தால் துதிப்பேன்.
5 என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்?
ஏன் எனக்குள் கவலைப்படுகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு;
என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாக இருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.
Chapter 44
சங்கீதம் 44
கோராகின் குடும்பத்தின் மஸ்கீல் என்னும் இராகத் தலைவனிடம் கொடுக்கப்பட்ட தாவீதின் பாடல்.1 தேவனே, எங்கள் முன்னோர்களுடைய நாட்களாகிய முற்காலத்தில்
நீர் நடப்பித்த செயல்களை அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்;
அவைகளை எங்களுடைய காதுகளால் கேட்டோம்.
2 தேவனே நீர் உம்முடைய கையினாலே தேசங்களைத் துரத்தி, இவர்களை நாட்டி;
மக்களைத் துன்பப்படுத்தி, இவர்களைப் பரவச்செய்தீர்.
3 அவர்கள் தங்களுடைய வாளினால் தேசத்தைக் கட்டிக்கொள்ளவில்லை;
அவர்கள் கைகளும் அவர்களைப் பாதுகாக்கவில்லை;
நீர் அவர்கள்மேல் பிரியமாக இருந்தபடியால்,
உம்முடைய வலதுகையும், உம்முடைய கையும்,
உம்முடைய முகத்தின் பிரகாசமும் அவர்களுக்குச் சாதகமாக இருந்தது.
4 தேவனே, நீர் என்னுடைய ராஜா;
யாக்கோபுக்கு ஜெயத்தை கட்டளையிடுவீராக [1] .
5 உம்மாலே எங்களுடைய எதிரிகளைக் கீழே விழத்தாக்கி,
எங்களுக்கு விரோதமாக எழும்புகிறவர்களை உம்முடைய பெயரினால் மிதிப்போம்.
6 என்னுடைய வில்லை நான் நம்பமாட்டேன்,
என்னுடைய வாள் என்னை பாதுகாப்பதில்லை.
7 நீரே எங்களுடைய எதிரிகளிடமிருந்து எங்களை பாதுகாத்து,
எங்களைப் பகைக்கிறவர்களை வெட்கப்படுத்துகிறீர்.
8 தேவனுக்குள் எப்போதும் மேன்மைபாராட்டுவோம்;
உமது பெயரை என்றென்றைக்கும் துதிப்போம். (சேலா)
9 நீர் எங்களைத் தள்ளிவிட்டு,
வெட்கமடையச்செய்கிறீர்;
எங்களுடைய படைகளுடனே செல்லாமலிருக்கிறீர்.
10 எதிரிக்கு நாங்கள் பின்னிட்டுத் திரும்பிப்போகச்செய்கிறீர்;
எங்களுடைய பகைவர் தங்களுக்கென்று எங்களைக் கொள்ளையிடுகிறார்கள்.
11 நீர் எங்களை ஆடுகளைப்போல இரையாக ஒப்புக்கொடுத்து,
தேசங்களுக்குள்ளே எங்களைச் சிதறடிக்கிறீர்.
12 நீர் உம்முடைய மக்களை இலவசமாக விற்கிறீர்;
அவர்கள் கிரயத்தினால் உமக்கு லாபமில்லையே.
13 எங்களுடைய அயலாருக்கு எங்களை நிந்தையாகவும்,
எங்கள் சுற்றுப்புறத்தாருக்கு ஏளனத்திற்கும்,
பழிப்புகளுக்கும் வைக்கிறீர்.
14 நாங்கள் தேசங்களுக்குள்ளே பழமொழியாக இருக்கவும்,
மக்கள் எங்களைக்குறித்துத் தலைதூக்கவும் செய்கிறீர்.
15 நிந்தித்துத் தூஷிக்கிறவனுடைய சத்தத்தினிமித்தமும், எதிரிகளினிமித்தமும்,
பழிவாங்குகிறவர்னிமித்தமும்,
16 என்னுடைய அவமானம் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது;
என்னுடைய முகத்தின் வெட்கம் என்னை மூடுகிறது.
17 இவையெல்லாம் எங்கள்மேல் வந்திருந்தும்,
உம்மை நாங்கள் மறக்கவும் இல்லை,
உம்முடைய உடன்படிக்கைக்குத் துரோகம்செய்யவும் இல்லை.
18 நீர் எங்களை வலுசர்ப்பங்களுள்ள இடத்திலே நொறுக்கி,
மரண இருளினாலே எங்களை மூடியிருந்தும்,
19 எங்களுடைய இருதயம் பின்வாங்கவும் இல்லை, எங்களுடைய காலடி உம்முடைய பாதையைவிட்டு விலகவும் இல்லை.
20 நாங்கள் எங்கள் தேவனுடைய பெயரை மறந்து,
அந்நியதேவனை நோக்கிக் கையெடுத்திருந்தோமானால்,
21 தேவன் அதை ஆராய்ந்து, விசாரிக்காமல் இருப்பாரோ?
இருதயத்தின் ரகசியங்களை அவர் அறிந்திருக்கிறாரே.
22 உமக்காக எந்நேரமும் கொல்லப்படுகிறோம்;
அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம்.
23 ஆண்டவரே, விழித்துக்கொள்ளும்; ஏன் தூங்குகிறீர்?
எழுந்தருளும், எங்களை என்றைக்கும் தள்ளிவிடாமலிரும்.
24 ஏன் உம்முடைய முகத்தை மறைத்து,
எங்களுடைய துன்பத்தையும் எங்களுடைய நெருக்கத்தையும் மறந்துவிடுகிறீர்?
25 எங்களுடைய ஆத்துமா புழுதிவரை தாழ்ந்திருக்கிறது;
எங்களுடைய வயிறு தரையோடு ஒட்டியிருக்கிறது.
26 எங்களுக்கு ஒத்தாசையாக எழுந்தருளும்;
உம்முடைய கிருபையினிமித்தம் எங்களை மீட்டுவிடும்.
Chapter 45
சங்கீதம் 45
கோராகு குமாரர்கள் எழுதின சங்கீதம்.1 என்னுடைய இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது;
நான் ராஜாவைக் குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன்;
என்னுடைய நாவு விரைவாக எழுதுகிறவனுடைய எழுத்தாணி.
2 எல்லா மனிதர்களிலும் நீர் மிக அழகுள்ளவர்;
உம்முடைய உதடுகளில் அருள் பொழிகிறது;
ஆகையால் தேவன் உம்மை என்றென்றைக்கும் ஆசீர்வதிக்கிறார்.
3 சவுரியவானே, உமது மகிமையும் உமது மகத்துவமுமாகிய
உம்முடைய வாளை நீர் உம்முடைய இடுப்பிலே கட்டிக்கொண்டு,
4 சத்தியத்தினிமித்தமும், நீதியுடன் கூடிய சாந்தத்தினிமித்தமும்,
உமது மகத்துவத்திலே ஜெயமாக ஏறிவாரும்;
உமது வலதுகரம் பயங்கரமானவைகளை உமக்கு விளங்கச்செய்யும்.
5 உம்முடைய அம்புகள் கூர்மையானவைகள்,
அவைகள் ராஜாவுடைய எதிரிகளின் இருதயத்திற்குள் பாயும்;
மக்கள்கூட்டங்கள் உமக்குக் கீழே விழும்.
6 உமக்கு தேவன் கொடுத்த சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, [1]
உமது ராஜ்ஜியத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாக இருக்கிறது.
7 நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறீர்;
ஆதலால் தேவனே, உம்முடைய தேவன்
உமது தோழர்களைவிட உம்மை ஆனந்ததைலத்தினால் அபிஷேகம்செய்தார்.
8 தந்தத்தினால் செய்த அரண்மனைகளிலிருந்து புறப்படும்போது,
நீர் மகிழும்படி உமது ஆடைகளை எல்லாம்
வெள்ளைப்போளம் சந்தனம் லவங்கம் இவைகளின் வாசனை பொருந்தியதாக இருக்கிறது.
9 உமது நாயகிகளுக்குள்ளே அரசரின் மகள்களும் உண்டு,
இளவரசி ஓப்பீரின் தங்கம் அணிந்தவளாக உமது வலதுபக்கத்தில் நிற்கிறாள்.
10 மகளே கேள், நீ உன்னுடைய செவியைச் சாய்த்து சிந்தித்துக்கொள்;
உன்னுடைய மக்களையும் உன்னுடைய தகப்பன் வீட்டையும் மறந்துவிடு.
11 அப்பொழுது ராஜா உன்னுடைய அழகில் பிரியப்படுவார்;
அவர் உன்னுடைய ஆண்டவர், ஆகையால் அவரைப் பணிந்துகொள்.
12 தீரு மகள் காணிக்கை கொண்டுவருவாள்;
மக்களில் ஜசுவரியவான்களும் உன்னுடைய தயவை நாடி வணங்குவார்கள்.
13 இளவரசி உள்ளாகப் பூரண மகிமையுள்ளவள்;
அவளுடைய உடை பொற்சரிகையாக இருக்கிறது.
14 வேலைப்பாடு நிறைந்த உடை அணிந்தவளாக,
ராஜாவினிடத்தில் அழைத்துக்கொண்டு வரப்படுவாள்;
அவள் பின்னாலே செல்லும் அவளுடைய தோழிகளாகிய கன்னிகைகள்
உம்மிடத்தில் கூட்டிக்கொண்டு வரப்படுவார்கள்.
15 அவர்கள் மகிழ்ச்சியோடும், சந்தோஷத்தோடும் வந்து,
ராஜ அரண்மனைக்குள் நுழைவார்கள்.
16 உமது தகப்பன்மார்களுக்குப் பதிலாக உமது மகன்கள் இருப்பார்கள்;
அவர்களைப் பூமியெங்கும் பிரபுக்களாக வைப்பீர்.
17 உமது பெயரை எல்லாத் தலைமுறைகளிலும் நினைவுபடுத்துவேன்;
இதற்காக மக்கள் உம்மை என்றென்றைக்குமுள்ள எல்லாக் காலங்களிலும் துதிப்பார்கள்.
Chapter 46
சங்கீதம் 46
அலமோத் என்னும் கருவியில் வாசிக்கும்படி கொடுக்கப்பட்ட கோராகின் குடும்பத்தின் இராகத் தலைவனுக்கு, ஒரு பாடல்.1 தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும்,
ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர்.
2 ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுக்கடலில் சாய்ந்துபோனாலும்,
3 அதின் தண்ணீர்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் மலைகள் அதிர்ந்தாலும்,
நாம் பயப்படமாட்டோம். (சேலா)
4 ஒரு நதியுண்டு, அதின் நீரோடைகள் தேவனுடைய நகரத்தையும்,
உன்னதமான தேவன் தங்கும் பரிசுத்தஸ்தலத்தையும் சந்தோஷப்படுத்தும்.
5 தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது;
அதிகாலையிலே தேவன் அதற்கு உதவி செய்வார்.
6 தேசங்கள் கொந்தளித்தது, ராஜ்ஜியங்கள் தத்தளித்தது;
அவர் தமது சத்தத்தை முழங்கச்செய்தார், பூமி உருகிப்போனது.
7 சேனைகளின் யெகோவா நம்மோடிருக்கிறார்;
யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா)
8 பூமியிலே அழிவுகளை நடப்பிக்கிற யெகோவாவுடைய செய்கைகளை வந்துபாருங்கள்.
9 அவர் பூமியின் கடைசிவரை யுத்தங்களை ஓயச்செய்கிறார்;
வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்;
இரதங்களை [1] நெருப்பினால் சுட்டெரிக்கிறார்.
10 நீங்கள் யுத்தம் செய்யாமலிருந்து,
நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள் என்று தேவன் சொல்லுகிறார்;
தேசங்களுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்.
11 சேனைகளின் யெகோவா நம்மோடிருக்கிறார்,
யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர் (சேலா).
Chapter 47
சங்கீதம் 47
கோராகின் குடும்பத்தின் இராகத் தலைவனுக்கு அளிக்கப்பட்ட ஒரு பாடல்.1 எல்லா மக்களே, கைகொட்டி,
தேவனுக்கு முன்பாகக் கெம்பீரசத்தமாக ஆர்ப்பரியுங்கள்.
2 உன்னதமான தேவனாகிய யெகோவா பயங்கரமானவரும்,
பூமியின் மீதெங்கும் மகத்துவமான ராஜாவுமாக இருக்கிறார்.
3 மக்களை நமக்கு கீழ்படுத்தி,
தேசங்களை நம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்துவார்.
4 தமக்குப் பிரியமான யாக்கோபின் சிறப்பான தேசத்தை நமக்குச் உரிமைச்சொத்தாக தெரிந்தளிப்பார். (சேலா)
5 தேவன் ஆர்ப்பரிப்போடும், யெகோவா எக்காள சத்தத்தோடும் உயர எழுந்தருளினார்.
6 தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்;
நம்முடைய ராஜாவைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்.
7 தேவன் பூமியனைத்திற்கும் ராஜா; கருத்துடனே அவரைப் போற்றிப் பாடுங்கள்.
8 தேவன் தேசங்களின்மேல் அரசாளுகிறார்;
தேவன் தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறார்.
9 மக்களின் பிரபுக்கள் ஆபிரகாமின் தேவனுடைய மக்களாகச் சேர்க்கப்படுகிறார்கள்;
பூமியின் கேடகங்கள் தேவனுடையவைகள்;
அவர் மகா உன்னதமான தேவன்.
Chapter 48
சங்கீதம் 48
கோராகின் மகன்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு துதியின் பாடல்.1 யெகோவா பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும்,
தமது பரிசுத்த மலையிலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர்.
2 வடதிசையிலுள்ள சீயோன் மலை அழகான உயரமும் முழு பூமியின் மகிழ்ச்சியுமாக இருக்கிறது,
அதுவே மகாராஜாவின் நகரம்.
3 அதின் அரண்மனைகளில் தேவன் உயர்ந்த அடைக்கலமாக அறியப்பட்டிருக்கிறார்.
4 இதோ, ராஜாக்கள் கூடிக்கொண்டு, ஒன்றாகக் கடந்துவந்தார்கள்.
5 அவர்கள் அதைக் கண்டபோது பிரமித்துக் கலங்கி விரைந்தோடினார்கள்.
6 அங்கே நடுக்கங்கொண்டு,
பிரசவ வேதனைப்படுகிற பெண்ணைப்போல வேதனைப்பட்டார்கள்.
7 கிழக்கு காற்றினால் தர்ஷீசின் கப்பல்களை நீர் உடைக்கிறீர்.
8 நாம் கேள்விப்பட்டபடியே நமது தேவனுடைய நகரமாகிய சேனைகளுடைய யெகோவாவின் நகரத்திலே கண்டோம்;
தேவன் அதை என்றென்றைக்கும் பாதுகாப்பார். (சேலா)
9 தேவனே, உமது ஆலயத்தின் நடுவிலே,
உமது கிருபையைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
10 தேவனே, உமது பெயர் வெளிப்படுகிறதுபோல
உமது புகழ்ச்சியும் பூமியின் கடைசிவரையிலும் வெளிப்படுகிறது;
உமது வலதுகை நீதியால் நிறைந்திருக்கிறது.
11 உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்காக சீயோன் மலை மகிழ்வதாக,
யூதாவின் மக்கள் சந்தோஷப்படுவார்களாக.
12 சீயோனைச் சுற்றி உலாவி, அதின் கோபுரங்களை எண்ணுங்கள்.
13 பின்வரும் சந்ததிக்கு நீங்கள் விவரிப்பதற்காக,
அதின் சுவரை கவனித்து,
அதின் அரண்மனைகளை உற்றுப்பாருங்கள்.
14 இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள எல்லா காலங்களிலும் நம்முடைய தேவன்;
மரணம்வரை நம்மை நடத்துவார்.
Chapter 49
சங்கீதம் 49
கோராகின் புத்திரருக்கு அளிக்கப்பட்ட ஒரு துதியின் பாடல்.1 மக்களே, நீங்கள் எல்லோரும் இதைக் கேளுங்கள்.
2 பூமியின் குடிமக்களே, சிறியோரும் பெரியோரும்
ஐசுவரியவான்களும் ஏழ்மையானவர்களுமாகிய நீங்கள் எல்லோரும் ஒன்றாக கேளுங்கள்.
3 என் வாய் ஞானத்தைப் பேசும்; என் இருதயம் உணர்வைத் தியானிக்கும்.
4 என் கவனத்தை உவமைக்குச் சாய்த்து,
என் மறைபொருளைச் சுரமண்டலத்தின்மேல் வெளிப்படுத்துவேன்.
5 என்னைத் தொடருகிறவர்களுடைய அக்கிரமம்
என்னைச் சூழ்ந்துகொள்ளும் தீங்குநாட்களில்,
நான் பயப்படவேண்டியதென்ன?
6 தங்களுடைய செல்வத்தை நம்பி தங்களுடைய அதிக செல்வத்தினால் பெருமைபாராட்டுகிற,
7 ஒருவனாவது, தன்னுடைய சகோதரன் [1] அழிவைக் காணாமல்
இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி,
8 அவனை மீட்டுக்கொள்ளவும்,
அவனுக்காக மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவும்முடியாதே.
9 அவர்கள் ஆத்துமமீட்பு மிகவும் அருமையாக இருக்கிறது;
அது ஒருபோதும் முடியாது.
10 ஞானிகளும் இறந்து, அஞ்ஞானிகளும் மூடர்களும் ஒன்றாக அழிந்து,
தங்களுடைய சொத்தை மற்றவர்களுக்கு வைத்துப்போகிறதைக் காண்கிறான்.
11 தங்களுடைய கல்லறைகள் நிரந்தரகாலமாகவும்,
தங்களுடைய குடியிருப்புகள் தலைமுறை தலைமுறையாகவும்
இருக்குமென்பது அவர்களுடைய உள்ளத்தின் அபிப்பிராயம்;
அவர்கள் தங்களுடைய பெயர்களைத் தங்களுடைய நிலங்களுக்குச் சூட்டுகிறார்கள்.
12 ஆகிலும் மரியாதைக்குரியவனாக இருக்கிற மனிதன் நிலைத்திருக்கிறதில்லை;
அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாக இருக்கிறான்.
13 இதுதான் அவர்களுடைய வழி, இதுதான் அவர்களுடைய பைத்தியம்;
ஆகிலும் அவர்கள் சந்ததியார் அவர்கள் சொல்லை மெச்சிக்கொள்ளுகிறார்கள். (சேலா)
14 ஆட்டுமந்தையைப்போல பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள்;
மரணம் அவர்களுடைய மேய்ப்பனாக இருக்கும்;
செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டுகொள்வார்கள்;
அவர்கள் தங்களுடைய குடியிருக்கும் இடத்தில் நிலைத்திருக்கமுடியாதபடி அவர்களுடைய உருவத்தை பாதாளம் அழிக்கும்.
15 ஆனாலும் தேவன் என்னுடைய ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார்,
அவர் என்னை ஏற்றுக்கொள்வார். (சேலா)
16 ஒருவன் செல்வந்தனாகி,
அவனுடைய வீட்டின் மகிமை பெருகும்போது, நீ பயப்படாதே.
17 அவன் இறக்கும்போது ஒன்றும் கொண்டுபோவதில்லை;
அவனுடைய மகிமை அவனைப் பின்பற்றிச் செல்வதுமில்லை.
18 அவன் உயிரோடிருக்கும்போது தன்னுடைய ஆத்துமாவை வாழ்த்தினாலும்:
நீ உனக்கு நன்மையை நாடினாய் என்று மனிதர்கள் அவனைப் புகழ்ந்தாலும்,
19 அவன் என்றென்றைக்கும் வெளிச்சத்தைக் காணாத
தன்னுடைய தகப்பன்மார்களின் சந்ததியைச் சேருவான்.
20 மரியாதைக்குரியவனாக இருந்தும் அறிவில்லாத மனிதன்
அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாக இருக்கிறான்.
Chapter 50
சங்கீதம் 50
ஆசாபின் பாடல்.1 வல்லமையுள்ள தேவனாகிய யெகோவா பேசினது,
சூரியன் உதிக்கும்திசை தொடங்கி
அது மறையும் திசைவரைக்குமுள்ள பூமியைக் கூப்பிடுகிறார்.
2 அழகுள்ள சீயோனிலிருந்து தேவன் பிரகாசிக்கிறார்.
3 நம்முடைய தேவன் வருவார், மவுனமாக இருக்கமாட்டார்;
அவருக்கு முன்பு அக்கினி அழியும்;
அவரைச் சுற்றிலும் மகா புயல் கொந்தளிப்பாக இருக்கும்.
4 அவர் தம்முடைய மக்களை நியாயந்தீர்க்க
உயர இருக்கும் வானங்களையும் பூமியையும் கூப்பிடுவார்.
5 பலியினாலே என்னோடு உடன்படிக்கை செய்த
என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள் என்பார்.
6 வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கும்;
தேவனே நியாயாதிபதி. (சேலா)
7 என்னுடைய மக்களே, கேள், நான் பேசுவேன்; இஸ்ரவேலே,
உனக்கு விரோதமாகச் சாட்சி சொல்லுவேன்;
நானே தேவன், உன்னுடைய தேவனாக இருக்கிறேன்.
8 உன்னுடைய பலிகளுக்காக உன்னைக் கடிந்துக்கொள்ளமாட்டேன்;
உன்னுடைய தகனபலிகள் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது.
9 உன்னுடைய வீட்டிலிருந்து காளைகளையும்,
உன்னுடைய தொழுவங்களிலிருந்து ஆட்டுக்கடாக்களையும் நான் வாங்கிக்கொள்வதில்லை.
10 எல்லா காட்டு உயிரினங்களும், மலைகளில் ஆயிரமாயிரமாகத் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள்.
11 மலைகளிலுள்ள [1] பறவைகளையெல்லாம் அறிவேன்;
வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம் என்னுடையவைகள்.
12 நான் பசியாக இருந்தால் உனக்குச் சொல்லமாட்டேன்;
பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே.
13 நான் எருதுகளின் இறைச்சியை சாப்பிட்டு,
ஆட்டுக்கடாக்களின் இரத்தம் குடிப்பேனோ?
14 நீ தேவனுக்கு நன்றிபலியிட்டு, உன்னதமான தேவனுக்கு உன்னுடைய பொருத்தனைகளைச் செலுத்தி;
15 ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு;
நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.
16 தேவன் துன்மார்க்கனை நோக்கி: நீ என்னுடைய பிரமாணங்களை எடுத்துச்சொல்லவும்,
என்னுடைய உடன்படிக்கையை உன்னுடைய வாயினால் சொல்லவும், உனக்கு என்ன நியாயமுண்டு.
17 அறிவுறுத்துதலை நீ பகைத்து, என்னுடைய வார்த்தைகளை உனக்குப் பின்னாக எறிந்துபோடுகிறாய்.
18 நீ திருடனைப் பார்க்கும்போது அவனோடு ஒருமித்துப்போகிறாய்;
விபசாரரோடும் உனக்குப் பங்குண்டு.
19 உன்னுடைய வாயைப் பொல்லாப்புக்குத் திறக்கிறாய்,
உன்னுடைய நாவு வஞ்சகத்தை வெளிப்படுத்துகிறது.
20 நீ உட்கார்ந்து உன்னுடைய சகோதரனுக்கு விரோதமாகப் பேசி,
உன்னுடைய சொந்த சகோதரனுக்கு அவதூறு உண்டாக்குகிறாய்.
21 இவைகளை நீ செய்யும்போது நான் மவுனமாக இருந்தேன்,
உன்னைப்போல நானும் இருப்பேன் என்று நினைவு கொண்டாய்;
ஆனாலும் நான் உன்னைக் கடிந்துகொண்டு,
அவைகளை உன்னுடைய கண்களுக்கு முன்பாக ஒவ்வொன்றாக நிறுத்துவேன்.
22 தேவனை மறக்கிறவர்களே, இதைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்;
இல்லாவிட்டால் நான் உங்களைப் பீறிப்போடுவேன்,
ஒருவரும் உங்களை விடுவிப்பதில்லை.
23 நன்றிபலி செலுத்துகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்;
தன்னுடைய வழியைச் சரிசெய்கிறவனுக்கு
தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார்.
Chapter 51
சங்கீதம் 51
இராகத் தலைவனுக்கு தாவீது எழுதிய பாடல். பத்சேபாளோடு தாவீது செய்த பாவத்திற்குப் பிறகு தீர்க்கதரிசியாகிய நாத்தான் தாவீதிடம் சென்று உணர்த்தியபோது இது பாடப்பட்டது.1 தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும்,
உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும்.
2 என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி,
என்னுடைய பாவம்போக என்னைச் சுத்திகரியும்.
3 என்னுடைய மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்;
என்னுடைய பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது.
4 தேவனே உம் ஒருவருக்கே விரோதமாக நான் பாவம்செய்து,
உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை செய்தேன்;
நீர் பேசும்போது உம்முடைய நீதி வெளிப்படவும், நீர் நியாயந்தீர்க்கும்போது,
உம்முடைய பரிசுத்தம் வெளிப்படவும் இதை அறிக்கையிடுகிறேன்.
5 இதோ, நான் அநீதியில் உருவானேன்;
என்னுடைய தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.
6 இதோ, உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர்;
உள்ளத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்.
7 நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும்,
அப்பொழுது நான் சுத்தமாவேன்;
என்னைக் கழுவியருளும்;
அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்.
8 நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படிச் செய்யும்,
அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் சந்தோஷப்படும்.
9 என்னுடைய பாவங்களைப் பார்க்காதபடி நீர் உமது முகத்தை மறைத்து,
என்னுடைய அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.
10 தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே உருவாக்கும், நிலையான ஆவியை என்னுடைய உள்ளத்திலே புதுப்பியும்.
11 உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும்,
உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்.
12 உமது இரட்சிப்பின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து,
உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்.
13 அப்பொழுது தீயவர்களுக்கு உமது வழிகளை உபதேசிப்பேன்;
பாவிகள் உம்மிடத்தில் மனந்திரும்புவார்கள்.
14 தேவனே, என்னை இரட்சிக்கும் தேவனே,
இரத்தப்பழிகளுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்;
அப்பொழுது என்னுடைய நாவு உம்முடைய நீதியைக் கெம்பீரமாகப் பாடும்.
15 ஆண்டவரே, என்னுடைய உதடுகளைத் திறந்தருளும்;
அப்பொழுது என்னுடைய வாய் உம்முடைய புகழை அறிவிக்கும்.
16 பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்;
தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல.
17 தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்;
தேவனே, நொறுங்குண்டதும் வருந்துகிறதுமான இருதயத்தை நீர் தள்ளிவிடுவதில்லை.
18 சீயோனுக்கு உமது பிரியத்தின்படி நன்மை செய்யும்;
எருசலேமின் மதில்களைக் கட்டும்.
19 அப்பொழுது தகனபலியும் சர்வாங்க தகனபலியுமாகிய
நீதியின் பலிகளில் பிரியப்படுவீர்;
அப்பொழுது உமது பீடத்தின்மேல் காளைகளைப் பலியிடுவார்கள்.
Chapter 52
சங்கீதம் 52
இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த மஸ்கீல் என்னும் பாடல், “தாவீது அகிமெலேக்கின் வீட்டில் இருக்கிறான்” என்று ஏதோமியனாகிய தோவேக் சவுலிடம் போய் கூறியபோது பாடப்பட்ட பாடல்.1 பலவானே, பொல்லாப்பில் ஏன் பெருமைபாராட்டுகிறாய்?
தேவனுடைய கிருபை எந்நாளும் உள்ளது.
2 நீ கேடுகளைச் செய்ய திட்டமிடுகிறாய்,
கபடுசெய்யும் உன்னுடைய நாவு தீட்டப்பட்ட சவரகன் கத்தியைப்போல் இருக்கிறது.
3 நன்மையைவிட தீமையையும்,
யாதார்த்தம் பேசுகிறதைவிட பொய்யையும் விரும்புகிறாய். (சேலா)
4 கபடமுள்ள நாவே, அழிக்கும் எல்லா வார்த்தைகளையும் நீ விரும்புகிறாய்;
5 தேவன் உன்னை என்றென்றைக்கும் இல்லாதபடி அழித்துப்போடுவார்;
அவர் உன்னைப் பிடித்து, உன் குடியிருப்பிலிருந்து பிடுங்கி,
நீ உயிருள்ளோர் தேசத்தில் இல்லாதபடி உன்னை அழித்துப்போடுவார். (சேலா)
6 நீதிமான்கள் அதைக்கண்டு பயந்து, அவனைப் பார்த்து சிரித்து:
7 இதோ, தேவனைத் தன்னுடைய பெலனாக கருதாமல்,
தன்னுடைய செல்வப்பெருக்கத்தை நம்பி,
தன்னுடைய தீமையில் பலத்துக்கொண்ட மனிதன் இவன்தான் என்பார்கள்.
8 நானோ தேவனுடைய ஆலயத்தில்
பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன்,
தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன்.
9 நீரே இதைச் செய்தீர் என்று உம்மை என்றென்றைக்கும் துதித்து,
உமது பெயருக்குக் காத்திருப்பேன்;
உம்முடைய பரிசுத்தவான்களுக்கு முன்பாக அது நலமாக இருக்கிறது.
Chapter 53
சங்கீதம் 53
தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.1 தேவன் இல்லை என்று அறிவில்லாதவன் தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்;
அவர்கள் தங்களைக் கெடுத்து,
அருவருப்பான அக்கிரமங்களைச் செய்து வருகிறார்கள்;
நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.
2 தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க,
தேவன் பரலோகத்திலிருந்து மனிதர்களைக் கண்ணோக்கினார்.
3 அவர்கள் எல்லோரும் வழிவிலகி, ஒன்றாகக் கெட்டுப்போனார்கள்;
நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவன்கூட இல்லை.
4 அக்கிரமக்காரர்களுக்கு அறிவு இல்லையா?
அப்பத்தை சாப்பிடுகிறதுபோல் என்னுடைய மக்களைச் சாப்பிடுகிறார்களே;
அவர்கள் தேவனைக் கூப்பிடுகிறதில்லை.
5 உனக்கு விரோதமாக முகாமிடுகிறவனுடைய எலும்புகளைத் தேவன் சிதறடித்ததால்,
பயமில்லாத இடத்தில் மிகவும் பயந்தார்கள்;
தேவன் அவர்களை வெறுத்தபடியினால் நீ அவர்களை வெட்கப்படுத்தினாய்.
6 சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக;
தேவன் தம்முடைய மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது,
யாக்கோபுக்குச் சந்தோஷமும் இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.
Chapter 54
சங்கீதம் 54
தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.1 தேவனே, உமது பெயரினிமித்தம் என்னைப் பாதுகாத்து,
உமது வல்லமையினால் எனக்கு நியாயம் செய்யும்.
2 தேவனே, என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டு, என்னுடைய வாயின் வார்த்தைகளைக் கேளும்.
3 அந்நியர் எனக்கு விரோதமாக எழும்புகிறார்கள்;
கொடியவர்கள் என்னுடைய உயிரை வாங்கத் தேடுகிறார்கள்;
தேவனைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி வைப்பதில்லை. (சேலா)
4 இதோ, தேவன் எனக்கு உதவி செய்பவர்;
ஆண்டவர் என்னுடைய ஆத்துமாவை ஆதரிக்கிறவர்களோடு இருக்கிறார்.
5 அவர் என்னுடைய எதிரிகளுக்குத் தீமைக்குத் தீமையைச் சரிக்கட்டுவார்,
உமது சத்தியத்திற்காக அவர்களை அழியும்.
6 உற்சாகத்துடன் நான் உமக்குப் பலியிடுவேன்;
யெகோவாவே, உமது பெயரைத் துதிப்பேன், அது நலமானது.
7 அவர் எல்லா நெருக்கத்தையும் நீக்கி, என்னை விடுவித்தார்;
என்னுடைய கண் என்னுடைய எதிரிகளில் நீதி சரிக்கட்டுதலைக் கண்டது.
Chapter 55
சங்கீதம் 55
தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.1 தேவனே, என்னுடைய ஜெபத்தைக் கேட்டருளும்;
என்னுடைய விண்ணப்பத்திற்கு மறைந்துகொள்ளாதிரும்.
2 எனக்குச் செவிகொடுத்து, பதில் அருளிச்செய்யும்;
எதிரியினுடைய கூக்குரலினிமித்தமும்,
துன்மார்க்கர்கள் செய்யும் பிரச்சனைகளினிமித்தமும் என்னுடைய தியானத்தில் முறையிடுகிறேன்.
3 அவர்கள் என்மேல் பழிசுமத்தி, கோபங்கொண்டு,
என்னைப் பகைக்கிறார்கள்.
4 என்னுடைய இருதயம் எனக்குள் வேதனைப்படுகிறது;
மரணபயம் என்மேல் விழுந்தது.
5 பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது; திகில் என்னை மூடியது.
6 அப்பொழுது நான்: ஆ, எனக்குப் புறாவைப்போல் இறக்கைகள் இருந்தால்,
நான் பறந்துபோய் இளைப்பாறுவேன்.
7 நான் தூரத்தில் அலைந்து திரிந்து வனாந்திரத்தில் தங்கியிருப்பேன். (சேலா)
8 பெருங்காற்றுக்கும் புயலுக்கும் தப்ப விரைந்து செல்வேன் என்றேன்.
9 ஆண்டவரே, அவர்களை அழித்து, அவர்கள் மொழியை பிரிந்துபோகச்செய்யும்;
கொடுமையையும் சண்டையையும் நகரத்திலே கண்டேன்;
10 அவைகள் இரவும்பகலும் அதின் மதில்கள்மேல் சுற்றித்திரிகிறது;
அக்கிரமமும் வாதையும் அதின் நடுவில் இருக்கிறது;
11 கேடுபாடுகள் அதின் நடுவில் இருக்கிறது;
கொடுமையும் கபடும் அதின் வீதியைவிட்டு விலகிப்போகிறதில்லை.
12 என்னைக் கடிந்துகொண்டவன் எதிரி அல்ல, அப்படியிருந்தால் சகிப்பேன்;
எனக்கு விரோதமாகப் பெருமை பாராட்டினவன் என்னுடைய பகைஞன் அல்ல,
அப்படியிருந்தால் அவனுக்கு மறைந்திருப்பேன்.
13 எனக்குச் சமமான மனிதனும், என்னுடைய வழிகாட்டியும், என்னுடைய தோழனுமாகிய நீயே அவன்.
14 நாம் ஒன்றாக, இன்பமான ஆலோசனைசெய்து,
கூட்டத்தோடு தேவாலயத்திற்குப் போனோம்.
15 மரணம் அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக;
அவர்கள் உயிரோடு பாதாளத்தில் இறங்குவார்களாக;
அவர்கள் தங்குமிடங்களிலும் அவர்கள் உள்ளத்திலும் தீங்கு இருக்கிறது.
16 நானோ தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்;
யெகோவா என்னை காப்பாற்றுவார்.
17 காலை மாலை மத்தியான வேளைகளிலும் நான் தியானம்செய்து முறையிடுவேன்;
அவர் என்னுடைய சத்தத்தைக் கேட்பார்.
18 திரள் கூட்டமாகக் கூடி என்னோடு எதிர்த்தார்கள்;
அவரோ எனக்கு ஏற்பட்ட போரை நீக்கி,
என்னுடைய ஆத்துமாவைச் சமாதானத்துடன் மீட்டுவிட்டார்.
19 ஆரம்பம்முதலாக இருக்கிற தேவன் கேட்டு, அவர்களுக்குப் பதிலளிப்பார்;
அவர்களுக்கு மாறுதல்கள் ஏற்படாததினால், அவர்கள் தேவனுக்குப் பயப்படாமற்போகிறார்கள். (சேலா)
20 அவன் தன்னோடு சமாதானமாக இருந்தவர்களுக்கு விரோதமாகத்
தன்னுடைய கையை நீட்டி
தன்னுடைய உடன்படிக்கையை மீறி நடந்தான்.
21 அவன் வாயின் சொற்கள் வெண்ணெயைப்போல மெதுவானவைகள்,
அவனுடைய இருதயமோ யுத்தம்;
அவனுடைய வார்த்தைகள் எண்ணெயிலும் மிருதுவானவைகள்.
ஆனாலும் அவைகள் உருவின பட்டயங்கள்.
22 யெகோவாமேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்;
நீதிமானை ஒருபோதும் தள்ளாடவிடமாட்டார்.
23 தேவனே, நீர் அவர்களை அழிவின் குழியில் இறங்கச்செய்வீர்;
இரத்தப்பிரியர்களும் சூதுள்ள மனிதர்களும் தங்களுடைய ஆயுளின் நாட்களில் பாதிவரைகூட பிழைத்திருக்கமாட்டார்கள்;
நானோ உம்மை நம்பியிருக்கிறேன்.
Chapter 56
சங்கீதம் 56
தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.1 தேவனே, எனக்கு இரங்கும்; மனிதன் என்னை விழுங்கப்பார்க்கிறான்,
நாள்தோறும் போர்செய்து, என்னை ஒடுக்குகிறான்.
2 என்னுடைய எதிரிகள் நாள்தோறும் என்னை விழுங்கப்பார்க்கிறார்கள்;
உன்னதமானவரே, எனக்கு விரோதமாக அகங்கரித்துப் போர்செய்கிறவர்கள் அநேகர்.
3 நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்.
4 தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன்,
நான் பயப்பட மாட்டேன்; மாம்சமாக இருக்கிறவன் எனக்கு என்ன செய்வான்?
5 எப்பொழுதும் என்னுடைய வார்த்தைகளைப் புரட்டுகிறார்கள்;
எனக்குத் தீங்குசெய்வதே அவர்கள் முழு எண்ணமாக இருக்கிறது.
6 அவர்கள் ஒன்றாகக் கூடி, மறைந்திருக்கிறார்கள்;
என்னுடைய உயிரை வாங்க விரும்பி, என்னுடைய காலடிகளைப் பின்தொடர்ந்து வருகிறார்கள்.
7 அவர்கள் தங்களுடைய அக்கிரமத்தினால் தப்புவார்களோ?
தேவனே, கோபங்கொண்டு மக்களைக் கீழே தள்ளும்.
8 என்னுடைய அலைச்சல்களை தேவனே நீர் எண்ணியிருக்கிறீர்;
என்னுடைய கண்ணீரை உம்முடைய தோல்பையில் வையும்;
அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?
9 நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் நாளில் என்னுடைய எதிரிகள் பின்னாக திரும்புவார்கள்;
தேவன் என்னுடைய பக்கத்தில் இருக்கிறார் என்பதை அறிவேன்.
10 தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்;
யெகோவாவை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்.
11 தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படமாட்டேன்;
மனிதன் எனக்கு என்ன செய்வான்?
12 தேவனே, நான் உமக்குச்செய்த பொருத்தனைகள் என்மேல் இருக்கிறது;
உமக்கு நன்றிகளைச் செலுத்துவேன்.
13 நான் தேவனுக்கு முன்பாக உயிருள்ளவர்களுடைய வெளிச்சத்திலே நடக்கும்படி,
நீர் என்னுடைய ஆத்துமாவை மரணத்திற்கும் என்னுடைய கால்களை இடறலுக்கும் தப்புவியாமல் இருப்பீரோ?
Chapter 57
சங்கீதம் 57
தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.1 எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்;
உம்மை என்னுடைய ஆத்துமா சார்ந்துகொள்கிறது;
பிரச்சனைகள் கடந்துபோகும்வரை உமது சிறகுகளின் நிழலிலே வந்து அடைவேன்.
2 எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்.
3 என்னை விழுங்கப்பார்க்கிறவன் என்னை சபிக்கும்போது,
அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, என்னைக் காப்பாற்றுவார்: (சேலா).
தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார்.
4 என்னுடைய ஆத்துமா சிங்கங்களின் நடுவில் இருக்கிறது;
தீயை இறைக்கிற மனிதர்களுக்குள்ளே கிடக்கிறேன்;
அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கூர்மையான வாளாக இருக்கிறது.
5 தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்;
உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.
6 என்னுடைய கால்களுக்குக் கண்ணியை வைத்திருக்கிறார்கள்;
என்னுடைய ஆத்துமா தவிக்கிறது; எனக்கு முன்பாகக் குழியை வெட்டி, அதின் நடுவிலே விழுந்தார்கள் (சேலா)
7 என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது,
தேவனே, என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது; நான் பாடிப் புகழுவேன்.
8 என்னுடைய மனமே, விழி; வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்;
அதிகாலையில் விழித்துக்கொள்வேன்.
9 ஆண்டவரே, மக்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்;
தேசங்களுக்குள்ளே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
10 உமது கிருபை வானம்வரையும்,
உமது சத்தியம் மேகமண்டலங்கள்வரையும் எட்டுகிறது.
11 தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்;
உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.
Chapter 58
சங்கீதம் 58
தான் கெட்டுப்போகாதபடிக்கு அல்தஷ்கேத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க தாவீது பாடி இசைத்தலைவனுக்கு ஒப்புவித்த மிக்தாம் என்னும் பாடல்.1 மவுனமாக இருக்கிறவர்களே, நீங்கள் மெய்யாக நீதியைப் பேசுவீர்களோ?
மனுமக்களே, நியாயமாகத் தீர்ப்பு செய்வீர்களோ?
2 மனதார நியாயக்கேடு செய்கிறீர்கள்;
பூமியிலே உங்கள் கைகளின் கொடுமையை நிறுத்துக் கொடுக்கிறீர்கள்.
3 துன்மார்க்கர்கள் கர்ப்பத்தில் தோன்றியதுமுதல் முறைதவறுகிறார்கள்;
தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது முதல் பொய்சொல்லி வழிதப்பிப்போகிறார்கள்.
4 பாம்பின் விஷத்திற்கு ஒப்பான விஷம் அவர்களில் இருக்கிறது.
5 பாம்பாட்டிகள் விநோதமாக ஊதினாலும் அவர்கள் ஊதும் சத்தத்தைக் கேட்காதபடிக்குத் தன்னுடைய காதை அடைக்கிற செவிட்டுவிரியனைப்போல் இருக்கிறார்கள்.
6 தேவனே, அவர்கள் வாயிலுள்ள பற்களைத் தகர்த்துப்போடும்;
யெகோவாவே, பாலசிங்கங்களின் கடைவாய்ப்பற்களை நொறுக்கிப்போடும்.
7 கடந்தோடுகிற தண்ணீரைப்போல் அவர்கள் கழிந்துபோகட்டும்;
அவன் தன்னுடைய அம்புகளைத் தொடுக்கும்போது
அவைகள் சின்னபின்னமாகப் போகட்டும்.
8 கரைந்துபோகிற நத்தையைப்போல் ஒழிந்துபோவார்களாக;
பெண்ணின் முதிர்ச்சி அடையாத கருவைப்போல் சூரியனைக் காணாமல் இருப்பார்களாக.
9 முள் நெருப்பினால் உங்களுடைய பானைகளில் சூடேறுவதற்கு முன்பே
பச்சையானதையும் எரிந்துபோனதையும் அவர் சுழல் காற்றினால் அடித்துக்கொண்டு போவார்.
10 பழிவாங்குதலை நீதிமான் காணும்போது மகிழுவான்;
அவன் தன்னுடைய பாதங்களைத் துன்மார்க்கனுடைய இரத்தத்திலே கழுவுவான்.
11 அப்பொழுது, மெய்யாக நீதிமானுக்குப் பலன் உண்டென்றும்,
மெய்யாக பூமியிலே நியாயஞ்செய்கிற தேவன் உண்டென்றும் மனிதன் சொல்லுவான்.
Chapter 59
சங்கீதம் 59
இசைத்தலைவனுக்கு தாவீது அளித்த மிக்தாம் என்னும் ஒரு பாடல். தாவீதைக் கொல்வதற்காக சவுல் தாவீதின் வீட்டைக் கண்காணிப்பதற்காக ஆட்களை அனுப்பியபோது பாடியது.1 என் தேவனே, என்னுடைய எதிரிகளுக்கு என்னைத் தப்புவியும்;
என்மேல் எழும்புகிறவர்களுக்கு என்னை விலக்கி உயர்ந்த அடைக்கலத்திலே வையும்.
2 அக்கிரமக்காரர்களுக்கு என்னைத் தப்புவித்து,
இரத்தப்பிரியர்களான மனிதர்களுக்கு என்னை விலக்கிக் காப்பாற்றும்.
3 இதோ, என்னுடைய உயிருக்காக மறைந்திருக்கிறார்கள்;
யெகோவாவே, என்னிடத்தில் மீறுதலும் பாவமும் இல்லாமலிருந்தும்,
பலவான்கள் எனக்கு விரோதமாகக் கூட்டங்கூடுகிறார்கள்.
4 என்னிடத்தில் அக்கிரமம் இல்லாமலிருந்தும்,
ஓடித்திரிந்து போருக்கு ஆயத்தமாகிறார்கள்;
எனக்குத் துணைசெய்ய விழித்து என்னை நோக்கிப்பாரும்.
5 சேனைகளின் தேவனாகிய யெகோவாவே,
இஸ்ரவேலின் தேவனே, நீர் எல்லா தேசங்களையும் தண்டிக்க விழித்தெழும்பும்;
வஞ்சகமாகத் துரோகஞ்செய்கிற ஒருவருக்கும் தயை செய்யாமலிரும். (சேலா)
6 அவர்கள் மாலையில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, ஊரைச்சுற்றித் திரிகிறார்கள்.
7 இதோ, தங்களுடைய வார்த்தைகளைக் கக்குகிறார்கள்;
அவர்கள் உதடுகளில் வாள்கள் இருக்கிறது,
கேட்கிறவன் யார் என்கிறார்கள்.
8 ஆனாலும் யெகோவாவே,
நீர் அவர்களைப் பார்த்து சிரிப்பீர்;
அந்நியமக்கள் அனைவரையும் இகழுவீர்.
9 அவன் வல்லமையை நான் கண்டு, உமக்குக் காத்திருப்பேன்;
தேவனே எனக்கு உயர்ந்த அடைக்கலம்.
10 என் தேவன் தம்முடைய கிருபையினால் என்னைச் சந்திப்பார்;
தேவன் என்னுடைய எதிரிகளுக்கு வரும் நீதிசரிக்கட்டுதலை நான் காணும்படி செய்வார்.
11 அவர்களைக் கொன்றுபோடாமலிரும், என்னுடைய மக்கள் மறந்துபோவார்களே;
எங்களுடைய கேடகமாகிய ஆண்டவரே, உமது வல்லமையினால் அவர்களைச் சிதறடித்து,
அவர்களைத் தாழ்த்திப்போடும்.
12 அவர்களுடைய உதடுகளின் பேச்சு அவர்கள் வாயின் பாவமாக இருக்கிறது;
அவர்கள் இட்ட சாபமும் சொல்லிய பொய்யும் ஆகிய இவைகளினால்
தங்களுடைய பெருமையில் அகப்படுவார்களாக.
13 தேவன் பூமியின் எல்லைவரைக்கும் யாக்கோபிலே அரசாளுகிறவர் என்று அவர்கள் அறியும்படி,
அவர்களை உம்முடைய கடுங்கோபத்திலே அழித்துப்போடும்;
இனி இல்லாதபடிக்கு அவர்களை அழித்துப்போடும். (சேலா)
14 அவர்கள் மாலையில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு,
ஊரைச்சுற்றித் திரிகிறார்கள்.
15 அவர்கள் உணவுக்காக அலைந்து திரிந்து திருப்தியடையாமல்,
முறுமுறுத்துக்கொண்டிருப்பார்கள்.
16 நானோ உம்முடைய வல்லமையைப் பாடி,
காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்;
எனக்கு நெருக்கமுண்டான நாளிலே
நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்.
17 என்னுடைய பெலனே, உம்மை பாடிப் புகழுவேன்;
தேவன் எனக்கு உயர்ந்த அடைக்கலமும்,
கிருபையுள்ள என் தேவனுமாக இருக்கிறார்.
Chapter 60
சங்கீதம் 60
தாவீது மெசொபத்தாமியா தேசத்து சீரியர்களோடும், சோபா தேசத்து சீரியர்களோடும் யுத்தம் செய்தபோது யோவாப் திரும்பி உப்புப்பள்ளத்தாக்கிலே ஏதோமியரில் பன்னிரெண்டாயிரம் பேரை வெட்டினபோது அவன் சாட்சியை விளக்கும் ஆறு நரம்பு கின்னரத்திலே போதிப்பதற்காக பாடினதும் இராகத்தலைவனுக்கு ஒப்புவித்ததுமான மிக்தாம் என்னும் பாடல்.1 தேவனே, நீர் எங்களைக் கைவிட்டீர், எங்களைச் சிதறடித்தீர்,
எங்கள்மேல் கோபமாக இருந்தீர்; மறுபடியும் எங்களிடமாகத் திரும்பியருளும்.
2 பூமியை அதிரச்செய்து, அதை வெடிப்பாக்கினீர்;
அதின் வெடிப்புகளைப் பொருந்தச்செய்யும்; அது அசைகிறது.
3 உம்முடைய மக்களுக்குக் கடினமான காரியத்தைக் காண்பித்தீர்;
தத்தளிப்பின் மதுபானத்தை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர்.
4 சத்தியத்தினால் ஏற்றும்படியாக, உமக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு
ஒரு கொடியைக் கொடுத்தீர். (சேலா)
5 உமது பிரியர்கள் விடுவிக்கப்படும்படி,
உமது வலதுகரத்தினால் காப்பாற்றி, எனக்குச் செவிகொடுத்தருளும்.
6 தேவன் தமது பரிசுத்தத்தைக் கொண்டு சொன்னார்,
ஆகையால் சந்தோஷப்படுவேன்; சீகேமைப் பங்கிட்டு,
சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன்.
7 கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது,
எப்பிராயீம் என்னுடைய தலையின் பெலன், யூதா என்னுடைய செங்கோல்.
8 மோவாப் என் பாதங்களைக் கழுவும் பாத்திரம்,
ஏதோமின்மேல் என்னுடைய காலணியை எறிந்துபோடுவேன்;
பெலிஸ்தியாவே, என்னிமித்தம் ஆர்ப்பரித்துக்கொள்.
9 பாதுகாப்பான பட்டணத்திற்குள் என்னை நடத்திக்கொண்டுபோகிறவர் யார்?
ஏதோம்வரை எனக்கு வழி காட்டுகிறவர் யார்?
10 எங்கள் படைகளோடு புறப்படாமலிருந்த தேவனே நீர் அல்லவோ?
எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவனே நீர் அல்லவோ?
11 ஆபத்தில் எங்களுக்கு உதவிசெய்யும்;
மனிதனுடைய உதவி வீண்.
12 தேவனாலே பலத்தோடு போராடுவோம்;
அவரே எங்களுடைய எதிரிகளை மிதித்துப்போடுவார்.
Chapter 61
சங்கீதம் 61
நரம்புக் கருவிகளை இசைக்கும் இசைத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.1 தேவனே, நான் கூப்பிடுகிறதைக் கேட்டு,
என்னுடைய விண்ணப்பத்தைக் கவனியும்.
2 என்னுடைய இருதயம் தளர்ந்துபோகும்போது
பூமியின் கடைசியிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்;
எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்.
3 நீர் எனக்கு அடைக்கலமும்,
எதிரிகளுக்கு எதிரே பெலத்த துருகமுமாக இருந்தீர்.
4 நான் உம்முடைய கூடாரத்தில் என்றென்றும் தங்குவேன்;
உமது இறக்கைகளின் மறைவிலே வந்து அடைவேன். (சேலா)
5 தேவனே, நீர் என்னுடைய பொருத்தனைகளைக் கேட்டீர்;
உமது பெயருக்குப் பயப்படுகிறவர்களின் சுதந்தரத்தை எனக்குத் தந்தீர்.
6 ராஜாவின் ஆயுசு நாட்களோடு நாட்களைக் கூட்டுவீர்;
அவர் வருடங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்.
7 அவர் தேவனுக்கு முன்பாக என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்;
தயையும் உண்மையும் அவரைக் காக்கக் கட்டளையிடும்.
8 இப்படியே தினமும் என்னுடைய பொருத்தனைகளை நான் செலுத்தும்படியாக,
உமது பெயரை என்றைக்கும் புகழ்ந்து பாடுவேன்.
Chapter 62
சங்கீதம் 62
எதுதூன் என்னும் இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.1 தேவனையே நோக்கி என்னுடைய ஆத்துமா அமர்ந்திருக்கிறது;
அவரால் என் இரட்சிப்பு வரும்.
2 அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும்,
என் உயர்ந்த அடைக்கலமுமானவர்;
நான் அதிகமாக அசைக்கப்படுவதில்லை.
3 நீங்கள் எதுவரைக்கும் ஒரு மனிதனுக்குத் தீங்குசெய்ய நினைப்பீர்கள்,
நீங்கள் அனைவரும் அழிக்கப்படுவீர்கள்,
சாய்ந்த மதிலுக்கும் இடிந்த சுவருக்கும் ஒப்பாவீர்கள்.
4 அவனுடைய மேன்மையிலிருந்து அவனைத் தள்ளும்படிக்கே
அவர்கள் ஆலோசனைசெய்து,
பொய்பேச விரும்புகிறார்கள்; தங்களுடைய வாயினால் ஆசீர்வதித்து,
தங்களுடைய உள்ளத்தில் சபிக்கிறார்கள்.
(சேலா)
5 என்னுடைய ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு;
நான் நம்புகிறது அவராலே வரும்.
6 அவரே என்னுடைய கன்மலையும், என்னுடைய இரட்சிப்பும்,
என்னுடைய உயர்ந்த அடைக்கலமுமானவர்;
நான் அசைக்கப்படுவதில்லை.
7 என்னுடைய இரட்சிப்பும்,
என்னுடைய மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது;
பெலனான என்னுடைய கன்மலையும் என்னுடைய அடைக்கலமும் தேவனுக்குள் இருக்கிறது.
8 மக்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்;
அவர் சமுகத்தில் உங்களுடைய இருதயத்தை ஊற்றிவிடுங்கள்;
தேவன் நமக்கு அடைக்கலமாக இருக்கிறார். (சேலா)
9 கீழ்மக்கள் மாயையும், மேன்மக்கள் பொய்யுமாமே;
தராசிலே வைக்கப்பட்டால் அவர்களெல்லோரும்
மாயையிலும் லேசானவர்கள்.
10 கொடுமையை நம்பாதிருங்கள்; கொள்ளையினால் பெருமைபாராட்டாதிருங்கள்;
செல்வம் அதிகமானால் இருதயத்தை அதின்மேல் வைக்காமலிருங்கள்.
11 தேவன் ஒருமுறை பேசினார், இரண்டுமுறை கேட்டிருக்கிறேன்;
வல்லமை தேவனுடையது என்பதே.
12 கிருபையும் உம்முடையது, ஆண்டவரே!
தேவனே நீர் அவனவன் செய்கைக்குத் தகுந்தபடி பலனளிக்கிறீர்.
Chapter 63
சங்கீதம் 63
யூதாவின் பாலைவனத்தில் இருந்தபோது தாவீது பாடிய பாடல்.1 தேவனே, நீர் என் தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்;
வறண்டதும் சோர்வுற்றதும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என்னுடைய ஆத்துமா உம்மேல் தாகமாக இருக்கிறது,
என்னுடைய உடலானது உம்மை வாஞ்சிக்கிறது.
2 இப்படியே பரிசுத்த இடத்தில் உம்மைப்பார்க்க ஆசையாக இருந்து,
உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன்.
3 உயிரைவிட உமது கிருபை நல்லது;
என்னுடைய உதடுகள் உம்மைத் துதிக்கும்.
4 என்னுடைய உயிர் உள்ளவரை நான் உம்மைத் துதித்து,
உமது பெயரை சொல்லிக் கையை உயர்த்துவேன்.
5 நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என்னுடைய ஆத்துமா திருப்தியாகும்;
என்னுடைய வாய் ஆனந்த சந்தோஷமுள்ள உதடுகளால் உம்மைப் போற்றும்.
6 என்னுடைய படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது,
இரவுநேரங்களில் உம்மைத் தியானிக்கிறேன்.
7 நீர் எனக்குத் துணையாக இருந்ததினால்,
உமது இறக்கைகளின் நிழலிலே சந்தோஷப்படுகிறேன்.
8 என்னுடைய ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது;
உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது.
9 என் உயிரை அழிக்கத் தேடுகிறவர்களோ,
பூமியின் தாழ்விடங்களில் இறங்குவார்கள்.
10 அவர்கள் வாளால் விழுவார்கள்;
நரிகளுக்கு இரையாவார்கள்.
11 ராஜாவோ தேவனில் சந்தோஷப்படுவார்;
தேவன் பேரில் சத்தியம்செய்கிறவர்கள்
அனைவரும் மேன்மைபாராட்டுவார்கள்;
பொய் பேசுகிறவர்களின் வாய் அடைக்கப்படும்.
Chapter 64
சங்கீதம் 64
இராகத் தலைவனுக்கு தாவீதின் பாடல்.1 தேவனே, என்னுடைய விண்ணப்பத்தில் என்னுடைய சத்தத்தைக் கேட்டருளும்;
எதிரியால் வரும் பயத்தை நீக்கி, என்னுடைய உயிரை காத்தருளும்.
2 துன்மார்க்கர் செய்யும் இரகசிய ஆலோசனைக்கும்,
அக்கிரமக்காரர்களுடைய கலகத்திற்கும் என்னை விலக்கி மறைத்தருளும்.
3 அவர்கள் தங்களுடைய நாவை வாளைப்போல் கூர்மையாக்கி,
4 மறைவுகளில் உத்தமன்மேல் எய்வதற்காக கசப்பான வார்த்தைகளாகிய தங்களுடைய அம்புகளை நாணேற்றுகிறார்கள்;
சற்றும் பயமின்றி திடீரென்று அவன்மேல் எய்கிறார்கள்.
5 அவர்கள் பொல்லாத காரியத்தில் தங்களை உறுதிப்படுத்திக்கொண்டு,
மறைவான கண்ணிகளை வைக்க ஆலோசனைசெய்து,
அவைகளைக் காண்பவன் யார் என்கிறார்கள்.
6 அவர்களுடைய நியாயக்கேடுகளை ஆராய்ந்துதேடி,
தந்திரமான யோசனை நிறைவேறும்படி முயற்சி செய்கிறார்கள்;
அவர்களில் ஒவ்வொருவனுடைய உட்கருத்தும் இருதயமும் ஆழமாக இருக்கிறது.
7 ஆனாலும் தேவன் அவர்கள்மேல் அம்புகளை எய்வார்,
திடீரென்று அவர்கள் காயப்படுவார்கள்.
8 அவர்கள் தள்ளப்பட்டு, கீழே விழும்படி
அவர்கள் நாவுகளே அவர்களைக் கெடுக்கும்;
அவர்களைக் காண்கிற அனைவரும் ஓடிப்போவார்கள்.
9 எல்லா மனிதரும் பயந்து, தேவனுடைய செயலை அறிவித்து,
அவர் செய்கையை உணர்ந்துகொள்வார்கள்.
10 நீதிமான் யெகோவாவுக்குள் மகிழ்ந்து, அவரை நம்புவான்;
செம்மையான இருதயமுள்ளவர்கள் அனைவரும் மேன்மைபாராட்டுவார்கள்.
Chapter 65
சங்கீதம் 65
இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப் பாடல்.1 தேவனே, சீயோனில் உமக்காகத் துதியானது அமைந்து காத்திருக்கிறது;
பொருத்தனை உமக்குச் செலுத்தப்படும்.
2 ஜெபத்தைக் கேட்கிறவரே, மனிதர்கள் அனைவரும் உம்மிடத்தில் வருவார்கள்.
3 அக்கிரம விஷயங்கள் என்மேல் மிஞ்சி வல்லமைகொண்டது;
தேவனே நீரோ எங்களுடைய மீறுதல்களை மன்னிக்கிறீர்.
4 உம்முடைய ஆலயமுற்றங்களில் குடியிருக்கும்படி நீர் தெரிந்துகொண்டு சேர்த்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்;
உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம்.
5 பூமியின் கடைசி எல்லைகளிலும்
தூரமான கடல்களிலும் உள்ளவர்கள் எல்லோரும் நம்பும் நம்பிக்கையாக இருக்கிற
எங்களுடைய இரட்சிப்பின் தேவனே,
நீர் பயங்கரமான காரியங்களைச் செய்கிறதினால் எங்களுக்கு நீதியுள்ள உத்திரவு அருளுகிறீர்.
6 வல்லமையைக் கட்டிக்கொண்டு,
உம்முடைய பலத்தினால் மலைகளை உறுதிப்படுத்தி,
7 கடல்களின் மும்முரத்தையும் அவைகளுடைய அலைகளின் இரைச்சலையும்,
மக்களின் குழப்பத்தையும் அமர்த்துகிறீர்.
8 பூமியின் கடைசி இடங்களில் குடியிருக்கிறவர்களும் உம்முடைய அடையாளங்களுக்காக பயப்படுகிறார்கள்;
காலையையும், மாலையையும் சந்தோஷப்படச்செய்கிறீர்.
9 தேவனே நீர் பூமியை விசாரித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர்;
தண்ணீர் நிறைந்த தேவநதியினால் அதை மிகவும் செழிப்பாக்குகிறீர்;
இப்படி நீர் அதைத் திருத்தி,
அவர்களுக்குத் தானியத்தை விளைவிக்கிறீர்.
10 அதின் வரப்புகள் தணியும்படி அதின் வயல்களுக்குத் தண்ணீர் இறைத்து,
அதை மழைகளால் கரையச்செய்து, அதின் பயிரை ஆசீர்வதிக்கிறீர்.
11 வருடத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்;
உமது பாதைகள் நெய்யாகப் பொழிகிறது.
12 வனாந்திர பசும்புல்களிலும் பொழிகிறது;
மேடுகள் சுற்றிலும் பூரிப்பாக இருக்கிறது.
13 மேய்ச்சலுள்ள வெளிகளில் ஆடுகள் நிறைந்திருக்கிறது;
பள்ளத்தாக்குகள் தானியத்தால் மூடியிருக்கிறது;
அவைகள் கெம்பீரித்துப் பாடுகிறது.
Chapter 66
சங்கீதம் 66
இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த ஒரு துதிப் பாடல்.1 பூமியின் குடிகளே, நீங்கள் எல்லோரும் தேவனுக்கு முன்பாகக்
கெம்பீரமாகப் பாடுங்கள்.
2 அவர் பெயரின் மகத்துவத்தைக் புகழ்ந்துபாடி,
அவருடைய துதியின் மகிமையைக் கொண்டாடுங்கள்.
3 தேவனை நோக்கி: உமது செயல்களில் எவ்வளவு பயங்கரமாக இருக்கிறீர்;
உமது மகத்துவமான வல்லமைக்காக உம்முடைய எதிரிகள்
உமக்கு வஞ்சகம் பேசி அடங்குவார்கள்.
4 பூமியின் மீதெங்கும் உம்மைப் பணிந்துகொண்டு உம்மைத் துதித்துப் பாடுவார்கள்;
அவர்கள் உம்முடைய பெயரைத் துதித்துப் பாடுவார்கள் என்று சொல்லுங்கள். (சேலா)
5 தேவனுடைய செய்கைகளை வந்து பாருங்கள்;
அவர் மனிதர்களிடத்தில் நடப்பிக்கும் செயல்களில் பயங்கரமானவர்.
6 கடலை உலர்ந்த தரையாக மாற்றினார்;
ஆற்றைக் கால்நடையாகக் கடந்தார்கள்;
அங்கே அவரில் சந்தோஷமடைந்தோம்.
7 அவர் தம்முடைய வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்;
அவருடைய கண்கள் தேசத்தின்மேல் நோக்கமாக இருக்கிறது;
துரோகிகள் தங்களை உயர்த்தாமல் இருப்பார்களாக. (சேலா)
8 மக்களே, நம்முடைய தேவனைத் துதித்து, அவரைத் துதிக்கும் சத்தத்தைக் கேட்கச்செய்யுங்கள்.
9 அவர் நம்முடைய கால்களைத் தள்ளாடவிடாமல்,
நம்முடைய ஆத்துமாவை உயிரோடு வைக்கிறார்.
10 தேவனே, எங்களைச் சோதித்தீர்;
வெள்ளியைப் புடமிடுகிறதுபோல எங்களைப் புடமிட்டீர்.
11 எங்களை வலையில் அகப்படுத்தி,
எங்களுடைய இடுப்புகளின்மேல் வருத்தமான பாரத்தை ஏற்றினீர்.
12 மனிதர்களை எங்களுடைய தலையின்மேல் ஏறிப்போகச்செய்தீர்;
தீயையும் தண்ணீரையும் கடந்து வந்தோம்;
செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர்.
13 சர்வாங்க தகனபலிகளோடு உமது ஆலயத்திற்குள் நுழைவேன்;
14 என்னுடைய இக்கட்டில் நான் என்னுடைய உதடுகளைத் திறந்து,
என்னுடைய வாயினால் சொல்லிய என்னுடைய பொருத்தனைகளை
உமக்குச் செலுத்துவேன்.
15 ஆட்டுக்கடாக்களின் சுகந்தவாசனையுடனே கொழுமையானவைகளை உமக்குத் தகனபலியாக செலுத்துவேன்;
காளைகளையும் செம்மறியாட்டுக் கடாக்களையும் உமக்குப் பலியிடுவேன். (சேலா)
16 தேவனுக்குப் பயந்தவர்களே, நீங்கள் எல்லோரும் வந்து கேளுங்கள்;
அவர் என்னுடைய ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லுவேன்.
17 அவரை நோக்கி என்னுடைய வாயினால் கூப்பிட்டேன்,
என்னுடைய நாவினால் அவர் புகழப்பட்டார்.
18 என்னுடைய இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால்,
ஆண்டவர் எனக்குச் செவிகொடுக்கமாட்டார்.
19 மெய்யாக தேவன் எனக்குச் செவிகொடுத்தார்,
என்னுடைய ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார்.
20 என்னுடைய ஜெபத்தைத் தள்ளாமலும்,
தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும்
இருந்த தேவனுக்கு நன்றி உண்டாகட்டும்.
Chapter 67
சங்கீதம் 67
இசைக்கருவிகளை இசைக்கும் இராகத் தலைவனுக்கு ஒரு துதிப் பாடல்.1 தேவனே, பூமியில் உம்முடைய வழியும்,
எல்லா தேசங்களுக்குள்ளும் உம்முடைய இரட்சிப்பும் விளங்கும்படியாக,
2 தேவனே நீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து,
உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கச்செய்யும். (சேலா)
3 தேவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக;
எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக.
4 தேவனே நீர் மக்களை நிதானமாக நியாயந்தீர்த்து, பூமியிலுள்ள மக்களை நடத்துவீர்;
ஆதலால் தேசங்கள் சந்தோஷித்து,
கெம்பீரத்தோடு மகிழக்கடவர்கள். (சேலா)
5 தேவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக;
எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக.
6 பூமி தன்னுடைய பலனைத் தரும், தேவனாகிய எங்களுடைய தேவனே எங்களை ஆசீர்வதிப்பார்.
7 தேவன் எங்களை ஆசீர்வதிப்பார்;
பூமியின் எல்லைகளெல்லாம் அவருக்குப் பயந்திருக்கும்.
Chapter 68
சங்கீதம் 68
இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப்பாடல்களுள் ஒன்று.1 தேவன் எழுந்தருளுவார், அவருடைய எதிரிகள் சிதறி,
அவரைப் பகைக்கிறவர்கள் அவருக்கு முன்பாக ஓடிப்போவார்கள்.
2 புகை பறக்கடிக்கப்படுவதுபோல அவர்களைப் பறக்கடிப்பீர்;
மெழுகு நெருப்புக்கு முன்பு உருகுவதுபோல துன்மார்க்கர்கள் தேவனுக்குமுன்பாக அழிவார்கள்.
3 நீதிமான்களோ தேவனுக்கு முன்பாக மகிழ்ந்து களிகூர்ந்து,
ஆனந்த சந்தோஷமடைவார்கள்.
4 தேவனைப் பாடி, அவருடைய பெயரைப் புகழ்ந்து பாடுங்கள்;
வனாந்திரங்களில் ஏறிவருகிறவருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்;
அவருடைய பெயர் யெகோவா, அவருக்கு முன்பாகக் களிகூருங்கள்.
5 தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன்,
திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாக இருக்கிறார்.
6 தேவன் தனிமையானவர்களுக்கு வீடுவாசல் ஏற்படுத்தி,
கட்டப்பட்டவர்களை விடுதலையாக்குகிறார்;
துரோகிகளோ வறண்ட பூமியில் தங்குவார்கள்.
7 தேவனே, நீர் உம்முடைய மக்களுக்கு முன்னே சென்று, பாலைவனத்தில் நடந்து வரும்போது, (சேலா)
8 பூமி அதிர்ந்தது; தேவனாகிய உமக்கு முன்பாக வானமும் பொழிந்தது;
இஸ்ரவேலின் தேவனாக இருக்கிற தேவனுக்கு முன்பாகவே இந்தச் சீனாய்மலையும் அசைந்தது.
9 தேவனே, சம்பூரண மழையைப் பெய்யச்செய்தீர்;
இளைத்துப்போன உமது சுதந்தரத்தைத் திடப்படுத்தினீர்.
10 உம்முடைய மந்தை அதிலே தங்கியிருந்தது;
தேவனே, உம்முடைய தயையினாலே ஏழைகளைப் பராமரிக்கிறீர்.
11 ஆண்டவர் வசனம் தந்தார்; அதைப் பிரபலப்படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதி.
12 சேனைகளின் ராஜாக்கள் தத்தளித்து ஓடினார்கள்;
வீட்டிலிருந்த பெண் கொள்ளைப்பொருளைப் பங்கிட்டாள்.
13 நீங்கள் அடுப்பினடியில் கிடந்தவர்களாக இருந்தாலும்,
வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட புறாவின் இறக்கைகள் [1] போலவும், பசும்பொன் நிறமாகிய அதின் இறகுகளின் சாயலாகவும் இருப்பீர்கள்.
14 சர்வவல்லவர் அதில் ராஜாக்களைச் சிதறடித்தபோது,
அது சல்மோன் மலையின் உறைந்த மழைபோல் வெண்மையானது.
15 தேவ மலை பாசான் மலை போல இருக்கிறது;
பாசான் மலை உயர்ந்த சிகரங்களுள்ளது.
16 உயர்ந்த சிகரமுள்ள மலைகளே, ஏன் துள்ளுகிறீர்கள்; இந்த மலையில் தங்கியிருக்க தேவன் விரும்பினார்;
ஆம், யெகோவா இதிலே என்றென்றைக்கும் தங்கியிருப்பார்.
17 தேவனுடைய இரதங்கள் பத்தாயிரங்களும்,
ஆயிரமாயிரங்களுமாக இருக்கிறது; ஆண்டவர் பரிசுத்த ஸ்தலமான சீனாயிலிருந்ததைபோல அவைகளுக்குள் இருக்கிறார்.
18 தேவனே நீர் உன்னதத்திற்கு ஏறி,
சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கிக் கொண்டுபோனீர்;
தேவனாகிய யெகோவா மனிதர்களுக்குள் தங்கும்படியாக,
துரோகிகளாகிய மனிதர்களுக்காகவும் வரங்களைப் பெற்றுக்கொண்டீர்.
19 எந்த நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக;
நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா)
20 நம்முடைய தேவன் இரட்சிப்பை அருளும் தேவனாக இருக்கிறார்;
ஆண்டவராகிய கர்த்தரால் மரணத்திற்கு நீங்கும் வழிகளுண்டு.
21 மெய்யாகவே தேவன் தம்முடைய எதிரிகளின் தலையையும்,
தன்னுடைய அக்கிரமங்களில் துணிந்து நடக்கிறவனுடைய முடியுள்ள உச்சந்தலையையும் உடைப்பார்.
22 உன்னுடைய கால்கள் எதிரிகளின் இரத்தத்தில் பதியும்படியாகவும்,
உன்னுடைய நாய்களின் நாக்கு அதை நக்கும்படியாகவும்,
23 என்னுடைய மக்களைப் பாசானிலிருந்து திரும்ப அழைத்து வருவேன்;
அதை கடலின் ஆழங்களிலிருந்தும் திரும்ப அழைத்து வருவேன் என்று ஆண்டவர் சொன்னார்.
24 தேவனே, உம்முடைய நடைகளைக் கண்டார்கள்;
என் தேவனும் என்னுடைய ராஜாவும் பரிசுத்த ஸ்தலத்திலே நடந்து வருகிற நடைகளையே கண்டார்கள்.
25 முன்னாகப் பாடுகிறவர்களும், பின்னாக வீணைகளை வாசிக்கிறவர்களும்,
சுற்றிலும் தம்புரு வாசிக்கிற கன்னிகைகளும் நடந்தார்கள்.
26 இஸ்ரவேலின் ஊற்றிலிருந்து தோன்றினவர்களே,
சபைகளின் நடுவே ஆண்டவராகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.
27 அங்கே அவர்களை ஆளுகிற சின்ன பென்யமீனும், யூதாவின் பிரபுக்களும்,
அவர்களுடைய கூட்டமும், செபுலோனின் பிரபுக்களும்,
நப்தலியின் பிரபுக்களும் உண்டு.
28 உன்னுடைய தேவன் உனக்குப் பலத்தைக் கட்டளையிட்டார்;
தேவனே, நீர் எங்களுக்காக உண்டாக்கியதை பலப்படுத்தும்.
29 எருசலேமிலுள்ள உம்முடைய ஆலயத்திற்காக,
ராஜாக்கள் உமக்குக் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்.
30 நாணலிலுள்ள மிருககூட்டத்தையும், மக்களாகிய கன்றுகளோடுகூட கன்றுகளின் கூட்டத்தையும் அதட்டும்;
ஒவ்வொருவனும் வெள்ளிப்பணங்களைக் கொண்டுவந்து பணிந்துகொள்ளுவான்;
யுத்தங்களில் பிரியப்படுகிற மக்களைச் சிதறடிப்பார்.
31 பிரபுக்கள் எகிப்திலிருந்து வருவார்கள்;
எத்தியோப்பியா தேவனை நோக்கி கையை உயர்த்த துரிதப்படும்.
32 பூமியின் ராஜ்ஜியங்களே, தேவனைப் பாடி, ஆண்டவரைப் புகழ்ந்துபாடுங்கள். (சேலா)
33 ஆரம்பமுதலாயிருக்கிற வானாதி வானங்களின்மேல் எழுந்தருளியிருக்கிறவரைப் பாடுங்கள்;
இதோ, தமது சத்தத்தைப் பலத்த சத்தமாக முழங்கச்செய்கிறார்.
34 தேவனுடைய வல்லமையைப் பிரபலப்படுத்துங்கள்;
அவருடைய மகிமை இஸ்ரவேலின்மேலும், அவருடைய வல்லமை மேகமண்டலங்களிலும் உள்ளது.
35 தேவனே, உமது பரிசுத்த ஸ்தலங்களிலிருந்து பயங்கரமாக விளங்குகிறீர்;
இஸ்ரவேலின் தேவன் தம்முடைய மக்களுக்குப் பெலனையும் சத்துவத்தையும் அருளுகிறவர்;
தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.
Chapter 69
சங்கீதம் 69
சோஷனீம் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் பாடல்.1 தேவனே, என்னைக் காப்பாற்றும்;
வெள்ளங்கள் என்னுடைய ஆத்துமாவரை பெருகிவருகிறது.
2 ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன், நிற்க நிலையில்லை,
ஆழமான தண்ணீரில் இருக்கிறேன்; வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது.
3 நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்;
என்னுடைய தொண்டை வறண்டுபோனது;
என் தேவனுக்கு நான் காத்திருக்கும்போது,
என்னுடைய கண்கள் பூத்துப்போனது.
4 காரணமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என்னுடைய தலைமுடியிலும் அதிகமாக இருக்கிறார்கள்;
வீணாக எனக்கு எதிரிகளாகி என்னை அழிக்கவேண்டும் என்றிருக்கிறவர்கள் பலத்திருக்கிறார்கள்;
நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடுக்கவேண்டியதானது.
5 தேவனே, நீர் என்னுடைய புத்தியீனத்தை அறிந்திருக்கிறீர்;
என்னுடைய குற்றங்கள் உமக்கு மறைந்திருக்கவில்லை.
6 சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவரே,
உமக்காகக் காத்திருக்கிறவர்கள் என்னால் வெட்கப்பட்டுப் போகாமலிருப்பார்களாக;
இஸ்ரவேலின் தேவனே, உம்மைத் தேடுகிறவர்கள் என்னிமித்தம் வெட்கமடையாதிருப்பார்களாக.
7 உமக்காக நிந்தையைச் சகித்தேன்;
அவமானம் என்னுடைய முகத்தை மூடினது.
8 என்னுடைய சகோதரர்களுக்கு வேற்று மனிதனும், என்னுடைய தாயின் பிள்ளைகளுக்கு அந்நியனுமானேன்.
9 உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் எனக்குள் பற்றியெரிந்தது;
உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தனைகள் என்மேல் விழுந்தது.
10 என்னுடைய ஆத்துமா வாடும்படி உபவாசித்து அழுதேன்;
அதுவும் எனக்கு நிந்தையாக முடிந்தது.
11 சணலாடையை என்னுடைய உடையாக்கினேன்;
அப்பொழுதும் அவர்களுக்குப் பழமொழியானேன்.
12 வாசலில் உட்கார்ந்திருக்கிறவர்கள் எனக்கு விரோதமாகப் பேசுகிறார்கள்;
மதுபானம் குடிக்கிறவர்களின் பாடலானேன்.
13 ஆனாலும் யெகோவாவே, உதவிக்காலத்திலே உம்மை நோக்கி விண்ணப்பம்செய்கிறேன்;
தேவனே, உமது மிகுந்த கிருபையினாலும் உமது இரட்சிப்பின் சத்தியத்தினாலும் எனக்குச் செவிகொடுத்தருளும்.
14 நான் அமிழ்ந்து போகாதபடிக்குச் சேற்றிலிருந்து என்னைத் தூக்கிவிடும்;
என்னைப் பகைக்கிறவர்களிடத்திலிருந்தும் ஆழமான தண்ணீர்களில் இருந்தும் நான் நீங்கும்படி செய்யும்.
15 வெள்ளங்கள் என்மேல் புரளாமலும், ஆழம் என்னை விழுங்காமலும்,
பாதாளம் என்மேல் தன்னுடைய வாயை அடைத்துக்கொள்ளாமலும் இருப்பதாக.
16 யெகோவாவே, என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டருளும்,
உம்முடைய தயை நலமாயிருக்கிறது;
உமது உருக்கமான இரக்கங்களின்படி என்னைக் கண்ணோக்கியருளும்.
17 உமது முகத்தை உமது அடியேனுக்கு மறையாதேயும்;
நான் வியாகுலப்படுகிறேன், எனக்குத் தீவிரமாகச் செவிகொடுத்தருளும்.
18 நீர் என் ஆத்துமாவினிடத்தில் வந்து அதை விடுதலைசெய்யும்;
என்னுடைய எதிரிகளுக்காக என்னை மீட்டுவிடும்.
19 தேவனே நீர் என்னுடைய நிந்தையையும்
என்னுடைய வெட்கத்தையும் என்னுடைய அவமானத்தையும் அறிந்திருக்கிறீர்;
என்னுடைய எதிரிகள் எல்லோரும் உமக்கு முன்பாக இருக்கிறார்கள்.
20 நிந்தை என்னுடைய இருதயத்தைப் பிளந்தது;
நான் மிகவும் வேதனைப்படுகிறேன்;
எனக்காக பரிதபிக்கிறவனுண்டோ என்று காத்திருந்தேன்,
ஒருவனும் இல்லை; தேற்றுகிறவர்களுக்குக் காத்திருந்தேன்,
ஒருவனும் இல்லை.
21 என்னுடைய ஆகாரத்தில் கசப்பு கலந்து கொடுத்தார்கள்,
என்னுடைய தாகத்திற்குக் காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள்.
22 அவர்களுடைய பந்தி அவர்களுக்குக் கண்ணியும்,
அவர்களுடைய செல்வம் அவர்களுக்கு வலையுமாக இருக்கட்டும்.
23 அவர்களுடைய கண்கள் காணாதபடி இருளாகட்டும்;
அவர்கள் இடுப்புகளை எப்போதும் தள்ளாடச்செய்யும்.
24 உம்முடைய கடுங்கோபத்தை அவர்கள்மேல் ஊற்றும்;
உம்முடைய கோபாக்கினி அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக.
25 அவர்கள் குடியிருப்பு பாழாகட்டும்;
அவர்களுடைய கூடாரங்களில் குடியில்லாமற்போவதாக.
26 தேவனே நீர் அடித்தவனை அவர்கள் துன்பப்படுத்தி,
நீர் காயப்படுத்தினவர்களை நோகப் பேசுகிறார்களே.
27 அக்கிரமத்தின்மேல் அக்கிரமத்தை அவர்கள்மேல் சுமத்தும், அவர்கள் உமது நீதிக்கு வந்தெட்டாதிருப்பார்களாக.
28 ஜீவபுத்தகத்திலிருந்து அவர்கள் பெயர் கிறுக்கப்பட்டுப்போவதாக;
நீதிமான்கள் பெயரோடே அவர்கள் பெயர் எழுதப்படாதிருப்பதாக.
29 நானோ சிறுமையும் துயரமுமுள்ளவன்;
தேவனே, உம்முடைய இரட்சிப்பு எனக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.
30 தேவனுடைய பெயரைப் பாட்டினால் துதித்து,
அவரை நன்றி சொல்லி மகிமைப்படுத்துவேன்.
31 கொம்பும் விரிகுளம்புமுள்ள காளை எருதைவிட,
இதுவே யெகோவாவுக்குப் பிரியமாக இருக்கும்.
32 சாந்தகுணமுள்ளவர்கள் இதைக் கண்டு சந்தோஷப்படுவார்கள்;
தேவனைத் தேடுகிறவர்களே, உங்களுடைய இருதயம் வாழும்.
33 யெகோவா எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்கிறார்,
கட்டுண்ட தம்முடையவர்களை அவர் புறக்கணிக்கமாட்டார்.
34 வானமும் பூமியும் கடல்களும் அவைகளில் வாழ்கிற அனைத்தும் அவரைத் துதிக்கட்டும்.
35 தேவன் சீயோனைக் காப்பாற்றி, யூதாவின் பட்டணங்களைக் கட்டுவார்;
அப்பொழுது அங்கே குடியிருந்து அதை உரிமையாக்கிக்கொள்வார்கள்.
36 அவருடைய ஊழியக்காரரின் சந்ததியார் அதை உரிமையாக்கிக் கொள்வார்கள்;
அவருடைய பெயரை நேசிக்கிறவர்கள் அதில் குடியிருப்பார்கள்.
Chapter 70
சங்கீதம் 70
நினைப்பூட்டுதலாகப் பாடி இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் பாடல்.1 தேவனே, என்னை விடுவியும், யெகோவாவே,
எனக்கு உதவிசெய்ய விரைந்துவாரும்.
2 என்னுடைய உயிரை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கி குழப்பம் அடைவார்களாக;
எனக்குத் தீங்குவரும்படி விரும்புகிறவர்கள் பின்னிட்டுத் திரும்பி வெட்கம் அடைவார்களாக.
3 ஆ ஆ, ஆ ஆ, என்பவர்கள் தாங்கள் அடையும் வெட்கத்தினால் பின்னாகப்போவார்களாக.
4 உம்மைத் தேடுகிற அனைவரும் உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக;
உமது இரட்சிப்பில் பிரியப்படுகிறவர்கள் தேவனுக்கு மகிமையுண்டாவதாக என்று
எப்பொழுதும் சொல்வார்களாக.
5 நானோ எளிமையும், தேவையுள்ளவனுமாக இருக்கிறேன்;
தேவனே, என்னிடத்தில் விரைவாக வாரும்:
நீரே என்னுடைய துணையும் என்னை விடுவிக்கிறவருமானவர், யெகோவாவே, தாமதிக்காமலிரும்.
Chapter 71
சங்கீதம் 71
1 யெகோவாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருபோதும் வெட்கம் அடையாதபடி செய்யும். 2 உமது நீதியினிமித்தம் என்னை விடுவித்து, என்னைக் காத்தருளும்; உமது செவியை எனக்குச் சாய்த்து, என்னைக் காப்பாற்றும். 3 நான் எப்பொழுதும் வந்தடையக்கூடிய கன்மலையாக இரும்; என்னை இரட்சிப்பதற்குக் கட்டளையிட்டீரே; நீரே என்னுடைய கன்மலையும் என்னுடைய கோட்டையுமாக இருக்கிறீர். 4 என் தேவனே, துன்மார்க்கனுடைய கைக்கும், நியாயக்கேடும் கொடுமையுமுள்ளவனுடைய கைக்கும் என்னைத் தப்புவியும். 5 யெகோவா ஆண்டவரே, நீரே என்னுடைய நோக்கமும், என்னுடைய சிறுவயது தொடங்கி என்னுடைய நம்பிக்கையுமாக இருக்கிறீர். 6 நான் கர்ப்பத்தில் உருவானதுமுதல் உம்மால் ஆதரிக்கப்பட்டேன்; என்னுடைய தாயின் வயிற்றிலிருந்து என்னை எடுத்தவர் நீரே; உம்மையே நான் எப்பொழுதும் துதிப்பேன். 7 அநேகருக்கு நான் ஒரு புதுமைபோலானேன்; நீரோ எனக்குப் பலத்த அடைக்கலமாக இருக்கிறீர். 8 என்னுடைய வாய் உமது துதியினாலும், நாள்தோறும் உமது மகத்துவத்தினாலும் நிறைந்திருப்பதாக. 9 முதிர்ந்த வயதில் என்னைத் தள்ளிவிடாமலும், என்னுடைய பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும். 10 என்னுடைய எதிரிகள் எனக்கு விரோதமாகப் பேசி, என்னுடைய ஆத்துமாவுக்குக் காத்திருக்கிறவர்கள் ஒன்றாக ஆலோசனைசெய்து: 11 தேவன் அவனைக் கைவிட்டார், அவனைத் தொடர்ந்து பிடியுங்கள்; அவனை விடுவிப்பவர்கள் இல்லை என்கிறார்கள். 12 தேவனே, எனக்குத் தூரமாக இருக்க வேண்டாம்; என் தேவனே, எனக்கு உதவிசெய்ய விரைந்து வாரும். 13 என்னுடைய ஆத்துமாவை விரோதிக்கிறவர்கள் வெட்கி அழியவும், எனக்குப் பொல்லாப்புத் தேடுகிறவர்கள் நிந்தையாலும் வெட்கத்தாலும் மூடப்படவும் வேண்டும். 14 நானோ எப்பொழுதும் நம்பிக்கைகொண்டிருந்து, மேன்மேலும் உம்மைத் துதிப்பேன். 15 என்னுடைய வாய் நாள்தோறும் உமது நீதியையும் உமது இரட்சிப்பையும் சொல்லும்; அவைகளின் தொகையை நான் அறியவில்லை. 16 யெகோவா ஆண்டவருடைய வல்லமையை முன்னிட்டு நடப்பேன்; உம்முடைய நீதியைப்பற்றியே மேன்மைபாராட்டுவேன். 17 தேவனே, என்னுடைய சிறுவயதுமுதல் எனக்குப் போதித்து வந்தீர்; இதுவரைக்கும் உம்முடைய அதிசயங்களை அறிவித்துவந்தேன். 18 இப்பொழுதும் தேவனே, இந்தச் சந்ததிக்கு உமது பெலனையும், வரப்போகிற எல்லோருக்கும் உமது வல்லமையையும் நான் அறிவிக்கும்வரை, முதிர்வயதும் நரைமுடியும் உள்ளவனாகும்வரை என்னைக் கைவிடாமல் இருப்பீராக. 19 தேவனே, உம்முடைய நீதி உன்னதமானது, பெரிதானவைகளை நீர் செய்தீர்; தேவனே, உமக்கு நிகரானவர் யார்? 20 அநேக இக்கட்டுகளையும் ஆபத்துகளையும் காணும்படி செய்த என்னை நீர் திரும்பவும் உயிர்ப்பித்து, திரும்பவும் என்னைப் பூமியின் பாதாளங்களிலிருந்து ஏறச்செய்வீர். 21 என்னுடைய மேன்மையைப் பெருகச்செய்து, என்னை மறுபடியும் தேற்றுவீர். 22 என் தேவனே, நான் வீணையைக் கொண்டு உம்மையும் உம்முடைய சத்தியத்தையும் துதிப்பேன்; இஸ்ரவேலின் பரிசுத்தரே, சுரமண்டலத்தைக் கொண்டு உம்மைப் பாடுவேன். 23 நான் பாடும்போது என்னுடைய உதடுகளும், நீர் மீட்டுக்கொண்ட என் ஆத்துமாவும் கெம்பீரித்து மகிழும். 24 எனக்குப் பொல்லாப்பைத் தேடுகிறவர்கள் வெட்கி குழம்பினபடியால், நாள்தோறும் என்னுடைய நாவு உமது நீதியைக் கொண்டாடும்.
Chapter 72
சங்கீதம் 72
1 தேவனே, ராஜாவுக்கு உம்முடைய நியாயத்தீர்ப்புகளையும்,
ராஜாவின் மகனுக்கு உம்முடைய நீதியையும் கொடுத்தருளும்.
2 அவர் உம்முடைய மக்களை நீதியோடும்,
உம்முடைய ஏழைகளை நியாயத்தோடும் விசாரிப்பார்.
3 மலைகள் மக்களுக்குச் சமாதானத்தைத் தரும்,
மேடுகள் நீதியின் விளைவோடு இருக்கும்.
4 மக்களில் சிறுமைப்படுகிறவர்களை அவர் நியாயம் விசாரித்து,
ஏழையின் பிள்ளைகளை இரட்சித்து, இடுக்கண் செய்கிறவனை நொறுக்குவார்.
5 சூரியனும் சந்திரனும் உள்ளவரை, அவர்கள் உமக்குத் தலைமுறை தலைமுறையாகப் பயந்திருப்பார்கள்.
6 புல் அறுக்கப்பட வெளியின்மேல் பெய்யும் மழையைப்போலவும், பூமியை நனைக்கும் தூறலைப்போலவும் இறங்குவார்.
7 அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான்;
சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும்.
8 ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும்,
நதி துவங்கி பூமியின் எல்லைகள்வரைக்கும் அவர் அரசாளுவார்.
9 வனாந்திரத்தார்கள் அவருக்கு முன்பாகக் குனிந்து வணங்குவார்கள்;
அவருடைய எதிரிகள் மண்ணை நக்குவார்கள்.
10 தர்ஷீசின் ராஜாக்களும் மத்திய தரைக் கடல் தீவுகளின் ராஜாக்களும் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்;
ஷேபாவிலும் சேபாவிலுமுள்ள ராஜாக்கள் வெகுமானங்களைக் கொண்டுவருவார்கள்.
11 எல்லா ராஜாக்களும் அவரைப் பணிந்துகொள்வார்கள்;
எல்லா தேசங்களும் அவரைச் சேவிப்பார்கள்.
12 கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார்.
13 எளியவனுக்கும், தேவையுள்ளவனுக்கும் அவர் இரங்கி,
எளியவர்களின் ஆத்துமாக்களை விடுவிப்பார்.
14 அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்;
அவர்களுடைய இரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாக இருக்கும்.
15 அவர் பிழைத்திருப்பார், ஷேபாவின் பொன் அவருக்குக் கொடுக்கப்படும்;
அவர்நிமித்தம் இடைவிடாமல் ஜெபம்செய்யப்படும்,
எந்நாளும் ஸ்தோத்திரிக்கப்படுவார்.
16 பூமியிலே மலைகளின் உச்சிகளில் ஒரு பிடி தானியம் விதைக்கப்பட்டிருக்கும்;
அதின் விளைவு லீபனோனைப்போல அசையும்;
பூமியின் புல்லைப்போல நகரத்தார்கள் செழித்தோங்குவார்கள்.
17 அவருடைய பெயர் என்றென்றைக்கும் இருக்கும்;
சூரியன் இருக்கும்வரை அவருடைய பெயரும் புகழும் தொடர்ந்து நிலைக்கும்;
மனிதர்கள் அவருக்குள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்,
எல்லா தேசங்களும் அவரைப் பாக்கியமுடையவர்கள் என்று வாழ்த்துவார்கள்.
18 இஸ்ரவேலின் தேவனாக இருக்கிற கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக;
அவரே அதிசயங்களைச் செய்கிறவர்.
19 அவருடைய மகிமைபொருந்திய நாமத்திற்கு என்றென்றைக்கும் துதி உண்டாவதாக;
பூமிமுழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருப்பதாக.
ஆமென், ஆமென்.
20 ஈசாயின் மகனாகிய தாவீதின் விண்ணப்பங்கள் முடிந்தது.
Chapter 73
சங்கீதம் 73
ஆசாபின் பாடல்.1 சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலர்களுக்கு
தேவன் நல்லவராகவே இருக்கிறார்.
2 ஆனாலும் என்னுடைய கால்கள் தள்ளாடுதலுக்கும்,
என்னுடைய அடிகள் சறுக்குதலுக்கும் சற்றே தப்பியது.
3 துன்மார்க்கர்களின் வாழ்வை நான் காணும்போது,
வீம்புக்காரர்களாகிய அவர்கள்மேல் பொறாமை கொண்டேன்.
4 மரணம்வரை அவர்களுக்கு வேதனை இல்லை;
அவர்களுடைய பெலன் உறுதியாக இருக்கிறது.
5 மனிதர்கள்படும் வருத்தத்தில் அகப்படமாட்டார்கள்;
மனிதர்கள் அடையும் உபத்திரவத்தை அடையமாட்டார்கள்.
6 ஆகையால் பெருமை கழுத்து அணிகலன்போல அவர்களைச் சுற்றிக்கொள்ளும்,
கொடுமை ஆடையைப்போல் அவர்களை மூடிக்கொள்ளும்.
7 அவர்களுடைய கண்கள் கொழுப்பினால் எடுப்பாகப் பார்க்கிறது;
அவர்கள் இருதயம் விரும்புவதிலும் அதிகமாக நடக்கிறது.
8 அவர்கள் சீர்கெட்டுப்போய், அகந்தையாகக் கொடுமை பேசுகிறார்கள்;
பெருமையாகப் பேசுகிறார்கள்.
9 தங்களுடைய வாய் வானம்வரை எட்டப் பேசுகிறார்கள்;
அவர்களுடைய நாவு பூமியெங்கும் உலாவுகிறது.
10 ஆகையால் அவருடைய மக்கள் இந்த வழியாகவே திரும்புகிறார்கள்;
தண்ணீர்கள் அவர்களுக்குப் பரிபூரணமாகச் சுரந்துவரும்.
11 தேவனுக்கு அது எப்படித் தெரியும்?
உன்னதமானவருக்கு அதைப்பற்றி அறிவு உண்டோ?
என்று சொல்லுகிறார்கள்.
12 இதோ, இவர்கள் துன்மார்க்கர்கள்;
இவர்கள் என்றும் சுகமாக வாழ்கிறவர்களாயிருந்து,
சொத்தைப் பெருகச்செய்கிறார்கள்.
13 நான் வீணாகவே என்னுடைய இருதயத்தைச் சுத்தம்செய்து,
குற்றமில்லாமையிலே என்னுடைய கைகளைக் கழுவினேன்.
14 நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டும்,
காலைதோறும் தண்டிக்கப்பட்டும் இருக்கிறேன்.
15 இந்த விதமாகப் பேசுவேன் என்று நான் சொன்னால்,
இதோ, உம்முடைய பிள்ளைகளின் சந்ததிக்குத் துரோகியாவேன்.
16 இதை அறியும்படிக்கு யோசித்துப்பார்த்தேன்;
நான் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைந்து,
17 அவர்கள் முடிவைக் கவனித்து உணரும்வரை,
அது என்னுடைய பார்வைக்கு கடினமாக இருந்தது.
18 நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி,
பாழான இடங்களில் விழச்செய்கிறீர்.
19 அவர்கள் ஒரு நிமிடத்தில் எவ்வளவு பாழாகிப்போகிறார்கள்!
பயங்கரங்களால் அழிந்து ஒன்றுமில்லாமல் போகிறார்கள்.
20 தூக்கம் தெளிந்தவுடனே சொப்பனம் ஒழிவதுபோல், ஆண்டவரே,
நீர் விழிக்கும்போது, அவர்கள் வேஷத்தை கலைத்துவிடுவீர்.
21 இப்படியாக என்னுடைய மனம் கசந்தது,
என்னுடைய உள்மனதிலே குத்தப்பட்டேன்.
22 நான் காரியம் அறியாத மூடனானேன்;
உமக்கு முன்பாக மிருகம் போலிருந்தேன்.
23 ஆனாலும் நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்;
என்னுடைய வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர்.
24 உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி,
முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.
25 பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு?
பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை.
26 என்னுடைய சரீரமும் என்னுடைய இருதயமும் வளர்ச்சியில்லாமல் போகிறது;
தேவன் என்றென்றைக்கும் என்னுடைய இருதயத்தின் கன்மலையும்
என்னுடைய பங்குமாக இருக்கிறார்.
27 இதோ, உம்மைவிட்டுத் தூரமாகப்போகிறவர்கள் நாசமடைவார்கள்;
உம்மைவிட்டு உண்மையில்லாமல் போகிற அனைவரையும் அழிப்பீர்.
28 எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்;
நான் உமது செயல்களையெல்லாம் சொல்லிவரும்படி
கர்த்தராகிய ஆண்டவர்மேல் என்னுடைய நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.
Chapter 74
சங்கீதம் 74
ஆசாப் பாடின மஸ்கீல் என்னும் பாடல்.1 தேவனே, நீர் எங்களை என்றென்றைக்கும் ஏன் தள்ளிவிடுகிறீர்?
உமது மேய்ச்சலின் ஆடுகள்மேல் உமது கோபம் ஏன் புகைகிறது?
2 நீர் பூர்வகாலத்தில் சம்பாதித்த உமது சபையையும்,
நீர் மீட்டுக்கொண்ட உமது சுதந்தரமான கோத்திரத்தையும்,
நீர் தங்கியிருந்த சீயோன் மலையையும் நினைத்தருளும்.
3 நெடுங்காலமாகப் பாழாகக்கிடக்கிற இடங்களில் உம்முடைய பாதங்களை எழுந்தருளச்செய்யும்;
பரிசுத்தஸ்தலத்திலே எதிரி அனைத்தையும் கெடுத்துப்போட்டான்.
4 உம்முடைய எதிரிகள் உம்முடைய ஆலயங்களுக்குள்ளே கெர்ச்சித்து,
தங்கள் கொடிகளை அடையாளங்களாக நாட்டுகிறார்கள்.
5 கோடரிகளை ஓங்கிச் சோலையிலே மரங்களை வெட்டுகிறவன் பெயர்பெற்றவனானான்.
6 இப்பொழுதோ அவர்கள் அதின் சித்திரவேலைகள் முழுவதையும் கோடரிகளாலும்,
சம்மட்டிகளாலும் தகர்த்துப்போடுகிறார்கள்.
7 உமது பரிசுத்த ஸ்தலத்தை அக்கினிக்கு இரையாக்கி,
உமது பெயரின் வாசஸ்தலத்தைத் தரைவரை இடித்து,
அசுத்தப்படுத்தினார்கள்.
8 அவர்களை ஒன்றாக அழித்துப்போடுவோம் என்று தங்கள் இருதயத்தில் சொல்லி,
தேசத்திலுள்ள ஆலயங்களையெல்லாம் சுட்டெரித்துப்போட்டார்கள்.
9 எங்களுக்கு இருந்த அடையாளங்களைக் காணோம்;
தீர்க்கதரிசியும் இல்லை;
இது எதுவரைக்கும் என்று அறிகிறவனும் எங்களிடத்தில் இல்லை.
10 தேவனே, எதுவரைக்கும் எதிரி நிந்திப்பான்?
பகைவன் உமது நாமத்தை எப்பொழுதும் தூஷிப்பானோ?
11 உமது வலதுகரத்தை ஏன் முடக்கிக்கொள்ளுகிறீர்;
அதை உமது மடியிலிருந்து எடுத்து ஓங்கி நிர்மூலமாக்கும்.
12 பூமியின் நடுவில் இரட்சிப்புகளைச் செய்துவருகிற
தேவன் பூர்வகாலமுதல் என்னுடைய ராஜா.
13 தேவனே நீர் உமது வல்லமையினால் சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்து,
தண்ணீரிலுள்ள வலுசர்ப்பங்களின் [1] தலைகளை உடைத்தீர்.
14 தேவனே நீர் முதலைகளின் தலைகளை நருக்கிப்போட்டு,
அதை வனாந்திரத்து மக்களுக்கு உணவாகக் கொடுத்தீர்.
15 ஊற்றையும் ஆற்றையும் பிளந்துவிட்டீர்;
மகா நதிகளையும் வற்றிப்போகச்செய்தீர்.
16 பகலும் உம்முடையது, இரவும் உம்முடையது;
தேவனே நீர் ஒளியையும் சூரியனையும் படைத்தீர்.
17 பூமியின் எல்லைகளையெல்லாம் திட்டமிட்டீர்;
கோடைக்காலத்தையும் மழைகாலத்தையும் உண்டாக்கினீர்.
18 யெகோவாவே, எதிரி உம்மை நிந்தித்ததையும்,
மதியீன மக்கள் உமது நாமத்தைத் தூஷித்ததையும் நினைத்துக்கொள்ளும்.
19 உமது காட்டுப்புறாவின் ஆத்துமாவை கொடூர மிருகங்களுடைய கூட்டத்திற்கு ஒப்புக்கொடுக்காமலிரும்;
உமது ஏழைகளின் கூட்டத்தை என்றைக்கும் மறக்காமலிரும்.
20 உம்முடைய உடன்படிக்கையை நினைத்தருளும்;
பூமியின் இருளான இடங்கள்
கொடுமையுள்ள குடியிருப்புகளால் நிறைந்திருக்கிறதே.
21 துன்பப்பட்டவன் வெட்கத்தோடு திரும்பவிடாமலிரும்;
சிறுமையும் எளிமையுமானவன் உமது பெயரைத் துதிக்கும்படி செய்யும்.
22 தேவனே, எழுந்தருளும், உமக்காக நீரே வழக்காடும்;
மதியீனனாலே தினந்தோறும் உமக்கு வரும் நிந்தையை நினைத்துக்கொள்ளும்.
23 உம்முடைய எதிரிகளின் ஆரவாரத்தை மறக்காமலிரும்;
உமக்கு விரோதமாக எழும்புகிறவர்களின் கூச்சல் எப்பொழுதும் அதிகரிக்கிறது.
Chapter 75
சங்கீதம் 75
அல்தஷ்கேத் என்னும் வாத்தியத்தில் வாசிக்கும்படி பாடலின் இசைத்தலைவனுக்கு ஆசாப் அளித்த பாடல்.1 உம்மைத் துதிக்கிறோம்,
தேவனே, உம்மைத் துதிக்கிறோம்;
உமது பெயர் அருகில் இருக்கிறதென்று உமது அதிசயமான செயல்கள் அறிவிக்கிறது.
2 நியமிக்கப்பட்ட காலத்திலே, யதார்த்தமாக நியாயந்தீர்ப்பேன்.
3 பூமியானது அதின் எல்லாக் குடிமக்களோடும் கரைந்துபோகிறது;
அதின் தூண்களை நான் நிலைநிறுத்துகிறேன். (சேலா)
4 வீம்புக்காரர்களை நோக்கி, வீம்பு பேசாமலிருங்கள் என்றும்;
துன்மார்க்கர்களை நோக்கி, கொம்பை உயர்த்தாமலிருங்கள் என்றும் சொன்னேன்.
5 உங்கள் கொம்பை உயரமாக உயர்த்தாமலிருங்கள்;
உயர்ந்த கழுத்துடையவர்களாகப் பேசாமலிருங்கள்.
6 கிழக்கிலும் மேற்கிலும் வனாந்திரதிசையிலுமிருந்து ஜெயம் வராது.
7 தேவனே நியாயாதிபதி;
ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார்.
8 கலங்கிப் பொங்குகிற மதுபானத்தினால் நிறைந்த பாத்திரம் யெகோவாவுடைய கையிலிருக்கிறது,
அதிலிருந்து ஊற்றுகிறார்;
பூமியிலுள்ள துன்மார்க்கர்கள் அனைவரும் அதின் வண்டல்களை உறிஞ்சிக் குடிப்பார்கள்.
9 நானோ என்றென்றைக்கும் இதை அறிவித்து,
யாக்கோபின் தேவனைக் புகழ்ந்து பாடுவேன்.
10 துன்மார்க்கர்களுடைய கொம்புகளையெல்லாம் வெட்டிப்போடுவேன்;
நீதிமானுடைய கொம்புகளோ உயர்த்தப்படும்.
Chapter 76
சங்கீதம் 76
அல்தஷ்கேத் என்னும் வாத்தியத்தில் வாசிக்கும்படி பாடலின் இசைத்தலைவனுக்கு ஆசாப் அளித்த பாடல்.1 யூதாவில் தேவன் அறியப்பட்டவர்;
இஸ்ரவேலில் அவருடைய பெயர் பெரியது.
2 சாலேமில் அவருடைய கூடாரமும்,
சீயோனில் அவருடைய தங்குமிடமும் இருக்கிறது.
3 அங்கேயிருந்து வில்லின் அம்புகளையும்,
கேடகத்தையும், வாளையும், யுத்தத்தையும் முறித்தார். (சேலா)
4 மகத்துவமுள்ளவரே, கொள்ளையுள்ள மலைளைவிட நீர் பிரகாசமுள்ளவர்.
5 தைரிய நெஞ்சுள்ளவர்கள் கொள்ளையிடப்பட்டு,
உறங்கி அசந்தார்கள்;
வல்லமையுள்ள எல்லா மனிதர்களுடைய கைகளும் அவர்களுக்கு உதவாமல்போனது.
6 யாக்கோபின் தேவனே, உம்முடைய அதட்டலின் சத்தத்தினால்
இரதங்களும் குதிரைகளும் உறங்கி விழுந்தது.
7 நீர், நீரே, பயங்கரமானவர்;
உமது கோபம் எழும்பும்போது உமக்கு முன்பாக நிற்பவன் யார்?
8 நியாயம் விசாரிக்கவும் பூமியில் சிறுமைப்பட்டவர்கள் யாவரையும் இரட்சிக்கவும்,
தேவனே நீர் எழுந்தருளினபோது,
9 வானத்திலிருந்து நியாயத்தீர்ப்புக் கேட்கச்செய்தீர்;
பூமி பயந்து அமர்ந்தது. (சேலா)
10 மனிதனுடைய கோபம் உமது மகிமையை விளங்கச்செய்யும்;
மிஞ்சுங்கோபத்தை நீர் அடக்குவீர்.
11 பொருத்தனைசெய்து அதை உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு நிறைவேற்றுங்கள்;
அவரைச் சூழ்ந்திருக்கிற அனைவரும் பயங்கரமானவருக்குக் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டும்.
12 பிரபுக்களின் ஆவியை அடக்குவார்;
பூமியின் ராஜாக்களுக்கு அவர் பயங்கரமானவர்.
Chapter 77
சங்கீதம் 77
எதுதூன் என்னும் இராகத்தலைவனுக்கு அளிக்கப்பட்ட ஆசாபின் பாடல்.1 நான் தேவனை நோக்கி என்னுடைய சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன்,
என்னுடைய சத்தத்தை தேவனிடத்தில் உயர்த்தினேன்,
அவர் எனக்குச் செவிகொடுத்தார்.
2 என்னுடைய ஆபத்துநாளில் ஆண்டவரைத் தேடினேன்;
இரவிலும் என்னுடைய கை தளராமல் விரிக்கப்பட்டிருந்தது;
என்னுடைய ஆத்துமா ஆறுதலடையாமல்போனது.
3 நான் தேவனை நினைத்தபோது அலறினேன்;
நான் தியானிக்கும்போது என்னுடைய ஆவி சோர்ந்துபோனது. (சேலா)
4 நான் தூங்காதபடி என்னுடைய கண்ணிமைகளைப் பிடித்திருக்கிறீர்;
நான் பேசமுடியாதபடி கலக்கமடைகிறேன்.
5 ஆரம்பநாட்களையும், ஆரம்பகாலத்து வருடங்களையும் சிந்திக்கிறேன்.
6 இரவுநேரத்தில் என்னுடைய பாடலை நான் நினைத்து,
என்னுடைய இருதயத்தோடு பேசிக்கொள்ளுகிறேன்;
என் ஆவி ஆராய்ச்சிசெய்தது.
7 ஆண்டவர் நித்தியகாலமாகத் தள்ளிவிடுவாரோ?
இனி ஒருபோதும் தயை செய்யாமலிருப்பாரோ?
8 அவருடைய கிருபை முற்றிலும் அற்றுப்போனதோ?
வாக்குத்தத்தமானது தலைமுறை தலைமுறைக்கும் ஒழிந்துபோனதோ?
9 தேவன் இரக்கஞ்செய்ய மறந்தாரோ?
கோபத்தினாலே தமது உருக்கமான இரக்கங்களை அடைத்துக்கொண்டாரோ? என்றேன். (சேலா)
10 அப்பொழுது நான்: இது என்னுடைய பலவீனம்;
ஆனாலும் உன்னதமானவருடைய வலதுகரத்திலுள்ள வருடங்களை நினைவுகூருவேன்.
11 யெகோவாவுடைய செயல்களை நினைவுகூருவேன்,
உம்முடைய ஆரம்பகாலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன்;
12 உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து,
உம்முடைய செயல்களை யோசிப்பேன் என்றேன்.
13 தேவனே, உமது வழி பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது;
நம்முடைய தேவனைப்போலப் பெரிய தேவன் யார்?
14 அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே;
மக்களுக்குள்ளே உம்முடைய வல்லமையை விளங்கச்செய்தீர்.
15 யாக்கோபு யோசேப்பு என்பவர்களின் சந்ததியாகிய உம்முடைய மக்களை,
உமது வல்லமையினாலே மீட்டுக்கொண்டீர். (சேலா)
16 தண்ணீர்கள் உம்மைக் கண்டது; தேவனே,
தண்ணீர்கள் உம்மைக் கண்டு தத்தளித்தது;
ஆழங்களும் கலங்கினது.
17 மேகங்கள் தண்ணீர்களைப் பொழிந்தது;
ஆகாயமண்டலங்கள் முழக்கமிட்டது;
உம்முடைய அம்புகளும் தெறிப்புண்டு பறந்தது.
18 உம்முடைய குமுறலின் சத்தம் சுழல்காற்றில் முழங்கினது;
மின்னல்கள் உலகை பிரகாசிக்கச் செய்தது; பூமி குலுங்கி அதிர்ந்தது.
19 உமது வழி கடலிலும், உமது பாதைகள் திரண்ட தண்ணீர்களிலும் இருந்தது;
உமது காலடிகள் தெரியப்படாமல்போனது.
20 மோசே ஆரோன் என்பவர்களின் கையால்,
உமது மக்களை ஒரு ஆட்டு மந்தையைப்போல வழிநடத்தினீர்.
Chapter 78
சங்கீதம் 78
ஆசாபின் மஸ்கீல் என்னும் போதகப் பாடல்.1 என் மக்களே, என்னுடைய உபதேசத்தைக் கேளுங்கள்;
என் வாயின் வார்த்தைகளுக்கு உங்களுடைய செவிகளைச் சாயுங்கள்.
2 என்னுடைய வாயை உவமைகளால் திறப்பேன்;
ஆரம்ப காலத்தின் மறைபொருட்களை வெளிப்படுத்துவேன்.
3 அவைகளை நாங்கள் கேள்விப்பட்டு அறிந்தோம்;
எங்களுடைய முன்னோர்கள் அவைகளை எங்களுக்குத் தெரிவித்தார்கள்.
4 பின்வரும் சந்ததியான பிள்ளைகளுக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல்,
யெகோவாவின் துதிகளையும் அவருடைய பலத்தையும்,
அவர் செய்த அவருடைய அதிசயங்களையும் விவரிப்போம்.
5 அவர் யாக்கோபிலே சாட்சியை ஏற்படுத்தி,
இஸ்ரவேலிலே வேதத்தை நிறுவி,
அவைகளைத் தங்களுடைய பிள்ளைகளுக்கு அறிவிக்கும்படி
நம்முடைய முற்பிதாக்களுக்குக் கட்டளையிட்டார்.
6 இனிப் பிறக்கும் பிள்ளைகளாகிய பின்சந்ததியார் அதை அறிந்துகொண்டு,
அவர்கள் எழும்பித் தங்களுடைய பிள்ளைகளுக்கு அவைகளைச் சொல்லும்படிக்கும்;
7 தேவன்மேல் அவர்கள் தங்களுடைய நம்பிக்கையை வைத்து,
தேவனுடைய செயல்களை மறக்காமல், அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளும்படிக்கும்;
8 இருதயத்தைச் செவ்வைப்படுத்தாமலும்,
தேவனை உறுதியாகப் பற்றிக்கொள்ளாமலும் இருந்த முரட்டாட்டமும் கலகமுமுள்ள சந்ததியாகிய
தங்களுடைய பிதாக்களுக்கு அவர்கள் ஒப்பாகாதபடிக்கும், இவைகளைக் கட்டளையிட்டார்.
9 ஆயுதமணிந்த வில்வீரர்களான எப்பிராயீமீர்கள்
யுத்தநாளிலே முதுகு காட்டினார்கள்.
10 அவர்கள் தேவனுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளாமலும்,
அவருடைய கட்டளைகளின்படி நடக்கச் சம்மதிக்காமலும்,
11 அவருடைய செயல்களையும்,
அவர் தங்களுக்குக் காண்பித்த அதிசயங்களையும் மறந்தார்கள்.
12 அவர்களுடைய முன்னோர்களுக்கு முன்பாக, எகிப்து தேசத்துச் சோவான் வெளியிலே,
அவர் அதிசயமானவைகளைச் செய்தார்.
13 கடலைப் பிளந்து, அவர்களைக் கடக்கச்செய்து,
தண்ணீரைக் குவியலாக நிற்கும்படிச் செய்தார்.
14 பகலிலே மேகத்தினாலும்,
இரவுமுழுவதும் அக்கினி வெளிச்சத்தினாலும் அவர்களை வழிநடத்தினார்.
15 பாலைவனத்திலே கன்மலைகளைப் பிளந்து,
மகா ஆழங்களிலிருந்து தண்ணீரை அவர்களுக்குக் குடிக்கக் கொடுத்தார்.
16 கன்மலையிலிருந்து நீரோட்டங்களைப் புறப்படச்செய்து,
தண்ணீரை நதிபோல ஓடிவரும்படி செய்தார்.
17 என்றாலும், அவர்கள் பின்னும் அவருக்கு விரோதமாகப் பாவஞ்செய்து,
பாலைவனத்திலே உன்னதமான தேவனுக்குக் கோபம் மூட்டினார்கள்.
18 தங்களுடைய ஆசைக்கேற்ற உணவைக்கேட்டு,
தங்களுடைய இருதயத்தில் தேவனைப் பரீட்சைபார்த்தார்கள்.
19 அவர்கள் தேவனுக்கு விரோதமாகப் பேசி:
தேவன் பாலைவனத்திலே உணவுப்பந்தியை ஆயத்தப்படுத்தக்கூடுமோ?
20 இதோ அவர் கன்மலையை அடித்ததினால் தண்ணீர் புறப்பட்டு, நதிகளாகப் புரண்டுவந்தது;
அவர் அப்பத்தையும் கொடுக்கமுடியுமோ?
தம்முடைய மக்களுக்கு இறைச்சியையும் ஆயத்தப்படுத்துவாரோ என்றார்கள்.
21 ஆகையால் யெகோவா அதைக் கேட்டுக் கோபங்கொண்டார்;
அவர்கள் தேவனை விசுவாசிக்காமலும்,
அவருடைய இரட்சிப்பை நம்பாமலும் போனதினால்,
22 யாக்கோபுக்கு விரோதமாக நெருப்பு பற்றியெரிந்தது;
இஸ்ரவேலுக்கு விரோதமாகக் கோபம் மூண்டது.
23 அவர் உயரத்திலுள்ள மேகங்களுக்குக் கட்டளையிட்டு,
வானத்தின் கதவுகளைத் திறந்து,
24 மன்னாவை அவர்களுக்கு ஆகாரமாகப் பெய்யச்செய்து,
வானத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார்.
25 தூதர்களின் அப்பத்தை மனிதன் சாப்பிட்டான்;
அவர்களுக்கு ஆகாரத்தைப் பூரணமாக அனுப்பினார்.
26 வானத்திலே கிழக்கு காற்றை வீசச்செய்து,
தம்முடைய வல்லமையினால் தென்றலையும் வீசச்செய்து,
27 இறைச்சியை தூளைப்போலவும், சிறகுள்ள பறவைகளைக் கடற்கரை மணலளவாகவும் பெய்யச்செய்து,
28 அவைகளை அவர்கள் முகாமின் நடுவிலும், அவர்கள் கூடாரங்களைச் சுற்றிலும் இறங்கச்செய்தார்.
29 அவர்கள் சாப்பிட்டு திருப்தியடைந்தார்கள்;
அவர்கள் ஆசைப்பட்டதை அவர்களுக்குக் கொடுத்தார்.
30 அவர்கள் தங்களுடைய ஆசையை வெறுக்கவில்லை;
அவர்களுடைய உணவு அவர்களுடைய வாயில் இருக்கும்போதே. 31 தேவகோபம் அவர்கள்மேல் எழும்பி,
அவர்களில் கொழுத்தவர்களை அழித்து, இஸ்ரவேலில் வாலிபர்களை விழச்செய்தார்.
32 இவையெல்லாம் நடந்தும், அவர் செய்த அதிசயங்களை அவர்கள் நம்பாமல்,
பின்னும் பாவஞ்செய்தார்கள்.
33 ஆதலால் அவர்கள் நாட்களை வீணாகவும்,
அவர்கள் வருடங்களைப் பயங்கரத்திலும் கழியச்செய்தார்.
34 அவர்களை அவர் கொல்லும்போது அவரைக்குறித்து விசாரித்து,
அவர்கள் திரும்பிவந்து தேவனை அதிகாலமே தேடி;
35 தேவன் தங்களுடைய கன்மலையென்றும்,
உன்னதமான தேவன் தங்களுடைய மீட்பர் என்றும், நினைவுகூர்ந்தார்கள்.
36 ஆனாலும் அவர்கள் தங்களுடைய வாயினால் அவருக்கு வஞ்சகம் பேசி,
தங்களுடைய நாவினால் அவரிடத்தில் பொய்சொன்னார்கள்.
37 அவர்களுடைய இருதயம் அவரிடத்தில் நிலைவரப்படவில்லை;
அவருடைய உடன்படிக்கையில் அவர்கள் உண்மையாக இருக்கவில்லை.
38 அவரோ அவர்களை அழிக்காமல், இரக்கமுள்ளவராக அவர்கள் அக்கிரமத்தை மன்னித்தார்;
அவர் தமது கடுங்கோபம் முழுவதையும் எழுப்பாமல்,
அநேகமுறை தமது கோபத்தை விலக்கிவிட்டார்.
39 அவர்கள் மாம்சமென்றும், திரும்பிவராமல் அகலுகிற காற்றென்றும் நினைவுகூர்ந்தார்.
40 எத்தனைமுறையோ பாலைவனத்திலே அவருக்குக் கோபமூட்டி,
பாலைவனத்திலே அவரை வேதனைப்படுத்தினார்கள்.
41 அவர்கள் திரும்பி தேவனைப் பரீட்சை பார்த்து,
இஸ்ரவேலின் பரிசுத்த தேவனை எரிச்சலூட்டினார்கள்.
42 அவருடைய கரத்தையும், அவர் தங்களை எதிரிகளுக்கு விலக்கி மீட்ட நாளையும் நினைக்காமல் போனார்கள்.
43 அவர் எகிப்திலே தம்முடைய அடையாளங்களையும்,
சோவான் வெளியிலே தம்முடைய அற்புதங்களையும் செய்தார்.
44 அவர்களுடைய நதிகளை இரத்தமாக மாற்றி, அவர்களுடைய
ஆறுகளிலுள்ள தண்ணீரைக் குடிக்கமுடியாதபடி செய்தார்.
45 அவர்களை அழிக்கும்படி வண்டு வகைகளையும்,
அவர்களைக் கெடுக்கும்படி தவளைகளையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார்.
46 அவர்களுடைய விளைச்சலைப் புழுக்களுக்கும்,
அவர்களுடைய உழைப்பின் பலனை வெட்டுக்கிளிகளுக்கும் கொடுத்தார்.
47 கல்மழையினால் அவர்களுடைய திராட்சைச்செடிகளையும்,
ஆலாங்கட்டியினால் அவர்களுடைய அத்திமரங்களையும் அழித்து,
48 அவர்களுடைய மிருகங்களைக் கல்மழைக்கும்,
அவர்களுடைய ஆடுமாடுகளை இடிகளுக்கும் ஒப்புக்கொடுத்தார்.
49 தமது கடுமையான கோபத்தையும், மூர்க்கத்தையும்,
பிரச்சனையையும், உபத்திரவத்தையும், தீங்குசெய்யும் தூதர்களையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார்.
50 அவர் தம்முடைய கோபத்திற்கு வழிதிறந்து, அவர்களுடைய ஆத்துமாவை மரணத்திற்கு விலக்கிக் காக்காமல்,
அவர்கள் உயிரைக் கொள்ளைநோய்க்கு ஒப்புக்கொடுத்தார்.
51 எகிப்திலே முதற்பிறந்த பிள்ளைகள் அனைத்தையும்,
காமின் [1] கூடாரங்களிலே அவர்களுடைய பெலனில் முதற்பிறந்த எல்லோரையும் அழித்து;
52 தம்முடைய மக்களை ஆடுகளைப்போல் புறப்படச்செய்து,
அவர்களை வனாந்திரத்திலே மந்தையைப்போல் கூட்டிக்கொண்டுபோய்;
53 அவர்கள் பயப்படாதபடிக்கு அவர்களைப் பத்திரமாக வழிநடத்தினார்;
அவர்கள் எதிரிகளைக் கடல் மூடிப்போட்டது.
54 அவர்களைத் தமது பரிசுத்த ஸ்தலத்தின் எல்லைவரைக்கும்,
தமது வலதுகரம் சம்பாதித்த இந்த மலைவரைக்கும் அழைத்துக்கொண்டுவந்து,
55 அவர்கள் முகத்திற்கு முன்பாக தேசங்களைத் துரத்திவிட்டு,
தேசத்தை நூல்போட்டுப் பங்கிட்டு,
அவர்களுடைய கூடாரங்களில் இஸ்ரவேலின் கோத்திரங்களைக் குடியேற்றினார்.
56 ஆனாலும் அவர்கள் உன்னதமான தேவனைப் பரீட்சை பார்த்து,
அவருக்குக் கோபம் மூட்டி, அவருடைய சாட்சிகளைக் கைக்கொள்ளாமல்போய்,
57 தங்களுடைய முன்னோர்களைப்போல வழிவிலகி,
துரோகம்செய்து, மோசம்போக்கும் வில்லைப்போல் துவண்டு,
58 தங்களுடைய மேடைகளினால் அவருக்குக் கோபம் மூட்டி,
தங்களுடைய விக்கிரகங்களினால் எரிச்சல் உண்டாக்கினார்கள்.
59 தேவன் அதைக் கேட்டு கடுங்கோபமடைந்து,
இஸ்ரவேலை மிகவும் வெறுத்து,
60 தாம் மனிதர்களுக்குள்ளே போட்ட கூடாரமாகிய சீலோவிலுள்ள [2] வாசஸ்தலத்தை விட்டுவிலகி,
61 தமது பலமாகிய இஸ்ரவேலர்களை சிறையிருப்புக்கும், தமது மகிமையான தம் ஜனத்தை எதிரியின் கைக்கும் ஒப்புக்கொடுத்து,
62 தமது மக்களை வாளுக்கு இரையாக்கி, தமது சுதந்தரத்தின்மேல் கோபங்கொண்டார்.
63 அவர்கள் வாலிபர்களை நெருப்பு எரித்தது,
அவர்களுடைய கன்னிப்பெண்கள் வாழ்க்கைப்படாமலிருந்தார்கள்.
64 அவர்களுடைய ஆசாரியர்கள் வாளால் விழுந்தார்கள்,
அவர்களுடைய விதவைகள் அழவில்லை.
65 அப்பொழுது ஆண்டவர் தூக்கம் தெளிந்தவனைப்போலவும்,
திராட்சைரசத்தால் கெம்பீரிக்கிற பலசாலியைப்போலவும் விழித்து,
66 தம்முடைய எதிரிகளைப் பின்புறமாக அடித்து,
அவர்களுக்கு நித்திய நிந்தையை வரச்செய்தார்.
67 அவர் யோசேப்பின் கூடாரத்தைப் புறக்கணித்தார்;
எப்பிராயீம் கோத்திரத்தை அவர் தெரிந்துகொள்ளாமல்,
68 யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் மலையையும் தெரிந்துகொண்டார்.
69 தம்முடைய பரிசுத்த ஸ்தலத்தை மலைகளைப்போலவும்,
என்றைக்கும் நிற்கும்படி தாம் அஸ்திபாரப்படுத்தின பூமியைப்போலவும் கட்டினார்.
70 தம்முடைய ஊழியனாகிய தாவீதைத் தெரிந்துகொண்டு,
ஆட்டுத்தொழுவங்களிலிருந்து அவனை எடுத்தார்.
71 கறவலாடுகளின் பின்னாகத் திரிந்த அவனை,
தம்முடைய மக்களாகிய யாக்கோபையும்
தம்முடைய சுதந்தரமாகிய இஸ்ரவேலையும் மேய்ப்பதற்காக,
அழைத்துக்கொண்டுவந்தார்.
72 இவன் அவர்களைத் தன்னுடைய இருதயத்தின் உண்மையின்படியே மேய்த்து,
தன்னுடைய கைகளின் திறமையினால் அவர்களை நடத்தினான்.
Chapter 79
சங்கீதம் 79
ஆசாபின் துதிப் பாடல்.1 தேவனே, அன்னிய தேசத்தார்கள் உமது சுதந்தரத்தில் வந்து,
உமது பரிசுத்த ஆலயத்தைத் தீட்டுப்படுத்தி,
எருசலேமை மண்மேடுகளாக்கினார்கள்.
2 உமது ஊழியக்காரர்களின் பிரேதங்களை வானத்துப் பறவைகளுக்கும்,
உமது பரிசுத்தவான்களின் சரீரத்தைப் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகக் கொடுத்தார்கள்.
3 எருசலேமைச் சுற்றிலும் அவர்களுடைய இரத்தத்தை தண்ணீரைப்போலச் சிந்தினார்கள்;
அவர்களை அடக்கம்செய்பவருமில்லை.
4 எங்களுடைய அயலாருக்கு நிந்தையும்,
எங்களுடைய சுற்றுப்புறத்தாருக்கு இகழ்ச்சியும், நகைப்புமானோம்.
5 எதுவரைக்கும் யெகோவாவே! நீர் என்றைக்கும் கோபமாக இருப்பீரோ?
உம்முடைய எரிச்சல் நெருப்பைப்போல் எரியுமோ?
6 உம்மை அறியாத தேசங்கள் மேலும்,
உமது பெயரை தொழுதுகொள்ளாத ராஜ்ஜியங்கள் மேலும்,
உம்முடைய கடுங்கோபத்தை ஊற்றிவிடும்.
7 அவர்கள் யாக்கோபை அழித்து,
அவன் குடியிருப்பைப் பாழாக்கினார்களே.
8 முன்னோர்களுடைய அக்கிரமங்களை எங்களுக்கு விரோதமாக நினையாமலிரும்;
உம்முடைய இரக்கங்கள் சீக்கிரமாக எங்களுக்கு நேரிடுவதாக;
நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டுப்போனோம்.
9 எங்களை இரட்சிக்கும் தேவனே, நீர் உமது பெயரின் மகிமைக்காக எங்களுக்கு உதவிசெய்து,
உமது பெயருக்காக எங்களை விடுவித்து,
எங்களுடைய பாவங்களை மன்னியும்.
10 அவர்களுடைய தேவன் எங்கே என்று அன்னியதேசத்தார் சொல்வானேன்?
உமது ஊழியக்காரர்களுடைய சிந்தப்பட்ட இரத்தத்தின் பழிவாங்குதல்
தேசங்களுக்குள்ளே எங்களுடைய கண்களுக்கு முன்பாக விளங்கும்படி செய்யும்.
11 கட்டுண்டவனுடைய பெருமூச்சு உமக்கு முன்பாக வரட்டும்;
கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை உமது கரத்தினால் உயிரோடு காத்தருளும்.
12 ஆண்டவரே, எங்களுடைய அயலார் உம்மை நிந்தித்த நிந்தையை,
ஏழு மடங்காக அவர்களுடைய மடியிலே திரும்பச்செய்யும்.
13 அப்பொழுது, உம்முடைய மக்களும் உம்முடைய மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நாங்கள் உம்மை என்றென்றைக்கும் புகழுவோம்;
தலைமுறை தலைமுறையாக உமது துதியைச் சொல்லிவருவோம்.
Chapter 80
சங்கீதம் 80
எடூத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ஆசாபின் பாடல்.1 இஸ்ரவேலின் மேய்ப்பரே,
யோசேப்பை ஆட்டுமந்தையைப்போல் நடத்துகிறவரே,
செவிகொடும்; கேருபீன்கள் மத்தியில் தங்குகிறவரே, பிரகாசியும்.
2 எப்பிராயீம் பென்யமீன் மனாசே என்பவர்களுக்கு முன்பாக, நீர் உமது வல்லமையை எழுப்பி,
எங்களைக் காப்பாற்ற வந்தருளும்.
3 தேவனே, எங்களைத் திருப்பிக் கொண்டுவாரும்,
உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்யும்,
அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.
4 சேனைகளின் தேவனாகிய யெகோவாவே,
உமது மக்களின் விண்ணப்பத்திற்கு விரோதமாக நீர்
எதுவரைக்கும் கோபங்கொள்வீர்.
5 கண்ணீராகிய அப்பத்தை அவர்களுக்கு உணவாகவும்,
மிகுதியான கண்ணீரையே அவர்களுக்குப் பானமாகவும் கொடுத்தீர்.
6 எங்களுடைய அயலாருக்கு எங்களை வழக்காக வைக்கிறீர்;
எங்களுடைய எதிரிகள் எங்களைக் கேலிசெய்கிறார்கள்.
7 சேனைகளின் தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும்,
உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்யும்,
அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.
8 நீர் எகிப்திலிருந்து ஒரு திராட்சைக்கொடியைக் கொண்டுவந்து,
தேசங்களைத் துரத்திவிட்டு, அதை நாட்டினீர்.
9 அதற்கு இடத்தை ஆயத்தப்படுத்தினீர்;
அது வேரூன்றி, தேசமெங்கும் படர்ந்தது.
10 அதின் நிழலால் மலைகளும் அதின் கிளைகளால் உயர்ந்து வளர்ந்த கேதுருக்களும் மூடப்பட்டது.
11 அது தன்னுடைய கொடிகளைக் மத்திய தரைக் கடல்வரைக்கும்,
தன்னுடைய கிளைகளை ஆறுவரைக்கும் படரவிட்டது.
12 இப்பொழுதோ வழிநடக்கிற அனைவரும் அதைப் பறிக்கும்படியாக,
அதின் அடைப்புகளை ஏன் தகர்த்துப்போட்டீர்?
13 காட்டுப்பன்றி அதை உழுதுபோடுகிறது,
வெளியின் மிருகங்கள் அதை மேய்ந்துபோடுகிறது.
14 சேனைகளின் தேவனே, திரும்பி வாரும், வானத்திலிருந்து கண்ணோக்கிப்பார்த்து,
இந்தத் திராட்சைச்செடியை விசாரித்தருளும்;
15 உம்முடைய வலதுகரம் ஊன்றிய கொடியையும்,
உமக்கு நீர் திடப்படுத்தின கிளையையும் பாதுகாத்தருளும்.
16 அது நெருப்பால் சுடப்பட்டும் வெட்டப்பட்டும் போனது;
உம்முடைய முகத்தின் பயமுறுத்தலால் அழிந்துபோகிறார்கள்.
17 உமது கரம் உமது வலதுபக்கத்து மனிதன்மீதிலும்,
உமக்கு நீர் திடப்படுத்தின மனிதகுமாரன் மீதிலும் இருப்பதாக.
18 அப்பொழுது உம்மைவிட்டுப் பின்வாங்கமாட்டோம்;
எங்களை உயிர்ப்பியும், அப்பொழுது உமது பெயரைத் தொழுதுகொள்ளுவோம்.
19 சேனைகளின் தேவனாகிய யெகோவாவே,
எங்களைத் திருப்பிக்கொண்டு வாரும்;
உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்யும்,
அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.
Chapter 81
சங்கீதம் 81
கித்தீத் என்னும் இசைக்கருவியை வாசிக்கும் இராகத் தலைவனுக்கு ஆசாப் அளித்த பாடல்.1 நம்முடைய பெலனாகிய தேவனைக் கெம்பீரமாகப் பாடி,
யாக்கோபின் தேவனைக்குறித்து ஆர்ப்பரியுங்கள்.
2 தம்புரு வாசித்து, வீணையையும் இனிய ஓசையான சுரமண்டலத்தையும் எடுத்து,
பாட்டு பாடுங்கள்.
3 மாதப்பிறப்பிலும், நியமித்தகாலத்திலும்,
நம்முடைய பண்டிகைநாட்களிலும், எக்காளம் ஊதுங்கள்.
4 இது இஸ்ரவேலுக்குப் ஆணையும்,
யாக்கோபின் தேவன் விதித்த கட்டளையுமாக இருக்கிறது.
5 நாம் அறியாத மொழியைக்கேட்ட எகிப்துதேசத்தைவிட்டுப் புறப்படும்போது,
இதை யோசேப்பிலே சாட்சியாக ஏற்படுத்தினார்.
6 அவனுடைய தோளைச் சுமைக்கு விலக்கினேன்;
அவனுடைய கைகள் கூடைக்கு விடுவிக்கப்பட்டது.
7 நெருக்கத்திலே நீ கூப்பிட்டாய், நான் உன்னைத் தப்புவித்தேன்;
இடிமுழக்கம் உண்டாகும் மறைவிடத்திலிருந்து உனக்கு உத்திரவு அருளினேன்;
மேரிபாவின் தண்ணீர்கள் அருகில் உன்னைச் சோதித்து அறிந்தேன். (சேலா)
8 என்னுடைய மக்களே கேள், உனக்குச் சாட்சியிட்டுச் சொல்லுவேன்;
இஸ்ரவேலே, நீ எனக்குச் செவிகொடுத்தால் நலமாக இருக்கும்.
9 உனக்குள் வேறு தேவன் உண்டாயிருக்கவேண்டாம்;
அந்நிய தேவனை நீ வணங்கவும் வேண்டாம்.
10 உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த உன்னுடைய தேவனாகிய யெகோவா நானே;
உன்னுடைய வாயை விரிவாகத் திற, நான் அதை நிரப்புவேன்.
11 என்னுடைய மக்களோ என்னுடைய சத்தத்திற்குச் செவிகொடுக்கவில்லை;
இஸ்ரவேல் என்னை விரும்பவில்லை.
12 ஆகையால் அவர்களை அவர்கள் இருதயத்தின் கடினத்திற்கு விட்டுவிட்டேன்;
தங்களுடைய யோசனைகளின்படியே நடந்தார்கள்.
13 ஆ, என்னுடைய மக்கள் எனக்குச் செவிகொடுத்து,
இஸ்ரவேல் என்னுடைய வழிகளில் நடந்தால் நலமாக இருக்கும்!
14 நான் சீக்கிரத்தில் அவர்களுடைய எதிராளிகளைத் தாழ்த்தி,
என்னுடைய கையை அவர்கள் எதிரிகளுக்கு விரோதமாகத் திருப்புவேன்.
15 அப்பொழுது யெகோவாவைப் பகைக்கிறவர்கள் அவருக்கு வஞ்சகம் பேசி அடங்குவார்கள்;
அவர்களுடைய காலம் என்றென்றைக்கும் இருக்கும்.
16 செழுமையான கோதுமையினால் அவர்களுக்கு உணவளிப்பார்;
கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன்.
Chapter 82
சங்கீதம் 82
ஆசாபின் பாடல்.1 தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்;
தெய்வங்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்.
2 எதுவரைக்கும் நீங்கள் அநியாயத் தீர்ப்புச்செய்து,
துன்மார்க்கர்களுக்கு முகதாட்சிணியம் செய்வீர்கள். (சேலா)
3 ஏழைக்கும் திக்கற்றபிள்ளைக்கும் நியாயஞ்செய்து,
சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள்.
4 பலவீனனையும் எளியவனையும் விடுவித்து,
துன்மார்க்கர்களின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள்.
5 அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள்,
இருளிலே நடக்கிறார்கள்; தேசத்தின் அஸ்திபாரங்களெல்லாம் அசைகிறது.
6 நீங்கள் தெய்வங்கள் என்றும்,
நீங்களெல்லோரும் உன்னதமான தேவனுடைய மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.
7 ஆனாலும் நீங்கள் மனிதர்களைப்போலச் செத்து,
உலகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்து போவீர்கள்.
8 தேவனே, எழுந்தருளும், பூமிக்கு நியாயத்தீர்ப்புச் செய்யும்;
நீரே எல்லா தேசங்களையும் சுதந்தரமாகக் கொண்டிருப்பவர்.
Chapter 83
சங்கீதம் 83
ஆசாபின் பாடல்.1 தேவனே, மவுனமாக இருக்கவேண்டாம்,
பேசாமல் இருக்கவேண்டாம்; தேவனே, சும்மாயிருக்க வேண்டாம்.
2 இதோ, உம்முடைய எதிரிகள் கொந்தளித்து,
உம்முடைய பகைஞர் தலையை உயர்த்துகிறார்கள்.
3 உமது மக்களுக்கு விரோதமாக சதி செய்ய யோசித்து,
உமது மறைவில் இருக்கிறவர்களுக்கு விரோதமாக ஆலோசனைசெய்கிறார்கள்.
4 அவர்கள் இனி ஒரு தேசமாக இல்லாமலும்,
இஸ்ரவேலின் பெயர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக,
அவர்களை அழிப்போம் வாருங்கள் என்கிறார்கள்.
5 இப்படி, ஏதோமின் கூடாரத்தார்களும்,
இஸ்மவேலர்களும், மோவாபியர்களும், ஆகாரியர்களும்,
6 கேபாலர்களும், அம்மோனியர்களும், அமலேக்கியர்களும்,
தீருவின் குடிமக்களோடுகூடிய பெலிஸ்தர்களும்,
7 ஒரே மனதோடு முடிவெடுத்து ஆலோசனைசெய்து,
உமக்கு விரோதமாக ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறார்கள்.
8 அசீரியர்களும் அவர்களோடேகூடக் கலந்து,
லோத்தின் சந்ததிகளுக்கு பலமானார்கள். (சேலா)
9 மீதியானியர்களுக்குச் செய்தது போலவும்,
கீசோன் என்னும் ஆற்றின் அருகில் எந்தோரிலே அழிக்கப்பட்டு,
10 நிலத்திற்கு எருவாய்ப்போன சிசெரா,
யாபீன் என்பவர்களுக்குச் செய்ததுபோலவும், அவர்களுக்குச் செய்யும்.
11 அவர்களையும் அவர்கள் அதிபதிகளையும் ஓரேபுக்கும் சேபுக்கும்,
அவர்கள் பிரபுக்களையெல்லாம் சேபாவுக்கும் சல்முனாவுக்கும் சமமாக்கும்.
12 தேவனுடைய வாசஸ்தலங்களை எங்களுக்குச் சுதந்தரமாக நாங்கள் கட்டிக்கொள்வோம் என்று சொல்லுகிறார்களே.
13 என் தேவனே, அவர்களைச் சுழல்காற்றின் புழுதிக்கும்,
காற்று முகத்தில் பறக்கும் துரும்புக்கும் சமமாக்கும்.
14 நெருப்பு காட்டைக் கொளுத்துவதுபோலவும்,
அக்கினி ஜூவாலைகள் மலைகளை எரிப்பது போலவும்,
15 நீர் உமது புயலினாலே அவர்களைத் தொடர்ந்து,
உமது பெருங்காற்றினாலே அவர்களைக் கலங்கச்செய்யும்.
16 யெகோவாவே, அவர்கள் உமது பெயரைத் தேடும்படிக்கு,
அவர்கள் முகங்களை அவமானத்தாலே மூடும்.
17 யேகோவா என்னும் பெயரை உடைய தேவனே
நீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமான தேவன் என்று மனிதர்கள் உணரும்படி,
18 அவர்கள் என்றைக்கும் வெட்கிக் கலங்கி,
அவமானமடைந்து அழிந்துபோவார்களாக.
Chapter 84
சங்கீதம் 84
கீத்தித் என்னும் வாத்தியத்தில் இசைக்கும் இராகத் தலைவனுக்குக் கோராகின் குடும்பம் அளித்த ஒரு துதிப் பாடல்.1 சேனைகளின் யெகோவாவே,
உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்!
2 என்னுடைய ஆத்துமா யெகோவாவுடைய ஆலயமுற்றங்களின்மேல் வாஞ்சையும் ஆவலுமாக இருக்கிறது;
என்னுடைய இருதயமும் என்னுடைய சரீரமும் உயிருள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது.
3 என்னுடைய ராஜாவும் என் தேவனுமாகிய சேனைகளின் யெகோவாவே,
உம்முடைய பீடங்களின் அருகில் அடைக்கலான் குருவிக்கு வீடும்,
தகைவிலான் குருவிக்குத் தன்னுடைய குஞ்சுகளை வைக்கும் கூடும் கிடைத்ததே.
4 உம்முடைய வீட்டில் தங்கி இருக்கிறவர்கள் பாக்கியவான்கள்;
அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டிருப்பார்கள் (சேலா)
5 உம்மிலே பெலன்கொள்ளுகிற மனிதனும்,
தங்களுடைய இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள்.
6 அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள்;
மழையும் குளங்களை நிரப்பும்.
7 அவர்கள் பலத்தின்மேல் பலம் அடைந்து,
சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள்.
8 சேனைகளின் தேவனாகிய யெகோவாவே,
என்னுடைய விண்ணப்பத்தைக் கேளும்;
யாக்கோபின் தேவனே, செவிகொடும். (சேலா)
9 எங்கள் கேடகமாகிய தேவனே, கண்ணோக்கமாக இரும்;
நீர் அபிஷேகம் செய்தவரின் முகத்தைப் பாரும்.
10 ஆயிரம் நாளைவிட உமது முற்றங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது;
துன்மார்க்கர்களின் கூடாரங்களில் தங்கியிருப்பதைவிட
என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன்.
11 தேவனாகிய யெகோவா சூரியனும் கேடகமுமானவர்;
யெகோவா கிருபையையும் மகிமையையும் அருளுவார்;
உத்தமமாக நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காமல் இருக்கமாட்டார்.
12 சேனைகளின் யெகோவாவே,
உம்மை நம்பியிருக்கிற மனிதன் பாக்கியவான்.
Chapter 85
சங்கீதம் 85
கோராகின் குடும்பம் இராகத் தலைவனுக்கு அளித்த துதிப் பாடல்.1 யெகோவாவே, உமது தேசத்தின்மேல் பிரியம் வைத்து,
யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பினீர்.
2 உமது மக்களின் அக்கிரமத்தை மன்னித்து,
அவர்கள் பாவத்தையெல்லாம் மூடினீர். (சேலா)
3 உமது உக்கிரத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு,
உமது கோபத்தின் எரிச்சலைவிட்டுத் திரும்பினீர்.
4 எங்கள் இரட்சிப்பின் தேவனே,
நீர் எங்களைத் திருப்பிக் கொண்டுவாரும்,
எங்கள்மேலுள்ள உமது கோபத்தை ஆறச்செய்யும்.
5 என்றைக்கும் எங்கள்மேல் கோபமாக இருப்பீரோ?
தலைமுறை தலைமுறையாக உமது கோபத்தை நீடித்திருக்கச்செய்வீரோ?
6 உமது மக்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும்படி
நீர் எங்களைத் திரும்ப உயிர்ப்பிக்கமாட்டீரோ?
7 யெகோவாவே, உமது கிருபையை எங்களுக்குக் காண்பித்து,
உமது இரட்சிப்பை எங்களுக்கு அருளிச்செய்யும்.
8 கர்த்தராகிய தேவன் சொல்வதைக் கேட்பேன்;
அவர் தம்முடைய மக்களுக்கும்
தம்முடைய பரிசுத்தவான்களுக்கும் சமாதானம் கூறுவார்;
அவர்களோ மதிகேட்டுக்குத் திரும்பாமலிருப்பார்களாக.
9 நம்முடைய தேசத்தில் மகிமை தங்கியிருக்கும்படி,
அவருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்குச் சமீபமாயிருக்கிறது.
10 கிருபையும், சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும்,
நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும்.
11 சத்தியம் பூமியிலிருந்து முளைக்கும்,
நீதி வானத்திலிருந்து கீழே பார்க்கும்.
12 யெகோவா நன்மையானதைத் தருவார்;
நம்முடைய தேசமும் தன்னுடைய பலனைக் கொடுக்கும்.
13 நீதி அவருக்கு முன்னாகச் சென்று,
அவருடைய அடிச்சுவடுகளின் வழியிலே நம்மை நிறுத்தும்.
Chapter 86
சங்கீதம் 86
தாவீதின் ஜெபம்.1 யெகோவாவே, உமது செவியைச் சாய்த்து,
என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டருளும்;
நான் ஏழ்மையும் ஒடுக்கப்பட்டவனுமாக இருக்கிறேன்.
2 என்னுடைய ஆத்துமாவைக் காத்தருளும்,
நான் பக்தியுள்ளவன்;
என் தேவனே, உம்மை நம்பியிருக்கிற உமது அடியேனை நீர் இரட்சியும்.
3 ஆண்டவரே, எனக்கு இரங்கும், நாள்தோறும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
4 உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்;
ஆண்டவரே, உம்மிடத்தில் என்னுடைய ஆத்துமாவை உயர்த்துகிறேன்.
5 ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும்,
உம்மை நோக்கிக் கூப்பிடுகிற எல்லோர்மேலும் கிருபை மிகுந்தவருமாக இருக்கிறீர்.
6 யெகோவாவே, என்னுடைய ஜெபத்திற்குச் செவிகொடுத்து,
என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்தைத் கவனியும்.
7 நான் துயரப்படுகிற நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்;
நீர் என்னைக் கேட்டருளுவீர்.
8 ஆண்டவரே, தெய்வங்களுக்குள்ளே உமக்கு இணையுமில்லை;
உம்முடைய செயல்களுக்கு ஒப்புமில்லை.
9 ஆண்டவரே, நீர் உண்டாக்கின எல்லா தேசங்களும் வந்து,
உமக்கு முன்பாகப் பணிந்து, உமது பெயரை மகிமைப்படுத்துவார்கள்.
10 தேவனே நீர் மகத்துவமுள்ளவரும் அதிசயங்களைச் செய்கிறவருமாக இருக்கிறீர்;
நீர் ஒருவரே தேவன்.
11 யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும்,
நான் உமது சத்தியத்திலே நடப்பேன்;
நான் உமது பெயருக்குப் பயந்திருக்கும்படி என்னுடைய இருதயத்தை ஒருமுகப்படுத்தும்.
12 என் தேவனாகிய ஆண்டவரே;
உம்மை என்னுடைய முழு இருதயத்தோடும் துதித்து,
உமது பெயரை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன்.
13 நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது;
என்னுடைய ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர்.
14 தேவனே, அகங்காரிகள் எனக்கு விரோதமாக எழும்புகிறார்கள்,
கொடுமைக்காரராகிய கூட்டத்தார்கள் என்னுடைய உயிரை வாங்கத் தேடுகிறார்கள்,
உம்மைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி பார்க்காமலிருக்கிறார்கள்.
15 ஆனாலும் ஆண்டவரே, நீர் மனவுருக்கமும்,
இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும்,
சத்தியமுமுள்ள தேவன்.
16 என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்;
உமது வல்லமையை உமது அடியானுக்கு அருளி,
உமது அடியாளின் மகனைக் காப்பாற்றும்.
17 யெகோவாவே, நீர் எனக்குத் துணைசெய்து
என்னைத் தேற்றுகிறதை என்னுடைய பகைஞர் கண்டு வெட்கப்படும்படிக்கு,
எனக்கு அநுகூலமாக ஒரு அடையாளத்தைக் காண்பித்தருளும்.
Chapter 87
சங்கீதம் 87
கோராகின் மகன்களுடைய பாடல்.1 அவர் அஸ்திபாரம் பரிசுத்த மலைகளில் இருக்கிறது.
2 யெகோவா யாக்கோபின் தங்குமிடங்கள் எல்லாவற்றைவிட
சீயோனின் வாசல்களில் பிரியமாக இருக்கிறார்.
3 தேவனுடைய நகரமே! உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் பேசப்படும். (சேலா)
4 என்னை அறிந்தவர்களுக்குள்ளே ராகாபையும் பாபிலோனையும் குறித்துப் பேசுவேன்;
இதோ, பெலிஸ்தியர்களிலும், தீரியர்களிலும்,
எத்தியோப்பியர்களிலுங்கூட, இன்னான் அங்கே பிறந்தான் என்றும்;
5 சீயோனைக் குறித்து, இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும்;
உன்னதமான தேவன் தாமே அதை உறுதிப்படுத்துவார்.
6 யெகோவா மக்களைப் பெயரெழுதும்போது,
இன்னான் அதிலே பிறந்தான் என்று அவர்களைக் கணக்கெடுப்பார். (சேலா)
7 எங்களுடைய ஊற்றுகளெல்லாம் உன்னில் இருக்கிறது என்று
பாடுவாரும் ஆடுவாரும் ஒன்றாக சொல்லுவார்கள்.
Chapter 88
சங்கீதம் 88
கோராகின் குடும்பம் இராகத் தலைவனுக்கு அளித்த துதிப் பாடல். இது வேதனை தரும் ஒரு நோயைப் பற்றியது. இது எஸ்ராகியனாகிய ஏமானின் மஸ்கீல் என்னும் ஒரு பாடல்.1 என்னுடைய இரட்சிப்பின் தேவனாகிய யெகோவாவே,
இரவும் பகலும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
2 என் விண்ணப்பம் உமது சமுகத்தில் வருவதாக;
என்னுடைய கூப்பிடுதலுக்கு உமது செவியைச் சாய்த்தருளும்.
3 என்னுடைய ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது;
என்னுடைய உயிர் பாதாளத்திற்கு அருகில் வந்திருக்கிறது.
4 நான் குழியில் இறங்குகிறவர்களோடு நினைக்கப்பட்டு,
பெலனற்ற மனிதனைப்போல ஆனேன்.
5 மரித்தவர்களில் ஒருவனைப்போல் தள்ளப்பட்டிருக்கிறேன்;
நீர் இனி ஒருபோதும் நினையாதபடி,
உமது கையால் அறுக்கப்பட்டுபோய்க் கல்லறைகளிலே கிடக்கிறவர்களைப்போலானேன்.
6 என்னைப் பாதாளக்குழியிலும் இருளிலும் ஆழங்களிலும் வைத்தீர்.
7 உம்முடைய கோபம் என்னை அமிழ்த்துகிறது;
உம்முடைய அலைகள் எல்லாவற்றினாலும் என்னை வருத்தப்படுத்துகிறீர். (சேலா)
8 எனக்கு அறிமுகமானவர்களை எனக்குத் தூரமாக விலக்கி,
அவர்களுக்கு என்னை அருவருப்பாக்கினீர்;
நான் வெளியேற முடியாதபடி அடைபட்டிருக்கிறேன்.
9 துக்கத்தினால் என்னுடைய கண் தொய்ந்துபோனது;
யெகோவாவே, அநுதினமும் நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டு,
உமக்கு நேராக என்னுடைய கைகளை விரிக்கிறேன்.
10 இறந்தவர்களுக்கு அதிசயங்களைச் செய்வீரோ?
செத்துப்போன வீரர்கள் எழுந்து உம்மைத் துதிப்பார்களோ? (சேலா)
11 கல்லறைக்குழியில் உமது கிருபையும்,
அழிவில் உமது உண்மையும் விவரிக்கப்படுமோ?
12 இருளில் உமது அதிசயங்களும், மறதியின் பூமியில் உமது
நீதியும் அறியப்படுமோ?
13 நானோ யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்;
காலையிலே என்னுடைய விண்ணப்பம் உமக்கு முன்பாக வரும்.
14 யெகோவாவே, ஏன் என்னுடைய ஆத்துமாவைத் தள்ளிவிடுகிறீர்?
ஏன் உமது முகத்தை எனக்கு மறைக்கிறீர்?
15 சிறுவயதுமுதல் நான் பாதிக்கப்பட்டவனும் இறந்துபோகிறவனுமாக இருக்கிறேன்;
உம்மால் வரும் திகில்கள் என்மேல் சுமந்திருக்கிறது,
நான் மனங்கலங்குகிறேன்.
16 உம்முடைய எரிச்சல்கள் என்மேல் புரண்டுபோகிறது;
உம்முடைய பயங்கரங்கள் என்னை அழிக்கிறது.
17 அவைகள் நாள்தோறும் தண்ணீரைப்போல் என்னைச் சூழ்ந்து,
ஒன்றாக என்னை வளைந்துகொள்ளுகிறது.
18 நண்பனையும் தோழனையும் எனக்குத் தூரமாக விலக்கினீர்;
எனக்கு அறிமுகமானவர்கள் மறைந்து போனார்கள்.
Chapter 89
சங்கீதம் 89
எஸ்ரானாகிய ஏத்தானின் மஸ்கீல் என்னும் போதக பாடல்.1 யெகோவாவின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்;
உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என்னுடைய வாயினால் அறிவிப்பேன்.
2 கிருபை என்றென்றைக்கும் உறுதிப்பட்டிருக்கும்;
உமது உண்மையை வானங்களிலே நிறுவுவீர் என்றேன்.
3 என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவனோடு உடன்படிக்கை செய்து,
என்னுடைய ஊழியனாகிய தாவீதை நோக்கி:
4 என்றென்றைக்கும் உன்னுடைய சந்ததியை நிலைநிறுத்தி,
தலைமுறை தலைமுறையாக உன்னுடைய சிங்காசனத்தை நிறுவுவேன் என்று ஆணையிட்டேன் என்றீர். (சேலா)
5 யெகோவாவே, வானங்கள் உம்முடைய அதிசயங்களைத் துதிக்கும்,
பரிசுத்தவான்களின் சபையிலே உம்முடைய உண்மையும் விளங்கும்.
6 வானத்தில் யெகோவாவுக்கு சமமானவர் யார்?
பலவான்களின் மகன்களில் யெகோவாவுக்கு ஒப்பானவர் யார்?
7 தேவன் பரிசுத்தவான்களுடைய ஆலோசனைச் சபையில் மிகவும் பயப்படத்தக்கவர்,
தம்மைச் சூழ்ந்திருக்கிற அனைவராலும் பயப்படத்தக்கவர்.
8 சேனைகளின் தேவனாகிய யெகோவாவே,
உம்மைப்போல வல்லமையுள்ள யெகோவா யார்?
உம்முடைய உண்மை உம்மைச் சூழ்ந்திருக்கிறது.
9 தேவனே நீர் கடலின் பெருமையை ஆளுகிறவர்;
அதின் அலைகள் எழும்பும்போது அவைகளை அடங்கச்செய்கிறீர்.
10 நீர் ராகாபை [1]
வெட்டப்பட்ட ஒருவனைப்போல் நொறுக்கினீர்;
உமது வல்லமையான கரத்தினால் உம்முடைய எதிரிகளைச் சிதறடித்தீர்.
11 வானங்கள் உம்முடையது, பூமியும் உம்முடையது,
பூலோகத்தையும் அதிலுள்ள எல்லோரையும்
நீரே அஸ்திபாரப்படுத்தினீர்.
12 வடக்கையும் தெற்கையும் நீர் உண்டாக்கினீர்;
தாபோரும் [2] எர்மோனும் [3] உம்முடைய பெயர் விளங்கக் கெம்பீரிக்கும்.
13 உமக்கு வல்லமையுள்ள கை இருக்கிறது;
உம்முடைய கை பராக்கிரமமுள்ளது;
உம்முடைய வலதுகை உன்னதமானது.
14 நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்;
கிருபையும் சத்தியமும் உமக்கு முன்பாக நடக்கும்.
15 கெம்பீரசத்தத்தை அறியும் மக்கள் பாக்கியமுள்ளவர்கள்;
யெகோவாவே, அவர்கள் உம்முடைய முகத்தின் வெளிச்சத்தில் நடப்பார்கள்.
16 அவர்கள் உம்முடைய பெயரில் நாள்தோறும் சந்தோஷப்பட்டு,
உம்முடைய நீதியால் உயர்ந்திருப்பார்கள்.
17 நீரே அவர்களுடைய பலத்தின் மகிமையாக இருக்கிறீர்;
உம்முடைய தயவினால் எங்களுடைய கொம்பு உயரும்.
18 யெகோவாவால் எங்களுடைய கேடகமும்,
இஸ்ரவேலின் பரிசுத்தரால் எங்களுடைய ராஜாவும் உண்டு.
19 அப்பொழுது நீர் உம்முடைய பக்தனுக்குத் தரிசனமாகி:
உதவிசெய்யக்கூடிய சக்தியை ஒரு வல்லமையுள்ளவன்மேல் வைத்து,
மக்களில் தெரிந்துகொள்ளப்பட்டவனை உயர்த்தினேன்.
20 என்னுடைய ஊழியனாகிய தாவீதைக் கண்டுபிடித்தேன்;
என்னுடைய பரிசுத்த தைலத்தினால் அவனை அபிஷேகம் செய்தேன்.
21 என்னுடைய கை அவனோடு உறுதியாக இருக்கும்;
என்னுடைய கை அவனைப் பலப்படுத்தும்.
22 எதிரி அவனை நெருக்குவதில்லை;
துன்மார்க்கமான மகன் அவனை ஒடுக்குவதில்லை.
23 அவனுடைய எதிரிகளை அவனுக்கு முன்பாக நொறுக்கி,
அவனைப் பகைக்கிறவர்களை வெட்டுவேன்.
24 என்னுடைய உண்மையும் என்னுடைய கிருபையும் அவனோடு இருக்கும்;
என்னுடைய பெயரினால் அவன் கொம்பு உயரும்.
25 அவனுடைய கையை மத்திய தரைக் கடலின்மேலும்,
அவனுடைய வலது கையை ஆறுகள்மேலும் ஆளும்படி வைப்பேன்.
26 அவன் என்னை நோக்கி:
நீர் என்னுடைய பிதா, என் தேவன், என்னுடைய இரட்சிப்பின் கன்மலையென்று சொல்லுவான்.
27 நான் அவனை எனக்கு முதலில் பிறந்தவனும்,
பூமியின் ராஜாக்களைவிட மகா உயர்ந்தவனுமாக்குவேன்.
28 என்னுடைய கிருபையை என்றென்றைக்கும் அவனுக்காகக் காப்பேன்;
என்னுடைய உடன்படிக்கை அவனுக்காக உறுதிப்படுத்தப்படும்.
29 அவன் சந்ததி என்றென்றைக்கும் நிலைத்திருக்கவும்,
அவன் ராஜாசனம் வானங்களுள்ளவரை நிலைநிற்கவும் செய்வேன்.
30 அவனுடைய பிள்ளைகள் என்னுடைய நியாயங்களின்படி நடக்காமல்,
என்னுடைய வேதத்தை விட்டு விலகி;
31 என்னுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாமல் என்னுடைய நியமங்களை மீறி நடந்தால்;
32 அவர்களுடைய மீறுதலை சாட்டையினாலும்,
அவர்களுடைய அக்கிரமத்தை வாதைகளினாலும் தண்டிப்பேன்.
33 ஆனாலும் என்னுடைய கிருபையை அவனை விட்டு விலக்காமலும்,
என்னுடைய உண்மையில் மீறாமலும் இருப்பேன்.
34 என்னுடைய உடன்படிக்கையை மீறாமலும்,
என்னுடைய உதடுகள் சொன்னதை மாற்றாமலும் இருப்பேன்.
35 ஒருமுறை என்னுடைய பரிசுத்தத்தின்பேரில் ஆணையிட்டேன்,
தாவீதிற்கு நான் பொய்சொல்லமாட்டேன்.
36 அவனுடைய சந்ததி என்றென்றைக்கும் இருக்கும்;
அவனுடைய சிங்காசனம் சூரியனைப்போல எனக்கு முன்பாக நிலைநிற்கும்.
37 சந்திரனைப்போல அது என்றென்றைக்கும் உறுதியாயும்,
வானத்துச் சாட்சியைப்போல் உண்மையாயும் இருக்கும் என்று சொன்னீர். (சேலா)
38 ஆனாலும் நீர் எங்களை வெறுத்துத் தள்ளிவிட்டீர்;
நீர் அபிஷேகம் செய்துவைத்தவன்மேல் கடுங்கோபமானீர்.
39 உமது அடியானுடன் நீர் செய்த உடன்படிக்கையை ஒழித்துவிட்டு,
அவனுடைய கிரீடத்தைத் தரையிலே தள்ளி அவமானப்படுத்தினீர்.
40 அவனுடைய மதில்களையெல்லாம் தகர்த்துப்போட்டு,
அவனுடைய பாதுகாப்பான இடங்களைப் பாழாக்கினீர்.
41 வழிநடக்கிற அனைவரும் அவனைக் கொள்ளையிடுகிறார்கள்;
தன்னுடைய அயலாருக்கு நிந்தையானான்.
42 அவனுடைய எதிரிகளின் வலது கையை நீர் உயர்த்தி,
அவனுடைய விரோதிகள் அனைவரும் சந்தோஷிக்கும்படி செய்தீர்.
43 அவனுடைய வாளின் கூர்மையை மழுங்கச்செய்து,
அவனை யுத்தத்தில் நிற்காதபடி செய்தீர்.
44 அவனுடைய மகிமையை இல்லாமல்போகச்செய்து,
அவனுடைய சிங்காசனத்தைத் தரையிலே தள்ளினீர்.
45 அவனுடைய வாலிபநாட்களைக் குறுக்கி,
அவனை வெட்கத்தால் மூடினீர். (சேலா)
46 எதுவரைக்கும், யெகோவாவே! நீர் என்றைக்கும் மறைந்திருப்பீரோ?
உமது கோபம் அக்கினியைப்போல எரியுமோ?
47 என்னுடைய உயிர் எவ்வளவு நிலையற்றது என்பதை நினைத்தருளும்;
மனிதர்கள் அனைவரையும் வீணாக படைக்கவேண்டியதென்ன?
48 மரணத்தைக் காணாமல் உயிரோடு இருப்பவன் யார்?
தன்னுடைய ஆத்துமாவைப் பாதாள வல்லமைக்கு விலக்கிவிடுகிறவன் யார்? (சேலா)
49 ஆண்டவரே, நீர் தாவீதிற்கு உம்முடைய உண்மையைக்கொண்டு
சத்தியம்செய்த உமது ஆரம்பநாட்களின் கிருபைகள் எங்கே?
50 ஆண்டவரே, உம்முடைய எதிரிகள் உம்முடைய ஊழியக்காரர்களையும்,
நீர் அபிஷேகம் செய்தவனின் காலடிகளையும் நிந்திக்கிறபடியினால்,
51 யெகோவாவே, உமது அடியார் சுமக்கும் நிந்தையையும்,
வலுமையான மக்கள் எல்லோராலும் நான் என்னுடைய மடியில் சுமக்கும்
என்னுடைய நிந்தையையும் நினைத்தருளும்.
52 யெகோவாவுக்கு என்றென்றைக்கும் நன்றி உண்டாகட்டும்.
ஆமென். ஆமென்.
Chapter 90
சங்கீதம் 90
தேவனுடைய மனிதனாகிய மோசேயின் ஜெபம்.1 ஆண்டவரே, தேவனே நீர் தலைமுறை தலைமுறையாக
எங்களுக்கு அடைக்கலமானவர்.
2 மலைகள் தோன்றுமுன்பும்,
நீர் பூமியையும், உலகத்தையும் உருவாக்குமுன்னும்,
நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாக இருக்கிறீர்.
3 நீர் மனிதர்களைத் தூளாக்கி,
மனித சந்ததிகளை, திரும்புங்கள் என்கிறீர்.
4 உமது பார்வைக்கு ஆயிரம் வருடங்கள்
நேற்றுக்கழிந்த நாள்போலவும் இரவுவேளைபோலவும் இருக்கிறது.
5 அவர்களை வெள்ளம்போல் அடித்துக்கொண்டு போகிறீர்;
தூக்கத்திற்கு ஒப்பாக இருக்கிறார்கள்;
காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாக இருக்கிறார்கள்.
6 அது காலையிலே முளைத்துப் பூத்து,
மாலையிலே அறுக்கப்பட்டு உலர்ந்துபோகும்.
7 நாங்கள் உமது கோபத்தினால் அழிந்து
உமது கடுங்கோபத்தினால் கலங்கிப்போகிறோம்.
8 எங்களுடைய அக்கிரமங்களை உமக்கு முன்பாகவும்,
எங்களுடைய மறைவான பாவங்களை உமது முகத்தின் வெளிச்சத்திலும் நிறுத்தினீர்.
9 எங்களுடைய நாட்களெல்லாம் உமது கோபத்தால் போய்விட்டது;
ஒரு கதையைப்போல் எங்கள் வருடங்களைக் கழித்துப்போட்டோம்.
10 எங்களுடைய ஆயுள் நாட்கள் எழுபது வருடங்கள்,
பெலத்தின் மிகுதியால் எண்பது வருடங்களாக இருந்தாலும்,
அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே;
அது சீக்கரமாகக் கடந்து போகிறது. நாங்களும் பறந்துபோகிறோம்.
11 உமது கோபத்தின் வல்லமையையும்,
உமக்குப் பயப்படக்கூடிய விதமாக உமது கடுங்கோபத்தையும் அறிந்துகொள்கிறவன் யார்?
12 நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி,
எங்களுடைய நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்.
13 யெகோவாவே, திரும்பிவாரும், எதுவரைக்கும் கோபமாக இருப்பீர்?
உமது அடியார்களுக்காகப் பரிதபியும்.
14 நாங்கள் எங்களுடைய வாழ்நாட்களெல்லாம் சந்தோஷித்து மகிழும்படி,
காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்.
15 தேவனே நீர் எங்களை சிறுமைப்படுத்திய நாட்களுக்கும்,
நாங்கள் துன்பத்தைக் கண்ட வருடங்களுக்கும் இணையாக எங்களை மகிழ்ச்சியாக்கும்.
16 உமது செயல்கள் உமது ஊழியக்காரர்களுக்கும்,
உமது மகிமை அவர்களுடைய பிள்ளைகளுக்கும் விளங்குவதாக.
17 எங்களுடைய தேவனாகிய ஆண்டவரின் பிரியம் எங்கள்மேல் இருப்பதாக;
எங்களுடைய கைகளின் செயல்களை எங்களிடத்தில் உறுதிப்படுத்தும்;
ஆம், எங்களுடைய கைகளின் செயல்களை எங்களிடத்தில் உறுதிப்படுத்தியருளும்.
Chapter 91
சங்கீதம் 91
1 உன்னதமான தேவனுடைய மறைவில் இருக்கிறவன்
சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்.
2 நான் யெகோவாவை நோக்கி:
நீர் என்னுடைய அடைக்கலம்,
என்னுடைய கோட்டை, என் தேவன்,
நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்.
3 அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும்,
பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவிப்பார்.
4 அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்;
அவர் இறக்கைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்;
அவருடைய சத்தியம் உனக்கு பெரிய கவசமும், கேடகமுமாகும்.
5 இரவில் உண்டாகும் பயங்கரத்திற்கும், பகலில் பறக்கும் அம்பிற்கும்,
6 இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்,
மத்தியானத்தில் பாழாக்கும் வியாதிகளுக்கும் பயப்படாமல் இருப்பாய்.
7 உன்னுடைய பக்கத்தில் ஆயிரம்பேரும்,
உன்னுடைய வலதுபுறத்தில் பத்தாயிரம்பேரும் விழுந்தாலும்,
அது உன்னை அணுகாது.
8 உன் கண்களால்மட்டும் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கர்களுக்கு வரும் பலனைக் காண்பாய்.
9 எனக்கு அடைக்கலமாக இருக்கிற உன்னதமான தேவனாகிய யெகோவாவை
உனக்கு அடைக்கலமாகக் கொண்டாய்.
10 ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது,
வாதை உன்னுடைய கூடாரத்தை அணுகாது.
11 உன்னுடைய வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி,
உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.
12 உன்னுடைய பாதம் கல்லில் இடறாதபடிக்கு
அவர்கள் உன்னைத் தங்களுடைய கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள்.
13 சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து,
பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய்.
14 அவன் என்னிடத்தில் வாஞ்சையாக இருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்;
என்னுடைய பெயரை அவன் அறிந்திருக்கிறபடியால்
அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்.
15 அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான்,
நான் அவனுக்கு மறுஉத்திரவு அருளிச்செய்வேன்;
ஆபத்தில் நானே அவனோடு இருந்து, அவனைத் தப்புவித்து,
அவனைக் கனப்படுத்துவேன்.
16 நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி,
என்னுடைய இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.
Chapter 92
சங்கீதம் 92
ஓய்வுநாளின் பாடல்.1 யெகோவாவை துதிப்பதும், உன்னதமான தேவனே,
உமது நாமத்தைப் புகழ்ந்து பாடுவதும்,
2 பத்துநரம்பு வீணையினாலும், தம்புருவினாலும்,
தியானத்தோடு வாசிக்கும் சுரமண்டலத்தினாலும்,
3 காலையிலே உமது கிருபையையும்,
இரவிலே உமது சத்தியத்தையும் அறிவிப்பதும் நலமாக இருக்கும்.
4 யெகோவாவே, உமது செயல்களால் என்னை மகிழ்ச்சியாக்கினீர்,
உமது கரத்தின் செயல்களுக்காக ஆனந்த சத்தமிடுவேன்.
5 யெகோவாவே, உமது செயல்கள் எவ்வளவு மகத்துவமானவைகள்!
உமது யோசனைகள் மகா ஆழமானவைகள்.
6 மிருககுணமுள்ள மனிதன் அதை அறியமாட்டான்;
மூடன் அதை உணரமாட்டான்.
7 துன்மார்க்கர்கள் புல்லைப்போலே தழைத்து,
அக்கிரமக்காரர்கள் அனைவரும் செழிக்கும்போது,
அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும்.
8 யெகோவாவே, நீர் என்றென்றைக்கும் உன்னதமானவராக இருக்கிறீர்.
9 யெகோவாவே, உமது எதிரிகள் அழிவார்கள்;
உமது எதிரிகள் அழிந்தேபோவார்கள்; எல்லா அக்கிரமக்காரர்களும் சிதறப்பட்டுபோவார்கள்.
10 என்னுடைய கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர்;
புது எண்ணெயால் அபிஷேகம் செய்யப்படுகிறேன்.
11 என்னுடைய எதிரிகளுக்கு நேரிடுவதை என்னுடைய கண் காணும்;
எனக்கு விரோதமாக எழும்புகிற துன்மார்க்கர்களுக்கு
நேரிடுவதை என்னுடைய காது கேட்கும்.
12 நீதிமான் பனையைப்போல் செழித்து,
லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.
13 யெகோவாவுடைய ஆலயத்திலே நடப்பட்டவர்கள்
எங்களுடைய தேவனுடைய முற்றங்களில் செழித்திருப்பார்கள்.
14 யெகோவா உத்தமரென்றும்,
என்னுடைய கன்மலையாகிய அவரிடத்தில்
அநீதியில்லையென்றும், விளங்கச்செய்யும்படி,
15 அவர்கள் முதிர்வயதிலும் கனிதந்து,
புஷ்டியும் பசுமையுமாக இருப்பார்கள்.
Chapter 93
சங்கீதம் 93
1 யெகோவா ஆளுகை செய்கிறார்,
மாட்சிமையை அணிந்துகொண்டிருக்கிறார்; யெகோவா வல்லமையை அணிந்து,
அவர் அதை வார்க்கச்சையாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்;
ஆதலால் உலகம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது.
2 உமது சிங்காசனம் ஆரம்பம்முதல் உறுதியானது;
நீர் என்றென்றும் இருக்கிறீர்.
3 யெகோவாவே, நதிகள் எழும்பின;
நதிகள் இரைச்சலிட்டு எழும்பின;
நதிகள் அலைதிரண்டு எழும்பின.
4 திரளான தண்ணீர்களின் இரைச்சலைவிட,
கடலின் வலிமையான அலைகளைவிட, யெகோவா உன்னதத்திலே வல்லமையுள்ளவர்.
5 உமது சாட்சிகள் மிகவும் உண்மையுள்ளவைகள்;
யெகோவாவே, பரிசுத்தமானது நிரந்தர நாளாக
உமது ஆலயத்தின் அலங்காரமாக இருக்கிறது.
Chapter 94
சங்கீதம் 94
1 நீதியைச் சரிக்கட்டுகிற தேவனாகிய யெகோவாவே,
நீதியைச் சரிக்கட்டுகிற தேவனே, பிரகாசியும்.
2 பூமியின் நியாயாதிபதியே,
நீர் எழுந்து, பெருமைக்காரர்களுக்குப் பதிலளியும்.
3 யெகோவாவே, துன்மார்க்கர்கள் எதுவரைக்கும் மகிழ்ந்து,
எதுவரைக்கும் சந்தோஷமாக இருப்பார்கள்?
4 எதுவரைக்கும் அக்கிரமக்காரர்கள் அனைவரும் வாயாடி,
கடினமாகப் பேசி, பெருமைபாராட்டுவார்கள்?
5 யெகோவாவே, அவர்கள் உமது மக்களை நொறுக்கி,
உமது சுதந்தரத்தை ஒடுக்குகிறார்கள்.
6 விதவையையும் அந்நியனையும் கொன்று,
திக்கற்ற பிள்ளைகளைக் கொலைசெய்து:
7 யெகோவா பார்க்கமாட்டார்,
யாக்கோபின் தேவன் கவனிக்கமாட்டார் என்று சொல்லுகிறார்கள்.
8 மக்களில் மிருககுணமுள்ளவர்களே, உணர்வடையுங்கள்;
மூடர்களே, எப்பொழுது புத்திமான்களாவீர்கள்?
9 காதை உண்டாக்கினவர் கேட்கமாட்டாரோ?
கண்ணை உருவாக்கினவர் காணமாட்டாரோ?
10 தேசங்களைத் தண்டிக்கிறவர் கடிந்துகொள்ளமாட்டாரோ?
மனிதனுக்கு அறிவைப் போதிக்கிறவர் அறியமாட்டாரோ?
11 மனிதனுடைய யோசனைகள் வீணென்று யெகோவா அறிந்திருக்கிறார்.
12 யெகோவாவே, துன்மார்க்கனுக்குக் குழிவெட்டப்படும்வரைக்கும்,
நீர் தீங்கு நாட்களில் அமர்ந்திருக்கச்செய்து,
13 தண்டித்து, உம்முடைய வேதத்தைக்கொண்டு
போதிக்கிற மனிதன் பாக்கியவான்.
14 யெகோவா தம்முடைய மக்களைத் தள்ளிவிடாமலும்,
தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருப்பார்.
15 நியாயம் நீதியினிடமாகத் திரும்பும்;
செம்மையான இருதயத்தார்கள் அனைவரும் அதைப் பின்பற்றுவார்கள்.
16 துன்மார்க்கர்களுக்கு விரோதமாக
எனது சார்பாக எழும்புகிறவன் யார்?
அக்கிரமக்காரர்களுக்கு விரோதமாக எனது சார்பாக நிற்பவன் யார்?
17 யெகோவா எனக்குத் துணையாக இல்லாவிட்டால்,
என்னுடைய ஆத்துமா சீக்கிரமாக மவுனத்தில் தங்கியிருக்கும்.
18 என்னுடைய கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது,
யெகோவாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது.
19 என்னுடைய உள்ளத்தில் கவலைகள் பெருகும்போது,
உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது.
20 தீமையைக் கட்டளையினால் பிறப்பிக்கிற துன்மார்க்கனுடைய ஆட்சி உம்மோடு இசைந்திருக்குமோ?
21 அவர்கள் நீதிமானுடைய ஆத்துமாவுக்கு விரோதமாகக் கூட்டங்கூடி,
குற்றமில்லாத இரத்தத்தைக் குற்றப்படுத்துகிறார்கள்.
22 யெகோவாவோ எனக்கு அடைக்கலமும்,
என் தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையுமாக இருக்கிறார்.
23 அவர்களுடைய அக்கிரமத்தை அவர்கள்மேல் திருப்பி,
அவர்களுடைய பொல்லாப்பினால் அவர்களை அழிப்பார்;
நம்முடைய தேவனாகிய யெகோவாவே அவர்களை அழிப்பார்.
Chapter 95
சங்கீதம் 95
1 யெகோவாவைக் கெம்பீரமாகப் பாடி,
நம்முடைய இரட்சணியக் கன்மலையைப் புகழ்ந்து பாடக்கடவோம் வாருங்கள்.
2 துதித்தலுடனே அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து,
பாடல்களால் அவரை ஆர்ப்பரித்துப் பாடுவோம்.
3 யெகோவாவே மகா தேவனும், எல்லா தெய்வங்களுக்கும் மகாராஜனுமாக இருக்கிறார்.
4 பூமியின் ஆழங்கள் அவருடைய கையில் இருக்கிறது;
மலைகளின் உயரங்களும் அவருடையவைகள்.
5 கடல் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்;
காய்ந்த தரையையும் அவருடைய கரம் உருவாக்கினது.
6 நம்மை உண்டாக்கின யெகோவாவுக்கு முன்பாக
நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடுவோம் வாருங்கள்.
7 அவர் நம்முடைய தேவன்;
நாம் அவர் மேய்ச்சலின் மக்களும்,
அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே.
8 இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களென்றால்,
வனாந்திரத்தில் கோபம் மூட்டினபோதும் சோதனை நாளிலும் நடந்ததுபோல,
உங்களுடைய இருதயத்தைக் கடினப்படுத்தாமலிருங்கள்.
9 அங்கே உங்களுடைய முற்பிதாக்கள் என்னைச் சோதித்து,
என்னைப் பரீட்சை பார்த்து, என்னுடைய செயல்களையும் கண்டார்கள்.
10 நாற்பது வருடங்களாக நான் அந்தச் சந்ததியின்மேல் கோபமாக இருந்து,
அவர்கள் வழுவிப்போகிற இருதயமுள்ள மக்களென்றும்,
என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி,
11 என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் நுழைவதில்லையென்று,
என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன்.
Chapter 96
சங்கீதம் 96
1 யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்;
பூமியின் குடிகளே, எல்லோரும் யெகோவாவைப் பாடுங்கள்.
2 யெகோவாவைப் பாடி, அவருடைய பெயருக்கு நன்றி சொல்லி,
நாளுக்குநாள் அவருடைய இரட்சிப்பைச் சுவிசேஷமாக அறிவியுங்கள்.
3 தேசங்களுக்குள் அவருடைய மகிமையையும்,
எல்லா மக்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள்.
4 யெகோவா பெரியவரும், மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாக இருக்கிறார்;
எல்லா தெய்வங்களிலும் பயப்படத்தக்கவர் அவரே.
5 எல்லா மக்களுடைய தெய்வங்களும் விக்கிரகங்கள்தானே;
யெகோவாவோவானங்களை உண்டாக்கினவர்.
6 மகிமையும், மேன்மையும் அவர் சமுகத்தில் இருக்கிறது,
வல்லமையும் மகத்துவமும் அவர் பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது.
7 மக்களின் வம்சங்களே,
யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்,
கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.
8 யெகோவாவுக்கு அவருடைய பெயருக்குரிய மகிமையைச் செலுத்தி,
காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய முற்றங்களில் நுழையுங்கள்.
9 பரிசுத்த அலங்காரத்துடனே யெகோவாவை தொழுதுகொள்ளுங்கள்;
பூமியில் உள்ளவர்களே,
நீங்கள் அனைவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்.
10 யெகோவா ராஜரிகம்செய்கிறார்,
ஆகையால் உலகம் அசையாதபடி உறுதிப்பட்டிருக்கும்.
அவர் மக்களை நிதானமாக நியாயந்தீர்ப்பார் என்று தேசங்களுக்குள்ளே சொல்லுங்கள்.
11 வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பாகி,
கடலும் அதின் நிறைவும் முழங்குவதாக.
12 நாடும் அதிலுள்ள அனைத்தும் மகிழ்வதாக;
அப்பொழுது யெகோவாவுக்கு முன்பாக காட்டுமரங்களெல்லாம் கெம்பீரிக்கும்.
13 அவர் வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்;
அவர் உலகத்தை நீதியோடும்,
மக்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார்.
Chapter 97
சங்கீதம் 97
1 யெகோவா ராஜரிகம்செய்கிறார்; பூமி பூரிப்பாகி,
திரளான தீவுகள் மகிழட்டும்.
2 மேகமும் மந்தாரமும் அவரைச் சூழ்ந்திருக்கிறது;
நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம்.
3 நெருப்பு அவருக்கு முன்சென்று,
சுற்றிலும் இருக்கிற அவருடைய எதிரிகளைச் சுட்டெரிக்கிறது.
4 அவருடைய மின்னல்கள் பூமியைப் பிரகாசிப்பித்தது;
பூமி அதைக்கண்டு அதிர்ந்தது.
5 யெகோவாவின் பிரசன்னத்தினால் மலைகள் மெழுகுபோல உருகினது,
சர்வ பூமியினுடைய ஆண்டவரின் பிரசன்னத்தினாலேயே உருகிப்போனது.
6 வானங்கள் அவருடைய நீதியை வெளிப்படுத்துகிறது;
எல்லா மக்களும் அவருடைய மகிமையைக் காண்கிறார்கள்.
7 சிலைகளை வணங்கி,
விக்கிரகங்களைப்பற்றிப் பெருமைபாராட்டுகிற அனைவரும் வெட்கப்பட்டுப் போவார்களாக;
தெய்வங்களே, நீங்களெல்லோரும் அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
8 சீயோன் கேட்டு மகிழ்ந்தது; யெகோவாவே,
உம்முடைய நியாயத்தீர்ப்புகளினால் யூதாவின் மகள்கள் சந்தோஷப்பட்டார்கள்.
9 யெகோவாவே, பூமி அனைத்திற்கும்
நீர் உன்னதமான தேவன்; எல்லா தெய்வங்களிலும் நீரே மிகவும் உயர்ந்தவர்.
10 யெகோவாவில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்;
அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி,
துன்மார்க்கர்களின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார்.
11 நீதிமானுக்காக வெளிச்சமும்,
செம்மையான இருதயமுள்ளவர்களுக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது.
12 நீதிமான்களே, யெகோவாவுக்குள் மகிழ்ந்து,
அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள்.
Chapter 98
சங்கீதம் 98
பாடல்.1 யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்;
அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார்;
அவருடைய வலது கரமும்,
அவருடைய பரிசுத்த கரமும், வெற்றியை உண்டாக்கினது.
2 யெகோவா தமது இரட்சிப்பை வெளிப்படுத்தி,
தமது நீதியை தேசங்களுடைய கண்களுக்கு முன்பாக விளங்கச்செய்தார்.
3 அவர் இஸ்ரவேல் குடும்பத்துக்காகத் தமது கிருபையையும் உண்மையையும் நினைவுகூர்ந்தார்;
பூமியின் எல்லைகளெல்லாம் நமது தேவனுடைய வெற்றியைக் கண்டது.
4 பூமியில் உள்ளவர்களே, நீங்களெல்லோரும்
யெகோவாவை நோக்கி ஆனந்தமாக ஆர்ப்பரியுங்கள்; முழக்கமிட்டுக் கெம்பீரமாகப் பாடுங்கள்.
5 சுரமண்டலத்தால் யெகோவாவைப் புகழ்ந்துபாடுங்கள்,
சுரமண்டலத்தாலும் பாடலின் சத்தத்தாலும் அவரைப் புகழ்ந்துபாடுங்கள்.
6 யெகோவாவாகிய ராஜாவின் சமுகத்தில் பூரிகைகளாலும்
எக்காள சத்தத்தாலும் ஆனந்தமாக ஆர்ப்பரியுங்கள்.
7 கடலும் அதின் நிறைவும், பூமியும் அதில் உள்ளவர்களும் முழங்குவதாக.
8 யெகோவாவுக்கு முன்பாக ஆறுகள் கைதட்டி,
மலைகள் ஒன்றாக கெம்பீரித்துப் பாடட்டும்.
9 அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்;
உலகத்தை நீதியோடும்
மக்களை நிதானத்தோடும் நியாயந்தீர்ப்பார்.
Chapter 99
சங்கீதம் 99
1 யெகோவா ராஜரிகம்செய்கிறார்,
மக்கள் தத்தளிப்பார்களாக;
அவர் கேருபீன்களின் மத்தியில் அமர்ந்திருக்கிறார்,
பூமி அசைவதாக.
2 யெகோவா சீயோனில் பெரியவர்,
அவர் எல்லா மக்கள்மேலும் உயர்ந்தவர்.
3 மகத்துவமும் பயங்கரமுமான உமது பெயரை அவர்கள் துதிப்பார்களாக;
அது பரிசுத்தமுள்ளது.
4 ராஜாவின் வல்லமை நீதியில் பிரியப்படுகிறது,
தேவனே நீர் நியாயத்தை நிலைநிறுத்துகிறீர்;
நீர் யாக்கோபில் நியாயமும் நீதியும் செய்கிறீர்.
5 நம்முடைய தேவனாகிய யெகோவாவை உயர்த்தி,
அவர் பாதத்தைப் பணியுங்கள்;
அவர் பரிசுத்தமுள்ளவர்.
6 அவருடைய ஆசாரியர்களில் மோசேயும் ஆரோனும்,
அவர் பெயரைப்பற்றிக் கூப்பிடுகிறவர்களில் சாமுவேலும்,
யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்;
அவர் அவர்களுக்கு மறுஉத்திரவு அருளினார்.
7 மேகத்தூணிலிருந்து அவர்களோடு பேசினார்;
அவர்கள் அவருடைய சாட்சிப்பிரமாணங்களையும்
அவர் தங்களுக்குக் கொடுத்த கட்டளையையும் கைக்கொண்டார்கள்.
8 எங்களுடைய தேவனாகிய யெகோவாவே,
நீர் அவர்களுக்கு உத்திரவு கொடுத்தீர்;
நீர் அவர்கள் செயல்களுக்காக நீதி சரிக்கட்டினபோதிலும்,
அவர்களுக்கு மன்னிக்கிற தேவனாக இருந்தீர்.
9 நம்முடைய தேவனாகிய யெகோவாவை உயர்த்தி,
அவருடைய பரிசுத்த மலைக்கு நேராகப் பணியுங்கள்;
நம்முடைய தேவனாகிய யெகோவா பரிசுத்தமுள்ளவர்.
Chapter 100
சங்கீதம் 100
நன்றிப்பாடல்.1 பூமியில் உள்ளவர்களே, எல்லோரும் யெகோவாவைக் கெம்பீரமாகப் பாடுங்கள்.
2 மகிழ்ச்சியோடு யெகோவாவுக்கு ஆராதனைசெய்து,
ஆனந்தசத்தத்தோடு அவர் முன்பாக வாருங்கள்.
3 யெகோவாவே தேவனென்று அறியுங்கள்;
நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்;
நாம் அவர் மக்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாக இருக்கிறோம்.
4 அவர் வாசல்களில் துதியோடும், அவர் முற்றங்களில் புகழ்ச்சியோடும் நுழைந்து, அவரைத் துதித்து,
அவருடைய பெயருக்கு நன்றிசெலுத்துங்கள்.
5 யெகோவா நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும்,
அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.
Chapter 101
சங்கீதம் 101
தாவீதின் பாடல்.1 இரக்கத்தையும், நியாயத்தையும் குறித்துப் பாடுவேன்;
யெகோவாவே, உம்மை புகழ்ந்துபாடுவேன்.
2 உத்தமமான வழியிலே நேர்மையாக நடப்பேன்;
எப்பொழுது என்னிடத்தில் வருவீர்!
என்னுடைய வீட்டிலே உத்தம இருதயத்தோடு நடந்துகொள்ளுவேன்.
3 தீங்கான காரியத்தை என்னுடைய கண்முன் வைக்கமாட்டேன்;
வழி விலகுகிறவர்களின் செயல்களை வெறுக்கிறேன்;
அது என்னைப் பற்றாது.
4 மாறுபாடான மக்கள் என்னைவிட்டு விலகவேண்டும்;
பொல்லாதவனை ஏற்கமாட்டேன்.
5 பிறனை இரகசியமாக அவதூறுசெய்கிறவனை அழிப்பேன்;
பெருமைக் கண்ணனையும் திமிர்பிடித்த மனப்பான்மை உள்ளவனையும் பொறுக்கமாட்டேன்.
6 தேசத்தில் உண்மையானவர்கள் என்னோடு குடியிருக்கும்படி என்னுடைய கண்கள் அவர்கள்மேல் நோக்கமாக இருக்கும்;
உத்தமமான வழியில் நடக்கிறவன் எனக்கு ஊழியம்செய்வான்.
7 கபடுசெய்கிறவன் என்னுடைய வீட்டுக்குள் இருப்பதில்லை;
பொய்சொல்லுகிறவன் என்னுடைய கண்முன் நிலைப்பதில்லை.
8 அக்கிரமக்காரர்கள் ஒருவரும் யெகோவாவுடைய நகரத்தில் இல்லாதபடி வேர் அறுக்கப்பட்டுபோக,
தேசத்திலுள்ள அக்கிரமக்காரர்கள் அனைவரையும் அதிகாலமே அழிப்பேன்.
Chapter 102
சங்கீதம் 102
துயரப்படுகிறவன் துக்கத்தில் மூழ்கி யெகோவாவிடத்தில் தன் மனவேதனையை தெரியப்படுத்தும் விண்ணப்பம்.1 யெகோவாவே, என்னுடைய விண்ணப்பத்தைக் கேளும்;
என்னுடைய ஜெபம் உம்மிடத்தில் சேர்வதாக.
2 என்னுடைய ஆபத்துநாளிலே உமது முகத்தை எனக்கு மறைக்காமல் இரும்;
உமது செவியை என்னிடத்தில் சாயும்;
நான் கூப்பிடுகிற நாளிலே எனக்கு விரைவாக பதில் சொல்லும்.
3 என்னுடைய நாட்கள் புகையைப்போல் ஒழிந்தது;
என்னுடைய எலும்புகள் ஒரு கொள்ளியைப்போல் எரிந்தது.
4 என்னுடைய இருதயம் புல்லைப்போல் வெட்டப்பட்டு உலர்ந்தது;
என்னுடைய ஆகாரத்தைச் சாப்பிட மறந்தேன்.
5 என்னுடைய பெருமூச்சின் சத்தத்தினால், என்னுடைய எலும்புகள் என்னுடைய சரீரத்தோடு ஒட்டிக்கொள்ளுகிறது.
6 வனாந்தர நாரைக்கு ஒப்பானேன்;
பாழான இடங்களில் தங்கும் ஆந்தையைப் போலானேன்.
7 நான் தூக்கம் இல்லாமல் வீட்டின்மேல் தனித்திருக்கும் குருவியைப்போல இருக்கிறேன்.
8 நாள்தோறும் என்னுடைய எதிரிகள் என்னை நிந்திக்கிறார்கள்;
என்மேல் மூர்க்கவெறிகொண்டவர்கள் எனக்கு விரோதமாகச் சாபம் இடுகிறார்கள்.
9 நீர் என்னை உயரத்தூக்கி, கீழேத் தள்ளினீர்,
உமது கோபத்திற்கும், கடுங்கோபத்திற்கும் உள்ளானேன்.
10 ஆதலால், நான் சாம்பலை அப்பமாகச் சாப்பிட்டு,
என்னுடைய பானங்களைக் கண்ணீரோடு கலக்கிறேன்.
11 என்னுடைய ஆயுசு நாட்கள் சாய்ந்துபோகிற நிழலைப்போலிருக்கிறது;
புல்லைப்போல் உலர்ந்துபோகிறேன்.
12 யெகோவாவாகிய நீரோ என்றென்றைக்கும் இருக்கிறீர்;
உம்முடைய பெயரின் புகழ் தலைமுறை தலைமுறையாக நிற்கும்.
13 தேவனே நீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர்;
அதற்கு தயவு செய்யும் காலமும், அதற்காகக் குறித்த நேரமும் வந்தது.
14 உம்முடைய ஊழியக்காரர்கள் அதின் கல்லுகள்மேல் வாஞ்சைவைத்து,
அதின் மண்ணுக்குப் பரிதபிக்கிறார்கள்.
15 யெகோவா சீயோனைக் கட்டி, தமது மகிமையில் வெளிப்படுவார்.
16 திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம்செய்யாமல்,
அவர்கள் விண்ணப்பத்தை அங்கீகரிப்பார்.
17 அப்பொழுது தேசங்கள் யெகோவாவுடைய பெயருக்கும்,
பூமியிலுள்ள ராஜாக்களெல்லோரும் உம்முடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்.
18 பின்சந்ததிக்காக இது எழுதப்படும்;
உருவாக்கப்படும் மக்கள் யெகோவாவை துதிப்பார்கள்.
19 யெகோவா கட்டுண்டவர்களின் பெருமூச்சைக் கேட்கவும்,
கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும்,
20 தம்முடைய உயர்ந்த பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பார்த்து,
வானங்களிலிருந்து பூமியின்மேல் கண்ணோக்கமானார்.
21 யெகோவாவுக்கு ஆராதனைசெய்ய, மக்களும் ராஜ்ஜியங்களும் ஒன்றாகக் கூடிக்கொள்ளும்போது,
22 சீயோனில் யெகோவாவுடைய பெயரையும்,
எருசலேமில் அவருடைய துதியையும் பறைசாற்றுவார்கள்.
23 பாதி வயதில் என்னுடைய பெலனை அவர் ஒடுக்கி,
என்னுடைய நாட்களைக் குறுகச்செய்தார்.
24 அப்பொழுது நான்: என் தேவனே, பாதி வயதில் என்னை எடுத்துக்கொள்ளாமல் இரும்;
உம்முடைய வருடங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்.
25 நீர் ஆரம்பத்திலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்;
வானங்கள் உம்முடைய கரத்தின் செயல்களாக இருக்கிறது.
26 அவைகள் அழிந்துபோகும், நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் ஆடையைப்போல் பழமையாகப்போகும்;
அவைகளை ஒரு சால்வையைப்போல் மாற்றுவீர், அப்பொழுது மாறிப்போகும்.
27 நீரோ மாறாதவராக இருக்கிறீர்;
உமது ஆண்டுகள் முடிந்துபோவதில்லை.
28 உமது அடியாரின் பிள்ளைகள் வாழ்ந்திருப்பார்கள்;
அவர்களுடைய சந்ததி உமக்கு முன்பாக நிலைபெற்றிருக்கும் என்று சொன்னேன்.
Chapter 103
சங்கீதம் 103
தாவீதின் பாடல்.1 என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று;
என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த பெயரைப் போற்று.
2 என் ஆத்துமாவே, யெகோவாவுக்கு நன்றிசொல்;
அவர் செய்த எல்லா நன்மைகளையும் மறவாதே.
3 அவர் உன்னுடைய அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து,
உன்னுடைய நோய்களையெல்லாம் குணமாக்கி,
4 உன்னுடைய உயிரை அழிவுக்கு விலக்கி மீட்டு,
உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி,
5 நன்மையினால் உன்னுடைய வாயைத் திருப்தியாக்குகிறார்;
கழுகுக்குச் சமமாக உன்னுடைய வயது திரும்ப இளவயது போலாகிறது.
6 ஒடுக்கப்படுகிற அனைவருக்கும், யெகோவா நீதியையும் நியாயத்தையும் செய்கிறார்.
7 அவர் தமது வழிகளை மோசேக்கும், தமது செயல்களை இஸ்ரவேல் சந்ததிக்கும் தெரியப்படுத்தினார்.
8 யெகோவா உருக்கமும், இரக்கமும்,
நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்.
9 அவர் எப்பொழுதும் கடிந்துகொள்வதில்லை;
என்றைக்கும் கோபமாக இருப்பதில்லை.
10 அவர் நம்முடைய பாவங்களுக்குத் தகுந்தபடி நமக்குச் செய்யாமலும்,
நம்முடைய அக்கிரமங்களுக்குத் தகுந்தபடி நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்.
11 பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாக இருக்கிறதோ,
அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாக இருக்கிறது.
12 மேற்கிற்கும் கிழக்கிற்கும் எவ்வளவு தூரமோ,
அவ்வளவு தூரமாக அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார்.
13 தகப்பன் தன்னுடைய பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல,
யெகோவா தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.
14 நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்;
நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.
15 மனிதனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாக இருக்கிறது;
வெளியின் பூவைப்போல் பூக்கிறான்.
16 காற்று அதின்மேல் வீசினவுடனே அது இல்லாமற்போனது;
அது இருந்த இடமும் இனி அதை அறியாது.
17 யெகோவாவுடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும்,
அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் ஆதிகாலம் முதற்கொண்டு என்றென்றைக்கும் உள்ளது.
18 அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொண்டு, அவருடைய கட்டளைகளின்படி செய்ய நினைக்கிறவர்கள் மேலேயே உள்ளது.
19 யெகோவா வானங்களில் தமது சிங்காசனத்தை நிறுவியிருக்கிறார்;
அவருடைய ராஜரிகம் எல்லாவற்றையும் ஆளுகிறது.
20 யெகோவாவுடைய வார்த்தையைக் கேட்டு,
அவருடைய வசனத்தின்படி செய்கிற
பலத்த வல்லமையுள்ளவர்களாகிய அவருடைய தூதர்களே,
அவரைத் துதியுங்கள்.
21 யெகோவாவுக்குப் பிரியமானதைச் செய்து,
அவர் பணிவிடைக்காரர்களாக இருக்கிற அவருடைய எல்லா சேனைகளே,
அவரைப் போற்றுங்கள்.
22 யெகோவா ஆளுகிற எல்லா இடங்களிலுமுள்ள அவருடைய எல்லா படைப்புகளே,
அவரைப் போற்றுங்கள்;
என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று.
Chapter 104
சங்கீதம் 104
1 என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று;
என் தேவனாகிய யெகோவாவே, நீர் மிகவும் பெரியவராக இருக்கிறீர்;
மகிமையையும் மகத்துவத்தையும் அணிந்துகொண்டிருக்கிறீர்.
2 ஒளியை ஆடையாக அணிந்து, வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிறீர்.
3 தமது மேல்வீடுகளைத் தண்ணீர்களால் மேல்தளமாக்கி,
மேகங்களைத் தமது இரதமாக்கி, காற்றினுடைய இறக்கைகளின்மேல் செல்லுகிறார்.
4 தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும்,
தம்முடைய ஊழியக்காரர்களை நெருப்பு ஜூவாலைகளாகவும் செய்கிறார்.
5 பூமி ஒருபோதும் நகர்த்த முடியாதபடி அதின் அஸ்திபாரங்கள்மேல் அதை நிறுவினார்.
6 அதை ஆடையினால் மூடுவதுபோல ஆழத்தினால் மூடினீர்;
மலைகளின்மேல் தண்ணீர்கள் நின்றது.
7 அவைகள் உமது கண்டிதத்தால் விலகியோடி,
உமது குமுறலின் சத்தத்தால் விரைந்துசென்றது.
8 அவைகள் மலைகளில் ஏறி, பள்ளத்தாக்குகளில் இறங்கி,
நீர் அவைகளுக்கு ஏற்படுத்தின இடத்தில் சென்றது.
9 அவைகள் திரும்பவும் வந்து பூமியை மூடிக்கொள்ளாதபடி
கடக்காமல் இருக்கும் எல்லையை அவைகளுக்கு ஏற்படுத்தினீர்.
10 அவர் பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகளை வரவிடுகிறார்;
அவைகள் மலைகள் நடுவே ஓடுகிறது.
11 அவைகள் வெளியின் உயிர்களுக்கெல்லாம் தண்ணீர் கொடுக்கும்;
அங்கே காட்டுக்கழுதைகள் தங்களுடைய தாகத்தைத் தீர்த்துக்கொள்ளும்.
12 அவைகளின் ஓரமாக வானத்துப் பறவைகள் குடியிருந்து,
கிளைகள் மேலிருந்து பாடும்.
13 தம்முடைய மேல்வீடுகளிலிருந்து மலைகளுக்குத் தண்ணீர் இறைக்கிறார்;
உமது செயல்களின் பயனால் பூமி திருப்தியாக இருக்கிறது.
14 பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்குப் புல்லையும்,
மனிதருக்கு உபயோகமான பயிர்வகைகளையும் முளைப்பிக்கிறார்.
15 மனிதனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சைரசத்தையும்,
அவனுக்கு முகக்களையை உண்டாக்கும் எண்ணெயையும்,
மனிதனுடைய இருதயத்தை ஆதரிக்கும் உணவையும் விளைவிக்கிறார்.
16 யெகோவாவுடைய மரங்களும்,
அவரால் நடப்பட்ட லீபனோனின் கேதுருக்களும் செழித்து நிறைந்திருக்கும்.
17 அங்கே குருவிகள் கூடுகட்டும்; தேவதாருமரங்கள் கொக்குகளின் குடியிருப்பு.
18 உயர்ந்த மலைகள் வரையாடுகளுக்கும், கன்மலைகள் குழிமுயல்களுக்கும் அடைக்கலம்.
19 சந்திரனைக் காலக்குறிப்புகளுக்காகப் படைத்தார்;
சூரியன் தன்னுடைய மறையும் நேரத்தை அறியும்.
20 நீர் இருளைக் கட்டளையிடுகிறீர், இரவுநேரமாகும்;
அதிலே எல்லா காட்டு உயிர்களும் நடமாடும்.
21 இளசிங்கங்கள் இரைக்காக கெர்ச்சித்து, தேவனால் தங்களுக்கு உணவு கிடைக்கும்படித்தேடும்.
22 சூரியன் உதிக்கும்போது அவைகள் ஒதுங்கி,
தங்களுடைய மறைவிடங்களில் படுத்துக்கொள்ளும்.
23 அப்பொழுது மனிதன் மாலைவரை தன்னுடைய வேலைக்கும்,
தன்னுடைய உழைப்புக்கும் புறப்படுகிறான்.
24 யெகோவாவே, உமது செயல்கள் எவ்வளவு திரளாக இருக்கிறது!
அவைகளையெல்லாம் ஞானமாகப் படைத்தீர்;
பூமி உம்முடைய பொருட்களினால் நிறைந்திருக்கிறது.
25 பெரிதும் அகலமுமான இந்த கடலும் அப்படியே நிறைந்திருக்கிறது;
அதிலே வாழும் சிறியவைகளும் பெரியவைகளுமான கணக்கில்லாத உயிர்கள் உண்டு.
26 அதிலே கப்பல்கள் ஓடும்;
அதிலே விளையாடும்படி நீர் உண்டாக்கின திமிங்கிலங்களும் உண்டு.
27 ஏற்றவேளையில் உணவைத் தருவீர் என்று அவைகளெல்லாம்
உம்மை நோக்கிக் காத்திருக்கும்.
28 நீர்கொடுக்க, அவைகள் வாங்கிக்கொள்ளும்;
நீர் உம்முடைய கையைத் திறக்க, அவைகள் நன்மையால் திருப்தியாகும்.
29 நீர் உமது முகத்தை மறைக்க, திகைக்கும்;
நீர் அவைகளின் சுவாசத்தை வாங்கிக்கொள்ள, அவைகள் இறந்து,
தங்களுடைய மண்ணுக்குத் திரும்பும்.
30 நீர் உம்முடைய ஆவியை அனுப்பும்போது, அவைகள் உருவாக்கப்படும்;
நீர் பூமி அனைத்தையும் புதிதாக்குகிறீர்.
31 யெகோவாவுடைய மகிமை என்றென்றைக்கும் விளங்கும்;
யெகோவா தம்முடைய செயல்களிலே மகிழுவார்.
32 அவர் பூமியை நோக்கிப்பார்க்க, அது அதிரும்;
அவர் மலைகளைத் தொட, அவைகள் புகையும்.
33 நான் உயிரோடிருக்கும்வரை என்னுடைய யெகோவாவைப் பாடுவேன்;
நான் உயிரோடிருக்கும்வரையும் என் தேவனைப் புகழ்ந்து பாடுவேன்.
34 நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாக இருக்கும்;
நான் யெகோவாவுக்குள் மகிழுவேன்.
35 பாவிகள் பூமியிலிருந்து மறைந்து,
துன்மார்க்கர்கள் இனி இல்லாமற்போவார்கள்.
என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று,
அல்லேலூயா.
Chapter 105
சங்கீதம் 105
1 யெகோவாவை துதித்து, அவருடைய பெயரை பிரபலமாக்குங்கள்,
அவருடைய செய்கைகளை தேசங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்.
2 அவரைப் பாடி, அவரைப் புகழுங்கள்;
அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.
3 அவருடைய பரிசுத்த பெயரைக் குறித்து மேன்மைபாராட்டுங்கள்;
யெகோவாவை தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக.
4 யெகோவாவையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்;
அவர் சமுகத்தைத் தொடர்ந்து தேடுங்கள்.
5 அவருடைய ஊழியனாகிய ஆபிரகாமின் சந்ததியே!
அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் மக்களே!
6 அவர் செய்த அதிசயங்களையும், அவருடைய அற்புதங்களையும்,
அவர் வாயிலிருந்து புறப்படும் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூருங்கள்.
7 அவரே நம்முடைய தேவனாகிய யெகோவா,
அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும்.
8 ஆயிரம் தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வார்த்தையும்,
ஆபிரகாமோடு அவர் செய்த உடன்படிக்கையையும்,
9 அவர் ஈசாக்குக்கு இட்ட ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருக்கிறார். 10 அதை யாக்கோபுக்குப் பிரமாணமாகவும்,
இஸ்ரவேலுக்கு நிரந்தர உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி:
11 உங்களுடைய சுதந்தரபாகமான கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார்.
12 அக்காலத்தில் அவர்கள் கொஞ்சத் தொகைக்குட்பட்ட சில மக்களுமாக இருந்தார்கள்.
13 அவர்கள் ஒரு தேசத்தைவிட்டு மறு தேசத்திற்கும்,
ஒரு ராஜ்ஜியத்தைவிட்டு மறுதேசத்திற்கும் போனார்கள்.
14 அவர்களை ஒடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடுக்காமல்,
அவர்களுக்காக ராஜாக்களைக் கடிந்துகொண்டு:
15 நான் அபிஷேகம்செய்தவர்களை நீங்கள் தொடாமலும்,
என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்கு செய்யாமலும் இருங்கள் என்றார்.
16 அவர் தேசத்திலே பஞ்சத்தை வரவழைத்து, உணவு என்னும் ஆதரவுகோலை முற்றிலும் முறித்தார்.
17 அவர்களுக்கு முன்னாலே ஒரு மனிதனை அனுப்பினார்;
யோசேப்பு சிறையாக விற்கப்பட்டான்.
18 அவனுடைய கால்களை விலங்குபோட்டு ஒடுக்கினார்கள்;
அவனுடைய உயிர் இரும்பில் அடைபட்டிருந்தது.
19 யெகோவா சொன்ன வார்த்தை நிறைவேறும்வரை
அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது.
20 ராஜா ஆள் அனுப்பி, அவனைக் கட்டவிழ்க்கச் சொன்னான்;
மக்களின் அதிபதி அவனை விடுதலை செய்தான்.
21 தன்னுடைய பிரபுக்களை அவனுடைய மனதின்படி கட்டவும்,
தன்னுடைய மூப்பர்களை ஞானிகளாக்கவும்,
22 அவனைத் தன்னுடைய வீட்டுக்கு அதிகாரியும்,
தன்னுடைய செல்வங்களுக்கெல்லாம் ஆளுனராகவும் ஏற்படுத்தினார்.
23 அப்பொழுது இஸ்ரவேல் எகிப்திற்கு வந்தான்;
யாக்கோபு காமின் தேசத்திலே அந்நியனாக இருந்தான்.
24 அவர் தம்முடைய மக்களை மிகவும் பலுகச்செய்து,
அவர்களுடைய எதிரிகளைவிட அவர்களைப் பலவான்களாக்கினார்.
25 தம்முடைய மக்களைப் பகைக்கவும்,
தம்முடைய ஊழியக்காரர்களை வஞ்சனையாக நடத்தவும்,
அவர்களுடைய இருதயத்தை மாற்றினார்.
26 தம்முடைய ஊழியனாகிய மோசேயையும் தாம் தெரிந்துகொண்ட ஆரோனையும் அனுப்பினார்.
27 இவர்கள் அவர்களுக்குள் அவருடைய அடையாளங்களையும்,
காமின் தேசத்திலே அற்புதங்களையும் செய்தார்கள்.
28 அவர் இருளை அனுப்பி, காரிருளை உண்டாக்கினார்;
அவருடைய வார்த்தைகளை எதிர்ப்பவர்கள் இல்லை.
29 அவர்களுடைய தண்ணீர்களை இரத்தமாக மாற்றி,
அவர்களுடைய மீன்களை சாகடித்தார்.
30 அவர்களுடைய தேசம் தவளைகளை அதிகமாகப் பிறக்கவைத்தது;
அவர்களுடைய ராஜாக்களின் அறைவீடுகளிலும் அவைகள் வந்தது.
31 அவர் கட்டளையிட, அவர்களுடைய எல்லைகளிலெங்கும் வண்டுகளும் பேன்களும் வந்தது.
32 அவர்களுடைய மழைகளைக் கல்மழையாக்கி,
அவர்களுடைய தேசத்திலே ஜூவாலிக்கிற நெருப்பை வரச்செய்தார்.
33 அவர்களுடைய திராட்சைச்செடிகளையும் அத்திமரங்களையும் அழித்து,
அவர்களுடைய எல்லைகளிலுள்ள மரங்களையும் முறித்தார்.
34 அவர் கட்டளையிட, எண்ணிமுடியாத வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும் வந்து,
35 அவர்களுடைய தேசத்திலுள்ள எல்லா தாவரங்களையும் அரித்து,
அவர்களுடைய நிலத்தின் கனியைத் தின்றுபோட்டது.
36 அவர்களுடைய தேசத்திலே முதற்பிறப்புகள் அனைத்தையும்,
அவர்களுடைய பெலனில் முதற்பெலனான எல்லோரையும் அழித்தார்.
37 அப்பொழுது அவர்களை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படச்செய்தார்;
அவர்கள் கோத்திரங்களில் பலவீனப்பட்டவன் ஒருவனும் இருந்ததில்லை.
38 எகிப்தியர்கள் அவர்களுக்குப் பயந்ததினால், அவர்கள் புறப்பட்டபோது மகிழ்ந்தார்கள்.
39 அவர் மேகத்தை மறைவுக்காக விரித்து,
இரவை வெளிச்சமாக்குகிறதற்காக நெருப்பையும் தந்தார்.
40 இஸ்ரவேலர்கள் உணவு கேட்டார்கள், அவர் காடைகளை வரச்செய்தார்;
வான அப்பத்தினாலும் அவர்களைத் திருப்தியாக்கினார்.
41 கன்மலையைத் திறந்தார், தண்ணீர்கள் புறப்பட்டு, வனாந்திரத்தில் ஆறாக ஓடினது.
42 அவர் தம்முடைய பரிசுத்த வாக்குத்தத்தத்தையும்,
தம்முடைய ஊழியனாகிய ஆபிரகாமையும் நினைத்து,
43 தம்முடைய மக்களை மகிழ்ச்சியோடும்,
தாம் தெரிந்துகொண்டவர்களைக் கெம்பீர சத்தத்தோடும் புறப்படச்செய்து,
44 தமது கட்டளைகளைக் காத்து நடக்கும்படிக்கும்,
தமது நியாயப்பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படிக்கும்,
45 அவர்களுக்கு அந்நியர்களுடைய தேசங்களைக் கொடுத்தார்;
அந்நிய மக்களுடைய உழைப்பின் பலனைச் சுதந்தரித்துக்கொண்டார்கள்.
அல்லேலூயா.
Chapter 106
சங்கீதம் 106
1 அல்லேலூயா, யெகோவாவை துதியுங்கள்;
அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
2 யெகோவாவுடைய வல்லமையான செயல்களைச் சொல்லி,
அவருடைய துதியையெல்லாம் சொல்லக்கூடியவன் யார்?
3 நியாயத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும்,
எக்காலத்திலும் நீதியைச் செய்கிறவர்களும் பாக்கியவான்கள்.
4 யெகோவாவே, நீர் தெரிந்துகொண்டவர்களின் நன்மையை நான் கண்டு,
உம்முடைய மக்களின் மகிழ்ச்சியால் மகிழ்ந்து,
உம்முடைய சுதந்தரத்தோடு மேன்மைபாராட்டும்படிக்கு,
5 உம்முடைய மக்களுக்கு நீர் பாராட்டும் கிருபையின்படி என்னை நினைத்து,
உம்முடைய இரட்சிப்பினால் என்னைச் சந்தித்தருளும்.
6 எங்களுடைய முன்னோர்களோடு நாங்களும் பாவஞ்செய்து,
அக்கிரமம் நடப்பித்து, தீமைகளைச் செய்தோம்.
7 எங்களுடைய முன்னோர்கள் எகிப்திலே உம்முடைய அதிசயங்களை உணராமலும்,
உம்முடைய கிருபைகளின் பெருக்கத்தை நினைக்காமலும் போய்,
சிவந்த கடலின் ஓரத்திலே கலகம்செய்தார்கள்.
8 ஆனாலும் அவர் தமது வல்லமையை வெளிப்படுத்தும்படி,
தம்முடைய பெயரினிமித்தம் அவர்களைக் காப்பாற்றினார்.
9 அவர் சிவந்த கடலை அதட்டினார், அது வற்றிப்போனது;
காய்ந்த தரையில் நடக்கிறதுபோல அவர்களை ஆழங்களில் நடந்துபோகச்செய்தார்.
10 பகைவரின் கைக்கு அவர்களை விலக்கிக் காப்பாற்றி, எதிரியின் கைக்கு அவர்களை விலக்கி மீட்டார்.
11 அவர்களுடைய எதிரிகளைத் தண்ணீர்கள் மூடிக்கொண்டது;
அவர்களில் ஒருவனும் மீதியாக இருக்கவில்லை.
12 அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை விசுவாசித்து,
அவருடைய துதியைப் பாடினார்கள்.
13 ஆனாலும் சீக்கிரமாக அவருடைய செயல்களை மறந்தார்கள்;
அவருடைய ஆலோசனைக்கு அவர்கள் காத்திருக்காமல்,
14 வனாந்திரத்திலே ஆசையுள்ளவர்களாகி,
பாலைவனத்திலே தேவனைப் பரீட்சைபார்த்தார்கள்.
15 அப்பொழுது அவர்கள் கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார்,
அவர்கள் சரீரத்திலோ வியாதியை அனுப்பினார்.
16 முகாமில் அவர்கள் மோசேயின்மேலும்,
யெகோவாவுடைய பரிசுத்தனாகிய ஆரோனின்மேலும் பொறாமைகொண்டார்கள்.
17 பூமி பிளந்து தாத்தானை விழுங்கி,
அபிராமின் கூட்டத்தை மூடிப்போட்டது.
18 அவர்கள் கூட்டத்தில் நெருப்பு பற்றியெரிந்தது;
நெருப்பு ஜூவாலை துன்மார்க்கர்களை எரித்துப்போட்டது.
19 அவர்கள் ஓரேபிலே ஒரு கன்றுக்குட்டியையுண்டாக்கி,
வார்க்கப்பட்ட சிலையை வழிபட்டார்கள்.
20 தங்களுடைய மகிமையைப்
புல்லைத் தின்கிற மாட்டின் சாயலாக மாற்றினார்கள்.
21 எகிப்திலே பெரிய செயல்களையும்,
காமின் தேசத்திலே அதிசயங்களையும்,
சிவந்த கடலினருகில் பயங்கரமானவைகளையும் செய்தவராகிய,
22 தங்களுடைய இரட்சகரான தேவனை மறந்தார்கள்.
23 ஆகையால், அவர்களை நாசம்செய்வேன் என்றார்;
அப்பொழுது அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட மோசே,
அவர்களை அவர் அழிக்காதபடி,
அவருடைய கடுங்கோபத்தை ஆற்றுவதற்கு,
அவருக்கு முன்பாகத் திறப்பின் வாசலிலே நின்றான்.
24 அவருடைய வார்த்தையை விசுவாசிக்காமல்,
விரும்பத்தக்க தேசத்தை அசட்டைச்செய்தார்கள்.
25 யெகோவாவுடைய சத்தத்திற்குச் செவிகொடுக்காமல்,
தங்களுடைய கூடாரங்களில் முறுமுறுத்தார்கள்.
26 அப்பொழுது அவர்கள் வனாந்தரத்திலே இறக்கவும்,
அவர்கள் சந்ததி தேசங்களுக்குள்ளே அழியவும்,
27 அவர்கள் பற்பல தேசங்களிலே சிதறடிக்கப்படவும்,
அவர்களுக்கு விரோதமாகத் தம்முடைய கையை எடுத்தார்.
28 அவர்கள் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டு,
உயிரில்லாதவைகளுக்கு செலுத்தின பலிகளை சாப்பிட்டு,
29 தங்களுடைய செயல்களினால் அவருக்குக் கோபம் மூட்டினார்கள்;
ஆகையால் வாதை அவர்களுக்குள் புகுந்தது.
30 அப்பொழுது பினெகாஸ் எழுந்து நின்று நியாயஞ்செய்தான்;
அதினால் வாதை நிறுத்தப்பட்டது.
31 அது தலைமுறை தலைமுறையாக என்றைக்கும் அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
32 மேரிபாவின் தண்ணீர்களிடத்திலும் அவருக்குக் கடுங்கோபம் மூட்டினார்கள்;
அவர்களினால் மோசேக்கும் பொல்லாப்பு வந்தது.
33 அவர்கள் அவன் ஆவியைத் துக்கப்படுத்தினதினாலே,
தன்னுடைய உதடுகளினால் பதறிப்பேசினான்.
34 யெகோவா தங்களுக்குச் சொன்னபடி,
அவர்கள் அந்த மக்களை அழிக்கவில்லை.
35 அந்நிய ஜாதிகளோடு கலந்து, அவர்களுடைய செயல்களைக் கற்று;
36 அவர்களுடைய சிலைகளை வழிபட்டார்கள்;
அவைகள் அவர்களுக்குக் கண்ணியானது.
37 அவர்கள் தங்களுடைய மகன்களையும்
தங்களுடைய மகள்களையும் பிசாசுகளுக்குப் பலியிட்டார்கள்.
38 அவர்கள் கானான் தேசத்து சிலைகளுக்கு பலியிட்டு,
தங்களுடைய மகன்கள் மகள்களுடைய குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தினார்கள்;
தேசம் இரத்தத்தால் தீட்டுப்பட்டது.
39 அவர்கள் தங்களுடைய செயல்களினால் அசுத்தமாகி,
தங்களுடைய செயல்களினால் வேசித்தனம் செய்தார்கள்.
40 அதினால் யெகோவாவுடைய கோபம் தமது மக்களின்மேல் எழும்பினது;
அவர் தமது சுதந்தரத்தை அருவருத்தார்.
41 அவர்களைத் தேசங்களுடைய கையில் ஒப்புக்கொடுத்தார்;
அவர்களுடைய பகைவர்கள் அவர்களை ஆண்டார்கள்.
42 அவர்களுடைய எதிரிகள் அவர்களை ஒடுக்கினார்கள்;
அவர்களுடைய கையின்கீழ்த் தாழ்த்தப்பட்டார்கள்.
43 அநேகமுறை அவர்களை விடுவித்தார்;
அவர்களோ தங்களுடைய யோசனையினால் அவருக்கு விரோதமாகக் கலகம்செய்து,
தங்களுடைய அக்கிரமத்தினால் சிறுமைப்படுத்தப்பட்டார்கள்.
44 அவர்கள் கூப்பிடுதலை அவர் கேட்கும்போதோ,
அவர்களுக்கு உண்டான இடுக்கத்தை அவர் பார்த்து,
45 அவர்களுக்காகத் தமது உடன்படிக்கையை நினைத்து,
தமது மிகுந்த கிருபையின்படி மனவேதனை அடைந்து,
46 அவர்களைச் சிறைபிடித்த அனைவரும் அவர்களுக்கு இரங்கும்படி செய்தார்.
47 எங்கள் தேவனாகிய யெகோவாவே,
நாங்கள் உமது பரிசுத்தப் பெயரைப் போற்றி,
உம்மைத் துதிக்கிறதில் மேன்மைபாராட்டும்படி எங்களைக் காப்பாற்றி,
எங்களைத் தேசங்களிலிருந்து சேர்த்தருளும்.
48 இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா
அநாதியாக என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர்.
மக்களெல்லோரும் ஆமென், என்பார்களாக,
அல்லேலூயா.
Chapter 107
சங்கீதம் 107
1 யெகோவாவை துதியுங்கள்;
அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
2 யெகோவாவால் எதிரியின் கைக்கு நீங்கலாக்கி மீட்கப்பட்டு,
3 கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமுள்ள
பல தேசங்களிலுமிருந்து சேர்க்கப்பட்டவர்கள்,
அப்படிச் சொல்வார்களாக.
4 அவர்கள் வாழும் ஊரைக்காணாமல்,
வனாந்திரத்திலே பாலைவனவழியாக,
5 பசியாகவும், தாகமாகவும், ஆத்துமா சோர்ந்துபோனதாகவும்
அலைந்து திரிந்தார்கள்.
6 தங்களுடைய ஆபத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்,
அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை மீட்டெடுத்தார்.
7 வாழும் ஊருக்குப்போய்ச்சேர,
அவர்களைச் செவ்வையான வழியிலே நடத்தினார்.
8 தாகமுள்ள ஆத்துமாவைக் யெகோவா திருப்தியாக்கி,
பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறாரென்று,
9 அவருடைய கிருபையினிமித்தமும்,
மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக.
10 தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாகக் கலகம்செய்து,
உன்னதமான தேவனுடைய ஆலோசனையை அசட்டைசெய்தவர்கள்,
11 காரிருளிலும் மரண இருளிலும் வைக்கப்பட்டிருந்து,
ஒடுக்கத்திலும் இரும்பிலும் கட்டப்பட்டு கிடந்தார்கள்.
12 அவர்களுடைய இருதயத்தை அவர் வருத்தத்தால் தாழ்த்தினார்;
உதவிசெய்ய ஒருவரும் இல்லாமல் விழுந்து போனார்கள்.
13 தங்களுடைய ஆபத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்;
அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை நீங்கலாக்கிக் காப்பாற்றினார்.
14 காரிருளிலும் மரண இருளிலுமிருந்து அவர்களை வெளிப்படச்செய்து,
அவர்களுடைய கட்டுகளை அறுத்தார்.
15 யெகோவா வெண்கலக் கதவுகளை உடைத்து,
இரும்புத் தாழ்ப்பாள்களை முறித்தாரென்று,
16 அவருடைய கிருபையினிமித்தமும்,
மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக.
17 புத்தியீனரும் தங்களுடைய கலக வழிகளாலும்
தங்களுடைய அக்கிரமங்களாலும் நோய்கொண்டு ஒடுங்கிப்போகிறார்கள்.
18 அவர்களுடைய ஆத்துமா எல்லா உணவையும் வெறுக்கிறது,
அவர்கள் மரணவாசல்கள் வரையிலும் நெருங்குகிறார்கள்.
19 தங்களுடைய ஆபத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்;
அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கிக் காப்பாற்றுகிறார்.
20 அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி,
அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.
21 அவர்கள் யெகோவாவை அவருடைய கிருபையினிமித்தமும்,
மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து,
22 நன்றிபலிகளைச் செலுத்தி, அவருடைய செயல்களை ஆனந்த சத்தத்தோடு விவரிப்பார்களாக.
23 கப்பலேறி, கடற்பயணம்செய்து, திரளான தண்ணீர்களிலே தொழில் செய்கிறார்களே,
24 அவர்கள் யெகோவாவுடைய செயல்களையும்,
ஆழத்திலே அவருடைய அதிசயங்களையும் காண்கிறார்கள்.
25 அவர் கட்டளையிட பெருங்காற்று எழும்பி,
அதின் அலைகளைக் கொந்தளிக்கச்செய்யும்.
26 அவர்கள் வானத்தில் ஏறி,
ஆழங்களில் இறங்குகிறார்கள்,
அவர்களுடைய ஆத்துமா துன்பத்தினால் கரைந்துபோகிறது.
27 குடித்துவெறித்தவனைப்போல் அலைந்து தடுமாறுகிறார்கள்;
அவர்களுடைய ஞானமெல்லாம் முழுகிப்போகிறது.
28 அப்பொழுது தங்களுடைய ஆபத்திலே அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்,
அவர்களுடைய இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார்.
29 கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது.
30 அமைதி உண்டானதிற்காக அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்;
தாங்கள் விரும்பிய துறைமுகத்தில் அவர்களைக் கொண்டுவந்து சேர்க்கிறார்.
31 அவர்கள் யெகோவாவை அவருடைய கிருபையினிமித்தமும்,
மனிதர்களுக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து,
32 மக்களின் சபையிலே அவரை உயர்த்தி,
மூப்பர்களின் சங்கத்திலே அவரைப் போற்றுவார்களாக.
33 அவர் ஆறுகளை வனாந்திரமாகவும், நீரூற்றுகளை வறண்ட இடமாகவும்,
34 குடிகளுடைய பொல்லாப்புக்காக செழிப்பான தேசத்தைத் தரிசு நிலமாகவும் மாற்றுகிறார்.
35 அவர் வனாந்திரவெளியைத் தண்ணீர் குளமாகவும்,
வறண்ட நிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றி,
36 பசித்தவர்களை அங்கே குடியேற்றுகிறார்;
அங்கே அவர்கள் குடியிருக்கும் நகரத்தைக் கட்டி,
37 வயல்களை உண்டாக்கி விதைத்து, திராட்சைத்தோட்டங்களை நாட்டுகிறார்கள்,
அவைகள் வரத்துள்ள பலனைத் தரும்.
38 அவர்களை ஆசீர்வதிக்கிறார்,
மிகுதியும் பெருகுகிறார்கள்; அவர்களுடைய மிருகங்கள் குறையாமலிருக்கச்செய்கிறார்.
39 பின்பு அவர்கள் இடுக்கத்தினாலும், ஆபத்தினாலும்,
துயரத்தினாலும் குறைவுபட்டுத் தாழ்வடைகிறார்கள்.
40 அவர் எதிரிகளின் தலைவர்கள்மேல் இகழ்ச்சிவரச்செய்து,
வழியில்லாத வனாந்திர வெளியிலே அவர்களைத் திரியச்செய்து,
41 எளியவனையோ சிறுமையிலிருந்து எடுத்து,
உயர்ந்த அடைக்கலத்திலே வைத்து,
அவனுடைய வம்சங்களை மந்தையைப்போலாக்குகிறார்.
42 உத்தமர்கள் அதைக்கண்டு மகிழுவார்கள்;
நியாயக்கேடெல்லாம் தன்னுடைய வாயை மூடும்.
43 எவன் ஞானமுள்ளவனோ அவன் இவைகளைக் கவனிக்கட்டும்;
ஞானவான்கள் யெகோவாவுடைய கிருபைகளை உணர்ந்துகொள்வார்கள்.
Chapter 108
சங்கீதம் 108
தாவீது பாடிய பாடல்.1 தேவனே, என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது;
நான் இன்னிசையால் புகழ்ந்து பாடுவேன்;
என்னுடைய மகிமையும் பாடும்.
2 வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்,
நான் அதிகாலையில் விழிப்பேன்.
3 யெகோவாவே, மக்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்;
தேசங்களுக்குள்ளே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
4 உமது கிருபை வானங்களுக்கு மேலாகவும்,
உமது சத்தியம் மேகமண்டலங்கள் வரையிலும் எட்டுகிறது.
5 தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்திரும்;
உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.
6 உமது பிரியர்கள் விடுவிக்கப்படுவதற்காக,
உமது வலதுகரத்தினால் இரட்சித்து,
எங்களுடைய ஜெபத்தைக் கேட்டருளும்.
7 தேவன் தமது பரிசுத்தத்தைக்கொண்டு சொன்னார்,
ஆகையால் சந்தோஷப்படுவேன்;
சீகேமைப் பங்கிட்டு, சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன்.
8 கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது;
எப்பிராயீம் என்னுடைய தலையின் பெலன்,
யூதா என்னுடைய செங்கோல்.
9 மோவாப் என்னுடைய பாதம் கழுவும் பாத்திரம்;
ஏதோமின்மேல் என்னுடைய காலணியை எறிவேன்;
பெலிஸ்தியாவின்மேல் ஆர்ப்பரிப்பேன்.
10 வலுவான நகரத்திற்குள் என்னை நடத்திக்கொண்டு போகிறவன் யார்?
ஏதோம்வரை எனக்கு வழிகாட்டுகிறவன் யார்?
11 எங்களுடைய சேனைகளோடு புறப்படாமலிருந்த தேவனே நீரல்லவோ?
எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவனே நீரல்லவோ?
12 இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்;
மனிதனுடைய உதவி வீண்.
13 தேவனாலே வெற்றி பெறுவோம்;
அவரே எங்களுடைய எதிரிகளை மிதித்துப்போடுவார்.
Chapter 109
சங்கீதம் 109
இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் பாடல்.1 நான் துதிக்கும் தேவனே,
மவுனமாக இருக்கவேண்டாம்.
2 துன்மார்க்கனுடைய வாயும், வஞ்சகவாயும்,
எனக்கு விரோதமாகத் திறந்திருக்கிறது;
பொய் நாவினால் என்னோடு பேசுகிறார்கள்.
3 பகையுண்டாக்கும் வார்த்தைகளால் என்னைச் சூழ்ந்துகொண்டு, காரணமில்லாமல் என்னோடு போர்செய்கிறார்கள்.
4 என்னுடைய அன்புக்கு பதிலாக என்னை விரோதிக்கிறார்கள்,
நானோ ஜெபம் செய்து கொண்டிருக்கிறேன்.
5 நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமைசெய்கிறார்கள், என்னுடைய அன்புக்குப் பதிலாக என்னைப் பகைக்கிறார்கள்.
6 அவனுக்கு மேலாகத் தீயவனை ஏற்படுத்தி வையும்,
சாத்தான் அவனுடைய வலதுபக்கத்தில் நிற்கட்டும்.
7 அவனுடைய நியாயம் விசாரிக்கப்படும்போது குற்றவாளியாகட்டும்; அவனுடைய ஜெபம் பாவமாகட்டும்.
8 அவனுடைய நாட்கள் கொஞ்சமாகட்டும்;
அவனுடைய வேலையை வேறொருவன் பெறட்டும்.
9 அவனுடைய பிள்ளைகள் திக்கற்றவர்களும்,
அவனுடைய மனைவி விதவையுமாகட்டும்.
10 அவனுடைய பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சையெடுத்து, தங்களுடைய பாழான வீடுகளிலிருந்து பிச்சை எடுக்கட்டும்.
11 கடன் கொடுத்தவன் அவனுக்கு உள்ளதெல்லாவற்றையும் அபகரித்துக்கொள்ளட்டும்;
அவனுடைய உழைப்பின் பலனை அந்நியர்கள் பறித்துக்கொள்ளட்டும்.
12 அவனுக்கு ஒருவரும் இரக்கங்காட்டாமலும்,
அவனுடைய திக்கற்ற பிள்ளைகளுக்குத் தயவு செய்யாமல் போகட்டும்.
13 அவனுடைய சந்ததியார் அழிக்கப்படட்டும்; இரண்டாம் தலைமுறையில் அவர்களுடைய பெயர் இல்லாமல் போகட்டும்.
14 அவனுடைய முன்னோர்களின் அக்கிரமம் யெகோவாவுக்கு முன்பாக நினைக்கப்படட்டும்,
அவனுடைய தாயின் பாவம் நீங்காமலிருக்கட்டும்.
15 அவைகள் எப்பொழுதும் யெகோவாவுக்கு முன்பாக இருக்கட்டும்;
அவர்களுடைய பெயர் பூமியில் இல்லாமல் அழிக்கப்படட்டும்.
16 அவன் தயவுசெய்ய நினைக்காமல், ஏழையும், தேவையுள்ளவனுமாகிய மனிதனைத் துன்பப்படுத்தி, மனமுறிவுள்ளவனைக் கொலைசெய்யும்படி தேடினானே.
17 சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வரும்;
அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற்போனான்,
அது அவனுக்குத் தூரமாக விலகிப்போகும்.
18 சாபத்தை அவன் தனக்கு ஆடையாக உடுத்திக்கொண்டான்; அது அவனுடைய உள்ளத்தில் தண்ணீரைப்போலவும், அவனுடைய எலும்புகளில் எண்ணெயைப்போலவும் பாயும்.
19 அது அவன் போர்த்துக்கொள்ளுகிற ஆடையாகவும்,
எப்பொழுதும் கட்டிக்கொள்ளுகிற வார்க்கச்சையாகவும் இருக்கட்டும்.
20 இதுதான் என்னை விரோதிக்கிறவர்களுக்கும், என்னுடைய ஆத்துமாவுக்கு விரோதமாகத் தீங்கு பேசுகிறவர்களுக்கும் யெகோவாவால் வரும் பிரதிபலன்.
21 ஆண்டவராகிய யெகோவாவே,
நீர் உமது பெயரினிமித்தம் என்னை ஆதரித்து,
உமது கிருபை நலமானதினால்,
என்னை விடுவித்தருளும்.
22 நான் ஏழையும் தேவையுள்ளவனுமாக இருக்கிறேன்,
என்னுடைய இருதயம் எனக்குள் புண்பட்டிருக்கிறது.
23 சாயும் நிழலைப்போல் அகன்றுபோனேன்; வெட்டுக்கிளியைப்போல் பறக்கடிக்கப்படுகிறேன்.
24 உபவாசத்தினால் என்னுடைய முழங்கால்கள் பலவீனமடைகிறது;
என்னுடைய சரீரமும் பலமற்று உலர்ந்து போகிறது.
25 நான் அவர்களுக்கு நிந்தையானேன்; அவர்கள் என்னைப் பார்த்து, தங்களுடைய தலையை அசைக்கிறார்கள்.
26 என் தேவனாகிய யெகோவாவே எனக்கு உதவிசெய்யும்;
உமது கிருபையின்படி என்னைக் காப்பாற்றும்.
27 இது உமது கரம் என்றும், யெகோவாவே, தேவனே நீர் இதைச் செய்தீர் என்றும், அவர்கள் அறிவார்களாக.
28 அவர்கள் சபித்தாலும், நீர் ஆசீர்வதியும்;
அவர்கள் எழும்பினாலும் வெட்கப்பட்டுப்போகட்டும்;
உமது அடியானோ மகிழ்சியாக இருப்பேன்.
29 என்னுடைய விரோதிகள் அவமானத்தால் மூடப்பட்டு, தங்களுடைய வெட்கத்தைச் சால்வையைப்போல் அணிந்துக்கொள்வார்களாக.
30 யெகோவாவை நான் என்னுடைய வாயினால் மிகவும் துதித்து,
அநேகர் நடுவிலே அவரைப் புகழுவேன்.
31 தண்டனைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களிடம் ஒடுக்கப்பட்டவனுடைய ஆத்துமாவை காப்பாற்றும்படி
அவர் அவனுடைய வலதுபக்கத்தில் நிற்பார்.
Chapter 110
சங்கீதம் 110
தாவீதின் பாடல்.1 யெகோவா என் ஆண்டவரை நோக்கி:
நான் உம்முடைய எதிரிகளை உம்முடைய பாதத்தின்கீழ் போடும்வரைக்கும்,
நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்றார்.
2 யெகோவா சீயோனிலிருந்து உமது வல்லமையின் செங்கோலை அனுப்புவார்;
நீர் உம்முடைய எதிரிகளின் நடுவே ஆளுகைசெய்யும்.
3 உமது மகத்துவத்தின் நாளிலே
உம்முடைய மக்கள் மனப்பூர்வமும் பரிசுத்த அலங்காரம் உள்ளவர்களாக இருப்பார்கள்;
அதிகாலையின் கர்ப்பத்தில் பிறக்கும் பனிக்குச் சமமாக உம்முடைய மக்கள் உமக்குப் பிறப்பார்கள்.
4 நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி
என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று யெகோவா ஆணையிட்டார்;
மனம் மாறாமலுமிருப்பார்.
5 உம்முடைய வலதுபக்கத்திலிருக்கிற ஆண்டவர்,
தமது கோபத்தின் நாளிலே ராஜாக்களை வெட்டுவார்.
6 அவர் தேசங்களுக்குள் நியாயந்தீர்ப்பார்;
எல்லா இடங்களையும் பிரேதங்களால் நிரப்புவார்;
அநேக தேசங்களின்மேல் தலைவர்களாக இருக்கிறவர்களை நொறுக்கிப்போடுவார்.
7 வழியிலே அவர் நதியில் குடிப்பார்;
ஆகையால் அவர் தமது தலையை எடுப்பார்.
Chapter 111
சங்கீதம் 111
1 அல்லேலூயா,
செம்மையானவர்களுடைய கூட்டத்திலும் சபையிலும் யெகோவாவை முழு இருதயத்தோடும் துதிப்பேன்.
2 யெகோவாவின் செய்கைகள் பெரியவைகளும்,
அவைகளில் பிரியப்படுகிற எல்லோராலும் ஆராயப்படுகிறவைகளுமாக இருக்கிறது.
3 அவருடைய செயல் மகிமையும் மகத்துவமுமுள்ளது,
அவருடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்.
4 அவர் தம்முடைய அதிசயமான செயல்களை நினைவுகூரும்படி செய்தார்,
யெகோவா இரக்கமும் மனவுருக்கமுமுள்ளவர்.
5 தமக்குப் பயந்தவர்களுக்கு உணவு கொடுத்தார்;
தமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் நினைப்பார்.
6 தேசங்களின் சுதந்தரத்தைத் தமது மக்களுக்குக் கொடுத்ததினால்,
தமது செயல்களின் பெலத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்.
7 அவருடைய கரத்தின் செயல்கள் சத்தியமும் நியாயமுமானவைகள்;
அவருடைய கட்டளைகளெல்லாம் உண்மையானவைகள்.
8 அவைகள் என்றென்றைக்குமுள்ள எல்லாகாலங்களுக்கும் உறுதியானவைகள்,
அவைகள் உண்மையும் செம்மையுமாகச் செய்யப்பட்டவைகள்.
9 அவர் தமது மக்களுக்கு மீட்பை அனுப்பி,
தமது உடன்படிக்கையை நிரந்தர உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார்;
அவருடைய பெயர் பரிசுத்தமும் பயங்கரமுமானது.
10 யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்;
அவருடைய கற்பனைகளின்படி செய்கிற அனைவருக்கும் நற்புத்தியுண்டு;
அவருடைய புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.
Chapter 112
சங்கீதம் 112
1 அல்லேலூயா, யெகோவாவுக்குப் பயந்து,
அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனிதன் பாக்கியவான்.
2 அவன் சந்ததிகள் பூமியில் பலத்திருக்கும்,
செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும்.
3 செழிப்பும் செல்வமும் அவனுடைய வீட்டிலிருக்கும்;
அவனுடைய நீதி என்றைக்கும் நிற்கும்.
4 செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்;
அவன் இரக்கமும் மனவுருக்கமும் நீதியுமுள்ளவன்.
5 இரங்கிக் கடன்கொடுத்து, தன்னுடைய காரியங்களை நியாயமானபடி நடத்துகிற மனிதன் பாக்கியவான்.
6 அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்;
நீதிமான் என்றென்றும் புகழுள்ளவன்.
7 துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படமாட்டான்;
அவனுடைய இருதயம் யெகோவாவை நம்பித் திடனாயிருக்கும்.
8 அவனுடைய இருதயம் உறுதியாயிருக்கும்;
அவன் தன்னுடைய எதிரிகளில் சரிக்கட்டுதலைக் காணும்வரை பயப்படாமலிருப்பான்.
9 வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்;
அவன் கொம்பு மகிமையாக உயர்த்தப்படும்.
10 துன்மார்க்கன் அதைக் கண்டு மனச்சோர்வாகி,
தன்னுடைய பற்களைக் கடித்துக் கரைந்துபோவான்;
துன்மார்க்கர்களுடைய ஆசை அழியும்.
Chapter 113
சங்கீதம் 113
1 அல்லேலூயா, யெகோவாவுடைய ஊழியக்காரர்களே, துதியுங்கள்;
யெகோவாவுடைய பெயரைத் துதியுங்கள்.
2 இதுமுதல் என்றென்றைக்கும் யெகோவாவுடைய பெயர் ஸ்தோத்திரிக்கப்படுவதாக.
3 சூரியன் உதிக்கும் திசைதொடங்கி
அது மறையும் திசைவரை யெகோவாவுடைய பெயர் துதிக்கப்படட்டும்.
4 யெகோவா எல்லா தேசங்கள்மேலும் உயர்ந்தவர்;
அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது.
5 உன்னதங்களில் வாழ்கிற நம்முடைய தேவனாகிய யெகோவாவுக்குச் சமமானமானவர் யார்?
6 அவர் வானத்திலிருந்து பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார்.
7 அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்;
ஏழ்மையானவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.
8 அவனைப் பிரபுக்களோடும்,
தமது மக்களின் அதிபதிகளோடும் உட்காரச்செய்கிறார்.
9 மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி,
வீட்டிலே குடியிருக்கச்செய்கிறார்.
அல்லேலூயா.
Chapter 114
சங்கீதம் 114
1 இஸ்ரவேல் எகிப்திலும், யாக்கோபின் வீட்டார் அந்நிய மக்களிடமிருந்து புறப்பட்டபோது,
2 யூதா அவருக்குப் பரிசுத்த இடமும்,
இஸ்ரவேல் அவருக்கு இராஜ்ஜியமுமானது.
3 கடல் கண்டு விலகி ஓடினது;
யோர்தான் பின்னிட்டுத் திரும்பினது.
4 மலைகள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்,
குன்றுகள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளினது.
5 கடலே, நீ விலகியோடுகிறதற்கும்;
யோர்தானே, நீ பின்னாக திரும்புகிறதற்கும்;
6 மலைகளே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்; குன்றுகளே,
நீங்கள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளுகிறதற்கும்,
உங்களுக்கு என்ன வந்தது?
7 பூமியே, நீ ஆண்டவருக்கு முன்பாகவும்,
யாக்கோபுடைய தேவனுக்கு முன்பாகவும் அதிரு.
8 அவர் கன்மலையைத் தண்ணீர் குளமாகவும்,
கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார்.
Chapter 115
சங்கீதம் 115
தாவீதின் பாடல்.1 எங்களுக்கு அல்ல, யெகோவாவே, எங்களுக்கு அல்ல,
உமது கிருபையினிமித்தமும் உமது சத்தியத்தினிமித்தமும், உம்முடைய பெயருக்கே மகிமை வரச்செய்யும்.
2 அவர்களுடைய தேவன் இப்பொழுது எங்கே
என்று தேசங்கள் ஏன் சொல்லவேண்டும்?
3 நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்;
தமக்குச் சித்தமான அனைத்தையும் செய்கிறார்.
4 அவர்களுடைய சிலைகள் வெள்ளியும் பொன்னும்,
மனிதர்களுடைய கைவேலையுமாக இருக்கிறது.
5 அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது;
அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
6 அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேட்காது;
அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது.
7 அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது;
அவைகளுக்குக் கால்களிருந்தும் நடக்காது;
தங்களுடைய தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.
8 அவைகளைச் செய்கிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் அனைவரும்,
அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.
9 இஸ்ரவேலே, யெகோவாவை நம்பு;
அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார்.
10 ஆரோன் குடும்பத்தாரே, யெகோவாவை நம்புங்கள்;
அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார்.
11 யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்களே,
யெகோவாவை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார்.
12 யெகோவா நம்மை நினைத்திருக்கிறார்,
அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தார்களை ஆசீர்வதிப்பார்,
அவர் ஆரோன் குடும்பத்தார்களை ஆசீர்வதிப்பார்.
13 யெகோவாவுக்குப் பயப்படுகிற பெரியோர்களையும்,
சிறியோர்களையும் ஆசீர்வதிப்பார்.
14 யெகோவா உங்களையும் உங்களுடைய பிள்ளைகளையும் பெருகச்செய்வார்.
15 வானத்தையும் பூமியையும் படைத்த யெகோவாவாலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
16 வானங்கள் யெகோவாவுடையவைகள்;
பூமியையோ மனிதர்களுக்குக் கொடுத்தார்.
17 இறந்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும்
யெகோவாவை துதிக்கமாட்டார்கள்.
18 நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும்
யெகோவாவுக்கு நன்றிசொல்லுவோம்.
அல்லேலூயா.
Chapter 116
சங்கீதம் 116
1 யெகோவா என்னுடைய சத்தத்தையும் என்னுடைய விண்ணப்பத்தையும் கேட்டதினால்,
அவரில் அன்புகூருகிறேன்.
2 அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால்,
நான் உயிரோடிருக்கும்வரை அவரைத் தொழுதுகொள்ளுவேன்.
3 மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது,
பாதாளக் கண்ணிகள் என்னைப் பிடித்தது; கவலையும் துன்பமும் அடைந்தேன்.
4 அப்பொழுது நான் யெகோவாவுடைய பெயரைத் தொழுதுகொண்டு:
யெகோவாவே, என்னுடைய ஆத்துமாவை விடுவியும் என்று கெஞ்சினேன்.
5 யெகோவா கிருபையும் நீதியுமுள்ளவர்,
நம்முடைய தேவன் மனவுருக்கம் உள்ளவர்.
6 யெகோவா கபடற்றவர்களைக் காக்கிறார்;
நான் மெலிந்துபோனேன்,
அவர் என்னைப் பாதுகாத்தார்.
7 என் ஆத்துமாவே, யெகோவா உனக்கு நன்மை செய்தபடியால்,
நீ உன்னுடைய இளைப்பாறுதலுக்குத் திரும்பு.
8 என் ஆத்துமாவை மரணத்திற்கும், என் கண்ணைக் கண்ணீருக்கும்,
என் காலை இடறுதலுக்கும் தப்புவித்தீர்.
9 நான் யெகோவாவுக்கு முன்பாக உயிருள்ளவர்கள் தேசத்திலே நடப்பேன்.
10 விசுவாசித்தேன், ஆகையால் பேசுகிறேன்;
நான் மிகவும் வருத்தப்பட்டேன்.
11 எந்த மனிதனும் பொய்யன் என்று என்னுடைய மனக்கலக்கத்திலே சொன்னேன்.
12 யெகோவா எனக்குச் செய்த எல்லா உதவிகளுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்.
13 இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு,
யெகோவாவுடைய பெயரைத் தொழுதுகொள்ளுவேன்.
14 நான் யெகோவாவுக்குச் செய்த பொருத்தனைகளை
அவருடைய மக்களெல்லோருக்கும் முன்பாகவும் செலுத்துவேன்.
15 யெகோவாவுடைய பரிசுத்தவான்களின் மரணம் அவருடைய பார்வைக்கு அருமையானது.
16 யெகோவாவே, நான் உமது அடியேன்;
நான் உமது அடியாளின் மகனும், உமது ஊழியக்காரனுமாக இருக்கிறேன்;
என்னுடைய கட்டுகளை அவிழ்த்துவிட்டீர்.
17 நான் உமக்கு நன்றிபலியைச் செலுத்தி,
யெகோவாவுடைய பெயரைத் தொழுதுகொள்ளுவேன்.
18 நான் யெகோவாவுக்குச் செய்த பொருத்தனைகளை
அவருடைய மக்களெல்லோருக்கும் முன்பாகவும்,
19 யெகோவாவுடைய ஆலயத்தின் முற்றங்களிலும்,
எருசலேமே உன்னுடைய நடுவிலும் நிறைவேற்றுவேன்.
அல்லேலூயா.
Chapter 117
சங்கீதம் 117
1 தேசங்களே, எல்லோரும் யெகோவாவை துதியுங்கள்;
மக்களே, எல்லோரும் அவரைப் போற்றுங்கள்.
2 அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது;
யெகோவாவின் உண்மை என்றென்றைக்குமுள்ளது.
அல்லேலூயா.
Chapter 118
சங்கீதம் 118
1 யெகோவாவை துதியுங்கள், அவர் நல்லவர்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
2 அவர் கிருபை என்றுமுள்ளதென்று இஸ்ரவேல் சொல்வார்களாக.
3 அவர் கிருபை என்றுமுள்ளதென்று, ஆரோனின் குடும்பத்தார் சொல்வார்களாக.
4 அவர் கிருபை என்றுமுள்ளதென்று,
யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்கள் சொல்வார்களாக.
5 நெருக்கத்திலிருந்து யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்,
யெகோவா என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்.
6 யெகோவா என்னோடு இருக்கிறார், நான் பயப்படமாட்டேன்;
மனிதன் எனக்கு என்ன செய்வான்?
7 எனக்கு உதவி செய்கிறவர்கள் நடுவில் யெகோவா என்னோடு இருக்கிறார்;
என்னுடைய எதிரிகளில் சரிக்கட்டுதலைக் காண்பேன்.
8 மனிதனை நம்புவதைவிட,
யெகோவா மேல் பற்றுதலாயிருப்பதே நலம்.
9 பிரபுக்களை நம்புவதைவிட யெகோவா மேல் பற்றுதலாயிருப்பதே நலம்.
10 எல்லா தேசத்தாரும் என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்;
யெகோவாவுடைய பெயரினால் அவர்களை அழிப்பேன்.
11 என்னைச் சுற்றிலும் வளைந்து கொள்ளுகிறார்கள்;
யெகோவாவுடைய பெயரினால் அவர்களை அழிப்பேன்.
12 தேனீக்களைப்போல என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்;
முள்ளில் பற்றின நெருப்பைப்போல அணைந்து போவார்கள்;
யெகோவாவுடைய பெயரினால் அவர்களை அழிப்பேன்.
13 நான் விழும்படி நீ என்னைத் தள்ளினாய்;
யெகோவாவோ எனக்கு உதவி செய்தார்.
14 யெகோவா என்னுடைய பெலனும், என்னுடைய பாடலுமானவர்;
அவர் எனக்கு இரட்சிப்புமானார்.
15 நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டு;
யெகோவாவின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்.
16 யெகோவாவின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது;
யெகோவாவின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்.
17 நான் சாகாமல், பிழைத்திருந்து,
யெகோவாவுடைய செய்கைகளை விவரிப்பேன்.
18 யெகோவா என்னைக் கடினமாகத் தண்டித்தும்,
என்னைச் சாவுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை.
19 நீதியின் வாசல்களைத் திறவுங்கள்;
நான் அவைகளுக்குள் நுழைந்து யெகோவாவை துதிப்பேன்.
20 யெகோவாவின் வாசல் இதுவே;
நீதிமான்கள் இதற்குள் நுழைவார்கள்.
21 நீர் எனக்குச் செவிகொடுத்து, எனக்கு இரட்சிப்பாக இருந்தபடியால்,
நான் உம்மைத் துதிப்பேன்.
22 வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே,
மூலைக்குத் தலைக்கல்லானது.
23 அது யெகோவாவாலே ஆனது,
அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
24 இது யெகோவா உண்டாக்கின நாள்;
இதிலே சந்தோஷப்பட்டு மகிழ்வோம்.
25 யெகோவாவே, இரட்சியும்;
யெகோவாவே, காரியத்தை வாய்க்கச்செய்யும்.
26 யெகோவாவுடைய பெயராலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்;
யெகோவாவுடைய ஆலயத்திலிருந்து
உங்களை ஆசீர்வதிக்கிறோம்.
27 யெகோவா நம்மைப் பிரகாசிக்கச்செய்கிற தேவனாக இருக்கிறார்;
பண்டிகைப் பலியைக் கொண்டுபோய் பலிபீடத்தின் கொம்புகளில் கயிறுகளால் கட்டுங்கள்.
28 நீர் என் தேவன், நான் உம்மைத் துதிப்பேன்;
நீர் என் தேவன், நான் உம்மை உயர்த்துவேன்.
29 யெகோவாவை துதியுங்கள், அவர் நல்லவர்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
Chapter 119
சங்கீதம் 119
ஆலெப்.1 யெகோவாவுடைய வேதத்தின்படி
நடக்கிற உத்தம வழியில் நடப்பவர்கள் பாக்கியவான்கள்.
2 அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு,
அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள்.
3 அவர்கள் அநியாயம் செய்வதில்லை;
அவருடைய வழிகளில் நடக்கிறார்கள்.
4 உமது கட்டளைகளை நாங்கள் கருத்தாகக் கைக்கொள்ளும்படி
நீர் கற்றுக்கொடுத்தீர்.
5 உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படி,
என்னுடைய நடைகள் நிலைத்திருந்தால் நலமாக இருக்கும்.
6 நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் நினைக்கும்போது,
வெட்கப்பட்டுப்போவதில்லை.
7 உம்முடைய நீதிநியாயங்களை நான் கற்றுக்கொள்ளும்போது,
செம்மையான இருதயத்தால் உம்மைத் துதிப்பேன்.
8 உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்;
முற்றிலும் என்னைக் கைவிடாமலிரும்.
பேத்.9 வாலிபன் தன்னுடைய வழியை எதினால் சுத்தம்செய்வான்?
உமது வசனத்திற்குக் கீழ்படிகிறதினால்தானே.
10 என்னுடைய முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன்,
என்னை உமது கற்பனைகளைவிட்டு வழிதவறிச் செல்ல விடாமலிரும்.
11 நான் உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்யாதபடிக்கு,
உமது வசனத்தை என் இருதயத்தில் வைத்து வைத்தேன்.
12 யெகோவாவே, நீர் வாழ்த்திற்குரியவர்;
உம்முடைய பிரமாணங்களை எனக்குப் போதியும்.
13 உம்முடைய வசனத்தின் நியாயத்தீர்ப்புகளையெல்லாம் என்னுடைய உதடுகளால் விவரித்திருக்கிறேன்.
14 திரளான செல்வத்தில் சந்தோஷப்படுவதுபோல,
நான் உமது சாட்சிகளின் வழியில் சந்தோஷப்படுகிறேன்.
15 உமது கட்டளைகளைத் தியானித்து, உமது வழிகளை மனதில் வைக்கிறேன்.
16 உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாக இருக்கிறேன்;
உமது வசனத்தை மறவேன்.
கிமெல்.17 உமது அடியேனுக்கு அனுகூலமாக இரும்; அப்பொழுது நான் பிழைத்து,
உமது வசனத்தைக் கைக்கொள்ளுவேன்.
18 உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு,
என்னுடைய கண்களைத் திறந்தருளும்.
19 பூமியிலே நான் அந்நியன்;
உமது கற்பனைகளை எனக்கு மறையாமலிரும்.
20 உமது நியாயங்கள்மேல் என் ஆத்துமா எந்தநேரமும் வைத்திருக்கிற வாஞ்சையினால் சோர்ந்துபோகிறது.
21 உமது கற்பனைகளை விட்டு வழிவிலகின சபிக்கப்பட்ட
பெருமையுள்ளவர்களை நீர் கடிந்துகொள்ளுகிறீர்.
22 நிந்தையையும் அவமானத்தையும் என்னை விட்டு அகற்றும்;
நான் உம்முடைய சாட்சிகளுக்குக் கீழ்படிகிறேன்.
23 அதிகாரிகளும் உட்கார்ந்து எனக்கு விரோதமாகப் பேசிக்கொள்ளுகிறார்கள்;
உமது ஊழியனோ, உமது பிரமாணங்களைத் தியானிக்கிறேன்.
24 உம்முடைய சாட்சிகள் எனக்கு இன்பமும்,
எனக்கு ஆலோசனை தருபவையாக இருக்கிறது.
டாலெத்.25 என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது;
உமது வசனத்தின்படி என்னை உயிர்ப்பியும்.
26 என்னுடைய வழிகளை நான் உமக்கு விவரித்துக் காட்டினபோது
எனக்குச் செவிகொடுத்தீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
27 உமது கட்டளைகளின் வழியை எனக்கு உணர்த்தியருளும்;
அப்பொழுது உமது அதிசயங்களைத் தியானிப்பேன்.
28 துயரத்தால் என்னுடைய ஆத்துமா கரைந்து போகிறது;
உமது வசனத்தின்படி என்னை எடுத்து நிறுத்தும்.
29 பொய்வழியை என்னைவிட்டு விலக்கி,
உம்முடைய வேதத்தை எனக்கு அருள்செய்யும்.
30 மெய்வழியை நான் தெரிந்துகொண்டு,
உம்முடைய நியாயங்களை எனக்கு முன்பாக நிறுத்தினேன்.
31 உமது சாட்சிகள்மேல் பற்றுதலாக இருக்கிறேன்;
யெகோவாவே, என்னை வெட்கமடைய விடாமலிரும்.
32 நீர் என்னுடைய இருதயத்தை விரிவாக்கும்போது,
நான் உமது கற்பனைகளின் வழியாக ஓடுவேன்.
எ.33 யெகோவாவே, உமது பிரமாணங்களின் வழியை எனக்குப் போதியும்;
முடிவுவரை நான் அதைக் காத்துக்கொள்ளுவேன்.
34 எனக்கு உணர்வைத் தாரும்;
அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு,
என்னுடைய முழு இருதயத்தோடும் அதைக் கைக்கொள்ளுவேன்.
35 உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும்;
நான் அதில் பிரியமாக இருக்கிறேன்.
36 என்னுடைய இருதயம் பொருளாசையைச் சார்ந்து இருக்காமல்,
உமது சாட்சிகளைச் சார்ந்து இருக்கும்படி செய்யும்.
37 மாயையைப் பார்க்காதபடி நீர் என்னுடைய கண்களை விலக்கி,
உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்.
38 உமக்குப் பயப்படுகிறதற்கு ஏற்ற உமது வாக்குத்தத்தத்தை உமது அடியேனுக்கு உறுதிப்படுத்தும்.
39 நான் பயப்படுகிற அவமானத்தை விலக்கியருளும்;
உம்முடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவைகள்.
40 இதோ, உம்முடைய கட்டளைகள்மேல் வாஞ்சையாக இருக்கிறேன்;
உமது நீதியால் என்னை உயிர்ப்பியும்.
வௌ.41 யெகோவாவே, உம்முடைய வாக்குத்தத்ததின்படி,
உமது தயவும் உமது இரட்சிப்பும் எனக்கு வருவதாக.
42 அப்பொழுது என்னை நிந்திக்கிறவனுக்கு பதில் சொல்லுவேன்;
உம்முடைய வசனத்தை நம்பியிருக்கிறேன்.
43 சத்திய வசனம் முற்றிலும் என்னுடைய வாயிலிருந்து நீங்கவிடாமலிரும்;
உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்குக் காத்திருக்கிறேன்.
44 நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக்கொள்ளுவேன்.
45 நான் உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறபடியால்,
அகலமான பாதையில் நடப்பேன்.
46 நான் உம்முடைய சாட்சிகளைக் குறித்து,
ராஜாக்களுக்கு முன்பாகவும் வெட்கப்படாமல் பேசுவேன்.
47 நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளில் மனமகிழ்ச்சியாக இருப்பேன்.
48 நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளுக்குக் கையை உயர்த்துவேன்,
உமது பிரமாணங்களைத் தியானிப்பேன்.
சாயீன்.49 நீர் என்னை நம்பச்செய்த வசனத்தை
உமது அடியேனுக்காக நினைத்தருளும்.
50 அதுவே என்னுடைய துன்பத்தில் எனக்கு ஆறுதல்,
உம்முடைய வாக்குத்தத்தம் என்னை உயிர்ப்பித்தது.
51 பெருமைக்காரர்கள் என்னை மிகவும் பரியாசம்செய்தும்,
நான் உமது வேதத்தைவிட்டு விலகினதில்லை. 52 யெகோவாவே, ஆரம்பமுதலான உமது நியாயத்தீர்ப்புகளை
நான் நினைத்து என்னைத் தேற்றுகிறேன்.
53 உமது வேதத்தை விட்டு விலகுகிற துன்மார்க்கர்களின் நடுக்கம் என்னைப் பிடித்தது.
54 நான் நிலையில்லாத குடியிருக்கும் வீட்டிலே
உமது பிரமாணங்கள் எனக்கு பாடல்களானது.
55 யெகோவாவே, இரவுநேரத்தில் உமது பெயரை நினைத்து,
உமது வேதத்தைக் கைக்கொள்ளுகிறேன்.
56 நான் உமது கட்டளைகளைக் கைக்கொண்டதால்,
இது எனக்குக் கிடைத்தது.
ஹெத்.57 யெகோவாவே, நீரே என்னுடைய பங்கு;
நான் உமது வசனங்களைக் கைக்கொள்ளுவேன் என்றேன்.
58 முழு இருதயத்தோடும் உம்முடைய தயவுக்காகக் கெஞ்சுகிறேன்;
உமது வாக்குத்தத்தத்தின்படி எனக்கு இரங்கும்.
59 என்னுடைய வழிகளைச் சிந்தித்துக்கொண்டு,
என்னுடைய கால்களை உம்முடைய சாட்சிகளுக்கு நேராகத் திருப்பினேன்.
60 உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி,
நான் தாமதிக்காமல் விரைந்தேன்.
61 துன்மார்க்கர்களின் கூட்டங்கள் என்னைக் கொள்ளையிட்டும்,
உம்முடைய வேதத்தை நான் மறக்கவில்லை.
62 உமது நீதியான நியாயத்தீர்ப்புகளுக்காக,
உம்மைத் துதிக்கும்படி பாதி இரவில் எழுந்திருப்பேன்.
63 உமக்குப் பயந்து, உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் நண்பன்.
64 யெகோவாவே, பூமி உமது கிருபையினால் நிறைந்திருக்கிறது;
உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
தேத்.65 யெகோவாவே, உமது வசனத்தின்படி
உமது அடியேனை நன்றாக நடத்தினீர்.
66 உத்தம நிதானிப்பையும் அறிவையும் எனக்குப் போதித்தருளும்,
உம்முடைய கற்பனைகளில் நம்பிக்கையாக இருக்கிறேன்.
67 நான் உபத்திரவப்படுவதற்கு முன்பு வழிதப்பி நடந்தேன்;
இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன்.
68 தேவனே நீர் நல்லவரும், நன்மை செய்கிறவருமாக இருக்கிறீர்;
உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
69 பெருமைக்காரர்கள் எனக்கு விரோதமாகப் பொய்களைப் பிணைக்கிறார்கள்;
நானோ, முழு இருதயத்தோடும் உம்முடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவேன்.
70 அவர்களுடைய இருதயம் கொழுத்திருக்கிறது; நானோ,
உம்முடைய வேதத்தில் மனமகிழ்ச்சியாக இருக்கிறேன்.
71 நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது;
அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்.
72 அநேக ஆயிரம் பொன் வெள்ளியைவிட,
நீர் கொடுத்த வேதமே எனக்கு நலம்.
யோட்.73 உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி,
என்னை உருவாக்கினது;
உம்முடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும்.
74 நான் உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறபடியால், உமக்குப் பயந்தவர்கள் என்னைக் கண்டு சந்தோஷப்படுவார்கள்.
75 யெகோவாவே, உமது நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளதென்றும்,
உண்மையின்படி என்னை உபத்திரவப்படுத்தினீரென்றும் அறிவேன்.
76 நீர் உமது அடியேனுக்குக் கொடுத்த உமது வாக்குத்தத்தத்தின்படி,
உமது கிருபை என்னைத் தேற்றட்டும்.
77 நான் பிழைத்திருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைக்கட்டும்;
உம்முடைய வேதம் என்னுடைய மனமகிழ்ச்சி.
78 பெருமைக்காரர்கள் என்னைப் பொய்களினால் கெடுக்கப் பார்த்தபடியால் வெட்கப்பட்டுப்போகட்டும்;
நானோ உமது கட்டளைகளைத் தியானிப்பேன்.
79 உமக்குப் பயந்து, உமது சாட்சிகளை அறிந்திருக்கிறவர்கள் என்னிடம் திரும்பட்டும்.
80 நான் வெட்கப்பட்டுப் போகாதபடிக்கு,
என்னுடைய இருதயம் உமது பிரமாணங்களில் உத்தமமாக இருக்கட்டும்.
கப்.81 உம்முடைய இரட்சிப்புக்கு என்னுடைய ஆத்துமா தவிக்கிறது;
உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறேன்.
82 எப்பொழுது என்னைத் தேற்றுவீர் என்று,
உம்முடைய வாக்குத்தத்தத்தின்மேல் நோக்கமாக என்னுடைய கண்கள் பூத்துப்போகிறது.
83 புகையிலுள்ள தோல்பை போலானேன்;
உமது பிரமாணங்களையோ மறவேன்.
84 உமது அடியேனுடைய நாட்கள் எவ்வளவு?
என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு நீர் எப்பொழுது நியாயத்தீர்ப்பு செய்வீர்?
85 உம்முடைய வேதத்திற்கு விரோதமாக பெருமைக்காரர்கள் எனக்குக் குழிகளை வெட்டினார்கள்.
86 உம்முடைய கற்பனைகளெல்லாம் உண்மையாக இருக்கிறது;
அநியாயமாக என்னைத் துன்பப்படுத்துகிறார்கள்;
நீர் எனக்கு உதவி செய்யும்.
87 அவர்கள் என்னைப் பூமியில் இல்லாமல் நீக்கிவிடச் சற்றே தப்பினது;
ஆனாலும் நான் உமது கட்டளைகளை விட்டுவிடவில்லை.
88 உமது கிருபையின்படியே என்னை உயிர்ப்பியும்;
அப்பொழுது நான் உம்முடைய வாக்குத்தத்தத்தின் சாட்சியைக் காத்து நடப்பேன்.
லாமேட்.89 யெகோவாவே, உமது வசனம் என்றென்றைக்கும்
வானங்களில் நிலைத்திருக்கிறது.
90 உம்முடைய உண்மை தலைமுறை தலைமுறையாக இருக்கும்;
பூமியை உறுதிப்படுத்தினீர், அது நிலைத்திருக்கிறது.
91 உம்முடைய பிரமாணங்களை நிறைவேற்றும்படி அவைகள் இந்த நாள்வரைக்கும் நிற்கிறது;
அனைத்தும் உம்மைச் சேவிக்கும்.
92 உமது வேதம் என்னுடைய மனமகிழ்ச்சியாக இல்லாமலிருந்தால்,
என்னுடைய துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்.
93 நான் ஒருபோதும் உம்முடைய கட்டளைகளை மறக்கமாட்டேன்;
அவைகளால் நீர் என்னை உயிர்ப்பித்தீர்.
94 நான் உம்முடையவன், என்னை இரட்சியும்;
உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறேன்.
95 துன்மார்க்கர்கள் என்னை அழிக்கக் காத்திருக்கிறார்கள்;
நான் உமது சாட்சிகளைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்.
96 நிறைவான அனைத்திற்கும் எல்லையைக் கண்டேன்;
உம்முடைய கற்பனையோ மகா பெரிது.
மேம்.97 உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாக இருக்கிறேன்!
நாள் முழுவதும் அது என்னுடைய தியானம்.
98 நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு என்னை என்னுடைய எதிரிகளிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர்;
அவைகள் என்றைக்கும் என்னுடனே இருக்கிறது.
99 உம்முடைய சாட்சிகள் என்னுடைய தியானமாக இருக்கிறபடியால்,
எனக்குப் போதித்தவர்கள் எல்லோரிலும் அறிவுள்ளவனாக இருக்கிறேன்.
100 உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறபடியால்,
முதியோர்களைவிட ஞானமுள்ளவனாக இருக்கிறேன்.
101 உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு,
எல்லா பொல்லாத வழிகளுக்கும் என்னுடைய கால்களை விலக்குகிறேன்.
102 நீர் எனக்குப் போதித்திருக்கிறபடியால்,
நான் உம்முடைய நியாயங்களை விட்டு விலகமாட்டேன்.
103 உம்முடைய வார்த்தைகள் என்னுடைய நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்;
என்னுடைய வாய்க்கு அவைகள் தேனிலும்
இனிமையானதாக இருக்கும்.
104 உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன்,
ஆதலால் எல்லாப் பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.
நூன்.105 உம்முடைய வசனம் என்னுடைய கால்களுக்குத் தீபமும்,
என்னுடைய பாதைக்கு வெளிச்சமுமாக இருக்கிறது.
106 உம்முடைய நீதி நியாயங்களைக் காத்து நடப்பேன் என்று ஆணையிட்டேன்;
அதை நிறைவேற்றுவேன்.
107 நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்;
யெகோவாவே, உம்முடைய வசனத்தின்படியே என்னை உயிர்ப்பியும்.
108 யெகோவாவே, என்னுடைய வாயின் உற்சாகபலிகளை நீர் ஏற்றுக்கொண்டு,
உமது நியாயங்களை எனக்குப் போதித்தருளும்.
109 என்னுடைய உயிர் எப்பொழுதும் என்னுடைய கையில் இருக்கிறது;
ஆனாலும் உம்முடைய வேதத்தை மறக்கமாட்டேன்.
110 துன்மார்க்கர்கள் எனக்குக் கண்ணிவைக்கிறார்கள்;
ஆனாலும் நான் உம்முடைய கட்டளைகளை விட்டு வழிதவறிப் போகமாட்டேன்.
111 உம்முடைய சாட்சிகளை நிரந்தர சுதந்தரமாக்கிக்கொண்டிருக்கிறேன்,
அவைகளே என்னுடைய இருதயத்தின் மகிழ்ச்சி.
112 முடிவுவரை இடைவிடாமல் உம்முடைய பிரமாணங்களின்படி செய்ய என்னுடைய இருதயத்தைச் சாய்த்தேன்.
சாமெக்.113 வீண் சிந்தனைகளை நான் வெறுத்து, உமது வேதத்தில் பிரியப்படுகிறேன்.
114 என்னுடைய மறைவிடமும் என்னுடைய கேடகமும் நீரே;
உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறேன்.
115 பொல்லாதவர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்;
என் தேவனுடைய கற்பனைகளை நான் கைக்கொள்ளுவேன்.
116 நான் பிழைத்திருப்பதற்கு உமது வார்த்தையின்படி என்னை ஆதரித்தருளும்;
என்னுடைய நம்பிக்கை வீணாகிப்போக என்னை வெட்கத்திற்கு உட்படுத்தாமல் இரும்.
117 என்னை ஆதரித்தருளும்; அப்பொழுது நான் இரட்சிக்கப்பட்டு,
எந்தநாளும் உம்முடைய பிரமாணங்களில் தியானமாக இருப்பேன்.
118 உமது பிரமாணங்களைவிட்டு வழிவிலகுகிற அனைவரையும் மிதித்துப் போடுகிறீர்;
அவர்களுடைய சிந்தனை வஞ்சனையானது.
119 பூமியிலுள்ள துன்மார்க்கர்கள் அனைவரையும் துருவைப்போல அகற்றிவிடுகிறீர்;
ஆகையால் உமது சாட்சிகளில் பிரியப்படுகிறேன்.
120 உமக்குப் பயப்படும் பயத்தால் என்னுடைய உடல் சிலிர்க்கிறது;
உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன்.
ஆயின்.121 நியாயமும் நீதியும் செய்கிறேன்; என்னை ஒடுக்குகிறவர்களுக்கு என்னை ஒப்புக்கொடாமல் இரும்.
122 உமது அடியேனுக்கு நன்மையாகத் துணைநில்லும்;
பெருமைக்காரர்கள் என்னை ஒடுக்கச்செய்யாதிரும்.
123 உமது இரட்சிப்புக்கும் உமது நீதியின் வார்த்தைகளுக்கும்
காத்திருக்கிறதினால் என்னுடைய கண்கள் பூத்துப்போகிறது.
124 உமது ஊழியனை உமது கிருபையின்படியே நடத்தி,
உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
125 நான் உமது ஊழியன்;
உம்முடைய சாட்சிகளை நான் அறியும்படி என்னை உணர்வுள்ளவனாக்கும்.
126 நீதியைச்செய்யக் யெகோவாவுக்கு வேளை வந்தது;
அவர்கள் உம்முடைய நியாயப்பிராணத்தை மீறினார்கள்.
127 ஆதலால் நான் பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாக உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன்.
128 எல்லாவற்றைப்பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி,
அனைத்து பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.
பே.129 உம்முடைய சாட்சிகள் அதிசயமானவைகள்;
ஆகையால் என்னுடைய ஆத்துமா அவைகளைக் கைக்கொள்ளும்.
130 உம்முடைய வசனத்தின் விளக்கம் வெளிச்சம் தந்து,
பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும்.
131 உம்முடைய கற்பனைகளை நான் விரும்புகிறபடியால்,
என்னுடைய வாயை ஆவென்று திறந்து அவைகளுக்கு ஏங்குகிறேன்.
132 உம்முடைய பெயரை நேசிக்கிறவர்களுக்கு வழங்கும் நியாயத்தின்படியே என்னை நோக்கிப்பார்த்து, எனக்கு இரங்கும்.
133 உம்முடைய வார்த்தையிலே என்னுடைய காலடிகளை நிலைப்படுத்தி,
ஒரு அநியாயமும் என்னை ஆட்கொள்ளச்செய்யாமல் இரும்.
134 மனிதர்கள் செய்யும் அநீதிகளுக்கு என்னை விலக்கி விடுவித்தருளும்;
அப்பொழுது நான் உம்முடைய கட்டளைகளைக் காத்துக்கொள்ளுவேன்.
135 உமது ஊழியன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்து,
உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
136 உம்முடைய வேதத்தை மனிதர்கள் காத்து நடக்காதபடியால்,
என்னுடைய கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது.
த்சாடே.137 யெகோவாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள்.
138 நீர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியும், மகா உண்மையுமானவைகள்.
139 என்னுடைய எதிரிகள் உம்முடைய வசனங்களை மறந்தபடியால்,
என்னுடைய பக்திவைராக்கியம் என்னை அழிக்கிறது. 140 உமது வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது,
உமது அடியேன் அதில் பிரியப்படுகிறேன்.
141 நான் சிறியவனும் அசட்டை செய்யப்பட்டவனுமாக இருக்கிறேன்;
ஆனாலும் உமது கட்டளைகளை மறவேன்.
142 உம்முடைய நீதி நிரந்தர நீதி, உம்முடைய வேதம் சத்தியம்.
143 துயரமும் வேதனையும் என்னைப் பிடித்தது;
ஆனாலும் உம்முடைய கற்பனைகள் என்னுடைய மனமகிழ்ச்சி.
144 உம்முடைய சாட்சிகளின் நீதி என்றைக்கும் நிற்கும்; என்னை உணர்வுள்ளவனாக்கும்,
அப்பொழுது நான் பிழைத்திருப்பேன்.
கோப்.145 முழு இருதயத்தோடும் கூப்பிட்டேன், யெகோவாவே, என்னுடைய ஜெபத்தைக் கேளும்;
உம்முடைய பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்.
146 உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னைக் காப்பாற்றும்;
அப்பொழுது நான் உம்முடைய சாட்சிகளைக் காத்துக்கொள்ளுவேன்.
147 அதிகாலையில் நான் எழுந்து சத்தமிட்டேன்;
உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறேன்.
148 உமது வசனத்தைத் தியானிக்கும்படி,
குறித்த இரவு நேரங்களுக்கு முன்னே என்னுடைய கண்கள் விழித்துக்கொள்ளும்.
149 உம்முடைய கிருபையின்படி என்னுடைய சத்தத்தைக் கேளும்;
யெகோவாவே, உம்முடைய நியாயத்தீர்ப்பின்படி என்னை உயிர்ப்பியும்.
150 தீமையைப் பின்பற்றுகிறவர்கள் நெருங்கி இருக்கிறார்கள்;
அவர்கள் உம்முடைய வேதத்திற்குத் தூரமாக இருக்கிறார்கள்.
151 யெகோவாவே, நீர் அருகில் இருக்கிறீர்;
உமது கற்பனைகளெல்லாம் உண்மை.
152 நீர் உம்முடைய சாட்சிகளை என்றென்றைக்கும் நிற்க நிறுவினீர் என்பதை,
அவைகளால் நான் நெடுநாளாக அறிந்திருக்கிறேன்.
ரேஷ்.153 என்னுடைய உபத்திரவத்தைப் பார்த்து, என்னை விடுவியும்;
உமது வேதத்தை மறக்கமாட்டேன்.
154 எனக்காக நீர் வழக்காடி என்னை மீட்டுக்கொள்ளும்,
உம்முடைய வார்த்தையின்படியே என்னை உயிர்ப்பியும்.
155 இரட்சிப்பு துன்மார்க்கர்களுக்குத் தூரமாக இருக்கிறது,
அவர்கள் உமது பிரமாணங்களைத் தேடமாட்டார்கள்.
156 யெகோவாவே, உம்முடைய இரக்கங்கள் பெரியவைகளாக இருக்கிறது;
உமது நியாயங்களின்படி என்னை உயிர்ப்பியும்.
157 என்னைத் துன்பப்படுத்துகிறவர்களும் என்னை விரோதிக்கிறவர்களும் அநேகர்;
ஆனாலும் உம்முடைய சாட்சிகளை விட்டுவிலகமாட்டேன்.
158 உமது வசனத்தைக் கைக்கொள்ளாத துரோகிகளை நான் கண்டபோது,
எனக்கு அருவருப்பாக இருந்தது.
159 இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; யெகோவாவே,
உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும்.
160 உம்முடைய வசனம் முழுவதும் சத்தியம்,
உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம்.
ஷீன்.161 அதிகாரிகளும் காரணமில்லாமல் என்னைத் துன்பப்படுத்தினார்கள்,
ஆனாலும் என்னுடைய இருதயம் உமது வசனத்திற்கே பயப்படுகிறது.
162 மிகுந்த கொள்ளைப்பொருட்களைக் கண்டுபிடிக்கிறவன் மகிழுகிறதுபோல,
நான் உமது வார்த்தையின் பெயரில் மகிழுகிறேன்.
163 பொய்யைப் பகைத்து அருவருக்கிறேன்; உம்முடைய வேதத்தையோ நேசிக்கிறேன்.
164 உமது நீதிநியாயங்களுக்காக, ஒருநாளில் ஏழுமுறை உம்மைத் துதிக்கிறேன்.
165 உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு;
அவர்களுக்கு தடைகள் இல்லை.
166 யெகோவாவே, உம்முடைய இரட்சிப்புக்கு நான் காத்திருந்து,
உம்முடைய கற்பனைகளின்படி செய்கிறேன்.
167 என்னுடைய ஆத்துமா உமது சாட்சிகளைக் காக்கும்;
அவைகளை நான் மிகவும் நேசிக்கிறேன்.
168 உமது கட்டளைகளையும் உமது சாட்சிகளையும் காத்து நடக்கிறேன்;
என்னுடைய வழிகளெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது.
தெள.169 யெகோவாவே, என்னுடைய கூப்பிடுதல் உமது சந்நிதியில் வருவதாக;
உமது வசனத்தின்படியே என்னை உணர்வுள்ளவனாக்கும்.
170 என்னுடைய விண்ணப்பம் உமது சந்நிதியில் வரட்டும்;
உமது வார்த்தையின்படி என்னை விடுவித்தருளும்.
171 உம்முடைய பிரமாணங்களை நீர் எனக்குப் போதிக்கும்போது,
என்னுடைய உதடுகள் உமது துதியைப் பிரபலப்படுத்தும்.
172 உமது கற்பனைகளெல்லாம் நீதியுள்ளவைகள்; ஆதலால்,
என்னுடைய நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும்.
173 நான் உம்முடைய கட்டளைகளைத் தெரிந்துகொண்டபடியால்,
உமது கரம் எனக்குத் துணையாக இருக்கட்டும்.
174 யெகோவாவே, உம்முடைய இரட்சிப்பின்மேல் ஆவலாக இருக்கிறேன்;
உம்முடைய வேதம் என்னுடைய மனமகிழ்ச்சி.
175 என்னுடைய ஆத்துமா பிழைத்திருந்து உம்மைத் துதிக்கட்டும்;
உமது நியாயத்தீர்ப்புகள் எனக்கு உதவியாக இருக்கட்டும்.
176 காணாமற்போன ஆட்டைப்போல வழிதப்பிப்போனேன்;
உமது அடியேனைத் தேடும்; உமது கற்பனைகளை நான் மறக்கமாட்டேன்.
Chapter 120
சங்கீதம் 120
ஆரோகண பாடல்.1 என்னுடைய நெருக்கத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்;
அவர் எனக்குச் செவிகொடுத்தார்.
2 யெகோவாவே, பொய் உதடுகளுக்கும் வஞ்சகமாக பேசும் நாவுக்கும் என்னுடைய ஆத்துமாவைத் தப்புவியும்.
3 வஞ்சக நாவே, உனக்கு என்ன கிடைக்கும்?
உனக்கு என்ன செய்யப்படும்?
4 பலவானுடைய கூர்மையான அம்புகளும்,
சூரைச்செடிகளை எரிக்கும் தழலுமே கிடைக்கும்.
5 ஐயோ, நான் மேசேக்கிலே [1] வாழ்ந்தது போதும்,
கேதாரின் கூடாரங்கள் அருகில் குடியிருந்ததும் போதும்!
6 சமாதானத்தைப் பகைக்கிறவர்களிடம் என்னுடைய ஆத்துமா குடியிருந்ததும் போதும்!
7 நான் சமாதானத்தை நாடுகிறேன்;
அவர்களோ, நான் பேசும்போது போர்செய்ய முயற்சி செய்கிறார்கள்.
Chapter 121
சங்கீதம் 121
ஆரோகண பாடல்.1 எனக்கு உதவி வரும் மலைகளுக்கு நேராக
என்னுடைய கண்களை உயர்த்துகிறேன்.
2 வானத்தையும் பூமியையும் உண்டாக்கின
யெகோவாவிடத்திலிருந்து எனக்கு உதவி வரும்.
3 உன்னுடைய காலைத் தள்ளாடவிடமாட்டார்;
உன்னைக் காக்கிறவர் உறங்கமாட்டார்.
4 இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை.
5 யெகோவா உன்னைக் காக்கிறவர்;
யெகோவா உன்னுடைய வலது பக்கத்திலே உனக்கு நிழலாக இருக்கிறார்.
6 பகலிலே வெயிலோ, இரவிலே நிலவோ
உன்னைச் சேதப்படுத்துவதில்லை.
7 யெகோவா உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்;
அவர் உன்னுடைய ஆத்துமாவைக் காப்பார்.
8 யெகோவா உன்னுடைய போக்கையும் உன்னுடைய வரத்தையும்
இதுமுதற்கொண்டு என்றென்றும் காப்பார்.
Chapter 122
சங்கீதம் 122
தாவீதின் ஆரோகண பாடல்.1 யெகோவாவுடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள்
என்று என் நண்பர்கள் எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தேன்.
2 எருசலேமே, உன்னுடைய வாசல்களில் எங்களுடைய கால்கள் நிற்கிறது.
3 எருசலேம் கச்சிதமான நகரமாகக் கட்டப்பட்டிருக்கிறது.
4 அங்கே இஸ்ரவேலுக்குச் சாட்சியாகக்
யெகோவாவுடைய மக்களாகிய கோத்திரங்கள் யெகோவாவின் பெயரைப் போற்றுவதற்குப் போகும்.
5 அங்கே தாவீதின் வீட்டாருடைய சிங்காசனங்களாகிய
நியாயாசனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது.
6 எருசலேமின் சமாதானத்திற்காக வேண்டிக்கொள்ளுங்கள்;
உன்னை நேசிக்கிறவர்கள் செழித்திருக்கட்டும்.
7 உன்னுடைய மதில்களுக்குள்ளே சமாதானமும்,
உன்னுடைய அரண்மனைகளுக்குள்ளே செழிப்பும் இருக்கும்.
8 என்னுடைய சகோதரர்களுக்காகவும் என்னுடைய நண்பர்களுக்காகவும்,
உன்னில் சமாதானம் இருக்கட்டும் என்பேன்.
9 எங்களுடைய தேவனாகிய யெகோவாவின் ஆலயத்திற்காக
உனக்கு நன்மையுண்டாகத் தேடுவேன்.
Chapter 123
சங்கீதம் 123
ஆரோகண பாடல்.1 பரலோகத்தில் இருக்கிறவரே,
உம்மிடத்திற்கு என்னுடைய கண்களை ஏறெடுக்கிறேன்.
2 தங்களுடைய எஜமான்களின் கையை நோக்கியிருப்பதுபோலவும்,
வேலைக்காரியின் கண்கள் தன்னுடைய எஜமானியின் கையை நோக்கியிருப்பதுபோலவும்,
எங்கள் தேவனாகிய யெகோவா எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும்,
எங்களுடைய கண்கள் அவரை நோக்கியிருக்கிறது.
3 எங்களுக்கு இரங்கும் யெகோவாவே,
எங்களுக்கு இரங்கும்;
அவமானத்தினால் மிகவும் நிறைந்திருக்கிறோம்.
4 சுகமாக வாழ்கிறவர்களுடைய அவமானத்தினாலும்,
அகங்காரிகளுடைய இகழ்ச்சியினாலும்,
எங்களுடைய ஆத்துமா மிகவும் நிறைந்திருக்கிறது.
Chapter 124
சங்கீதம் 124
தாவீதின் ஆரோகண பாடல்.1 மனிதர்கள் நமக்கு விரோதமாக எழும்பினபோது,
யெகோவா நமது பக்கத்தில் இல்லாவிட்டால்,
2 யெகோவா தாமே நமது பக்கத்தில் இல்லாவிட்டால்,
3 அவர்களுடைய கோபம் நம்மேல் எரியும்போது,
நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள்.
4 அப்பொழுது தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து,
வெள்ளங்கள் நமது ஆத்துமாவின்மேல் பெருகி,
5 கொந்தளிக்கும் தண்ணீர்கள் நமது ஆத்துமாவின்மேல் புரண்டுபோயிருக்கும்
என்று இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.
6 நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடுக்காமல்
இருக்கிற யெகோவாவுக்கு நன்றி.
7 வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல
நம்முடைய ஆத்துமா தப்பினது,
கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம்.
8 நம்முடைய உதவி வானத்தையும் பூமியையும் உண்டாக்கின
யெகோவாவுடைய பெயரில் உள்ளது.
Chapter 125
சங்கீதம் 125
1 யெகோவாவை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும்
சீயோன் மலையைப்போல் இருப்பார்கள்.
2 மலைகள் எருசலேமைச் சுற்றிலும் இருக்கிறதுபோல்,
யெகோவா இதுமுதல் என்றென்றைக்கும்
தம்முடைய மக்களைச் சுற்றிலும் இருக்கிறார்.
3 நீதிமான்கள் அநியாயத்திற்குத் தங்களுடைய கைகளை நீட்டாதபடிக்கு,
துன்மார்க்கத்தின் கொடுங்கோல் நீதிமான்களுடைய சொத்தின்மேல் நிலைத்திருக்காது.
4 யெகோவாவே, நல்லவர்களுக்கும் இருதயத்தில் செம்மையானவர்களுக்கும் நன்மை செய்யும்.
5 தங்களுடைய கோணலான வழிகளுக்குச் சாய்கிறவர்களைக்
யெகோவா அக்கிரமக்காரர்களோடு போகச்செய்வார்.
இஸ்ரவேலுக்கோ சமாதானம் உண்டு.
Chapter 126
சங்கீதம் 126
ஆரோகண பாடல்.1 சீயோனின் சிறையிருப்பைக் யெகோவா திருப்பி எருசலேமுக்கு கொண்டு வந்தபோது,
கனவு காண்கிறவர்கள்போல் இருந்தோம்.
2 அப்பொழுது நம்முடைய வாய் சிரிப்பினாலும்,
நம்முடைய நாவு ஆனந்தசத்தத்தினாலும் நிறைந்திருந்தது;
அப்பொழுது: யெகோவா இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்
என்று தேசங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
3 யெகோவா நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்;
இதற்காக நாம் மகிழ்ந்திருக்கிறோம்.
4 யெகோவாவே,
தெற்கத்திய வெள்ளங்களைத் திருப்புவதுபோல,
எங்களுடைய சிறையிருப்பைத் திருப்பும்.
5 கண்ணீரோடு விதைக்கிறவர்கள்
கெம்பீரத்தோடு அறுப்பார்கள்.
6 அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்;
ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு
கெம்பீரத்தோடு திரும்பிவருவான்.
Chapter 127
சங்கீதம் 127
சாலொமோனின் ஆரோகண பாடல்.1 யெகோவா வீட்டைக் கட்டாவிட்டால்,
அதைக் கட்டுகிறவர்களின் உழைப்பு வீண்;
2 யெகோவா நகரத்தைக் காக்காமல் இருந்தால்
காவலாளர்கள் விழித்திருக்கிறது வீண்.
3 நீங்கள் அதிகாலையில் எழுந்து,
நேரத்துடன் வேலைகளைச் செய்து,
வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் வீண்;
அவரே தமக்குப் பிரியமானவனுக்குத் தூக்கத்தைக் கொடுக்கிறார்.
4 இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம்,
கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.
5 இளவயதின் மகன்கள் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாக இருக்கிறார்கள்.
அவைகளால் தன்னுடைய அம்பறாத்தூணியை நிரப்பின மனிதன் பாக்கியவான்;
அவர்கள் வெட்கமடையாமல் ஒலிமுகவாசலில் எதிரிகளோடு பேசுவார்கள்.
Chapter 128
சங்கீதம் 128
ஆரோகண பாடல்.1 யெகோவாவுக்குப் பயந்து,
அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.
2 உன்னுடைய கைகளின் உழைப்பை நீ சாப்பிடுவாய்;
உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்.
3 உன்னுடைய மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும்
திராட்சைக்கொடியைப்போல் இருப்பாள்;
உன்னுடைய பிள்ளைகள் உன்னுடைய பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.
4 இதோ, யெகோவாவுக்குப் பயப்படுகிற மனிதன்
இவ்விதமாக ஆசீர்வதிக்கப்படுவான்.
5 யெகோவா சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்;
நீ உயிருள்ள நாட்களெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்.
6 நீ உன்னுடைய பிள்ளைகளின் பிள்ளைகளையும்,
இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய்.
Chapter 129
சங்கீதம் 129
ஆரோகண பாடல்.1 என்னுடைய சிறுவயது முதற்கொண்டு
அநேகமுறை என்னை நெருக்கினார்கள்.
2 என்னுடைய சிறுவயது முதற்கொண்டு அநேகமுறை என்னை நெருக்கியும்,
என்னை மேற்கொள்ளாமற் போனார்கள்.
3 உழுகிறவர்கள் என்னுடைய முதுகின்மேல் உழுது,
தங்களுடைய வரப்புகளை நீளமாக்கினார்கள்.
4 யெகோவாவோ நீதியுள்ளவர்;
துன்மார்க்கர்களுடைய கயிறுகளை அவர் அறுத்தார் என்று,
இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.
5 சீயோனைப் பகைக்கிற அனைவரும் வெட்கப்பட்டு பின்னிட்டுத் திரும்புவார்கள்.
6 வீட்டின்மேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்கள்;
அது வளரும்முன்பு உலர்ந்துபோகும்.
7 அறுக்கிறவன் அதினால் தன்னுடைய கையையும்,
அரிகளைக் கட்டுகிறவன் தன்னுடைய மடியையும் நிரப்புவதில்லை.
8 யெகோவாவுடைய ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாகட்டும்;
யெகோவாவின் பெயரினால் உங்களை ஆசீர்வதிக்கிறோம்
என்று வழிப்போக்கர்கள் சொல்வதுமில்லை.
Chapter 130
சங்கீதம் 130
ஆரோகண பாடல்.1 யெகோவாவே, உபத்திரவத்தின் ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
2 ஆண்டவரே, என்னுடைய சத்தத்தைக் கேளும்;
என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்திற்கு
உமது செவிகள் கவனித்திருக்கட்டும்.
3 யெகோவாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால்,
யார் நிலைநிற்பான், ஆண்டவரே.
4 உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.
5 யெகோவாவுக்குக் காத்திருக்கிறேன்; என்னுடைய ஆத்துமா காத்திருக்கிறது;
அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன்.
6 எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்திற்குக் காத்திருக்கிற காவலர்களைவிட
அதிகமாக என்னுடைய ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது.
7 இஸ்ரவேல் யெகோவாவை நம்பியிருப்பதாக;
கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு.
8 அவர் இஸ்ரவேலை அதின் எல்லா அக்கிரமங்களிலிருந்தும் மீட்டுக்கொள்வார்.
Chapter 131
சங்கீதம் 131
தாவீதின் ஆரோகண பாடல்.1 யெகோவாவே, என்னுடைய இருதயம் பெருமைகொள்வதில்லை, என்னுடைய கண்கள் மேட்டிமையுள்ளவைகளுமல்ல; பெரிய காரியங்களிலும், எனக்கு மிஞ்சின கருமங்களிலும் நான் தலையிடுகிறதுமில்லை. 2 தாயின் பால்மறந்த குழந்தையைப்போல நான் என்னுடைய ஆத்துமாவை அடக்கி அமரச்செய்தேன்; என்னுடைய ஆத்துமா பால்மறந்த குழந்தையைப்போல் இருக்கிறது. 3 இதுமுதல் என்றென்றைக்கும் இஸ்ரவேல் யெகோவாவை நம்பியிருப்பதாக.
Chapter 132
சங்கீதம் 132
ஆரோகண பாடல்.1 யெகோவாவே, தாவீதையும் அவனுடைய எல்லா உபத்திரவத்தையும் நினைத்தருளும். 2 அவன்: நான் யெகோவாவுக்கு ஒரு இடத்தையும், யாக்கோபின் வல்லவருக்கு ஒரு குடியிருக்கும் இடத்தையும் பார்க்கும்வரை, 3 என்னுடைய வீடாகிய கூடாரத்தில் நுழைவதில்லை, என்னுடைய படுக்கையாகிய கட்டிலின்மேல் ஏறுவதுமில்லை, 4 என்னுடைய கண்களுக்குத் தூக்கத்தையும், என்னுடைய இமைகளுக்கு உறக்கத்தையும் வரவிடுவதுமில்லை என்று, 5 யெகோவாவுக்கு ஆணையிட்டு, யாக்கோபின் வல்லமையுள்ள தேவனுக்குப் பொருத்தனை செய்தான். 6 இதோ, நாம் எப்பிராத்தாவிலே அதின் செய்தியைக் கேட்டு, வயல்வெளிகளில் அதைக் கண்டோம். 7 அவருடைய ஆலயத்தின் குடியிருப்புகளுக்குள் நுழைந்து, அவர் பாதத்தில் பணிவோம். 8 யெகோவாவே, உமது வல்லமை வெளிப்படும் பெட்டியுடன் நீர் உமது தங்கும் இடத்திற்குள் எழுந்தருளும். 9 உம்முடைய ஆசாரியர்கள் நீதியை அணிந்து, உம்முடைய பரிசுத்தவான்கள் கெம்பீரிக்கட்டும். 10 நீர் அபிஷேகம்செய்தவனின் முகத்தை உமது ஊழியனாகிய தாவீதினிமித்தம் தள்ளிவிடாதிரும். 11 உன்னுடைய கர்ப்பத்தின் பிள்ளையை உன்னுடைய சிங்காசனத்தின்மேல் வைப்பேன் என்றும், 12 உன்னுடைய மகன்கள் என்னுடைய உடன்படிக்கையையும், நான் போதிக்கும் என்னுடைய சாட்சிகளையும் காத்து நடந்தால், அவர்கள் மகன்களும் என்றென்றைக்கும் உன்னுடைய சிங்காசனத்தில் அமர்ந்திருப்பார்கள் என்றும், யெகோவா தாவீதிற்கு உண்மையாக ஆணையிட்டார்; அவர் தவறமாட்டார். 13 யெகோவா சீயோனைத் தெரிந்துகொண்டு, அது தமக்குக் குடியிருக்கும் இடமாகும்படி விரும்பினார். 14 இது என்றென்றைக்கும் நான் தங்கும் இடம்; இதை நான் விரும்பினதால், இங்கே தங்குவேன். 15 அதின் ஆகாரத்தை நான் ஆசீர்வதித்து வருவேன்; அதின் ஏழைகளை நான் அப்பத்தினால் திருப்தியாக்குவேன். 16 அதின் ஆசாரியர்களுக்கு இரட்சிப்பை அணிவிப்பேன்; அதிலுள்ள பரிசுத்தவான்கள் மிகவும் கெம்பீரிப்பார்கள். 17 அங்கே தாவீதுக்காக ஒரு கொம்பை முளைக்கச்செய்வேன்; நான் அபிஷேகம் செய்தவவனுக்காக ஒரு விளக்கை ஆயத்தம்செய்தேன். 18 அவனுடைய எதிரிகளுக்கு வெட்கத்தை அணிவிப்பேன்; அவன் மீதோ அவன் கிரீடம் பூக்கும் என்றார்.
Chapter 133
சங்கீதம் 133
தாவீதின் ஆரோகண பாடல்.1 இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்செய்கிறது
எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?
2 அது ஆரோனுடைய தலையின்மேல் ஊற்றப்பட்டு,
அவனுடைய தாடியிலே வடிகிறதும்,
அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்திற்கும்,
3 எர்மோன்மேலும், சீயோன் மலைகள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாக இருக்கிறது;
அங்கே யெகோவா என்றென்றைக்கும்
ஆசீர்வாதத்தையும் வாழ்வையும் கட்டளையிடுகிறார்.
Chapter 134
சங்கீதம் 134
ஆரோகண பாடல்.1 இதோ, இரவுநேரங்களில் யெகோவாவுடைய
ஆலயத்தில் நிற்கும் யெகோவாவின் ஊழியக்காரர்களே,
நீங்களெல்லோரும் யெகோவாவுக்கு நன்றிசெலுத்துங்கள்.
2 உங்களுடைய கைகளைப் பரிசுத்த இடத்திற்கு நேராக எடுத்து,
யெகோவாவுக்கு நன்றிசெலுத்துங்கள்.
3 வானத்தையும் பூமியையும் உண்டாக்கின யெகோவா
சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக.
Chapter 135
சங்கீதம் 135
1 அல்லேலூயா, யெகோவாவுடைய பெயரைத் துதியுங்கள்;
யெகோவாவின் ஊழியக்காரர்களே, துதியுங்கள்.
2 யெகோவாவுடைய வீட்டிலும்,
நமது தேவனுடைய ஆலயமுற்றங்களிலும் நிற்கிறவர்களே,
யெகோவாவை துதியுங்கள்.
3 யெகோவா நல்லவர்; அவருடைய பெயரைப் புகழ்ந்து பாடுங்கள்;
அது இன்பமானது.
4 யெகோவா யாக்கோபைத் தமக்காகவும்,
இஸ்ரவேலைத் தமக்குச் சொந்தமாகவும் தெரிந்துகொண்டார்.
5 யெகோவா பெரியவர் என்றும்,
நம்முடைய ஆண்டவர் எல்லா தெய்வங்களுக்கும் மேலானவர் என்றும் நான் அறிவேன்.
6 வானத்திலும் பூமியிலும், கடல்களிலும், எல்லா ஆழங்களிலும்,
யெகோவா தமக்கு விருப்பமானதையெல்லாம் செய்கிறார்.
7 அவர் பூமியின் கடைசியிலிருந்து மேகங்களை எழும்பச்செய்து,
மழையுடன் மின்னலையும் உண்டாக்கி,
காற்றைத் தமது சேமிப்புக்கிடங்கிலிருந்து புறப்படச்செய்கிறார்.
8 அவர் எகிப்திலே மனிதருடைய தலைப்பிள்ளைகளையும் மிருகத்தின் தலையீற்றுகளையும் அடித்தார்.
9 எகிப்துதேசமே, உன் நடுவில் பார்வோன்மேலும் அவனுடைய எல்லா ஊழியக்காரர்கள் மேலும்
அடையாளங்களையும் அற்புதங்களையும் அனுப்பினார். 10 அவர் அநேகம் தேசங்களை அடித்து, வலிமைமிக்க ராஜாக்களைக் கொன்று;
11 எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனையும், பாசானின் ராஜாவாகிய ஓகையும்,
கானானின் எல்லா ராஜ்ஜியங்களையும் அழித்து,
12 அவர்கள் தேசத்தைத் தம்முடைய மக்களுமாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தார்.
13 யெகோவாவே, உம்முடைய பெயர் என்றைக்குமுள்ளது;
யெகோவாவே, உம்முடைய புகழ் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும்.
14 யெகோவா தம்முடைய மக்களின் நியாயத்தை விசாரித்து,
தம்முடைய ஊழியக்காரர்கள்மேல் பரிதாபப்படுவார்.
15 அஞ்ஞானிகளுடைய சிலைகள் வெள்ளியும் பொன்னும்,
மனிதர்களுடைய கைவேலையுமாக இருக்கிறது. 16 அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது,
அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
17 அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது,
அவைகளுடைய வாயிலே சுவாசமுமில்லை.
18 அவைகளைச் செய்கிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் அனைவரும்,
அவைகளைப்போல் இருக்கிறார்கள்.
19 இஸ்ரவேல் குடும்பத்தாரே,
யெகோவாவுக்கு நன்றிசொல்லுங்கள்; ஆரோன் குடும்பத்தாரே, யெகோவாவுக்கு நன்றிசொல்லுங்கள்.
20 லேவி குடும்பத்தாரே, யெகோவாவுக்கு நன்றிசொல்லுங்கள்;
யெகோவாவுக்குப் பயந்தவர்களே, யெகோவாவுக்கு நன்றிசொல்லுங்கள்.
21 எருசலேமில் குடியிருக்கிற யெகோவாவுக்கு
சீயோனிலிருந்து நன்றிஉண்டாகட்டும்.
அல்லேலூயா.
Chapter 136
சங்கீதம் 136
1 யெகோவாவை துதியுங்கள்;
அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
2 தேவாதி தேவனைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
3 கர்த்தாதி யெகோவாவை துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
4 ஒருவராக பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
5 வானங்களை ஞானமாக உண்டாக்கினவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
6 தண்ணீர்களுக்கு மேலே பூமியைப் பரப்பினவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
7 பெரிய சுடர்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது;
8 பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
9 இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது;
10 எகிப்தியர்களுடைய தலைப்பிள்ளைகளை அழித்தவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
11 அவர்கள் நடுவிலிருந்து இஸ்ரவேலைப் புறப்படச்செய்தவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
12 வலிமையான கையினாலும் தோளின் பலத்தினாலும் அதைச் செய்தவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
13 சிவந்த கடலை இரண்டாகப் பிரித்தவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
14 அதின் நடுவே இஸ்ரவேலைக் கடந்துபோகச் செய்தவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
15 பார்வோனையும் அவன் சேனைகளையும்
செங்கடலில் கவிழ்த்துப்போட்டவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
16 தம்முடைய மக்களை வனாந்தரத்தில் நடத்தினவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
17 பெரிய ராஜாக்களை அழித்தவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
18 பிரபலமான ராஜாக்களை அழித்தவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது. 19 எமோரியரின் ராஜாவாகிய சீகோனை அழித்தவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
20 பாசானின் ராஜாவாகிய ஓகை அழித்தவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
21 அவர்களுடைய தேசத்தைச் சுதந்தரமாகத் தந்தவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
22 அதைத் தம்முடைய ஊழியனாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்திரமாகவே தந்தவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
23 நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
24 நம்முடைய எதிரிகளின் கையிலிருந்து நம்மை விடுதலை செய்தவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
25 உயிரினம் அனைத்திற்கும் ஆகாரம் கொடுக்கிறவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
26 பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
Chapter 137
சங்கீதம் 137
1 பாபிலோன் ஆறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து,
அங்கே சீயோனை நினைத்து அழுதோம்.
2 அதின் நடுவிலிருக்கும் அலரிச்செடிகளின்மேல் எங்களுடைய கின்னரங்களைத் தூக்கிவைத்தோம்.
3 எங்களைச் சிறைபிடித்தவர்கள் அங்கே எங்களுடைய பாடல்களையும்,
எங்களையும் பாழாக்கினவர்கள் மகிழ்ச்சி பாடல்களை விரும்பி:
சீயோனின் பாட்டுகளில் சிலவற்றை எங்களுக்குப் பாடுங்கள் என்று சொன்னார்கள்.
4 யெகோவாவின் பாட்டை அந்நிய தேசத்தில் நாங்கள் பாடுவதெப்படி?
5 எருசலேமே, நான் உன்னை மறந்தால் என்னுடைய வலதுகை தன்னுடைய தொழிலை மறப்பதாக.
6 நான் உன்னை நினைக்காமலும்,
எருசலேமை என்னுடைய முக்கியமான மகிழ்ச்சியிலும் அதிகமாகக் கருதாமலும்போனால்,
என்னுடைய நாவு என் மேல் வாயோடு ஒட்டிக்கொள்வதாக.
7 யெகோவாவே, எருசலேமின் நாளில் ஏதோமியர்களை நினையும்;
அவர்கள்: அதை இடித்துப்போடுங்கள், அஸ்திபாரம்வரை இடித்துப்போடுங்கள் என்று சொன்னார்களே.
8 பாபிலோன் மகளே, பாழாகப்போகிறவளே,
நீ எங்களுக்குச் செய்தபடி உனக்குப் பதில் செய்கிறவன் பாக்கியவான்.
9 உன்னுடைய குழந்தைகளைப் பிடித்து,
கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான்.
Chapter 138
சங்கீதம் 138
தாவீதின் பாடல்.1 உம்மை என் முழு இருதயத்தோடும் துதிப்பேன்;
தெய்வங்களுக்கு முன்பாக உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
2 உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து,
உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் உமது பெயரைத் துதிப்பேன்;
உமது எல்லாப் புகழைவிட உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர்.
3 நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்திரவு அருளினீர்;
என் ஆத்துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்;
4 யெகோவாவே, பூமியின் ராஜாக்களெல்லோரும்
உமது வாயின் வார்த்தைகளைக் கேட்கும்போது உம்மைத் துதிப்பார்கள்.
5 யெகோவாவின் மகிமை பெரிதாக இருப்பதினால்,
அவர்கள் யெகோவாவின் வழிகளைப் பாடுவார்கள்.
6 யெகோவா உயர்ந்தவராக இருந்தும்,
தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்;
மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார்.
7 நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர்;
என்னுடைய எதிரிகளின் கோபத்திற்கு விரோதமாக உமது கையை நீட்டுவீர்;
உமது வலதுகரம் என்னை இரட்சிக்கும்.
8 யெகோவா எனக்காக யாவையும் செய்து முடிப்பார்;
யெகோவாவே, உமது கிருபை என்றுமுள்ளது;
உமது கரத்தின் செயல்களைத் தள்ளிவிடாமலிரும்.
Chapter 139
சங்கீதம் 139
இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் பாடல்.1 யெகோவாவே, நீர் என்னை ஆராய்ந்து,
அறிந்திருக்கிறீர்.
2 என்னுடைய உட்காருதலையும்
என்னுடைய எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்;
என்னுடைய நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர்.
3 நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்;
என்னுடைய வழிகளெல்லாம் உமக்குத் தெரியும்.
4 என்னுடைய நாவில் சொல் உருவாகுமுன்னே,
இதோ, யெகோவாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்.
5 முற்புறத்திலும் பிற்புறத்திலும் நீர் என்னை நெருக்கி,
உமது கரத்தை என்மேல் வைக்கிறீர்.
6 இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும்,
எனக்கு எட்டாத உயரமுமாக இருக்கிறது.
7 உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்?
உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்?
8 நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்;
நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்.
9 நான் விடியற்காலத்துச் இறக்கைகளை எடுத்து,
கடலின் கடைசி எல்லைகளிலே போய்த் தங்கினாலும், 10 அங்கேயும் உமது கை என்னை நடத்தும்,
உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும்.
11 இருள் என்னை மூடிக்கொள்ளுமென்றாலும், இரவும் என்னைச் சுற்றி வெளிச்சமாக இருக்கும்.
12 உமக்கு மறைவாக இருளும் இருளாக இருக்காது;
இரவும் பகலைப்போல வெளிச்சமாக இருக்கும்;
உமக்கு இருளும் வெளிச்சமும் ஒன்றானது.
13 நீர் என்னுடைய சிந்தையைக் கைக்கொண்டிருக்கிறீர்;
என்னுடைய தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர். 14 நான் பிரமிக்கத்தக்க அதிசயமாக உண்டாக்கப்பட்டதால், உம்மைத் துதிப்பேன்;
உமது செயல்கள் அதிசயமானவைகள்;
அது என்னுடைய ஆத்துமாவுக்கு நன்றாகத் தெரியும்.
15 நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு,
பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாக உருவாக்கப்பட்டபோது,
என்னுடைய எலும்புகள் உமக்கு மறைவாக இருக்கவில்லை.
16 என்னுடைய கருவை உம்முடைய கண்கள் கண்டது;
என்னுடைய உறுப்புகளில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும்,
அவைகள் உருவேற்படும் நாட்களும்,
உமது புத்தகத்தில் எழுதியிருந்தது.
17 தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்;
அவைகளின் அளவு எவ்வளவு அதிகம்.
18 அவைகளை நான் எண்ணப்போனால்,
மணலைவிட அதிகமாம்; நான் விழிக்கும்போது இன்னும் உம்மருகில் இருக்கிறேன்.
19 தேவனே, நீர் துன்மார்க்கனை அழித்தீரானால் நலமாக இருக்கும்;
இரத்தப்பிரியர்களே, நீங்கள் என்னை விட்டு அகன்றுபோங்கள்.
20 அவர்கள் உம்மைக் குறித்துத் துன்மார்க்கமாகப் பேசுகிறார்கள்;
உம்முடைய எதிரிகள் உமது பெயரை வீணாக வழங்குகிறார்கள்.
21 யெகோவாவே, உம்மைப் பகைக்கிறவர்களை நான் பகைக்காமலும்,
உமக்கு விரோதமாக எழும்புகிறவர்களை
அருவருக்காமலும் இருப்பேனோ?
22 முழுப்பகையாக அவர்களைப் பகைக்கிறேன்;
அவர்களை எனக்குப் பகைவர்களாக நினைக்கிறேன்.
23 தேவனே, என்னை ஆராய்ந்து,
என்னுடைய இருதயத்தை அறிந்துகொள்ளும்;
என்னைச் சோதித்து, என்னுடைய சிந்தனைகளை அறிந்துகொள்ளும்.
24 வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து,
நித்திய வழியிலே என்னை நடத்தும்.
Chapter 140
சங்கீதம் 140
இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் பாடல்.1 யெகோவாவே, பொல்லாத மனிதனுக்கு என்னைத் தப்புவியும்;
கொடுமையுள்ளவனுக்கு என்னை விலக்கி காப்பாற்றும்.
2 அவர்கள் தங்களுடைய இருதயத்தில் பொல்லாப்புகளைச் சிந்தித்து,
யுத்தஞ்செய்ய நாள்தோறும் கூட்டங்கூடுகிறார்கள்.
3 பாம்பைப்போல் தங்களுடைய நாவை கூர்மையாக்குகிறார்கள்;
அவர்கள் உதடுகளின்கீழ் விரியன் பாம்பின் விஷம் இருக்கிறது. (சேலா)
4 யெகோவாவே, துன்மார்க்கனுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி
கொடியவனுக்கு என்னை விலக்கி காப்பாற்றும்;
அவர்கள் என்னுடைய நடைகளைக் கவிழ்க்கப்பார்க்கிறார்கள்.
5 பெருமைக்காரர்கள் எனக்குக் கண்ணியையும்
கயிறுகளையும் மறைவாக வைக்கிறார்கள்;
வழியோரத்திலே வலையை விரித்து, எனக்குச் சுருக்குகளை வைக்கிறார்கள். (சேலா)
6 நான் யெகோவாவை நோக்கி: நீர் என் தேவன் என்றேன்;
யெகோவாவே, என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்திற்குச் செவிகொடும்.
7 ஆண்டவராகிய யெகோவாவே, என்னுடைய இரட்சிப்பின் பெலனே,
யுத்தநாளில் என்னுடைய தலையை மூடினீர்.
8 யெகோவாவே, துன்மார்க்கனுடைய ஆசைகள் நிறைவேறாதபடிசெய்யும்;
அவன் தன்னை உயர்த்தாதபடி அவனுடைய யோசனையை நடந்தேற விடாமலிரும். (சேலா)
9 என்னை வளைந்துகொள்ளுகிறவர்களுடைய உதடுகளின் தீவினைகள் அவர்கள் தலைகளையே மூடுவதாக. 10 நெருப்புத்தழல் அவர்கள்மேல் விழுவதாக;
நெருப்பிலும், அவர்கள் எழுந்திருக்கமுடியாத படுகுழிகளிலும் தள்ளப்படுவார்களாக.
11 பொல்லாத நாக்குள்ளவன் பூமியிலே நிலைப்பதில்லை;
கொடுமையான மனிதனை பறக்கடிக்கப் பொல்லாப்பு அவனை வேட்டையாடும்.
12 சிறுமையானவனின் வழக்கையும்,
எளியவர்களின் நியாயத்தையும் யெகோவா விசாரிப்பாரென்று அறிவேன்.
13 நீதிமான்கள் உமது பெயரைத் துதிப்பார்கள்;
செம்மையானவர்கள் உமது சமுகத்தில் வாசம் செய்வார்கள்.
Chapter 141
சங்கீதம் 141
தாவீதின் பாடல்.1 யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்,
என்னிடத்திற்கு விரைந்துவாரும்;
நான் உம்மை நோக்கிக் கூப்பிடும்போது,
என்னுடைய சத்தத்திற்குச் செவிகொடும்.
2 என்னுடைய விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும்,
என் கையுயர்த்துதல் மாலைநேரப் பலியாகவும் இருக்கட்டும்.
3 யெகோவாவே, என்னுடைய வாய்க்குக் காவல்வையும்;
என்னுடைய உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்.
4 அக்கிரமஞ்செய்கிற மனிதரோடு துன்மார்க்கச் செயல்களை நடப்பிக்கும்படி
என்னுடைய இருதயத்தைத்
துன்மார்க்கத்திற்கு இசைந்துப்போகச் செய்யாமல் இரும்;
அவர்களுடைய ருசியுள்ள உணவுகளில் ஒன்றையும் நான் சாப்பிடாமல் இருப்பேனாக.
5 நீதிமான் என்னைத் தயவாய்க்குட்டி,
என்னைக் கடிந்துகொள்ளட்டும்;
அது என்னுடைய தலைக்கு எண்ணெயைப்போலிருக்கும்;
என்னுடைய தலை அதை நிராகரிப்பதில்லை;
அவர்கள் இக்கட்டுகளில் நான் இன்னும் ஜெபம்செய்வேன்.
6 அவர்களுடைய நியாயாதிபதிகள் கன்மலை மேலிருந்து
தள்ளப்பட்டுபோகிறபோது,
என்னுடைய வார்த்தைகள் இன்பமானவைகளென்று கேட்பார்கள்.
7 பூமியின்மேல் ஒருவன் மரத்தை வெட்டிப் பிளக்கிறதுபோல,
எங்களுடைய எலும்புகள் பாதாள வாய்க்கு நேராகச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது.
8 ஆனாலும் ஆண்டவராகிய யெகோவாவே,
என்னுடைய கண்கள் உம்மை நோக்கி இருக்கிறது;
உம்மை நம்பியிருக்கிறேன்;
என்னுடைய ஆத்துமாவை வெறுமையாக விடாதிரும்.
9 அவர்கள் எனக்கு வைத்த கண்ணியின் சிக்குகளுக்கும்,
அக்கிரமக்காரர்களின் சுருக்குகளுக்கும் என்னை விலக்கி பாதுகாத்துக்கொள்ளும்.
10 துன்மார்க்கர்கள் தங்களுடைய வலைகளில் அகப்படுவார்களாக;
நானோ அதற்குத் தப்பிக் கடந்துபோவேன்.
Chapter 142
சங்கீதம் 142
குகையிலிருந்த போது தாவீதின் பாடல், ஜெபம்.1 யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்;
யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கெஞ்சுகிறேன்.
2 அவருக்கு முன்பாக என்னுடைய சஞ்சலத்தை ஊற்றுகிறேன்;
அவருக்கு முன்பாக என்னுடைய நெருக்கத்தை அறிக்கையிடுகிறேன்.
3 என்னுடைய ஆவி என்னில் தியங்கும்போது,
நீர் என்னுடைய பாதையை அறிந்திருக்கிறீர்;
நான் நடக்கிற வழியில் மறைவாக எனக்குக் கண்ணிவைத்தார்கள்.
4 வலதுபக்கமாகக் கண்ணோக்கிப் பாரும்,
என்னை அறிவார் ஒருவரும் இல்லை;
எனக்கு அடைக்கலமில்லாமற் போனது;
என்னுடைய ஆத்துமாவை விசாரிப்பார் ஒருவரும் இல்லை.
5 யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்;
நீரே என் அடைக்கலமும்,
உயிருள்ளோர் தேசத்திலே என்னுடைய பங்குமாக இருக்கிறீர் என்றேன்.
6 என்னுடைய கூக்குரலுக்குச் செவிகொடும்,
நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன்;
என்னைப் பின்தொடருகிறவர்களுக்கு என்னைத் தப்புவியும்,
அவர்கள் என்னிலும் பலவான்களாக இருக்கிறார்கள்.
7 உமது பெயரை நான் துதிக்கும்படி,
என்னுடைய ஆத்துமாவைக் காவலுக்கு நீங்கலாக்கிவிடும்;
எனக்கு நீர் தயவு செய்யும்போது
நீதிமான்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளுவார்கள்.
Chapter 143
சங்கீதம் 143
தாவீதின் பாடல்.1 யெகோவாவே, என்னுடைய ஜெபத்தைக் கேளும்,
என்னுடைய விண்ணப்பங்களுக்குச் செவிகொடும்;
உமது உண்மையின்படியும் உமது நீதியின்படியும் எனக்கு உத்திரவு அருளிச்செய்யும்.
2 உயிருள்ள ஒருவனும் உமக்கு முன்பாக நீதிமானாக இல்லாததினாலே,
அடியேனை நியாயத்தீர்ப்புச் செய்யாமல் இரும்.
3 எதிரி என்னுடைய ஆத்துமாவைத் தொடர்ந்து,
என்னுடைய உயிரைத் தரையோடு நசுக்கி,
வெகுகாலத்திற்கு முன்பு இறந்தவர்கள்போல் என்னை இருளில் இருக்கச்செய்கிறான்.
4 என்னுடைய ஆவி என்னில் தியங்குகிறது;
என்னுடைய இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது.
5 ஆரம்பநாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்;
உமது கரத்தின் செயல்களை யோசிக்கிறேன்.
6 என்னுடைய கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன்;
வறண்ட நிலத்தைப்போல் என்னுடைய ஆத்துமா உம்மேல் தாகமாக இருக்கிறது. (சேலா)
7 யெகோவாவே, சீக்கிரமாக எனக்குச் செவிகொடும்,
என்னுடைய ஆவி சோர்ந்து போகிறது;
நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாகாதபடிக்கு,
உமது முகத்தை எனக்கு மறைக்காமல் இரும்.
8 அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கச்செய்யும்,
உம்மை நம்பியிருக்கிறேன்,
நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்;
உம்மிடத்தில் என்னுடைய ஆத்துமாவை உயர்த்துகிறேன்.
9 யெகோவாவே, என்னுடைய எதிரிகளுக்கு என்னைத் தப்புவியும்;
உம்மைப் புகலிடமாகக் கொள்ளுகிறேன்.
10 உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும்,
நீரே என் தேவன்;
உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்தட்டும்.
11 யெகோவாவே, உம்முடைய பெயரினிமித்தம் என்னை உயிர்ப்பியும்;
உம்முடைய நீதியின்படி என்னுடைய ஆத்துமாவை
பிரச்சனைகளுக்கு நீங்கலாக்கிவிடும்.
12 உம்முடைய கிருபையின்படி என்னுடைய எதிரிகளை அழித்து,
என்னுடைய ஆத்துமாவை ஒடுக்குகிற யாவரையும் அழியும்;
நான் உமது அடியேன்.
Chapter 144
சங்கீதம் 143
தாவீதின் பாடல்.1 என்னுடைய கைகளைப் போருக்கும்
என்னுடைய விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என்னுடைய கன்மலையாகிய யெகோவாவுக்கு நன்றி.
2 அவர் என்னுடைய தயாபரரும்,
என்னுடைய கோட்டையும், என்னுடைய உயர்ந்த அடைக்கலமும்,
என்னை விடுவிக்கிறவரும், என்னுடைய கேடகமும்,
நான் நம்பினவரும், என்னுடைய மக்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவருமாக இருக்கிறார்.
3 யெகோவாவே, மனிதனை நீர் கவனிக்கிறதற்கும்,
மனுபுத்திரனை நீர் எண்ணுகிறதற்கும், அவன் எம்மாத்திரம்?
4 மனிதன் மாயைக்கு ஒப்பாக இருக்கிறான்;
அவனுடைய நாட்கள் கடந்துபோகிற நிழலுக்குச் சமானம்.
5 யெகோவாவே, நீர் உமது வானங்களைத் தாழ்த்தி இறங்கி,
மலைகள் புகையும்படி அவைகளைத் தொடும்.
6 மின்னல்களை வரவிட்டு எதிரிகளைச் சிதறடியும்,
உமது அம்புகளை எய்து அவர்களைக் கலங்கச்செய்யும்.
7 உயரத்திலிருந்து உமது கரத்தை நீட்டி,
பெருவெள்ளத்திற்கு என்னை விலக்கி இரட்சியும்.
8 மாயையைப் பேசும் வாயும்,
கள்ளத்தனமான வலதுகையும் உடைய அந்நியர்களின் கைக்கு
என்னை விலக்கித் தப்புவியும்.
9 யெகோவாவே, நான் உமக்குப் புதுப்பாட்டைப் பாடுவேன்;
தம்புரினாலும் பத்து நரம்பு வீணையினாலும் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
10 நீரே ராஜாக்களுக்கு ஜெயத்தைத் தந்து,
ஊழியனாகிய தாவீதைப் பொல்லாத வாளுக்குத் தப்புவிக்கிறவர்.
11 மாயையைப் பேசும் வாயும், கள்ளத்தனமான வலதுகையும் உடைய அந்நியர்களின் கைக்கு என்னை விலக்கித் தப்புவியும்.
12 அப்பொழுது எங்களுடைய மகன்கள் இளமையில் ஓங்கி வளருகிற மரக்கன்றுகளைப்போலவும்,
எங்களுடைய மகள்கள் சித்திரந்தீர்ந்த அரண்மனை மூலைக்கற்களைப்போலவும் இருப்பார்கள்.
13 எங்களுடைய களஞ்சியங்கள் எல்லாவித பொருட்களையும் கொடுக்கத்தக்கதாக நிரம்பியிருக்கும்;
எங்களுடைய கிராமங்களில் எங்களுடைய ஆடுகள் ஆயிரமும் பத்தாயிரமாகப் பலுகும்.
14 எங்களுடைய எருதுகள் பலத்தவைகளாக இருக்கும்;
எதிரி உட்புகுதலும் குடியோடிப்போகுதலும் இருக்காது;
எங்களுடைய வீதிகளில் கூக்குரலும் உண்டாகாது.
15 இந்த வித ஆசீர்வாதத்தைப்பெற்ற மக்கள் பாக்கியமுள்ளவர்கள்;
யெகோவாவை தெய்வமாகக் கொண்டிருக்கிற மக்கள் பாக்கியமுள்ளது.
Chapter 145
சங்கீதம் 145
தாவீதின் நன்றிப்பாடல்.1 ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி,
உம்முடைய பெயரை எப்பொழுதும் என்றென்றைக்கும் நன்றிசொல்லுவேன்.
2 நாள்தோறும் உமக்கு நன்றிசெலுத்தி,
எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய பெயரைத் துதிப்பேன்.
3 யெகோவா பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாக இருக்கிறார்;
அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது.
4 தலைமுறை தலைமுறையாக உம்முடைய செயல்களின் புகழ்ச்சியைச் சொல்லி,
உம்முடைய வல்லமையுள்ள செய்கைகளை அறிவிப்பார்கள்.
5 உம்முடைய சிறந்த மகிமைப் பிரதாபத்தையும்,
உம்முடைய அதிசயமான செயல்களையுங்குறித்துப் பேசுவேன்.
6 மக்கள் உம்முடைய பயங்கரமான செயல்களின் வல்லமையைச் சொல்லுவார்கள்;
உம்முடைய மகத்துவத்தை நான் விவரிப்பேன்.
7 அவர்கள் உமது மிகுந்த தயவை நினைத்து வெளிப்படுத்தி,
உமது நீதியைக் கெம்பீரித்துப் பாடுவார்கள்.
8 யெகோவா இரக்கமும் மன உருக்கமும்,
நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர்.
9 யெகோவா எல்லோர்மேலும் தயவுள்ளவர்;
அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாச் செயல்களின்மேலுமுள்ளது.
10 யெகோவாவே, உம்முடைய செயல்களெல்லாம் உம்மைத் துதிக்கும்;
உம்முடைய பரிசுத்தவான்கள் உமக்கு நன்றி சொல்வார்கள்.
11 மனிதர்களுக்கு உமது வல்லமையுள்ள செய்கைகளையும்,
உமது ராஜ்ஜியத்தின் சிறந்த மகிமைப்பிரதாபத்தையும் தெரிவிக்கும்படிக்கு;
12 உமது ராஜ்ஜியத்தின் மகிமையை அறிவித்து,
உமது வல்லமையைக் குறித்துப் பேசுவார்கள்.
13 உம்முடைய ராஜ்ஜியம் எல்லாக் காலங்களிலுமுள்ள ராஜ்ஜியம்,
உம்முடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாகவும் உள்ளது.
14 யெகோவா விழுகிற அனைவரையும் தாங்கி,
மடங்கடிக்கப்பட்ட அனைவரையும் தூக்கிவிடுகிறார்.
15 எல்லா உயிர்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது;
ஏற்ற வேளையிலே நீர் அவைகளுக்கு உணவுகொடுக்கிறீர்.
16 நீர் உமது கையைத் திறந்து,
எல்லா உயிர்களின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்.
17 யெகோவா தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும்,
தமது செயல்களிலெல்லாம் கிருபையுள்ளவருமாக இருக்கிறார்.
18 தம்மை நோக்கிக் கூப்பிடுகிற அனைவருக்கும்,
உண்மையாகத் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற அனைவருக்கும்,
யெகோவா அருகில் இருக்கிறார்.
19 அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து,
அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு,
அவர்களைப் பாதுகாக்கிறார்.
20 யெகோவா தம்மில் அன்புகூருகிற அனைவரையும் காப்பாற்றி,
துன்மார்க்கர்கள் அனைவரையும் அழிப்பார்.
21 என்னுடைய வாய் யெகோவாவின் துதியைச் சொல்வதாக;
மாம்ச சரீரமுள்ள யாவும் அவருடைய பரிசுத்த பெயரை
எப்பொழுதும் என்றென்றைக்கும் போற்றட்டும்.
Chapter 146
சங்கீதம் 146
1 அல்லேலூயா, என்னுடைய ஆத்துமாவே,
யெகோவாவை துதி.
2 நான் உயிரோடிருக்கும்வரை யெகோவாவை துதிப்பேன்;
நான் உள்ளளவும் என் தேவனைப் புகழ்ந்து பாடுவேன்.
3 பிரபுக்களையும், இரட்சிக்கப் பெலனில்லாத மனிதர்களையும் நம்பவேண்டாம்.
4 அவனுடைய ஆவி பிரியும், அவன் தன்னுடைய மண்ணுக்குத் திரும்புவான்;
அந்த நாளிலே அவனுடைய யோசனைகள் அழிந்துபோகும்.
5 யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து,
தன் தேவனாகிய யெகோவாமேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான்.
6 அவர் வானத்தையும் பூமியையும் கடல்களையும் அவைகளிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினவர்;
அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர்.
7 அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்;
பசியாக இருக்கிறவர்களுக்கு உணவுகொடுக்கிறார்;
கட்டப்பட்டவர்களைக் யெகோவா விடுதலையாக்குகிறார்.
8 குருடர்களின் கண்களைக் யெகோவா திறக்கிறார்;
விழுந்தவர்களைக் யெகோவா தூக்கிவிடுகிறார்.
நீதிமான்களைக் யெகோவா நேசிக்கிறார்.
9 அந்நியர்களைக் யெகோவா காப்பாற்றுகிறார்;
அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்;
துன்மார்க்கர்களின் வழியையோ கவிழ்த்துப் போடுகிறார்.
10 யெகோவா எல்லாக் காலங்களிலும் அரசாளுகிறார்;
சீயோனே, உன்னுடைய தேவன் தலைமுறை தலைமுறையாகவும் ராஜரிகம்செய்கிறார்.
அல்லேலூயா.
Chapter 147
சங்கீதம் 147
1 யெகோவாவை துதியுங்கள்;
நம்முடைய தேவனைப் புகழ்ந்து பாடுகிறது நல்லது,
துதித்தலே இன்பமும் ஏற்றதுமாக இருக்கிறது.
2 யெகோவா எருசலேமைக் கட்டுகிறார்;
துரத்தப்பட்ட இஸ்ரவேலர்களைக் கூட்டிச் சேர்க்கிறார்.
3 இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார்,
அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.
4 அவர் நட்சத்திரங்களின் தொகையை எண்ணி,
அவைகளுக்கெல்லாம் பெயரிட்டு அழைக்கிறார்.
5 நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாக இருக்கிறார்;
அவருடைய அறிவு அளவில்லாதது.
6 யெகோவா சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்;
துன்மார்க்கர்களைத் தரைவரை தாழ்த்துகிறார்.
7 யெகோவாவை துதியுடன் பாடிக்கொண்டாடுங்கள்;
நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் புகழ்ந்து பாடுங்கள்.
8 அவர் வானத்தை மேகங்களால் மூடி,
பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி,
மலைகளில் புல்லை முளைக்கச்செய்கிறார்.
9 அவர் மிருகங்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார்.
10 அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாக இருக்கமாட்டார்;
வீரனுடைய கால்களில் பிரியப்படமாட்டார்.
11 தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல்
யெகோவா பிரியமாக இருக்கிறார்.
12 எருசலேமே, யெகோவாவுக்கு நன்றி சொல்;
சீயோனே, உன்னுடைய தேவனைத் துதி.
13 அவர் உன்னுடைய வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி,
உன்னிடத்திலுள்ள உன்னுடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார்.
14 அவர் உன்னுடைய எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக மாற்றி,
செழிப்பான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்.
15 அவர் தமது வார்த்தையைப் பூமியிலே அனுப்புகிறார்;
அவருடைய சொல் மகா விரைவாக செல்லுகிறது.
16 பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்;
சாம்பலைப்போல உறைந்த பனியைத் தூவுகிறார்.
17 அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார்;
அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்?
18 அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகச்செய்கிறார்;
தமது காற்றை வீசும்படி செய்ய, தண்ணீர்கள் ஓடும்.
19 யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும்,
இஸ்ரவேலுக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் அறிவிக்கிறார்.
20 அவர் வேறே எந்த தேசத்திற்கும் இப்படிச் செய்ததில்லை;
அவருடைய கட்டளைகளை அறியாமற் போகிறார்கள்.
அல்லேலூயா.
Chapter 148
சங்கீதம் 148
1 அல்லேலூயா, வானங்களில் உள்ளவைகளே,
யெகோவாவை துதியுங்கள்;
உன்னதங்களில் அவரைத் துதியுங்கள்.
2 அவருடைய தூதர்களே,
நீங்கள் அனைவரும் அவரைத் துதியுங்கள்;
அவருடைய சேனைகளே, நீங்கள் அனைவரும் அவரைத் துதியுங்கள்.
3 சூரிய சந்திரரே, அவரைத் துதியுங்கள்;
பிரகாசமுள்ள எல்லா நட்சத்திரங்களே, அவரைத் துதியுங்கள்.
4 வானாதி வானங்களே, அவரைத் துதியுங்கள்;
வானத்தின் மேலுள்ள தண்ணீர்களே,
அவரைத் துதியுங்கள்.
5 அவைகள் யெகோவாவின் பெயரைத் துதிக்கட்டும்;
அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது.
6 அவர் அவைகளை என்றைக்குமுள்ள எல்லாகாலங்களிலும் நிலைக்கும்படி செய்தார்;
மாறாத கட்டளையை அவைகளுக்கு நியமித்தார்.
7 பூமியிலுள்ளவைகளே, யெகோவாவை துதியுங்கள்;
பெரிய மீன்களே, எல்லா ஆழங்களே,
8 அக்கினியே, கல்மழையே, உறைந்த மழையே, மூடுபனியே,
அவர் சொற்படி செய்யும் பெருங்காற்றே,
9 மலைகளே, எல்லா மேடுகளே, கனிமரங்களே,
எல்லா கேதுருக்களே,
10 காட்டுமிருகங்களே, எல்லா நாட்டு மிருகங்களே,
ஊரும் பிராணிகளே, இறகுள்ள பறவைகளே,
11 பூமியின் ராஜாக்களே, எல்லா மக்களே, பிரபுக்களே,
பூமியிலுள்ள எல்லா நியாயாதிபதிகளே,
12 வாலிபரே, கன்னிகைகளே, முதிர் வயதுள்ளவர்களே, பிள்ளைகளே,
யெகோவாவை துதியுங்கள்.
13 அவர்கள் யெகோவாவின் பெயரைத் துதிக்கட்டும்;
அவருடைய பெயர் மட்டும் உயர்ந்தது;
அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது.
14 அவர் தம்முடைய பரிசுத்தவான்கள் அனைவருக்கும்,
தம்மைச் சேர்ந்த மக்களாகிய இஸ்ரவேல் மக்களுக்கும் கொண்டாட்டமாக,
தம்முடைய மக்களுக்கு ஒரு கொம்பை உயர்த்தினார்.
அல்லேலூயா.
Chapter 149
சங்கீதம் 149
1 அல்லேலூயா, யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்;
பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதி வெளிப்படட்டும்.
2 இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரில் மகிழவும்,
மகன்களாகிய சீயோன் தங்களுடைய ராஜாவில் சந்தோஷப்படட்டும்.
3 அவருடைய பெயரை நடனத்தோடு துதித்து,
தம்புரினாலும் கின்னரத்தினாலும் அவரை புகழ்ந்துபாட வேண்டும்.
4 யெகோவா தம்முடைய மக்களின்மேல் பிரியம் வைக்கிறார்;
சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்.
5 பரிசுத்தவான்கள் மகிமையோடு சந்தோஷப்பட்டு,
தங்களுடைய படுக்கைகளின்மேல் கெம்பீரிப்பார்கள்.
6 தேசங்களிடத்தில் பழிவாங்கவும், மக்களைத் தண்டிக்கவும்,
7 அவர்களுடைய ராஜாக்களைச் சங்கிலிகளாலும்,
அவர்களுடைய மேன்மக்களை இரும்பு விலங்குகளாலும் கட்டவும்,
எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை அவர்கள்மேல் செலுத்தவும்,
8 அவர்களுடைய வாயில் யெகோவாவை உயர்த்தும் துதியும்,
அவர்களுடைய கையில் இருபுறமும் கூர்மையுள்ள வாளும் இருக்கும்.
9 இந்த மரியாதை அவருடைய பரிசுத்தவான்கள் அனைவருக்கும் உண்டாகும்.
அல்லேலூயா.
Chapter 150
சங்கீதம் 150
1 அல்லேலூயா, தேவனை அவருடைய பரிசுத்தஸ்தலத்தில் துதியுங்கள்;
அவருடைய வல்லமை வெளிப்படும் வானத்தைப்பார்த்து அவரைத் துதியுங்கள்.
2 அவருடைய வல்லமையுள்ள செயல்களுக்காக அவரைத் துதியுங்கள்;
மாட்சிமை பொருந்திய அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள்.
3 எக்காளச் சத்தத்தோடு அவரைத் துதியுங்கள்;
வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள்.
4 தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்;
யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள்.
5 ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்;
பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்.
6 சுவாசமுள்ள அனைத்தும் யெகோவாவை துதிப்பதாக.
அல்லேலூயா.